மயில் விருத்தம் : 01

மயில் விருத்தம் 01

மயில் விருத்தம் பாடலை காணுமுன் அதன் தத்துவ விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும், இந்துக்களின் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு வாகனம் உண்டு அதில் பெரும் தத்துவமும் உண்டு. விநாயகரின் எலி யோகதத்துவம் போல முருகனின் மயிலும் அழகான ஆத்ம தத்துவம்

மயில் முருகனை சுமந்தது என்பது ஆத்மா முருகனை மனதில் சுமக்க வேண்டும் என்பதை குறிப்பது

பறவைகளில் அழகானதும் ஈர்ப்புமிக்கதுமான மயில் , உயிர்களில் சிறந்ததான மானிடரின் ஆன்மாவுக்கு குறியீடானது. விரிந்த தாமரையினை ஞானத்தின் குறியீடாக்கிய இந்துமதம் விரிந்த மயில் தோகையினை மனிதனின் ஞான விரிதலின் தன்மைக்கு காட்டிற்று

யோகத்தில் சக்கரங்கள் துலங்கி ஞானதாமரை மலர்வது போல ஞான தோகை என மயிலை காட்டிற்று

மயில் என்பது மானிட ஆத்ம வடிவம் என்பதுதான் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை, கண்ணன் அதை தலையில் சூடியதும் அப்படியே

அந்த தத்துவ விசாரத்தினை அடிபடையாக கொண்டு தொடர்ந்து வாருங்கள், மயில் விருத்தம் சொல்லும் ஞான போதனை புரியும்

இதோ முதல் பாடல் : 01

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.

முதல் வரி இப்படி வருகின்றது

“சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா”

இவ்வரி “சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா” என பிரிந்து பொருள் தரும்

சந்தணமும நறுமண மலர்களும் (சந்தாண புஷ்ப பரிமள) மணப்பதும், சலங்கையினை தன்னிடத்தில் கொண்டதும் (கிண்கிணி முக), இரு பாதங்கள் ( சரண யுகள) அமிர்தம் போல சாகாவரம் அளிக்கும் ஒளியினை வீசுவதும் (அமிர்த பிரபா) என்பது பொருள்

(கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும், அந்த தேவலோக சந்தண மரத்தை குறிக்கின்றது)

பாடலின் இரண்டாம் வரி இதோ

“சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்”

இவ்வரி “சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கன” என பிரிந்து வரும்

பிறை சந்திரனை தலையில் அணிந்தவரும் (சந்திர சேகரன்), எலிமேல் வருபவரும் (மூஷின ஆரூட), சத்ய நெறி தவறாமல் தழுவி கொண்டிருப்பவருமான‌ (வெகு மோக சத்ய பிரிய ஆலிங்கன) என பொருள்

மூன்றாம் வரி இதோ

“சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்”

இவ்வரி “சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரியம்பக விநாயகன் முதல்” என பொருள்படும்

(சிந்தாமணி என்பது தேவ லோகத்தில் இந்திரனிடம் இருக்கும் மணி, அதை வைத்து பிரார்த்தித்தால் நினைத்ததை அடையலாம் என்பது பொருள் )

அந்த சிந்தாமணி போல் அடியார்களுக்கு அள்ளி கொடுப்பவரும் , கையில் அமிர்த கலசம் வைத்திருப்பவரும், மதநீர் ஊறும் தலையினை உடையவரும் (கட கபோல), முக்கண்களை உடைய பிள்ளையார் (த்ரியம்பக விநாயகன்) முன்னொரு காலத்தில் (முதல்) என பொருள்

நான்காம் வரி இதோ

“சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்”

இவ்வரி “சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்” என பொருள்

முன்பு விநாயகர் சிவனை ஞானபழத்துக்காக சுற்றிவந்த பொழுது (சிவனை வலம் வரும் அளவில்), உலகை ஒரு நொடியில் (உலகடைய நொடியில்) சுற்றி வந்த (வரு) அழகான தோகையினை உடைய மயில் (சித்ர கலாய மயில்) என்பது பொருள்

அந்த மயில் யாருடையது என்பது அடுத்தடுத்த வரிகளில் வருகின்றன‌

ஐந்தாம் வரி இதோ

“மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா”

அதாவது “மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா” என பிரிந்து வரும் அவ்வரி

கங்கையில் பிறந்தவரும் (மந்தாகினி பிரபவ), மனகவலைகளை ஒழிப்பவரும் (தரங்க விதரங்க), அடர்ந்த சரோஜம் எனும் தாமரையில் உதித்தவரும் (வன சரோதய), கார்த்திகை பெண்கள் (கிர்த்திகா) என்பது பொருள்

இனி ஆறாம் வரி

“வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்”

இது “வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து” என பொருள்படும்

சிறந்த மகனும் (வர புத்திரன்) அதாவது கார்த்திகை பெண்களின் மகனும், தாமரை கட்டிலில் அமர்ந்திருப்பவனும் ( ராஜிவ பிரியங்க), பாம்பினை தன் காலடியில் கயிறினை கட்டி போட்டிருப்பவன் ( தந்தி அ வர அசலன்), வஜ்ஜிராயயுதத்தை கொண்டிருக்கும் (குலிசாயுதம்)

ஏழாம் வரி இதோ

“திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்”

“இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர்” என பிரிந்து பொருள் தரும் வரி இது

