மதுரை மீனாட்சியின் பிரிட்டிஷ் பக்தன்
எவ்வளவு இடர் வந்தாலும் பல ஆயிர வருட சரித்திரத்தில் ஒரு கையில் எண்ணுமளவு மிக சில நகரங்களே தன்னை மீட்டு காத்துகொண்டன, எந்த இடர் வந்தாலும், எவ்வளவு ஆட்சிகள் மதங்கள் வந்தாலும் எந்த கலாச்சாரம் வந்தாலும் அசையாமல் அதில் மூழ்காமல் தன்னை மீட்டெடுத்து நிற்கும் பூமிகள் சில.
அதில் ஜெருசலேம் காசிக்கு பின் அதிசயமாக நிற்கும் நகரம் மதுரை.
அது இந்து, சமணர், பவுத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவரென எல்லா மதத்தாராலும் அது ஆளபட்டது. ஆனால் அதன் இயல்பினை தொலைக்காமல் காலம்தோறும் தன்னை மீட்டெடுத்து இது அன்னை மீனாட்சியின் பூமி என நிரூபித்து கொண்டே இருந்தது
சமணர் பவுத்தர் காலத்தில் நாயன்மார்களும் அடியார்களும் இருந்தார்கள், இஸ்லாமியர் ஆட்சியில் நாயக்க மன்னர்களும் வந்தார்கள்
துக்ளக் மதுரை ஆலயத்தை சூறையாட தொடங்கியபொழுது அந்த ஆலயத்தில் இருந்த கல்யானைக்கு கரும்பை ஊட்டி வேடிக்கை செய்தபொழுது அந்த யானை கரும்பை உண்ண தொடங்கிற்று
அலறி அடித்த துக்ளக் அதன் பின் அந்த ஆலயம் பக்கமே செல்லவில்லை, 40 வருடமாக இஸ்லாமியர் அதனை கண்டு அஞ்சி ஒதுங்கி நின்றனர், அப்படியான ஆலயம் அது
(இப்பொழுது அந்த கல் யானை எங்கே இருக்கின்றது என்பது கூட தெரியவில்லை )
மீனாட்சி அம்மன் கோவிலையொட்டி மசூதி எழுப்ப ஆர்காடு நவாப் முயன்றபொழுது மருதநாயகமே அதை முறியடித்தான், இஸ்லாமியனாயினும் அவனுக்கு அக்கோவில் மேல் பக்தி இருந்தது
இப்படி இவர்கள் யாரும் இல்லா நிலையில், கிறிஸ்தவ ஆட்சியொன்றில் அன்னையே வந்து மதுரையினை காத்தாள் , ஆம் கிறிஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியில் 1812ல் மதுரை கலெக்டராக வந்தான் ரவுஸ். அவனுக்கு அப்பொழுது 37 வயது ஆகியிருந்தது
அவன் இந்தியா வந்து 12 ஆண்டுகள் ஆகியிருந்தன, தமிழகமெங்கும் சுற்றிவிட்டு மதுரை கலெக்டராக வந்து அமர்ந்தான். அது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி. காட்டு தர்பார் ஆட்சி
இந்தியா கொடூரமாக சுரண்டபட்ட நேரமது, ராபர்ட் கிளைவ் காட்டிய வழியில் ஆளாளுக்கு சுரண்டினார்கள். 1857ல் இந்தியா பிரிட்டன் அரசால் எடுக்கும் வரை அந்த சுரண்டல் இருந்தது. மகா மோசமான பஞ்சமும் சாவுகளும் வந்த நேரம்.
