மயில் விருத்தம் : 02
“சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே”
இப்பாடலின் முதல் வரி இப்படி வருகின்றது
“சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்”
இவ்வரி “சக்ர ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளிபட்டு க்ரவுஞ்ச சயிலம்” என பொருள்தரும்
“சக்ர பிரசண்ட” என்றால் சக்ரவளை என பொருள், சூரனின் உலகினை சுற்றி பெரும் மலைகள் சக்கர வடிவில் இருந்தன, அதனை முருகனின் வேல் உடைத்தது அதைத்தான் சொல்கின்றார் அருணகிரியார்.
சக்கர வளைய மலைகளை உடைத்து (சக்ர ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து) வெளிவந்து கிரவுஞ்ச சயிலம் (கிரவுஞ்ச மலை) என்பது பொருள்
இனி இரண்டாம் வரி
“தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்”
இவ்வரி “தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு தனி வெற்பும் அம்புவியும் எண்” என பிரியும்
கிரவுஞ்ச மலை தகர்ந்து போகும் படியும் (தகர), பெரிய தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும் ( பெரும் கனகச் சிலம்பும்) சூரபத்மனுக்கு காவலாக இருந்த ஏழு மலைகளும் (எழு தனி வெற்பும்), அழகிய பூலோகமும் (அம்புவியும்), எட்டும் (எண்)
இனி மூன்றாம் வரி
“திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே”
அதாவது “திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு சித்ரப் பதம் பெயரவே” என பிரியும்
எட்டு திக்கிலும் உலகை தாங்கும் அஷ்ட பாலகர்களும் (திக்கு தடம் குவடும்), ஒரே நேரத்தில் குலுங்க (ஒக்க குலுங்க) நடந்து வரும் அழகிய கால்கள் வந்ததும் (வரு சித்ரப் பதம் பெயரவே)
நான்காம் வரி இப்படி வருகின்றது
“சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்”
இவ்வரி “சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம்” என பிரிந்து வரும்
ஆதி சேஷனின் திருமுடிகள் கலங்கும்படி (சேடன்முடி திண்டாட), போர்புரியும் அசுரர்கள் (ஆடல் புரி வெம் சூரர்) அதிரும்படி (திடுக்கிட) நடனமிடும் மயிலாம் (நடிக்கு மயிலாம்)
அந்த மயில் யாருடையது என்றால்
ஐந்தாம் வரி சொல்கின்றது
“பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்”
அதாவது “பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும் கவரி பத்ம பதம் கமழ் தரும்” என பிரிந்து பொருள் வரும்.
தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும் (பக்கத்தில் ஒன்றுபடு) பச்சை நிறமுடைய பார்வதி (பச்சைப் பசும் கவுரி),தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும் (பத்ம பதம் கமழ் தரும்)
ஆறாம் வரி இதோ
“பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்”
இந்த வரி “பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய பரம உபதேசம் அறிவிக்” என பிரியும்
கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய (பாகீரதிச் சடில), யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு (யோகீசுரர்க்கு), உபதேசம் செய்வதற்காக,உரிய பரம உபதேசம் அறிவிக்கைக்கு ( தகுந்த பிரணவ
உபதேசம் செய்வதற்காக)
ஏழாம் வரி இதோ
“கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு
கந்தச்சுவாமி தணிகைக்”
இவ்வரி “கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தச்சுவாமி தணிகைக்” என பிரிந்து வரும்
வளமான சரவண பொய்கையில் அவதரித்த கந்தனின் (கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தச்சுவாமி), தணிகையில் (திருதணிகையில்..)
