மணிரத்னத்திற்கு இன்று பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்
சினிமாவின் வெற்றி என்பது கதை சொல்லும் விதத்தில் இருக்கின்றது, பார்வையாளனை அப்படியே 2.5 மணிநேரம் கட்டி போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, அவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் , ரசிகனை ஒன்ற வைக்க வேண்டும்
படம் முடியும்பொழுது சோகமோ ஆனந்தமோ சில சொட்டு கண்ணீர் வரவேண்டும், மனம் கனக்க வேண்டும். அப்படிபட்ட படம்தான் வெல்லும்
படத்திற்கு இயக்குநர்தான் எல்லாம் என்பதால் அவர் நிரம்ப படித்தவராக, மிக பெரும் கலை உள்ளம் கொண்டவாரக இருத்தல் வேண்டும், மிக பெரும் கலை ரசிகனே நல்ல இயக்குநராக வர முடியும்
அதற்கு நிரம்ப வாசிக்கவும் வேண்டும்.
அப்படி கிடைத்த ஒரு அபூர்வ இயக்குநர் மணிரத்னம். வசனங்களால் நிரம்பிய தமிழ் சினிமாவினை வெறும் ஓரிரு வார்த்தைகளுக்கு திருப்பி காட்சிகளாலும், நடிகர்கள் முகத்து உணர்ச்சிகளாலும் நிரப்பி தனி இடம் பிடித்தவர்
அவருக்குள்ள மிக பெரும் சிறப்பு,எந்த இயக்குநரிடமும் அவர் அசிஸ்டெண்டாக அல்லது துணை இயக்குநராக இருந்ததில்லை
அவர் சுயம்பு, மும்பை வங்கி பணியிலிருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்த வித்தகர்
அவர் அதிகம் பேசமாட்டார், அவர் சினிமா பாத்திரங்களும் அதிகம் பேசாது, ஆனால் படம் பலத்த அதிர்வுகளை கொடுக்கும்
அவரின் மவுனராகம் அட்டகாசமான காதலை சொன்னது, அவரின் நாயகன் ஒரு ரவுடி எப்படி உருவானான்? அது நியாயமா? இல்லையா? என கேள்விகேட்ட பொழுது பதில் சொல்ல யாருமில்லை
சில குடும்பங்களில் காணப்படும் இரண்டு மனைவி கதையினை அக்னி நட்சத்திரம் சொன்னது
அவரின் அஞ்சலிலி ஈடி படத்தின் பாதிப்பு என்றாலும், ஒரு குழந்தை எப்படி எல்லாம் நம்மை பாதிக்கும் எனும் மானிட குணத்தினினை மிக அழகாக சொன்னது
திருடா திருடா 1990களிலே இன்றுள்ள தொழில்நுட்பத்தை காட்டியிருந்தது
பொதுவாக அவரின் கதைகரு தமிழ் இலக்கியங்களில் இருந்தே தொடங்கும், அதை உண்மை சம்பவங்களோடு இணைத்துவிடுவார், அவரின் நுட்பம் இதுதான்
சத்யவான் சாவித்திரி கதை ரோஜா என்றும், கர்ணன் கதை தளபதி என்றும் வந்து மாபெரும் வெற்றிபெற்றது, நாயகன் கூட வரதராஜ முதலியாரின் கதை
ஆக வாழ்வில் தான் படித்த அல்லது கண்ட கதைகளை அப்படியே திரையில் காட்டியவர் அவர்
ஈழதமிழரின் வலியினை அவரின் கன்னத்தில் முத்தமிட்டால் போல இன்னொரு படம் சொல்லமுடியாது
அவரின் இருவர் தமிழின் ஆக சிறந்த படம், 60 ஆண்டு அரசியலை அப்படியே சொன்ன படம், ஆனால் காலத்தால் முந்திகொண்டது போல் தெரிந்ததால் தோல்வி
ஆனால் அருமையான படம், ராமசந்திரன் யார்? என்பதை மிக நுணுக்கமாக காட்டிய படம்
இப்பொழுதுள்ள காலகட்டத்தில் அப்படம் வந்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் , இப்பொழுதும் ஜெயா இல்லா நிலையில், அவரின் கதையினை சொல்லி இருவர் 2ம் பாகம் வந்தால் அதுவும் மாபெரும் படமாக அமையும்
கலைஞர் ராமசந்திரன் கதை முதல்பாகமாக வந்தது போல ஜெயா கலைஞர் மோதல் இரண்டாம் பாகமாக வந்தால் வரவேற்கலாம்