வங்கமும் கங்கை கரையும் அந்த சுரண்டலால் மிகபெரும் அழிவினை பஞ்சத்தை சந்தித்தன, இந்நேரம் மதுரைக்கும் அந்த ஆபத்து இருந்தது, புலிவாய் பட்ட மானாக மதுரை சுரண்டு உறிஞ்சபடும் அவலமான நேரமது. அப்பொழுதுதான் வந்தான் ரவுஸ்
வங்கபஞ்சம் போல மிகபெரும் சீரழிவு மதுரைக்கும் வர இருந்த நேரமது, கிழக்கிந்திய கம்பெனியின் காட்டாட்சி அப்படி. இருக்கும் செல்வத்தை எல்லாம் கொள்ளையடி, இருக்கும் தானியத்தையெல்லாம் கப்பலில் ஏற்று எனும் மிகபெரிய கொள்ளை
இந்திய விளைச்சலை இந்தியருக்கே அநியாய விலையில் விற்கும் மகா அவலமான கொடுமை இன்னும் ஏராளம். “பணமில்லையா சமஸ்தான ஜமீனிடம் வாங்கு அவனிடம் இல்லையா? மக்களிடம் வரிகளை கூட்ட சொல், வறட்சியா கோவில் நகைகளை கொடுக்க சொல், சிலைகளை கொடுக்க சொல், முடிந்தவரை கொள்ளை அடி, கொள்ளை அடித்து தங்கத்தை குவித்து லண்டனுக்கு அனுப்பி கொண்டே இரு”
ஆம் கஜினி உள்ளே புகுந்து கொள்ளையடித்தான் அது காட்டுமிராண்டிதனம், வெள்ளையன் செய்தது நரி தந்திரம்
அப்படிபட்ட நோக்குடனே மதுரைக்கு வந்தான் ரவுஸ், அவனுக்கு கொடுக்கபட்ட கட்டளை மதுரையினை சுரண்டி லண்டனுக்கு அனுப்பவேண்டும் என்பது, அவன் அதற்காகத்தான் வந்தான்
கலெக்டர் என்பது சர்வ சக்திவாய்ந்த பதவி, மன்னனுக்கு நிகரானது. அவன் தனக்கிட்ட பணியினை செம்மையாய் செய்ய தொடங்கினான், மதுரை சுரண்டபட ஆரம்பித்தது
அன்று மதுரையில் மழையும் இடி மின்னலுமாக இருந்தது. அவன் உறங்கிகொண்டிருந்தபொழுது தெய்வ அம்சமும், தெய்வீக கலையோடும் முகத்தோடு ஒரு சிறுமி வந்து அவனை எழுப்பினாள். “பீட்டர் எழுந்திரு” என சொல்லி அவனை கையினை பிடித்து இழுத்து வந்தாள்.
வந்தவள் வீட்டுக்கு சிறிது தூரம் அழைத்து வந்து நிறுத்திவிட்டு கையினை விடுவித்து விட்டு அவள் போக்கில் நடந்தாள், அவளை பீட்டர் பார்த்து கொண்டிருந்தபொழுதே பெரும் வெளிச்சத்துடன் அவன் வீட்டை இடிதாக்கி அது உடைந்து விழுந்தது
அதிர்ச்சியில் உறைந்த பீட்டர், அச்சிறுமி பின்னால் ஓடினான். “நில்லம்மா நில்லம்மா” என கத்தி கொண்டே ஓடினான், அவளுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்பது அவன் எண்ணம்
கோவிலை நெருங்கிய சிறுமி அவனை நோக்கி புன்னகைத்துவிட்டு சட்டென உட்புகுந்தாள், அத்தோடு மறைந்தாள்
அப்படியானால்.. வந்தது அம்மனா… மீனாட்சி அம்மனா.. மதுரைக்கு கொள்ளை அடிக்க வந்த என்னை காத்தது இந்த அம்மனா.. என அங்கேயே முழங்காலிட்டு கதறினான் பீட்டர்.
என்னை கொல்ல இவளுக்கு எவ்வளவு நேரமாயிருக்கும்? காக்க தெரிந்தவளுக்கு அழிக்க தெரியாதா? என் மேல் எவ்வளவு அன்பிருந்தால் காத்திருப்பாள்? ஏன் நான் பிழைக்க வேண்டும்? ஏன் இவள் என்னை காக்க வேண்டும்?