எட்டாம் வரி இப்படி வருகின்றது
“கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே”
இவ்வரி “கல்லாரகிரி உருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே” என பிரிந்து வரும்
கல்லாரம் என்றால் செங்கழுநீர் பூ என பொருள், அந்த பூக்கள் நிரம்பிய தணிகை மலை
கல்லார கிரி (செங்கழுநீர் மலை எனும் திருத்தணி மலை) உருகும்படி (கல்லாரகிரி உருக) வரு கிரண ,பேரோளி பொருந்தியபடி (வரு கிரண ) மரகத (பச்சை) நிறம் உடைய தோகைகளை உடைய மயிலே அது (கலாபத்தில் இலகு மயிலே)
ஆக இந்த பாடலின் பொருள் இதுதான்
சக்ரவாளம் என்கிற பெரிய மலை தொடர் உடையவும் கிரவுஞ்ச மலை தகர்ந்து போகவும், தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும், சூரனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளும், அழகிய பூவுலகும், எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும் ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும்
அடி எடுத்து வருகின்ற அழகிய கால்கள் மெதுவாக வந்தவுடனேயே, ஆதிசேஷனின் திருமுடிகள் கலங்க, போர் புரியும் அசுரர் திண்டாட, திகைத்து நடுக்கமுற நடனம் செய்யும் மயிலாகும்
அது யாருடடையது?
தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும், பச்சை நிறமுடைய பார்வதி தேவியின், தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும், கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய, யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு தகுந்த பிரணவ உபதேசம் செய்வதற்காக, வளமான சரவணப் பொய்கையில் அவதரித்தக் கந்தக் கடவுளின், திருத்தணிகையில், செங்கழுநீர்மலை உருகும் படி, போரொளி பொருந்திய, மரகத நிறம் உடைய, தோகைகளை உடைய மயிலே அது.
இந்த பாடலின் ஞான தத்துவம் என்ன?
மயில் என்பது ஆன்மாவின் தத்துவம் அது ஆன்ம குறியிடு என்பதை முதலிலே சொல்லியிருந்தோம்
அந்த ஆத்மா தனியே போராடினால் அதனால் பெரும் தடைகளை உடைக்க முடியாது, மலைபோன்ற தடைகள், பெரும் மாயைகள், உலக ஆசைகளை எல்லாம் வெல்ல முடியாது
அந்த ஆத்மா முருகனை சுமந்தபடி சென்றால் அதனால் மாயை மலைகள், பெரும் ஆசை மலை சிகரங்கள் எல்லாவற்றையும் நொடியில் அழிக்கமுடியும், தகர்த்து எறிய முடியும்
ஏழு மலைகள் என்பது ஏழு சக்கரங்களை குறிப்பது
தனியாக ஆத்மா போராடினால் உடலின் ஏழு சக்கரங்களும் துலங்காது, அந்த சக்கரங்கள் முருகனின் அருளோடு எளிதில் துலங்கும்
அந்த யோக சக்கரங்கள் துலங்கும் பொழுது இந்த பிரபஞ்ச பெரும் சக்தியின் தத்துவம் ஆன்மாவுக்கு தெரியும், மாயை நீங்கிய ஆத்மா ஒளியடையும், அந்த ஒளிபொருந்திய ஆத்மாவினைத்தான் பேரொளி பொருந்திய மயில் என்கின்றார் அருணகிரியார்
இப்பாடலில் சிவனுக்கு முருகன் போதித்தார் என்பது சிவனுக்கு முருகன் போதித்தபொழுது மயில் அவனுடன் இருந்தது, அந்த போதனை மயிலுக்கும் கேட்டது என்பது பொருள்
அதாவது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் முருகன் சிவனுக்கு போதித்த போதனைகள் இருக்கின்றன, முருகபெருமான் அருளால் அதை உணர்ந்து கொள்ளமுடியும், அந்த போதனையில் பெரும் ஞானமும் நல்வாழ்வும் நிம்மதியும் ஆத்மாவினை சூழும் என்பது பாடலின் ஞான பொருள்
என்ன ஓரு ஆன்மீக சுரங்கம்… எத்தனை கருத்துக்கள். மயில் வாகனன் என்றும் உமக்கு துணை… ஆன்மீக தகவல் சுரங்கம். இன்னும் சில நாட்களில் நீங்களே ஒவ்வொரு கடவுளுக்கும் விருத்தம் எழுதுவீர்கள்…
நிச்சியம் உலகம் உங்களை கம்பர், வள்ளுவர் போன்று உங்களையும் பாராட்டும் காலம் வெகு விரைவில்.
அசைந்தாடும் மயிலே வா… வா..
முருகா சரணம் 🙏🙏🙏🙏