தமிழின் மிகபெரும் இயக்குநராக இருந்த மணிரத்னம் எங்கு தடுமாறினார் என்றால், ரோஜாவின் வெற்றிக்கு பின் இந்திக்கும் தமிழுக்கும் பொதுவான படங்களை எடுப்பேன் என கிளம்பினார்
அதுதான் அவரின் தவறு
இந்தி யதார்த்தம் வேறு, தமிழக யதார்த்தம் வேறு இரண்டுக்கும் பொதுவான படங்கள் வரவே முடியாது, கமலஹாசனின் ஹேராம் அப்படித்தான் தோற்றது
உயிரே போன்ற பட்ங்கள் அப்படித்தான் வந்து பெரும் தோல்வி கண்டன,மாபெரும் வெற்றி பெற வேண்டிய அம்பானி கதையான குரு படமும் நினைத்த அளவு ஓடவில்லை
ராவணா படு தோல்வி
சுஜாதா போன்ற ஜாம்பவான்கள் அவர் அருகில் இல்லை என்பதும் கூடுதல் பலவீனம்
இதை எல்லாம் உணர்ந்தாரோ என்னமோ பின்பு ஓ.கே கண்மணி எனும் சுமாரான படத்தினை கொடுத்தார்
நிச்சயம் தமிழில் கவனம் செலுத்தினால் அவரால் மறுபடியும் மாபெரும் ஹிட்களை கொடுக்க முடியும் ஆனால் ஏனோ தயங்குகின்றார்
அது பம்பாய் படத்திற்கு பின் வந்த குண்டு வீச்சு சர்ச்சையா, இல்லை கன்னத்தில் முத்தமிட்டால் வந்தவுடன் இது புலிகளின் நியாயத்தை சொல்லவில்லை என்ற மிரட்டல்களா என தெரியவில்லை ஆனால் அதன் பின் அவரின் படங்கள் உண்மை கதையுடன் வரவில்லை
ரவுடி படங்கள் ஆயிரம் வரலாம், எத்தனையோ பேர் மும்பை தமிழர் கதையினை எடுக்கலாம். ஆனால் நாயகன் அளவு, தளபதி அளவு இன்னொரு ரவுடியிசம் படம் வருமா என்றால் வராது
அதுதான் மணிரத்னம் ஸ்பெஷல்
உண்மை சம்பவமோ இல்லை புராண கதைகளை யாதார்த்த சம்பவத்தில் கொண்டுவரும் யுத்தியோ அது மணிரத்னம் தவிர யாருக்கும் சாத்தியமில்லை
மிக பெரும் சோக நிகழ்வுகளை, வலி நிறைந்த வரலாற்றை மெல்லிய காதலோடும் குழந்தைகள் மழலை மொழியோடு முகத்தோடும் சொன்னால் அந்த விஷயம் மாபெரும் வெற்றி பெறும்
இதை ஹாலிவுட்டில் நிரூபித்தவர் ஜேம்ஸ் காமரூன், தமிழ்நாட்டில் நிரூபித்தவர் மணிரத்னம்
கமலஹாசன் எனும் மகா நடிகனை அற்புதமாக பயன்படுத்திய ஒரே இயக்குநர் இன்றுவரை மணிரத்னம் ஒருவரே
அந்த மணிரத்னத்திற்கு இன்று பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்
மனிதரை எந்த அளவு கொண்டாடுகின்றோமோ அந்த அளவு கோபமும் உண்டு. ஆம் தங்க தலைவிக்கு அவர் படங்களில் அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை, அலைபாயுதே எனும் படத்தில் மட்டும் கவுரவ வேடம் கொடுத்தார்
அப்படம் வெற்றிபெற அதுவும் ஒரு காரணம், அப்படத்தில் எங்கள் தலைவி ஹீரோயினாக நடித்த்திருந்தால் படம் மாபெரும் வெற்றி
அக்னி நட்சத்திரம் அமலா வேடம் தலைவிக்கானது, அதையும் கொடுக்கவில்லை, ரோஜா படத்தின் மதுபாலா வேடமும் தலைவிக்கானது அதையும் கொடுக்கவில்லை
இப்படி சில விஷயங்களில் அவர் மேல் சங்கத்திற்கு தீரா கோபம் உண்டு
வருங்காலத்திலாவது அந்த பழியினை துடைக்கும் விதமாக அவர் தலைவியினை நாயகியாக கொண்டு சிறந்த படம் படைக்கட்டும்
தமிழ்நாட்டு ஜேம்ஸ் கேமரூனுக்கு மறுபடியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
(மணிரத்னமிடம் பிடித்த விஷயம் அவர் படங்களில் வர்க்க போராட்டம் , உலக அரசியல் இருக்குமே தவிர உள்ளூர் அரசியல் , புரட்சி ,புண்ணாக்கு எல்லாம் இருக்காது
இனொன்று தன் மகனை இயக்குநராக்குவேன், ஹீரோ ஆக்குவேன் என அவர் தமிழர்களை கொடுமைபடுத்தவில்லை அந்த நல்ல குணத்திற்காக வாழ்ததலாம்)