மயில் விருத்தம் : 03

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே”

முதல் வரி இப்படி தொடங்குகின்றது

“ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே”

இவ்வரி “ஆதார பாதளம் பெயர அடி பெயர மூதண்டம் முகடது பெயரவே” என பிரிந்து வரும்

இதன் பொருள் இந்த உலகுக்கு ஆதாரமான பாதாளம் (ஆதார பாதாளம்) அசையும் படி (பெயர) அடியெடுத்து வைக்க‌ (அடி பெயர), மிகவும் பழமையான அண்டத்தின் உச்சிக் கூரையானது அசைய (மூதண்டம் முகடது பெயரவே)

இரண்டாம் வரி இப்படி வருகின்றது

“ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே”

இவ்வரி “ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி கவுள் கிரிசரம் பெயரவே” என பிரிந்து வரும்

அதாவது இந்த பூமியினை தாங்கும் ஆதிஷேசனின் முடிகளெல்லாம் அசைய (ஆடும் அரவம் முடி பெயர)
எட்டு திசைகளும் பெயர ( எண் திசைகள் பெயர), அந்த திசைகளை தாங்கும் மதநீரையுடைய கன்னங்களை உடைய அஷ்டதிக்கு கஜம் எனும் யானைகளும் நடுங்க ( எறி கவுள் கிரிசரம் பெயரவே)

மூன்றாம் வரி அடுத்து வருகின்றது

“வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா”

இவ்வரி “வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் மிக்க பிரியப்பட விடா” என பிரிந்து பொருள் தரும்

பெரிய கணங்கள் தாளமிசைக்க நடன்மாடும் நடராஜ கோல சிவன் ( வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் ) மிகவும் அன்புடன் பாராட்டபடவும் (மிக்க பிரியப்படவும்)

நான்காம் வரி அடுத்து வருகின்றது

“விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்”

இவ்வரி “விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்” என பிரிந்து வரும்

அதாவது வைத்த கண்களை அகற்றாதபடி ( விழி பவுரி கவுரி கண்டு) மகிழ்ந்து (உள மகிழ) பல வித நடனங்களை செய்து விளையாடும் மயிலாம் ( விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்)

அந்த மயில் யாருடையது என்பதற்கு அடுத்த 4 வரிகள் பதில் சொல்கின்றன. ஐந்தாம் வரி இதோ

“மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா”

இவ்வரி “மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி மகீதரி கிராத குலி”

(இங்கு மாதாநு பங்கியெனும் வார்த்தை கவனிக்கதக்கது, இது மாதாநுபங்கி எனும் என பொருள் வரும்

மாதாநுபங்கி என்றால் இருவகையான பொருள் இங்கு சொல்லபடுகின்றது, மாதாநுபங்கி எனும் பெயருக்கு தாயைபோல கருணையான மனம் என பொருள்

இது திருமாலில் இருந்து உதித்த வள்ளி தெய்வானையின் கதையினை சொல்கின்றது, திருமாலில் இருந்து உதித்த சகோதரிகள் இருவரும் முருகனுக்காக தவமிருந்து அடுத்த பிறவியில் தேவயானி வள்ளியாக பிறந்து முருகனை மணமுடித்தார்கள்

“மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி” எனும் வார்த்தை இந்த கதையினை சொல்வதாக ஒரு பொருள் உண்டு

இன்னொரு பொருள் ஆதாரமில்லாதது , வள்ளியுடன் சகோதரர்கள் நிறைய உண்டு என்பதும் அதில் வள்ளுவனும் ஒருவர் என்பதும் செய்தி, அது திருவள்ளுவர் என சொல்வோரும் உண்டு, அது திருவள்ளுவரின் வள்ளுவ சமூகத்தின் தொடக்கமானவனாக இருக்கலாம் என சொல்வோரும் உண்டு

ஆனால் அவை உண்மையான ஆதாரமாக இருக்க முடியாது, திருமாலில் இருந்து உதித்த இரு சகோதரிகளில் ஒருத்தி என்பதைத்தான் அருணகிரியார் இங்கு சொல்கின்றார்)

அதாவது பொருள் இதுதான் திருமாலில் இருந்து உதித்தவளின் சகோதரியான வள்ளி (மாதாநு பங்கியெனு மாலது சகோதரி), மலையில் பிறந்தவளும் (மகீதரி) வேடர் வம்சத்தில் வளர்ந்தவள் (கிராத குலி)

ஆறாம் வரி இதோ வருகின்றது

” மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்”

அதாவது “மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த வள்ளி மணி நூபுர மலர்ப்” என பிரிந்து பொருள் தரும்

முனிவரின் மகளும் ( மாமறை முனி குமாரி), மான் வயிற்றில் இணையற்ற வகையில் வந்தவளும் ( சாரங்கம் நம் தனி வந்த ) வள்ளி தாயாரின் கிண்கிணியும் சிலம்பும் அணிந்த தாமரை மலர் போன்ற ( வள்ளி மணி நூபுர மலர்ப்)

(சிவபுத்ரி முனிவர் பார்வையினால் மானில் உருவாகி பிறந்தவள் வள்ளி என்பது நம்பிக்கை, அதைத்தான் இங்கு சொல்லவருகின்றார் அருணகிரியார்)

இனி ஏழாம் வரி

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்”

இவ்வரி “பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற் பலகிரி அமர்ந்த பெருமாள்” என பிரிந்து பொருள் தரும்

