மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது…
மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது, அதுவும் மனதிற்கு நெருக்கமானவர்கள் மரணம் மிகவும் பாதித்துவிடுகின்றது
அதிலிருந்து வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை
பெற்றெடுத்த தாய் உண்டு, ஆனால் வளர்த்தெடுத்த தாய்மார்கள் பலர் உண்டு, அவர்களில் ஒருவரை இழந்துவிட்டேன்.
அந்த பெண்மணியிடம் கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு, ஒரு பெரும் குடும்பத்தின் மூத்த மருமகள், மிக பொறுப்பான பதவியில் இருப்பவரின் மனைவி, பிள்ளைகளுக்கு நல்ல தாய் எபப்டி இருக்கவேண்டும் என்பதன் எடுத்டுகாட்டு அவர். அப்படி ஒரு சுறுசுறுப்பான உழைப்பு
முதிர்ந்த வயதில் முதியோர் சேவை என வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வீணாக்கமல் உழைத்தவர் அவர். எது சிக்கனம்? எது கஞ்சத்தனம்? எது உழைப்பு? எது வெட்டிவேலை? எது பக்தி? எது கிறிஸ்தவம் என்பதை அவரிடம் இருந்துதான் கற்க வேண்டும்.
அதெல்லாம் விட மிக மிக குறிப்பிட்டு சொல்லவேண்டியது அவரின் எளிமை.
பெரும் அதிகாரியின் மனைவி, பெரும் சொத்துக்களுக்கு அதிபதி எனும் நினைப்பு அவர் மனதிலோ வார்த்தைகளிலோ ஒரு நாளும் கண்டதில்லை
மலேசியா, அமெரிக்கா, ரோம் என உலகெல்லாம் அடிக்கடி சுற்றி வந்தாலும் ஏதோ சந்தைக்கு போய்விட்டு வந்தது போல அவ்வளவு இயல்பாய் இருப்பார்
எல்லோருக்கும் வாய்க்காத ஞானம் அது..
நமக்கொரு வாரிசு பிறந்து வளர வளர நம்மை வளர்த்தவர்கள் பிரிந்துகொண்டே இருக்கின்றார்கள், நினைவுகளை விட்டுவிட்டு, அழவைத்து விட்டு அவர்கள் தூங்க செல்கின்றார்கள்
இந்த மானிட சாபத்திற்கு யாரும் தப்பமுடியாது
ஆனால் அவரின் கணவரிடம் பேசிவிட்டபின் துக்கம் அடைத்துகொண்டது, மனம் நொறுங்கிவிட்டது, உண்ண கூட மனமில்லை
அம்மனிதருக்கு பெரும் வரலாறு உண்டு, 1940களில் நேதாஜி படைதிரட்டும்பொழுது 15 வயதில் சேர்ந்தவர் அவர், போராடியவர், நேதாஜியோடு நேரடியாக பழகி, இன்று வாழும் மிக சிலரில் அவரும் ஒருவர்
ஜப்பானியடமிருந்து மலேயா மறுபடி பிரிட்டிசார் கையில் சிக்கியபொழுது, அவரை காவல்துறை அதிகாரியாக நியமித்தனர் பிரிட்டிஷார், மிக குறுகிய காலத்திலே உயந்தவர், மலேயா சுதந்திரம் பெறும்பொழுது பெரும் காவல்துறை பொறுப்பில் இருந்தவர்
அண்ணா, காமராஜர் எல்லாம் மலேசியா வரும்பொழுது அவர்தான் பாதுகாவலர், அதுவும் காமராஜருடன் அவர் பழகிய 2 வாரங்கள் மிக மிக மகிழ்வான காலங்கள் என்பார்
ஓ.ஆர் ராமசாமி, சி.பா ஆதித்தனார் வரை அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது
மலேசியாவில கம்யூனிசபோராளிகள் துடைத்தொழிக்கபட்ட பொழுது பெரும் போராட்டம் நடத்தியவர், கிட்டதட்ட வீரப்பனை கொன்ற விஜயகுமாரின் சாயல் அவர்
ஓய்வுபெற்ற பின் மலேசிய பெருவாழ்வினை விட்டு, தமிழகத்தின் மூலைக்கு வந்து தன்னை சுருக்கி, ஒரு முதியோர் இலத்தினை பலரோடு இணைந்து நடத்திகொண்டிருப்பவர்
அப்படிபட்ட மனிதர் எதற்காகவும் கவலைபட்டு பார்த்ததில்லை, எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசுபவர், பிரிட்டிசாருடன் பழகியதால் அவரின் ஆங்கிலம் அப்படி இருக்கும், ஆனால் நம்மோடு தமிழில்தான் பேசுவார் அதுவும் சுத்த தமிழ்
ஒருமுறை அவர் யாரிடமோ போனில் ஆங்கிலம் பேசியபொழுது, இனி இந்த மனிதர் வீட்டை கூட மிதிக்க நமக்கு தகுதியில்லை என எண்ணிகொண்ட காலம் உண்டு
ஆனால் அந்த தமிழ் பேசும் எப்படி வந்தது என்றால்? யாழ்பாண தமிழர்களோடு பழகிய பழக்கம் அது, அவர்களை விட யாரும் தமிழை பாதுகாக்கமுடியாது என்பார்.