ஆக தான் மதுரைக்கு ஆற்றவேண்டிய கடமை உண்டு, தன்னால் இங்கு செய்யவேண்டிய செயல் உண்டு என்பதை உணர்ந்தான்
அன்றிலிருந்து மதுரையின் காவல்காரனாக தன்னை மாற்றினான். முதன் முதலாக தான் குதிரையில் ஏற காலடியாக வைக்கும் அங்கவடி எனும் பாதம் தாங்கியினை கழற்றி அன்னையின் காலடியில் வைத்தான், இன்றளவும் அது அங்கு உண்டு
அன்றிலிருந்து அன்னையின் பக்தனானான், தினமும் குதிரையில் ஏறி ஆலயத்தினை ஒரு சுற்று சுற்றிவந்து உட்சென்று வணங்கிய பின்புதான் தன் அன்றாட கடமையினை செய்வான். அந்த அளவு அவனுக்கு அம்மன் பற்று வந்தது
அன்னைக்கு தங்ககாலணி செய்து வைத்ததும் அவனே
அவன் அன்னைமேல் பக்தியில் வளர காரணங்களும் வந்தன, யானைகள் மதுரையின் மேற்கு பக்கம் தொல்லை கொடுக்க , அதை அடக்கும் கடமை பீட்டர் மேல் விழுந்தது
காட்டில் யானைகளை கொன்றான் விரட்டினான், கூட்டமாய் இருந்தபொழுது அவை சிக்கல் செய்யாது ஓடிவிடும். ஆனால் ஒற்றை யானை பேராபத்து
அப்படி ஒருமுறை ஒற்றை யானையிடம் தனியாக சிக்கினான் பீட்டர், சில அடி தூரத்தில் நின்ற ஒற்றை யானை அவனை கொல்லும் ஆக்ரோஷத்துடன் ஓடிவந்தது, துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு, நிச்சயம் அந்த குண்டு யானையினை கொல்லாது
10 பேர் சரியாக மண்டையில் சுட்டால்தான் அக்கால துப்பாக்கிபடி யானை சாகும், ஒரு குண்டு சாத்தியமில்லை
ஆனால் யானை நெருங்கிற்று, இனி சாவு உறுதி என்ற நிலையில் “தாயே மீனாட்சி என்னை காப்பாற்றம்மா” என உரக்க சொல்லிமுடிக்குமுன் ஒரு கரம் அவனையறியாமல் அவன் துப்பாக்கியினை தூக்கி விரலை அழுத்திற்று, ஒரு குண்டில் செத்தது யானை
அது தன் குறி அல்ல, தன் செயலும் அல்ல என்பதை உணர்ந்தவன் அங்கேயே கண்ணீர்விட்டு அழுதான், அவனுக்கும் அம்மனுக்குமான உறவு அப்படி இருந்தது.
ஆம் தெய்வங்கள் சாதாரணம் அல்ல, ஒருவனை தனக்கென பிடித்துவிட்டால் விடாது. அப்படியே ஆக்கிரமித்து கொள்ளும். யாரை எப்பொழுது தனக்காக பயன்படுத்த வேண்டுமோ அதை சரியாக செய்யும் தெய்வம்
அப்படி தன்னையும் தன் மக்களையும் ஆலயத்தையும் காக்க அம்மன் அந்த வெள்ளையனை பிடித்து கொண்டாள்
அவன் அதன் பின் பாண்டிய வம்சத்தில் ஒருவனாக தன்னை சேர்த்து கொண்டான். கலெக்டர் என்பதையோ தான் ஒரு வெள்ளையன் என்பதையோ, கிறிஸ்துவ தேசத்துக்கு கட்டுபட்ட கம்பெனிகாரன் என்பதை சுத்தமாக மறந்தான்
மக்கள் வாழ எல்லாமும் செய்தான். மீனாட்சி அம்மனுக்கு அழகருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தான். மக்கள் அவனை கொண்டாடினர். ஏழையரும் எளியோரும் வளம்பெற ஏகபட்ட விஷயம் செய்தான்
இந்தியா முழுக்க சுரண்டபட மதுரை மட்டும் அவனால் தன்னித்து நின்றது, கருப்பசாமி போல் காவல் காத்தான் அந்த வெள்ளையன்
மக்கள் அவனை ரவுஸ் பீட்டர் என்பதை மறந்து தங்களின் பாண்டிய வாரிசாக “பீட்டர் பாண்டியன்” என்றே அழைத்தனர்
அவன் தமிழ்வளர்த்தான், தமிழ்சங்கம் அவனால் புத்துயிர் பெற்றது. புலவர்கள் “பீட்டர் பாண்டியன் அம்மானை” எனும் பாடல் தொகுப்பே பாடினர், அது இன்னும் உண்டு
10க்கு மேற்பட்ட ஆண்டுகள் அவன் அன்னையினையும், மதுரையினையும் கண்போல் காத்தான். பாண்டிய மன்னனின் மறுபிறப்பாக காத்து நின்றான். ஏதோ போன ஜென்மத்தில் செய்யமுடியா பாண்டியனின் கடமைகள் இப்பிறவியில் அவனால் நிறைவேறுவதாக மதுரை கருதிற்று
அதில் வாய்ப்பு இல்லாமல் இல்லை, ஏன் அவன் மதுரைக்கு வரவேண்டும்? ஏன் அவனை அம்மன் காக்க வேண்டும்? ஏன் அவனுக்கு பக்திவரவேண்டும்?
