பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம்

கிட்டதட்ட 25 ஆண்டுக்கு பின் பெரும் புயலை சந்தித்திருக்கின்றது தென்னகம்.

வானிலை அறிவிப்புகள் கனமழை இருக்க கூடும் என்றே அறிவித்தது தவிர புயல் தாக்கும் என அறிவிக்கவில்லை. புயல் உருவாகியிருக்கின்றது என்றார்கள்

ஒரு புயல் உருவானால் அது இருநாள் ஆகித்தான் சேதத்தை ஏற்படுத்த கரையேறும், ஆக இது கொஞ்சம் தாமதமாகத்தான் இவர்களால் கண்டுபிடிக்கபட்டிருகின்றது

இது நிச்சயம் தவறுதான், தாமதம் தான், ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்

கனமழை வருகின்றது எச்சரிக்கை என சொன்னதே பெரிய விஷயம்

சேதங்கள் பலத்ததாக இருக்கின்றன, புயல் சேதம் என சொல்லிவிட்டு நகரலாம்

ஆனால் பாதிக்கபட்டவர்களுக்கே அதன் வலி தெரியும், வாழை சரிந்ததென்றால் ஒருவனின் ஒரு வருட‌ உழைப்பு போயிற்று, வளர்த்த தென்னை சரிந்ததென்றால் கிட்டதட்ட 30 ஆண்டுகால உழைப்பு போயிற்று

ஒவ்வொரு இழப்பும் அப்படி பல உழைப்புகளை வீணாக்குகின்றன.

இன்னும் முழு சேதம் தெரியவில்லை, உங்களுக்கே தெரியும் கன்னியாகுமரி மாவட்ட உட்பகுதிகள் ஒடுக்கமான சாலை கொண்டவை. 3 அடி இருந்தாலே பெரும் விஷயம்

அப்படி ஒடுக்கமான சாலை எல்லாம் மரமும், சகதியுமாக கிடக்கின்றன, உண்மையான சேதம் தெரியும் பொழுது பலத்த அதிர்ச்சி செய்திகள் வரலாம்.

தாமிரபரணியில் வெள்ளம் என்கின்றார்கள், 25 ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை ஜங்க்ஷன் வரை, சகுந்தலா ஹோட்டல் வரை மிக அகண்ட தாமிரபரணியாக வந்த அந்த நதி இம்முறை எப்படி என தெரியவில்லை

எப்படி பார்த்தாலும் ஒரு விஷயம் உறுதி

இந்த புயல் சின்னம் இல்லாமல் சாத்தான்குளம், ராதாபுரம், வள்ளியூர் போன்ற பகுதிகளுக்கு மழையே இல்லை, வரவே வராது.

அவை எல்லாம் மழை மறைவு பகுதி, மக்கள் வாழமுடியா பகுதி அப்படித்தான் இருந்திருக்கின்றது

பின் நாயக்கர் காலத்திலே அங்கு குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன, குளங்களை கட்டி குடியிருப்புகள் அமர்த்தியிருக்கின்றார்கள்

பெரும்பாலும் புன்செய் பயிர்களாலே வாழும் பூமி அது, நன்செய் என்பது வருடம் ஒருமுறை விளைந்தாலே பெரும் விஷயம், ஆனால் நாயக்கர்களும் வெள்ளையர்களும் இருந்தவரை பாசன வசதிகள் இருந்திருக்கின்றன, அதன் பின் எல்லாம் திசை மாறிற்று

ராஜஸ்தான் போன்ற வறண்ட பகுதிகளை பாலை நிலம என ஒதுக்கலாம், கங்கை கரையினை செழிப்பு என சொல்லிவிடலாம்

ஆனால் கன்னியாகுமரி போன்ற செழிப்பான பகுதிகளுக்கும் , தாமிர பரணியின் செழிப்பான பகுதிகளுக்கும் இடையில் இருக்கும் இந்த வறண்ட பகுதி யார் கண்ணுக்கும் தெரியாது

அந்த வறண்ட பகுதியில் ஒரு சொட்டு நீருக்காக காத்திருப்பது எல்லாம் வலி, உண்மையில் அது வலி,

நீரில்லா கிணற்றோடு , நிலத்திற்கு நீர் இன்றி தவிக்கும்பொழுதெல்லாம், பெற்ற‌ தாய் பட்டினி கிடப்பது போன்ற பரிதவிப்பே வரும்.

இம்மாதிரி புயல் சின்னம் வந்தால் மட்டுமே அங்கு கனமழை கொட்டும்.

அப்படி கனமழை கொட்டியிருக்கின்றது , “நல்ல மழைப்பா.. இருக்குற மரங்கள காப்பாத்திரலாம், கொஞ்சம் வாழையாது நட்டுவிடலாம், இல்லண்ணா நிலம் வீணா போயிரும் பாரு”

இந்த வார்த்தைகள்தான் மிக மகிழ்ச்சியினையும் நம்பிக்கையும் கொடுப்பவை. ஒரு விவசாயி மகனுக்கு அதனை விட மகிழ்ச்சியான வார்த்தைகள் இருக்க முடியாது

அதுவும் தொலைதூரத்தில் இருந்து வரும் நல்ல‌ வார்த்தைகள் நிரம்ப மனநிறைவினை கொடுப்பவை.