பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கின்றது
ஒரு பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்துகொண்டிருக்கின்றது, இது மிக எளிதாக கடந்து போகும் விஷயம் அல்ல, ஏராளமான பாதிப்புகளை கொண்டுவரும் விஷயம்
6 ஆண்டு அதிமுக ஆட்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது, பொதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வேர்கள் பட்டு மரம் சரியும் பொழுதுதான் சத்தம் வரும், 6 ஆண்டுகள் தமிழக தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி இப்பொழுது பெரும் ஓலமாக மாறுகின்றது
முன்பு ஹூண்டாய் மற்றும் போர்டு ஆலைகளின் விஸ்தரிப்பினை தடுத்து அவற்றை குஜராத்திற்கே விரட்டிவிட்டது தமிழக அரசு, காரணம் ஏன் என்று தெரியாது, ஆனால் மக்கள் நலம் என்பது மட்டும் இல்லை, அப்படி இருந்திருந்தால் இப்படி செய்திருக்கமாட்டார் ஜெயலலிதா
அவரின் சீடர்கள் இன்று கியா காரின் ஆலையினையும் விரட்டியிருக்கின்றார்கள்
இந்த மறை நீர் மண்ணாங்கட்டி நீர் எல்லாம் சும்மா, சென்னை வெள்ளத்தில் எத்தனை ஆயிரம் டிஎம்சி கடலுக்கு சென்றது, அதில் மறைநீர் பார்க்கமுடியுமா? அவை எல்லாம் சும்மா சொல்லும் கதைகள், மறைநீர் என கணக்கு பார்த்தால் அரிசி கூட உண்ணமுடியாது, ஏன் கம்பு சோறு, கேப்பை களிக்கும் கணக்கு பார்க்கவேண்டி வரும்
ஆக இப்படி பெரும் ஆலைகள் எல்லாம் அரசின் தொலைநோக்கு பார்வையின்றி விரட்டபடுகின்றன, தெரிந்த ஆலைகளே இப்படி என்றால் இன்னும் தெரியாத ஆலைகள் எவ்வளவோ?
குடிநீருக்கு தமிழகம் பெரும்பாடு பட்டுகொண்டிருக்கின்றது, விவசாயிகள் நிலை சொல்லவே வேண்டாம். மின்சார தடையும் வந்தாயிற்று, இந்த ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் என ஏதுமில்லை , உடன்குடிக்கு வந்த சீன நிறுவணம் கடல்வழியே நீந்தி தப்பிசென்றிருக்கலாம் எனும் அளவு அரசின் சர்ச்சைகள் இருந்திருக்கின்றன
இப்பொழுது மின்சார ஆலைகளுக்கு எல்லாம் சிக்கல், அடுத்த தலைமுறைக்கான உற்பத்தியினை செய்யவில்லை, பெருகி வரும் மக்களுக்கான மின்சாரதேவையினை பூர்த்தி செய்ய புது திட்டங்களை வகுக்கும் திட்டமில்லை
இருக்கும் நிலையங்களுக்கும் பணம் கொடுக்காத நிலை என்கின்றார்கள், அப்படியானால் அரசு பணங்கள் எல்லாம் எங்கு போயின?
கொஞ்ச நாளைக்கு முன்பு 2 லட்சம் கோடி தமிழகத்தில் அந்நிய முதலீடு குவிந்தது, என சொல்லி கரகாட்டம் ஆடியது இவர்கள் தான், ஆனால் உண்மையில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, எல்லாம் பொய்
தானாக வந்த கியாவினையும் இன்னும் சில கார் கம்பெனிகளையும் விரட்டியாயிற்று, இன்னும் தெரியாத கணக்கு ஏராளம் இருக்கலாம்,
ஏன் விரட்டுகின்றார்கள்? அதுதான் தமிழக அரசியல் கட்சி நிவாரண நிதி முதல் இப்போதைய டிரெண்டான கூவத்தூரில் தொடங்கிய எம்எல்ஏ பராமரிப்பு நிதி கலெக்சன் வரை ஏகபட்ட மர்மம் இருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது
எல்லா கம்பெனியும் விரட்டுகின்றார்களே, இந்த பீர் கம்பெனிகள், சாராய ஆலைகளுக்கு ஏதும் மூடுவிழா இருக்குமா? என்றால் ஒருக்காலும் இல்லை
மொத்தத்தில் தமிழ்நாடு பெரும் ஆபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, ஏராளமான வேலை வாய்ப்புகள் அண்டை மாநிலங்களுக்கு விரட்டவே படுகின்றன.