அப்படிபட்ட மனிதரின் குரல் முதன்முறையாக கலங்கி கேட்ட பொழுது நெஞ்சம் தாளவில்லை
“எனக்கு எல்லா ஆசீர்வாதமும் கொடுத்த கடவுள், அவளுக்கு முன்பு செல்லும் பாக்கியத்தை கொடுக்கவில்லை
என்னை விட்டுவிட்டு போய்விட்டாள் ஸ்டான்லி” என அவர் முடிக்கும் பொழுது குரல் உடைந்திருந்தது
முதன் முறையாக வாழ்வில் அழுகின்றார் என்றார்கள் உறவுகள், கவனிக்க ஏராளமான பிள்ளைகள் உண்டெனினும் மனைவி போல யாருண்டு? எனும் குரல்கள் கேட்கின்றன.
பென்ஷனை பெரும் தொகையில் பெறுவபர்தான், நினைத்தால் 10 வேலையாட்களை நியமிக்கும் வசதிதான், சொத்துக்களுக்கோ பிள்ளைகளுக்கோ குறைவில்லை
ஆனால் அவை எல்லாம் மனைவி எனும் ஸ்தானத்திற்கு ஈடு இல்லை என்பது புரிகின்றது, மனமொத்த மனைவிக்கு எதுவும் ஈடில்லை, ஈடே இல்லை…
அவருக்கு ஆறுதல் சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கின்றது, காய்ந்த இலை விழும்பொழுது பச்சை இலை குனிந்திருந்து யோசிக்கத்தான் வேண்டும்
வரலாற்றை புரட்டினால், மிக முதிர்ந்த காலம் வரை உழைத்தவர்கள் யாரென கண்டால், அவர்களுக்கு பின் அவர்களில் மனைவி முகமே வருகின்றது
மனைவிகள் சென்றபின் சாதித்தவன் என யாருமில்லை, நேரு போன்ற ஒரு சிலரை தவிர.
ஒரு குடும்பஸ்தனுக்கு நல்ல மரணம் என்பது மனைவிக்கு முன் சென்றுவிடுவதே, நிச்சயமாக அது ஒரு ஆசீர்வாதம்
வாழ்வின் பாதிவயதில் நிற்கும்பொழுது இப்படி எல்லாம் சிந்தனை செல்கின்றது என்பதும் புரியவில்லை, ஆனால் பல முதியவர்களின் வாழ்வினை பார்க்கும்பொழுது ஏதோ அரைகுறையாக புரிகின்றது
மனைவி இல்லாத வீடு மனை ஆகாது என யாரோ என்றோ சொன்னதன் அர்த்தம் புரிகின்றது, மனைவியின் இடம் யாராலும் நிரப்பமுடியாத இடம் என்பதும் புரிகின்றது..
நிறைவாழ்வு வாழ்ந்து விட்ட அந்த மகராசியின் ஆத்மா சாந்தியடையட்டும்
முதிர்ந்த வயதில், இனி அவள் இல்லாத வினோத வாழ்க்கை சூழலை எதிர்கொள்ளபோகும் அவருக்கு, எல்லா தெய்வங்களும் ஆறுதலை வழங்கட்டும்
எத்தனையோ முறை அவர்களை சந்தித்திருக்கின்றேன், எல்லா சூழலிலும் சந்தித்திருக்கின்றேன்
இனி சந்திக்கும்பொழுது அவரை மட்டும் சந்திக்கவேண்டும், அதனை நினைக்கும்பொழுதே அந்த மகராசியின் முகம் முன் வந்து அழ வைக்கின்றது……