மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது
மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது, அதில் நான்காம் பாசுரம் இப்படி வருகின்றது
“ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சாரங்கம் தொடுத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்..”
இதன் பொருள் என்ன?
கடல்போல் மழை பொழியக் காரணமான தெய்வமே, நீ உன் கையில் மழையை கொஞ்சமும் ஒளித்து வைக்காதே
கடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு ஆவியாகி மேலே சென்று உலகாளும் முதல்வனான கண்ணனின் உடல் நிறத்தினை போல் கருமேகங்களாக திரள்வாயாக.
பரந்த அழகிய தோள்களை உடையவனும், கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் பிரம்மனைத் தாங்குபவனும் ஆகிய திருமாலின் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல் ஒளியுடன் மின்னுவாயாக.
இடக்கையில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரிச் சங்கு எழுப்பும் ஒலியைப் போல் இடி முழக்கம் செய்வாயாக.
திருமாலின் கரத்தில் இருக்கும், வெற்றியை மட்டும் வழங்கும் சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல் மழையை சரம் சரமாகப் பொழிவாயாக.
அம்மழையால் இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்வோம். மார்கழியில் நீராட ஏதுவாக நீர்நிலைகள் எல்லாவற்றையும் நிரப்பி எங்களை மகிழ்விப்பாயாக.
ஆம் , இரண்டாம் வரியினை கவனியுங்கள் , “ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி” அதாவது கடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு ஆவியாகி மேலே சென்று என பொருள் வரும்
ஆம் விஞ்ஞானம் பின்னாளில் கடல் நீர் ஆவியாகி கரு மேகமாகி அது சுருங்கி மழையாய் பொழிகின்றது என்பதை என்றோ ஆண்டாள் பாடலில் சொல்லி வைத்ததுதான் இந்துமதம்
ஆம் 1200 ஆண்டுகளுக்கு முன் ஒரு இந்து பக்தை அன்றே சொன்னாள், அந்த நாச்சியார் சொன்னதைத்தான் பின்பு விஞ்ஞானம் சொல்லிற்று
ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானத்தை அன்றே சொன்னதுதான் இந்த அரும் அற்புத மதம்.