ஏன் அவனை மக்கள் பீட்டர் பாண்டியனாகவே கொண்டாடவேண்டும்? இதற்கு மதுரை மீனாட்சியினை தவிர யாரிடமும் பதிலில்லை
நல்லாட்சி நடத்தவும் மதுரை ஆலயத்தை பராமரிக்கவுமா ரவுஸ் பீட்டரை மதுரைக்கு அனுப்பினோம் எனும் கேள்விகள் சென்னை கோட்டையில் எழுப்பபட்டு லண்டனில் எதிரொலித்தது
ஆனால் பீட்டர் தன் கடமையில் சரியாக இருந்ததால் அவனை அசைக்கமுடியவில்லை, மக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. மேலிடம் இதை ராஜதுரோகமாக கருதிற்று
சரியான நேரத்துக்கு காத்திருந்தார்கள், மாவீரன் மருதநாயகத்துக்கு செய்யபட்ட அநீதி பீட்டர் பாண்டியனுக்கும் நிகழ்ந்தது
சில சிக்கல்களுக்காக காத்திருப்பார்கள், சிறு ஓட்டை கிடைத்தாலும் காத்திருந்த வன்மத்தை மொத்தமாக இறக்கி உன் ஆட்சி சரியில்லை என விரட்டி அடித்து, வரிபாக்கி அது பாக்கி என சொல்லி அவனை கொல்வார்கள்
கட்டபொம்மன் முதல் மருதநாயகம் வரை அது நடந்தது, நம் கண்முன் சதாம் உசேனுக்கு நடந்தது
அப்படி ஒருமுறை வறட்சி நடந்த நேரம் அவன் வசூல் குறைய இதுதான் சாக்கு என உள்ளே வந்தான் ஜார்ஜ் கோட்டை கவர்ணர், மொத்த கோபத்தையும் மொத்தமாக காட்டினான்.
ஆட்சியினை ஒழுங்காக நடத்தாதது, மதுரைக்கு வறட்சி கொண்டு வந்தது(?), அரசு பணத்தை ஆலயத்துக்கும் மக்களுக்கும் கொடுத்தது என சொல்லி அவனால் அரசுக்கு பல ஆயிரம் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியதாக சொல்லி பதவி நீக்கம் செய்து அறிக்கை கேட்டது
தெளிவாக சொன்னான் பீட்டர், என் பதிலை நான் கடிதம் எழுதி சென்னைக்கு அனுப்புகிறேன் ஆனால் எக்காரணம் கொண்டும் மதுரையினை விட்டு வரமாட்டேன், என்னை கொல்வதாக இருந்தால் இங்கே கொல்லலாம்
அதன் பின் சாதாரண மனிதனாக கலெக்டர் பதவி இல்லா சாமான்யனாக அவன் மதுரையில் நடந்தே அன்னையினை வணங்க வந்தான், அவனுக்காக அழ ஒரு கூட்டமே இருந்தது
ஒரு சித்தரின் சாயலில் அவன் மாறினான், “அன்னையே வறட்சி என்குற்றமா? வைகை வறண்டது என்குற்றமா?” என அவன் கதறிய கதறல் ஆலயம் முழுக்க எதிரொலித்தது, அன்னை பார்த்து கொண்டே இருந்தாள்
மதுரை செழிக்க வேண்டும், மதுரை செழிக்க வேண்டும், வைகை பெருவெள்ளமாய் பாயவேண்டும் என மன்றாடியபடியே செத்து கிடந்தான் பீட்டர்
மனதால் செத்தவன் நெடுநாள் வாழமாட்டான், ஆனால் தன் சாவுக்கு பின்னரான காரியங்களை சரியாக முன் தயாரிப்பு செய்வான்
தான் இறந்தால் எப்படி புதைக்கபட வேண்டும், தன் தலை மீனாட்சி அம்மனை நோக்கி இருக்க வேண்டும், என் கண்கள் ஆலயத்தை பார்த்தபடியே புதைக்கபட வேண்டும் என அவன் கேட்டுகொண்டபடியே அவன் உடல் புதைக்கபட்டது.