வஜ்ஜிராயுதம் கொண்டிருக்கும் இந்திரனை அசுரனிடம் இருந்து காத்ததால் அவன் மனைவி இந்திராணியின் மாங்கல்ய நூலை காத்தவன் (திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண), போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி
இருக்கும் பேரழகை உடையவனும் (இகல் வேல் விநோதன்), அருள் கூர்ந்த‌ (அருள் கூர்)

கடைசி வரி இதோ

“இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே”

அதாவது “இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே” என்பது பொருள் தரும் வரி

இயமயமலையில் இருக்கும் பார்வதி மகன் (இமையகிரி குமரி மகன்), ஏறி வரும்
நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது (ரத்னக் கலாப மயிலே) என்பது பொருள்

ஆக பாடலின் பொருள் இதுதான்

தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின் நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதுமான‌ அமிர்த ஒளியை வீசும் இரண்டு திரு அடிகளை உடையவரும்

(இதனை ஒளவையார் தன் விநாயகர் அகவலில் “சீதகளப செந்தாமரை பூ பாத சலங்கை பலவிசை பாட” என்ற வரியில் பாடுகின்றார்)

பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும் மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், சாகா வரம் தரும் அமிர்த கலசத்தை கையில் வைத்திருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும்

முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில் ஞானபழத்துக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், உலகம் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில்

அது யாருடையது என வினாவினால்

கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பினை தன் காலடியில் கொண்டவரும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது.

இந்த பாடலில் சுருக்கமான காட்சி ஒன்றுதான், ஞானபழத்துக்காக விநாயகர் அம்மையப்பனை சுற்றி வந்த பொழுது முருகன் மயிலேறி உலகெல்லாம் சுற்றிவந்தது எல்லோரும் அறிந்த ஒன்று

அந்த காட்சியினைத்தான் சொல்லி முருகனை உலகெல்லாம் சுமந்த மயிலே என தொடங்குகின்றார் அருணகிரியார், அப்படியே விநாயகரரையும் தொடக்கத்திலே வணங்கி பாடுகின்றார்

வெறும் ஒரு வரியில் கடந்து செல்வதல்ல இப்பாடல் சூட்சுமமான ஆத்ம ரகசியங்களை இது சொல்கின்றது, விநாயகர் பழம் வாங்கினார் முருகன் மயிலோடு ஊர் சுற்றினார் என்பதல்ல விஷயம், நுணுக்கமான ரகசியங்களை இந்த பாடலும் அந்த காட்சியும் போதிக்கின்றது

அந்த திருவிளையாடல் காட்சி மயிலை நம் ஆத்மாகவும் முருகன் ஞானபழத்தை தேடி உலகெல்லாம் சுற்றுவதை நம் பிறவியாகவும் காட்டுகின்றது

ஆம், கயிலாயத்தில் இருந்து மயில் கிளம்பிற்று என்பது ஜீவாத்மா அந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து பூமிக்கு வந்ததை காட்டும்

ஒவ்வொரு ஆன்மாவும் பரமாத்மாவில் இருந்து வருகின்றது, அது ஞானம் தேடி அலைகின்றது அது கிடைக்காமல் பிறவி முடியாது என்பதே அந்த காட்சியின் தத்துவம்

இந்த காட்சியில் மயில் முருகனை சுமப்பதாக சொல்லபடுவது முருகனை சுமந்தால் நம் பிறவி பிணி அகலும், ஞானம் கிடைக்கும்

அந்த மயில் முருகனோடு சுற்றி மறுபடியும் கயிலாயம் அடைந்தாலும் ஞானபழமில்லை என மறுபடி வெளியேறியது அதன் கர்மா முடியவில்லை என்பதை குறிக்கின்றது

அந்த கர்மா பின் முருகன் தன் கடமைகளை எல்லாம் முடித்து அவதார நோக்கம் முடிந்தபின்பே நிறைவேறிற்று, எல்லா காட்சியிலும் மயில் அவரை சுமந்தது

சூரன் மயில் வடிவாகி முருகனை பணிந்தான் என்பது ஆத்மா லவுகீக மாயைகளை களைந்து முருகனை ஏற்றுகொண்டால் ஜெயம் என்பதை சொல்வது

ஆம், இந்த பாடல் திருவிளையாடல் காட்சியில் ஞானபழத்துக்காக முருகன் மயில் ஏறி சுற்றியதை நேரடியாக சொன்னாலும் அதன் ஞானபெரும் பொருள் ஆத்மாவின் ரகசியம்

எந்த ஆத்மா முருகனை சுமந்து தன் கர்மங்களை செய்யுமோ அந்த ஆத்மா கயிலாயம் ஏகும், முருகன் இல்லாத ஆத்மா தன் பிறவியினை முடித்து முக்தி அடையாது

மயில் தோகை விரிப்பது போல மானிட ஆத்மாவின் ஞானம் துலங்க வேண்டும், அந்த ஞானத்தில் முருகனை அந்த ஆத்மா சுமக்க சுமக்க அது தன் பிறவி கடமை அல்லது கர்மாவினை எல்லாம் முடித்துவிட்டு பரமாத்வாவோடு இணையும்

மனமே நீ முருகனை சுமப்பாயாக, உலகின் எல்லா ஈர்ப்புகளையும் இழுக்கும் மயில் போல எல்லா ஆசைகளிலும் வீழும் மனமே நீ முருகனை சுமப்பாயாக, அந்த முருகனை சுமந்தால் உன் கர்மா தீரும் முக்தி பாக்கியம் கிட்டும் என்பதே பாடலின் ஞான தத்துவம்