மறைவுக்கு பிறகு கிளம்பும் மர்மங்கள்…

ஜெயலலிதா வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஏதோ சசிகலா பற்றி சொல்லிவிட்டாராம், உடனே சிலர் வந்து சசிகலா பற்றி என்ன தெரியும் என பொங்குகின்றார்கள்.

அதாவது 1989களில் ஜெயலலிதாவினை மன்னார்குடி குடும்பம்தான் காப்பாற்றியது, அதுவும் திவாகரன், நடராஜன் எல்லாம் வீரகாவியம் படைத்து அவரினை காத்தார்களாம், சசிகலா உயிருக்கு துணிந்து ஜெயாவிற்கு காவல் இருந்தாராம்

அதனால் சசிகலாவினை ஏதும் யாரும் சொல்ல கூடாதாம், பேசிகொண்டே இருக்கின்றார்கள்

எல்லா தலைவர்களும் இப்படியான நெருக்கடிகளை கடந்தவர்கள். கலைஞர் வாங்காத அடிகளா? அவரை சாக்கடையிலிருந்து அன்றொரு நாள் ஒரு பெண்மணி காப்பாற்றவில்லையா?

இந்திரா மதுரையில் தாக்கபட்டபொழுது ரத்தம் சிந்தி நெடுமாறன் காக்கவில்லையா?

அவர்கள் எல்லாம் என்ன கட்சிக்குள் இருந்து ஆட்டுவிக்கின்றார்களா? ஆட்சிக்குள் தலையிட்டு அட்டகாசம் செய்தார்களா?

அதிமுகவிலும் இப்படியான காட்சிகள் உண்டு, 1989 ஜெயாவிற்கு மிரட்டலான காலம் என்றால் 1972முதல் 1976 வரை எம்ஜிஆர் பட்டபாடு கொஞ்சமா?

அவர்கள் எல்லாம் அதிமுகவில் கட்சியிலும் ஆட்சியிலும் வந்து நின்றார்களா?

அவ்வளவு ஏன் மிக இக்கட்டான நிலையில் எம்ஜிஆருக்கு உதவினார் அந்த ஜேபி ராஜ் எனும் கான்ஸ்டபிள். பின்னாளில் எம்ஜிஆர் அளித்த பிச்சையில் அவர் ஜேபிஆர் எனும் கல்விதந்தையாக வாழ்ந்தார்

அவர் எம்ஜிஆர் உயிரை காப்பாற்றியவன் நான் என அவருக்கு பின் கட்சியில் சண்டையிட்டாரா?

எம்ஜிஆருக்கு கிட்னியினை தானமாக கொடுத்த அந்த உறவுபெண்ணின் தியாகத்திற்கு என்ன கொடுத்தீர்கள்?

எம்ஜிஆரை உருவாக்கிய எம்.ஜி சக்கரபாணி குடும்பம் எங்கிருக்கின்றது? சொல்ல முடியுமா?

அந்த ஜேப்பியாரை விட 100 மடங்கு சம்பாதித்துவிட்டது சசிகலா கோஷ்டி

அதாவது செய்த உதவிக்கு பலமடங்கு திரும்ப பெற்றாகிவிட்ட்டது

இப்பொழுது ஜே இல்லை, ஆனால் அதிமுகவின் கோடிகணக்கான தொண்டர்களுக்கு தலமை வேண்டும். அந்த கட்சியினை நடத்த ஒரு நல்ல இமேஜ் உள்ள ஒருவர் வரவேண்டும்

இத்தனை காலம் கூடவே இருந்த சசிகலா வாயே திறக்காததும், ஜெயா சொத்துக்கள் என்னாகும் என சொல்லாததும், மருத்துவமனையில் காட்டிய பெரும் அமைதியிமே இப்போது கேள்விகள்

அதற்கு பதில்லிலாமல் அடுத்த பொதுசெயலாளர் யார்? என சொல்லி சசிகலா வருவாரா? என அவர்களே கிளப்பிவிடும்பொழுது ஜெயலலிதா விசுவாசிகள் கேட்கத்தான் செய்வார்கள்

கொஞ்சம் ஆழபார்த்தால் இப்படி தெரியும்

ஜெயா மீது சசிகலாவுடன் சேர்ந்து ஊழல் செய்தார், ஜெயா பெயரை சொல்லி சசிகலா கும்பல் அட்டகாசம் செய்தது என்பதை தவிர என்ன குற்றச்சாட்டை சொல்லமுடியும்?

ஒன்று? ஒரு குற்றசாட்டு? நிச்சயம் இருக்காது

ஆக ஜெயாவின் அத்தனை சிக்கல்களுக்கும் அவரும் அவர் குடும்பத்தாரும் காரணம் எனும் நிலையில், இனி கட்சியினையும் அவரிடம் ஒப்படைத்தால் என்னாகும் என தொண்டன் யோசிக்கமாட்டானா?

கிருஷ்ணமூர்த்தி அதைத்தான் சொல்கின்றார்

அந்த இயக்கத்திற்கான வோட்டு இத்தனை பிரச்சினைகளை மீறியும் அசையாமல் இருக்கின்றது என்றால் அது ஜெயாவிற்கான வோட்டு, அவரை நம்பிய வோட்டு

இனி அவர் இல்லை எனும்பொழுது சாதரண தொண்டனுக்கும் ஒரு கட்சி பாதுகாப்பு சிந்தனை வராதா?

சசிகலா ஒரு காலத்தில் ஜெயாவிற்கு காவல் இருந்தால் அதனால் எல்லாம் ஜெயாவிற்கு பின் சசிகலாவிற்கு என மல்லுகட்டுவது எப்படி?

ஜெயாவிற்காக செத்த எத்தனை மக்கள் இந்த தமிழகத்தில் உண்டு, நாக்கை வெட்டியவர் வரை உண்டு,
எம்ஜிஆருக்காக செத்த எத்தனை குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு

அவர்கள் எல்ல்லாம் இந்த தியாகத்திற்காக கட்சி எங்களுக்கு என வந்தால் தாங்குமா?

ஆழ கவனித்தால் ஒன்று புரிகின்றது

அதிமுக, திமுக கட்சிகளின் பெரும் பலம் அது சாதி,மதங்களை கடந்த கட்சிகள், அதன் அடிப்படை அதுதான்

இவர்கள் சசிகலாவிற்கு வக்கலாத்து வாங்குகின்றோம் என வந்து அதனை ஒரு சாதிகட்சியாக மாற்ற கிளம்பியிருக்கின்றார்கள்

அபத்தமான அந்த பதிவுகள் அதனைத்தான் சொல்கின்றன‌

அப்படி சாதிகட்சியாக மாறினால், அதிமுக எனும் பெரும் கட்சி பின் பாமக, திருமா போல ஒரு பூனையாக சுருங்கிவிடும்

அதற்குத்தான் இவர்கள் உழைக்க தொடங்கியிருக்கின்றார்கள், சாதி மதம் கடந்த ஒரு நல்ல தலமை வராமல் அக்கட்சியினை நிறுத்த முடியாது.

இவர்கள் வரும் வரத்தினை கண்டால் அதனை சாதிகட்சியாக மாற்றி அழிக்கும் முடிவில் இருக்கின்றார்கள்.