பை பை யுவராஜ் சிங்
உலக கோப்பை கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அந்த அறிவிப்பும் வந்துவிட்டது
யுவராஜ்சிங் தன் ஓய்வினை அறிவித்துவிட்டார், மனமார அல்ல மாறாக மனம் வெறுத்துத்தான் அறிவித்திருக்கின்றார்
அற்புதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர் , 2001க்கு பின்னரான இந்திய கிரிக்கெட்டை அவர்தான் தாங்கினார்
பஞ்சாப் ஆட்டக்காரருக்கான ஒரு விளையாட்டு வெறி அவருக்கு இயல்பாய் வந்தது, எத்தனையோ ஆட்டங்களில் அவரால் இந்தியா வென்றது
அட்டகாசமான பீல்டர் அவர், எவ்வளவோ அருமையான மின்னல்வேக பீல்டிங்கில் அசத்தியிருக்கின்றார்
2011 உலக கோப்பையின் யுவராஜ்சிங்கினை மறக்க முடியாது
அன்றைய வலுவான பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியாவினையும் நொறுக்கி அணியினை இறுதிசுற்றுக்கு அழைத்து சென்றது அவர்தான்
ஆம் அவரே நங்கூரமாய் நின்று அணியினை கரைசேர்த்தார்
அந்த கோப்பையினை வென்றதில் அவரின் பங்கு கணிசமானது
ஐபிஎல் ஆட்டங்களில் ஓவரின் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்த சாதனை அவருடையது
அவருக்கு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒத்துழைத்த அளவு விதி ஒத்துழைக்கவில்லை
புற்றுநோய் தாக்கியது என அதற்கான சிகிச்சை பெற்றார், பின்னர் அது புற்றுநோய் அல்ல என சொல்லபட்டது
எனினும் அந்த வலிமிகுந்த சிகிச்சைக்கு பின் அவரால் சோபிக்க முடியவில்லை
ஓரளவு ஆடத்தான் செய்தார்
சேவாக் போன்ற சீனியர்கள் இல்லா நிலையில் ஓரத்திலேதான் இருந்தார், இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை
அந்நிலையில் ஓய்வினை அறிவித்துவிட்டார்
எல்லா வீரரும் ஒரு கட்டத்தில் ஓய்வினை அறிவிக்கத்தான் வேண்டும் , அவரும் விடைபெற்றுவிட்டார்
எனினும் 1983 உலககோப்பை கபில்தேவால் வந்தது என்பது போல 2011 உலக கோப்பை யுவராஜ்சிங்கால் வந்தது என குறித்து கொண்ட கிரிக்கெட் உலகம் அவரை வழியனுப்பி வைக்கின்றது
உங்களை ஒருபோதும் கிரிக்கெட் உலகம் மறக்காது யுவ்ராஜ்
கபில், சச்சின் போல நீரும் ஒரு மிகசிறந்த ஆட்டக்காரர்..
பை பை யுவராஜ் சிங்..
