மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7

Image may contain: one or more people and outdoor

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது

அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நாளையோடு நூறு ஆண்டுகள் ஆகின்றது

ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், பெரியார் அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது.

1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் போலவே இந்தியாவிலும் பறந்திருக்கலாம், வாய்ப்பு இருந்தது . ஆனால் இங்கு அணியபட்டிருக்க வேண்டிய செஞ்சட்டை கருப்பு சட்டையானது

பின் அது திராவிட கட்சிகளாகி ஆட்சிக்கும் வந்தது. சர்வ நிச்சயமாக இங்கு பொதுவுடமை கொடியே கேரளா போல பறந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி அமையவில்லை, பெரியார் ஏனோ கம்யூனிஸ்ட் என தன்னை அறிவிக்கவில்லை

ஆனால் திராவிட கொள்கையினை அவர் கம்யூனிச சாயல் இல்லாமல் சொல்லவில்லை. பெரியார் பேசிய எழுதிய எல்லாமும் அந்த செங்கொடி தேசத்து சாயலே

அவர்கள் போப்பையும் கிறிஸ்துவத்தையும் எப்படி எல்லாம் விமர்சித்தார்களோ பெரியார் அதில் இந்துமதத்தையும் புராணத்தையும், பிராமணியத்தையும் பொருத்தினார், அவ்வளவுதான் புரட்சியாளர் ஆனார்

ரஷ்யாவின் கிறிஸ்தவ குருமார்கள் செய்ய அட்டகாசத்தை இங்கு பிரமணர்கள் செய்தார்கள், அக்காலம் அப்படி இருந்தது அதனை பெரியார் எடுத்துகொண்டார்

ஆனால் நிலசுவாந்தார்களை குறி வைத்த அந்த ரஷ்ய பொதுவுடமையினை எடுக்கவில்லை. கவனித்தால் புரியும் பெரியார் பிராமணியத்தை எதிர்த்தாரேயன்றி பண்ணைமுறையினை, பண்ணையார்களை எதிர்த்தாரா என்றால் இல்லவே இல்லை

காரணம் அவரும் பெரும் பண்ணையாராய் இருந்ததால், ரஷ்ய புரட்சியில் எது தனக்கு தேவையோ அதை மட்டும் எடுத்து கடவுள் இல்லை ஆனால் முதலாளித்துவம் உண்டு என்றார்

இது பிரிட்டிஷ்காரனுக்கும் சிக்கல் இல்லாத விஷயமாக இருந்ததால் அவனும் கண்டுகொள்ளவில்லை

பண்ணையாருக்கு கீழ் இருந்த பாட்டாளிகள் அவருக்கு சூத்திரர்களாக தெரிந்தார்களே தவிர வாழ வழியிலா அடிமைகளாக, உரிமையில்லா கூட்டமாக தெரியவே இல்லை

பெரியாரை விடுவோம், செங்கொடி பறந்த காலத்திற்கு செல்லலாம்

எப்படிபட்ட சாதனைகளை எல்லாம் அந்த செங்கொடி செய்தது

ஜார் மன்னன் எனும் கொடுங்கோலனை வீழ்த்தி, ரஷ்புடீன் எனும் சாமியாரை விரட்டி மக்களே மக்களை ஆள்வார்கள் என உயர்ந்தது அந்த கொடி

வர்க்கபேதமற்ற சமூகத்தை உருவாக்க தத்துவம் சொன்ன மார்க்ஸின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்த சமூகத்தின் அடையாளமாக, மத சாமியார்களின் கட்டுபாட்டினின்று தன்னை விடுவித்த சமூகத்தின் அடையாளமாக அது உயரபறந்தது

அதுவரை தொழிலாளர் என்போர் விலங்குகளில் ஒருவர் என எண்ணபட்ட உலகிற்க்கு , தொழிலாளி என்பவன் வாழபிறந்தவன் என சொல்லி அவனுக்கு உயர்ந்த வாழ்வு அளித்தது அந்த கொடி

அந்த கொடியின் கீழான ஆட்சியில்தான் தொழிலாளர்கள் நிம்மதியாக சுவாசித்தனர், நிம்மதியாக வாழ்ந்தனர். முதலாளிகளுக்கும் நில சுவாந்தார்களுக்கும் மட்டுமே கிடைத்த வசதிகள் அத்தொழிலாளிகளுக்கும் கிடைத்தன‌.

