மன்னார்குடியினை மன்னர் குடி ஆக்க…

sas.jpeg

கட்சிக்காக ஒரு முட்டு சந்தில் கூட பேசாதவரை, ஒரு பிட் நோட்டீஸ் கூட சுவரில் ஒட்டாத ஒருவரை

ஒரு வார்டு கவுன்சிலராகவோ, வட்ட செயலாளராக கூட இல்லாத ஒருவரை, இதுவரை ஒரு வார்த்தை கூட மேடைகளில் பேச தெரியாத ஒருவரை ,

பொதுமக்கள் சார்பாக ஒரு கோரிக்கை கூட வைக்காத ஒருவரை

அக்கட்சியின் சீனியர்கள் எல்லாம் வருந்தி வருந்தி தலைவராகுங்கள், கட்சியினை வழிநடத்துங்கள் என அழைக்கின்றார்களாம்

யாரையாவது ஒரு பெண்மணியின் புகழ்பாடிகொண்டு, அவர் காலில் தலைவியே என விழுந்துகொண்டே இருப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம், அப்படி ஒரு ஆனந்தம்

நீங்கள் யாரையும் தலைவியாக கொள்ளுங்கள்,சசிகலா என்ன ஹிலாரி கிளிண்டனை வேண்டுமானாலும் அழைத்து தலைவராக்குங்கள், ஆனால் வாக்களிக்க வேண்டியது மக்கள் அல்லவா?

காலம் உங்களுக்கு பதில் சொல்லும்..

போகட்டும் எல்லாம் தைரியம்

பொம்மைகளை வைத்து ஆள்வது என்பது அவர்களுக்கு கைவந்த கலை, எம்ஜிஆர் எனும் பொம்மையினை வைத்து 3 வருடம் ஆண்டார்கள், அப்படித்தான் இருந்தது எம்ஜிஆரின் கடைசி காலம்

ஜானகி எனும் பொம்மையும் கொஞ்சநாள் ஆண்டது

ஜெயாவினை பொம்மையாக்கி ஆண்டார்கள்,

இப்பொழுது அடுத்த பொம்மையினை வைத்து ஆள கிளம்பிவிட்டார்கள்

காலம் அப்படியே இருக்கும், மக்கள் அப்படியே இருப்பார்கள் என அவர்களாக நினைத்துகொள்கின்றார்கள்

ஏதும் சிக்கலென்றால், அய்யகோ நாங்கள் இல்லை என்றால் அந்த கருணாநிதி தமிழகத்தை கொள்ளையடித்து விடுவான் என்று ஒப்பாரி வைப்பார்கள், அவர்களின் ஆயுதமே அந்த கலைஞர் எதிர்ப்புதான்

இவ்வளவு காலமும் எந்த பொம்மை வந்தாலும் அவர்கள் ஆட்சி செய்யும் நுட்பம் இந்த கலைஞர் எதிர்ப்பே, அவருக்கு
வயதானதால் இப்பொழுது பாஜகவினை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்

சசிகலா இல்லாவிட்டால் கட்சி உடைந்து அழிந்துவிடுமாம், சரி இருந்தும் அக்கட்சி மக்களுக்கு சாதித்தது என்ன? கொடநாட்டிலும், ஐதரபாத்திலும், சிறூதாவூரிலும் பங்களாக்கள் எழும்பியதை தவிர என்ன சாதித்தது?

மிடாஸ் போன்ற சாராய ஆலைகள் எழும்பியதே தவிர, ஒரு நல்ல‌ தொழிற்சாலை உருவாகியிருக்கும்?

இதில் அக்கட்சி இல்லை என்றால் பாஜக வளர்ந்துவிடுமாம், அது ஆபத்தாம்

சரி காங்கிரசோ அல்லது கம்யூனிஸ்டு கட்சியோ வளரட்டும் என்றால் எல்லோரும் வாயினை பொத்து என்பார்கள்

காரணம் தமிழகம் தனிநாடு போலவும், இந்த திராவிட கட்சிகள் இல்லையெனில் அதனை அண்டைநாடுகள் ஆக்கிரமித்துவிடுவது போலவும் ஆக்கிவைத்தாயிற்று

திராவிட கட்சிகள் செய்தது என்ன?

ஒன்றுமில்லை, எங்களை ஆதரியுங்கள் மாநிலத்தில் ஆளுகின்றோம், டெல்லியில் யாரையாவது நாங்கள் ஆதரிக்கின்றோம் மாநில நலனை காக்கின்றோம்

சரி அப்படி என்ன மாநில நலன் காத்தார்கள்? என்றால் சொல்லதெரியாது

காங்கிரஸ் தமிழர் விரோத கட்சியாம், அதோடு ஏன் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி வைத்தன என்றால் பதிலிருக்காது

பாஜக மதவாத கட்சியாம், ஆனால் அந்த ஆட்சியில் முரசொலிமாறன் எப்படி அமைச்சராக இருந்தார் என்றால் பதிலிருக்காது.

தேசிய கட்சிகள் ஆபத்தானவை, அவை வந்தால் தமிழகத்தை அழித்துவிடும் என சொல்லியே ஆட்சிக்கு வந்து நன்றாக சம்பாதிக்கும் வழியினை தொடங்கி வைத்ததை தவிர இக்கட்சிகள் என்ன செய்தன?

இதோ ஜெயா இல்லாவிட்டால் சசிகலா, யாராக இருந்தாலும் காலில் விழ தயார் என கிளம்பியிருக்கின்றார்களே, மக்கள் பணி மீது அவ்வளவு அக்கறையா? இல்லை எல்லாம் சம்பாதிக்கும் ஆசை

மனம் நிறைய வெறுப்புடன் டிவியினை திறந்தால், அவர் உற்சாசகமாக பாடிகொண்டிருக்கின்றார்

“நான் ஏன் பிறந்தேன்?….”

ம்ம்ம்ம் …தெரியாதா?

பன்னீர் செல்வத்தை முதல்வராக்க, மன்னார்குடியினை மன்னர் குடி ஆக்க,

வேறு எதற்கு பிறந்தீர் அய்யா? நிச்சயம் அதற்குத்தான்.