மேலஆவணி மூல வீதி தெற்காவணி மூலவீதியோடு சந்திக்கும் இடத்திற்கருகில் உள்ள பரிசுத்த ஜார்ஜ் ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அந்த கல்லறை இன்றும் உள்ளது.
அன்னை மீனாட்சியின் அருள்பெற்ற, பூர்வ ஜெனம் வாசனையால் மதுரைக்கு வந்து, அவளுக்கு பணியாற்றி, கடமை முடிந்தபின் அன்னை அருகே துயில் கொள்ளும் வரம்பெற்ற அவனின் கர்மா இப்படி நிறைவேறிற்று
அவன் தற்கொலை செய்ததாகவும், முறைகேடு செய்ததாகவும் அவன் பெயரை வெள்ளை நிர்வாகம் கெடுத்து வைத்தது, அன்னையின் பக்தனை அன்னை கைவிட்டாள் எனும் அவபெயரை உண்டாக்க நடந்த சதி அது
அன்னை அவனை கைவிடவில்லை, அவனின் கர்மா முடிந்ததும் அழைத்து கொண்டாள் அவ்வளவே
அவன் கடிதத்தை பிரித்த சென்னை கோட்டை உருகியது, மிக தெளிவாக தன் நியாய தர்மங்களை சொல்லியிருந்தான் பீட்டர்.
மதுரைக்கு அந்த அன்னையின் ஆலயம் பிரதானம் என்றும், அரசுவருமானத்தில் அங்கு நற்பணிகள் செய்வது காலகாலத்துக்கும் நடப்பது என்பதையும், நாம் அந்த பாண்டிய அரசின் தொடர்ச்சி என்பதால் அதை செய்வது நம் கடமை எனவும் தெளிவாக சொன்னான்
ஆளவந்த நாம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றவோ, ஆலயங்களை கைவிடவோ உரிமையற்றவர்கள். மக்களிடம் இருந்து வரிவாங்கும் நாம் அவர்களின் ஆலயத்தையும் காப்பது கடமை என்பதை விளக்கியிருந்தான்
இந்த கடிதங்களை மறைத்த வெள்ளை நிர்வாகம் கடைசி பத்தியினை மட்டும் காட்சிக்கு வைத்தது, அது சென்னையில் இன்றும் உண்டு
“இதற்கு மேலும் நான் ஏழை எளியவருக்கு செய்தது தவறு என கருதினால் 70 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்டுள்ள என் லண்டன் சொத்துக்களை கம்பெனி எடுத்து கொள்ளட்டும். நான் இந்தியாவில் சம்பாதித்த அது இந்தியரின் கணக்குக்கே செல்லட்டும், மீனாட்சியின் பக்தன் யாரையும் ஏமாற்ற மாட்டான்”
அவனுக்கு பின் வந்த கலெக்டர்களை பீட்டர் பாண்டியனின் செயல்பாடுகளோடு மக்கள் ஒப்பிட்டதால் அவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் அட்டகாசம் செய்யமுடியவில்லை, மிக பெரும் காவலாய் இருந்தான் பீட்டர்
அடுத்த 30 ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டானிய அரசுவசம் சென்றபின் அந்த கொள்ளைக்கார கம்பெனியின் ஆட்சி மதுரையில் இருந்து அகன்றது, பேராபத்து நீங்கிற்று
பீட்டர் பாண்டியன் காலத்துக்கு பின் அவன் புகழ் நெடுங்காலம் நிலைத்தது, வைகையில் பெரும் நீர் கொண்டுவர வேண்டும் என அவன் கதறிய கதறல் ஆலய சுவர்களில் கேட்டு காலம் வரும் வரை காத்திருந்தது
பீட்டர் பாண்டியனின் மனதினை கொண்டு ஒருவன் வந்தான் அவன் வைகை செழிக்க வழிதேடினான், யாரும் முடிக்க முடியா சாதனையாக முல்லைபெரியாறு அணையினை கட்டி அதை வைகையில் சேர்த்தான் பென்னிகுயிக்