இப்படி எல்லாம் தமிழகம் அழிந்துகொண்டிருக்கின்றது, 6 ஆண்டுகள் ஆட்சியின் உச்சகட்ட சீரழிவாக இப்போதைய நிலை தெரிகின்றது
இப்பொழுதும் சிலரிடம் கேளுங்கள், திமுக தமிழகத்தை கெடுத்துவிட்டது அழித்துவிட்டது என புலம்புவான், அவர்கள் அப்படித்தான்
மிக உறுதியாக சொல்லலாம் அதிமுக என்றுமே அப்படியான கட்சிதான், அவர்கள் ஆட்சியில் என்றுமே தொலைநோக்கான திட்டமோ, பெரும் பொருளாதார வாய்ப்புகளோ சுத்தமாக இருக்காது, இருக்கவே இருக்காது, சுத்தமான மேக் அப் ஆட்சி என்பது அதுதான், அவர்கள் கவனமெல்லாம் மேக் அப் மேல் மட்டுமே இருக்கும்.
எப்படியோ , இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள், ஆட்சி மாறினாலும் இன்னும் பல காலத்திற்கு தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை கொண்டுவரும் போல தெரிகின்றது
அரசுக்கு எந்த கவலையும் இல்லை, எந்த கம்பெனி எங்கு போனால் என்ன? எத்தனை ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்தால்தான் என்ன? அவர்களுக்கு என்ன கவலை? தமிழகத்தில் விவசாயிகள் சாகவே இல்லை என சிரிக்காமல் சொல்லும் அரசு இது
இவர்கள் கவலை எல்லாம் பன்னீர் என்ன செய்கின்றார், அடுத்து யாரை இழுக்கலாம், யாரை தடுக்கலாம்? சசிகலா தினகரனை சமாளிப்பது எப்படி?, 122 எம் எல் ஏக்களுக்கு இனி என கொடுத்து சமாளிக்கலாம், இரட்டை இலை எப்பொழுது வரும்? இப்படி ஏக கவலைகள்
இதில் தமிழகமே அழிந்தாலும் கவலைபட அவர்களுக்கு ஏது நேரம்??
இப்படி ஏக சிக்கல்கள 6 ஆண்டு அதிமுக ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது அது இன்னும் கூடுதல் சிக்கல்களை உருவாக்குமே ஒழிய ஒன்றையும் சாதிக்காது.
அந்த அரசு எப்படி இயங்குகின்றது என அவர்களுக்கே தெரியாது, பாதாளத்தில் விழும் பேருந்து போல அது சென்று கொண்டிருக்கின்றது, எதுவும் அவர்கள் கைகளில் இல்லை
இப்படி இக்கட்டான நிலையில், காரிருளில் தமிழகம் கிடக்க இந்த அரசு எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா கொண்டாடுகின்றதாம், எவ்வளவு ஒரு ஆத்திரம் ஏற்படுத்தும் விஷயம் இது?
இப்பொழுதும் தமிழகத்தை அழித்தது திமுக, கலைஞர் என எவனாவது சொல்லிகொண்டிருந்தால், அவனை வடகொரியாவிற்கு கடத்துவது நலம்..
இப்படி பெரும் ஆலைகள் மூட்டைகட்டும் பொழுதும் பிரதான எதிர்கட்சிகள் என்ன செய்கின்றன என கேட்டால், என் தளபதியின் ராஜ தந்திரம் உனக்கு புரியாது என பதில் வரும்
அந்த ராஜ தந்திரம் அவர்களுக்காவது புரிந்தால் சரி…