விவசாயியும், சுரங்க தொழிலாளியும் கப்பல் ஏறி உல்லாச பயணமாக விடுமுறை கொண்டாடியது எல்லாம் அந்த ஆட்சியில்தான்

கூட்டுறவு பண்ணைகள் எல்லாம் உருவானது அங்குதான்

அந்த தொழிலாளிகள் வாழ்வாங்கு வாழ்வதை கண்ட மற்ற நாட்டு மக்களும் சிந்திக்க, பல அரசுகள் அஞ்சின, பல அரசுகள் சலுகைகளை அள்ளி கொடுத்தன‌

இன்று தொழிலாளர் உலகம் காணும் ஓய்வூதியம், பணிக்கொடை, வேலை பாதுகாப்பு, இன்னும் பிற படிகள் உட்பட பாதுகாப்புகள் எல்லாம் அதன் மூலம் உலகம் பெற்றுகொண்டவையே

இந்த உலகிற்கு எவ்வளவு பெரும் பாதுகாவலாய் நின்றது அந்த செங்கொடி.

ஹிட்லர் எனும் அரக்கனை அந்த செஞ்சேனைதான் வீழ்த்திற்று, ஹிட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகை காத்தது நிச்சயம் அந்த பொதுவுடமை படை

அந்த வெற்றிக்கு பின்புதான் இந்தியா உட்பட்ட நாடுகளின் விடுதலை சாத்தியமானது, ஒருவேளை பிரிட்டன் அல்லது ஹிட்லர் வென்றிருந்தால் இந்திய விடுதலை சாத்தியமே இல்லை

சோவியத் யூனியனின் எழுச்சியே உலக சரித்திரத்தை புரட்டி போட்டது. அதன் பாதுகாவலிலே மக்களுக்கான அரசுகள் எழும்பின‌

சீனா, வியட்நாம், அந்நாளைய வடகொரியா எல்லாம் அப்படித்தான் ஆட்சிமாற்றம் கண்டது

சோவியத் இருக்கும் தைரியத்தில்தான் சேகுவேராவும், காஸ்ட்ரோவும் உருவானார்கள். அமெரிக்கா நொடியில் நசுக்க திட்டமிட்ட கியூபாவினை காத்து நின்றது சோவியத் யூனியன்

எகிப்து சூயஸ் கால்வாயினை கைபற்றி பிரிட்டனை அடித்து விரட்டி தன் சொத்தை தனதாக்கி கொள்ள உதவியதும் அதுவே

அந்த சோவியத் இருந்த தைரியத்தில்தான் அரபு நாட்டில் பாலஸ்தீன் எழுச்சியும் அந்த போராட்டமும் வலுபெற்றது, பாலஸ்தீன் இருப்பிற்கு சோவியத் மகா முக்கியம்

வங்கப்போரில் இந்தியாவினை அமெரிக்காவின் மிரட்டலில் இருந்து இந்தியாவினை காத்து நின்றதும் அந்த செங்கொடியேதான்.

இந்திராவின் இந்தியா எழுச்சிபேறவும் அது இன்று ஓரளவு பாதுகாப்பான தேசமாக நிற்கவும் அந்த செங்கொடி தேசம் கொடுத்த உதவிகள் கொஞ்சமல்ல‌

அணுசக்தி முதல் ஏவுகனைகள வரை நமக்கு அந்த‌ சோவியத் செய்த ரகசிய உதவிகள் கொஞ்சமல்ல‌

பெண் விடுதலையினை உலகிற்கு சொன்னதும், பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பியதும், மகளிர் நலனில் உலகிற்கு முன்மாதிரியாய் இருந்தது அந்த செங்கொடி நாடுதான்

விவசாயிகள் எப்படி காக்கபட வேண்டும்? முதலாளித்துவம் எப்படி கட்டுபடுத்தபட வேண்டும் என உலகிற்கு சொன்ன தேசம் அது

அத்தேசம் இருக்கும் வரை உலகின் தேசிய இனங்கள் அப்படியே இருந்தன. சோவியத் வலுவான காலத்தில் உலகில் நடந்த ஒரே தவறு திபெத் ஆக்கிரமிப்பு , அதற்கு ஆயிரம் காரணங்கள், மற்றபடி எல்லா இனங்களும் ஒரு வித பாதுகாப்போடே இருந்தன.

முதலாளித்துவ சக்திக்கு நிரகான சக்தியாக சோவியத் உலகை காத்தது.

எகிப்தின் கர்ணல் நாசர் போல பல ஜாம்பவான்கள் தணித்து நின்றனர்.