இன்று வைகை அணைகட்டபட்டு வைகை ஆண்டிபட்டி பக்கம் நின்றிருக்கலாம், ஆனால் அது கட்டபடும் வரை வைகை ஓடிற்று என்றாலும், இன்றும் ஓரளவு மதுரை பக்கத்தை தாங்கி நிற்கின்றது என்றாலும் முல்லை பெரியாறு அணையின் உதவி மகத்தானது
அந்த பென்னிகுயிக் என்பவன், பீட்டர் பாண்டியனின் கதறலினால் காலம் உருவாக்கிய வரம்
ஆம், “அன்னையே வறட்சிக்கு நான் காரணமா? நீ காரணமா” என அவன் கதறிய கதறலின் ஓலமே பின்னொரு நாளில் முல்லைபெரியாறாக முடிந்தது
அந்த அளவில் அவன் பிரார்த்தனை கேட்கபட்டது, தன் பக்தன் பொதுநலத்துடன் வைக்கும் எந்த கோரிக்கையினையும் அன்னை கேட்காமல் இருந்ததில்லை, சில கொஞ்சம் தாமதமாகும் அவ்வளவுதான்
அந்நியனாய் பிறந்து , இங்கு வந்து மதுரை பாண்டியரில் ஒருவனாய் வாழ்ந்து நம்மில் ஒருவனாகவே வாழ்ந்து நமக்காக உழைத்து, நம் மண்ணிலே கல்லறை கொண்டுள்ள அந்த பீட்டர் பாண்டியன் முக்கால பாண்டியரில் ஒருவன்
காலத்தால் அவன் வந்தான், வரலாறும் ஆனான்
அவன் பிறந்ததும் இறந்ததும் அம்மனுக்குரிய ஆடி மாதமே, ஆம் அவன் காலம் ஆடி மாதமான ஆகஸ்ட் 24, 1785 முதல் ஆகஸ்ட் 6, 1828 வரை சரியாக இருந்தது.
இன்றும் மதுரையில் அவன் கல்லறை மட்டுமல்ல அவன் அள்ளிகொடுத்த நகைகளும் பல சான்றுகளும் உண்டு, அவன் எழுதிய கடிதம் அவன் வாழ்ந்த வாழ்வுக்கு சாட்சியாக சென்னை கோட்டையில் உறங்குகின்றது
அவன் கிறிஸ்துவனாக பிறந்தான், அன்னை மீனாட்சி பக்தன் எனும் இந்துவாக இங்கே மரித்தான்
அடுத்தமுறை மதுரை கோவிலுக்கு செல்பவர்கள் அந்த அடியாரான பீட்டர் பாண்டியனின் கல்லறையினை தரிசித்துவிட்டு வாருங்கள், அன்னை மீனாட்சி நிச்சயம் மகிழ்வாள்
அன்னை மீனாட்சிக்கு முதன் முதலில் அவன் கொடுத்த அந்த தங்க காலடி காணிக்கை இன்றும் உண்டு
சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் மாசி வீதிகளில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வரும்போது இந்த பாததாங்கியினைத்தான் அணியபட்டிருக்கும், அதை ஒருமுறை பாருங்கள் இனம்புரியா மகிழ்வும், ஆனந்த கண்ணீரும் உங்கள் மனதில் வந்து அமரும்
அதுதான் ஒரு கிறிஸ்தவனை இந்து தெய்வமான அன்னை மீனாட்சி அருள்கொண்டு பாவித்த மாபெரும் வரலாற்றின் சிலிர்ப்பு, அதை அனுபவித்து பாருங்கள் மகா கர்வமாய் உணர்வீர்கள், உங்களையும் மீறி கண்ணீரோடு அன்னை மீனாட்சியினை நோக்கி உங்கள் கரம் வணங்கும்
ஆம், ஆயிரம் அற்புதங்களை செய்ய அன்னை மீனாட்சி காத்திருக்கின்றாள், சரியான நபர்கள் வரும்பொழுதெல்லாம் வந்த அற்புத ஆலயம் தன் சக்தியினை காட்டி தன் ஆலயபெருமையினை காத்து கொண்டே இருக்கின்றது