அரன் என்றால் இறைவன், தன் பாதங்களால் காவல் செய்பவன் (பாதார விந்த சேகரன்) அன்பிற்கு உகந்ததாய் (நேயம்) பூத்திருக்கும் (மலரும்) நீலோற்பவ மலர்கள் நிறைந்த திருத்தணியில் (உற்பல கிரி) வீற்றிருக்கும் பெருமை உடைய (வீற்றிருக்கும் பெருமாள்)

இனி இறுதி வரிகள்

“படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே”

இவ்வரி “படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே” என பிரிந்து பொருள்தரும்

படையுடன் வந்த அசுரர்களின் (படைநிருதர்) சேனை சிதறும்படி (கடகம் உடைபட) நடனம் செய்கின்ற (நடவு) பச்சை நிறமான தோகையினை விரித்த மயிலே (பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே) என்பது பொருள்

ஆக பாடலின் பொருள் இதுதான்

“இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள, பாதாள லோகம் அசையவும், , மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும், இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும், எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும், மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும், வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான், மிகவும் அன்புடன் பாராட்டவும், வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி, உள்ளத்தில் களிப்புகொள்ளவும், பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில்

(அது யாருடையது என வினாவினால்) திருமால் உடலில் இருந்து தோன்றியவளின் சகோதரியானவள், மலையில் பிறந்தவள், வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி, மான் வயிற்றில், ஒப்பற்ற வகையில் உதித்த, நமது வள்ளித் தாயரின், கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற, பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின், அன்பிற்கு உகந்ததாய், பூத்திருக்கும், நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில், வீற்றிருக்கும் பெருமையை உடையவன், படையுடன் வந்த அசுரர்களின், சேனைகள் சிதறிப் போகும்படி, நடத்துகின்ற முருக பெருமானின் பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது” என்பது பொருள்

இது பாடலின் நேரடி பொருள் எனும் வகையில் இதன் ஞான தத்துவ பொருள் என்ன?

அது கொஞ்சம் சூட்சுமமானது யோகத்தில் இறைவனை காணும் ஒரு சூட்சுமத்தை இப்பாடல் போதிக்கின்றது

இந்த பாடல் யோகத்தின் உச்சியில் ஆத்மா பெறும் அனுபவங்களை சொல்கின்றது

பாதாள உலகம் அசைதல் என்பது மூலாதாரம் அசைவதை குறிக்கின்றது, உச்சிகூரை அசைதல் என்பது துரிய சக்கரம் துலங்குதலை குறிக்கின்றது

முருக பக்தியில் ஆத்மா உருகும் பொழுது யோகம் கைகூடும் அப்பொழுது கீழிருக்கும் மூலாதாரம் முதல் உச்சந்தலையில் இருக்கும் துரிய சக்கரம் வரை ஆட்டம் காணும் என்பதுதான் மறைமுக பொருள்

எண்வகை யானைகள் என்பது எட்டுவகை உணர்வுகளை குறிப்பது, உணர்வு கடந்த யோக நிலையில் இந்த எட்டுவகை உணர்ச்சிகளும் அகன்றுவிடும்

ந‌கை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனும் எட்டுவகை உணர்ச்சிகளும் கடந்த ஞானபெருநிலை ஏற்படும் அது எல்லாம் கடந்த சமாதி நிலை

அந்நிலையில் சிவனையும் பார்வதியினையும் தரிசிக்கலாம், யோகத்தின் உச்சியில் நெற்றி புருவத்தில் சிவசக்தி தத்துவமும் நடனும் புலனாகும்

மயிலை சிவன் காண்பார், பார்வதி காண்பார் என்பது யோகத்தில் ஆத்மா இறைவனையும் இறைவியினையும் தரிசிக்கும் என்பதாகும்

இந்த பாடலில் வள்ளியினையும் அவளின் சிறப்புக்களையும் அருணகிரியார் சொல்ல அவசியமும் உண்டு

வள்ளி முருகனை அடைய தவமிருந்தவள் ஆனால் அடுத்த பிறவியில் அவளுக்கு முருகன் நினைவு இல்லை, உரிய நேரத்தில் முருகனே வந்து அவளுக்கு அவள் தவத்தை நினைவுபடுத்தி தன் அண்ணன் விநாயகர் மூலம் தன்னோடு சேர்த்து கொண்டார்

இந்த தத்துவம் இங்கு கவனமாக நோக்கதக்கது

ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை அடைய துடிக்கின்றது ஆனால் மானிட பிறப்பில் அது வந்த நோக்கத்தை மறந்து மாயையில் சிக்குகின்றது, ஒரு பிறவியில் இறைவனை நினைத்து தவமிருந்தால் உரிய நேரத்தில் உரிய பிறவியில் பரம்பொருளே வந்து ஆத்மாவினை தம்மோடு சேர்த்து கொள்வான் என்பது பொருள்

மயில் என்பது ஆன்மாவின் குறியீடாக இந்த மயில் விருத்ததில் பாடபடுகின்றது

அந்த ஆத்மா முருகனை சுமந்தால் அவன் பக்தியில் உருகினால் யோகம் கைகூடும், யோகத்தில் சிவனையும் பார்வதியினையும் காணும் பாக்கியம் கிடைக்கும், உரிய நேரம் பரம்பொருளோடு கலந்துவிடும் முக்தியும் அந்த ஆன்மாவுக்கு அருளபடும் என்பதுதான் ஞான மறைபொருளாகும்