மகள் : முதல் வகுப்புக்கு செல்லும் முதல் நாள் ..

 

முதல் வகுப்பிற்கு மகளை சேர்த்தாகிவிட்டது, லௌகீக வாழ்வின் கடமைகளில் அதுவும் ஒன்று

பிறந்த 3 மாதத்திலிருந்தே பாலர் பராமரிப்பு இல்லங்களுக்கு செல்வதால் அவளுக்கு கொஞ்சமும் பயமே இல்லை, மிகுந்த மகிழ்வோடு செல்கின்றாள்

அவளை பொறுத்தவரை எல்லோரும் 6 மாதத்திலே பள்ளிக்கு செல்வார்கள்,

காலையே சென்றுவிடுவார்கள், மாலைதான் அம்மா அப்பா தூக்கி செல்வார்கள். சாப்பிடுவது முதல் பேச தொடங்குவது வரை எல்லாமும் அங்குதான்

அவள் பார்த்த உலகம் அது.

இப்பொழுது ஒன்றாம் வகுப்பு, புது இடம் வேறு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

மாலையில் பள்ளி எப்படி இருக்கின்றது என்றால் கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் “ஓகே” என்றாள்

நண்பர்கள் எல்லாம் எப்படி என்றால், “பேசினாங்க எல்லாரும், ஒருத்தன் மட்டும் ம்ம்ம்ம்ம்ம் நீங்க ஒரு படம் பாப்பீங்கல்லா, அதில ஒரு அங்கிள் “என்னாச்சி என்னாச்சி” அப்படி கேட்டுட்டே இருப்பாங்கல்லா, அப்பிடி உன் நேம் என்னனு கேட்டுட்டே இருந்தான்

டென் டைம்ஸ் கேட்டான்பா, கோவம் வந்துட்டு டீச்சர் இருந்தாங்கல்லா அதனால நான் சும்மாவே இருந்துட்டேன்..”

சொல்லிவிட்டு அவள்போக்கில் இருந்தாள் கொஞ்சமும் பதற்றமில்லை

எங்கிருந்தாலும் நெல்லை வாரிசுகள் இப்படித்தான் இருக்கும் போல..

பாடம் எல்லாம் படிக்கிறியா? என்றால் “படிகத்தானே அங்க போறேன்” என்றொரு பதில்

என்ன படித்தாய் என்றால் “அதெல்லாம் உங்களுக்கு புரியாதுப்பா” என இன்னொரு பதில்

அதற்கு மேல் கேட்க என்ன இருக்கின்றது, பன்னீர் செல்வம் போல கர்ம‌ யோக நிலைதான்.

இன்று காலை பள்ளிவாசலில் விட்டால், “சரிப்பா நீங்க போங்க, நான் போய்க்கிறேன்.” என என்னை வழியனுப்புகின்றாள்

ஏதோ குறிப்பினை மனம் உணர்த்துகின்றது

எதற்கும் சில சிவாஜி சோக பாடல்கள், ரஜினியின் சோக பாடல்கள் சிலவற்றை தெரிந்து , படித்து கொள்வது நல்லது

பின்னாளில் உதவினாலும் உதவலாம்..