மதவெறி கும்பல் உலகில் எங்கும் தலை தூக்கிவிடாமலும், முதலாளித்துவ கைகூலிகளின் படை உருவாகிவிடாமலும் காத்து நின்றது செங்கொடி

காலத்தின் கோலத்தில் செங்கொடி கீழிறங்கிய பின்பே இவ்வுலகில் நடக்க கூடா விஷமெல்லாம் நடந்தன,

உலகமே மாறியது சதாம் போன்றவர்கள் கொல்லபட்டனர். வல்லான் வகுத்ததே நீதியானது. ஈழம் போன்ற பகுதிகள் எரிய தொடங்கின‌

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த செங்கொடி மட்டும் மிக வலுவாக பறந்துகொண்டே இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால், சிரியா, ஆப்கன் போன்ற கொலை கூடங்கள் எல்லாம் உதித்திருக்காது

இன்றைய உலகின் நிலையற்ற தன்மை வந்திருக்காது

12 மணிநேர வேலை, வேலை செய்தால் தான் கூலி மற்றபடி ஒரு சலுகையுமிலை என்றிருந்த தொழிலாளார் உலகினை நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்றி காட்டியது அந்த செங்கொடி தேசம்

ஆனால் இன்றோ மறுபடி உலகம் அந்த கொத்தடிமை முறை நோக்கி செல்கின்றது. அது ஐடி முதல் எல்லா தொழில்களிலும் தெரிகின்றது

ஓவர்டைம் அது இது என சொல்லி எல்லா தொழிலாளர்களும் பிழியபடுகின்றார்கள், சனி ஞாயிறு இரவு பகல் என்பதெல்லாம் இல்லை.

மறுபடி அந்த தொழிலாளர் அடிமை முறை நோக்கி இந்த உலகம் சென்றுகொண்டிருக்கின்றது.

கம்யூனிசம் ஒன்றும் மார்க்ஸ் முதலில் சொன்னது அல்ல, பொதுவுடமை கோட்பாடு பைபிளிலே இருக்கின்றது. ஆதி கிறிஸ்தவர்கள் அப்படி பொதுவுடமை வாழ்வுதான் வாழ்ந்திருக்கின்றார்கள், என்று கிறிஸ்தவம் ரோமாபுரியினை கைபற்றியதோ அதன் பின்புதான் சிக்கல் தொடங்கியிருக்கின்றது

அந்த பொதுவுடமை வாழ்வினை கடவுள் இல்லை என்ற புள்ளியில் மறுபடியும் வாழ கொடி உயர்ந்தது நவம்பர் 7, 1917

அந்த தேசம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, சோவியத் மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மிக்க நலமாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்

ஆனால் மானிட சுபாவம் வித்தியாசமானது. ஆளுக்கொரு சிந்தனை ஆளுக்கொரு விருப்பம் என உள்ள மனிதர்கள் பொதுவுடமை கொள்கையினை கொஞ்சம் மறக்க தொடங்கினார்கள். இன்னொன்று முன்னோர் கண்ட சிரமும் அவர்கள் பட்ட பாடுகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு தெரியவில்லை

விளைவு சோவியத் சிதறியது

ஆனாலும் பழைய சோவியத் முடிமக்களுக்கு அந்த செங்கொடி பறந்த காலம் மகா சொர்க்கமாக, மிகுந்த நல்லாட்சி நடந்த காலமாகவே தெரிகின்றது

இந்த உலகத்தையே புரட்டிபோட்ட மாபெரும் நிகழ்வின் நூற்றாண்டு நாளை கொண்டாட படவேண்டும்

ஆனால் எங்கும் அதற்கான வேலைகள் நடந்ததாக தெரியவில்லை. அவசர உலகம் அந்த நன்னாளை தவறவிடுகின்றதோ எனும் அச்சம் ஏற்படுகின்றது

அந்த நாளால்தான் கியூபா முதல் வடகொரியா வரை உலக அரங்கில் நிற்க முடிகின்றது, சீனா எல்லாம் ஆசிய சக்தியாக நிற்க முடிகின்றது

உலக அரசியலை விடுங்கள், பிரணாய் விஜயனும் இங்கு அமர்ந்திருக்கும் பழனிச்சாமியும் முதல்வராக அமர அந்த செங்கொடி கொடுத்த நம்பிக்கையே காரணம்.

நகைப்பாக இருக்கலாம், ஆனால் அதிமுகவின் மூலம் திமுக திமுகவின் மூலம் திக, திகவின் மூலம் பெரியார் என சென்றால் நிச்சயம் அந்த செங்கொடிதான் காரணம்

செங்கொடி உயர்ந்திருக்காவிட்டால் இவை எல்லாம் நடந்திருக்காது

அவ்வகையில் உலகின் ஒவ்வொருவர் தலைவிதியினையும் மாற்றிகாட்டிய நாள்

யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, மானிடத்தை நேசிக்கும், சமத்துவத்தை நேசிக்கும் யாரும் அந்நாளை கொண்டாடலாம்

மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7.

அதுவும் நூற்றாண்டு விழா என்பதால் அந்த நினைவுகளில் மூழ்கி , அந்த செங்கொடியால் பெற்றுகொண்ட சகல நன்மைகளுக்காகவும் நன்றி தெரிவிக்கலாம்