மீனாட்சியம்மனுக்கு அப்படி என்ன கோபம்?

சமீபதித்திய செய்திகளிலே கலக்கமும் அதிர்ச்சியும் கொடுத்த செய்தி, மதுரை ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து

எப்படிபட்ட ஆலயம் அது? தமிழரின் பாரம்பரியத்தில் தஞ்சை கோவில் போலே கலந்துவிட்ட ஆலயம் அது. வைகை காய்ந்தாலும் மதுரையின் பெரும் பாரம்பரியமாய் வீற்றிருக்கும் ஆலயம் அது

அங்குதான் சிவபெருமானின் திருவிளையாடல் முதல் திருக்குறள் சோதனை, சமண சைவ மோதல் என ஏராள புனிதமான வரலாறுகள் நடந்தேறின, வெள்ளை கலெக்டர் ஒருவனை இடியிலிருந்து மீனாட்சியம்மன் காப்பாற்றி தான் அந்த ஆலயத்தில் எக்காலமும் குடிகொண்டிருக்கின்றேன் என சொல்லிய அதிசயங்கள் எல்லாம் அங்குதான் நடந்தன‌

இந்திய இந்து ஆலயங்களை எல்லாம் அழித்த மாலிக்காபூர் அந்த ஆலயத்தை விட்டுசென்ற அதிசயமும் அங்குதான் நடந்தது, மருதநாயகம் எனும் யூசுப்கான் மிகுந்த மரியாதையுடன் வணங்கிய ஆலயமும் அதுவே

அதன் பெருமைகளை ஓரிரு வரிகளில் சொல்லமுடியாது, சுருக்கமாக சொன்னால் தமிழரின் பெரும் அடையாளமும் பெருமையும் அவ்வாலயம்

அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எரிந்திருக்கின்றது

நிச்சயம் இது நல்ல அறிகுறி அல்ல, பகுத்தறிவு எல்லாம் கலங்கும் நேரமிது. ஆலயம் எரிவது நாட்டிற்கு நல்லதல்ல என்பது பல இடங்களில் மெய்பிக்கபட்ட வரலாறு

ஆனாலும் ஒருவிஷயம் சொல்லலாம்

என்றேல்லாம் நல்லாட்சி நடைபெறாமல் கள்வரும், கள்வர் குரல்கேட்கும் கொற்றவன் ஆட்சியும் நடைபெறுமோ அன்றேல்லாம் ஆலயங்கள் எரிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தே இருக்கின்றன‌

கூறுகெட்ட நெடுஞ்செழியன் ஆட்சியில் மதுரை அப்படித்தான் எரிந்திருக்கின்றது

இப்பொழுது பலத்த சர்ச்சைக்கு காரணமான அன்புசெழியன் என்பவர் முதல்வர் பங்கேற்ற மதுரைவிழாவிலே மகா தைரியமாக பங்கேற்றபின் மறுபடியும் எரிந்திருக்கின்றது

மதுரையில் மீனாட்சி இன்றும் செங்கோல் செலுத்திகொண்டிருக்கின்றாள் என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள், அன்று பாண்டிய நெடுஞ்செழியனின் கொடூர ஆட்சியினை விட மகா கோமாளி இம்சை ஆட்சி நடக்கின்றது என ஆலய கோபுரமே சொல்கின்றது

நிச்சயம் இவை நல்ல அறிகுறி அல்ல, என்ன சர்ச்சை இருந்தாலும் ஜெயா இதிலெல்லாம் வலுத்த கவனம் செலுத்துவார், இவர்களோ அமித்ஷாமிடம் என்ன செய்யலாம் என ஆலோசிப்பார்கள் பாவம் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்

ஆலயத்தை சுற்றியுள்ள கடைகள் இந்த விபத்திற்கு காரணம் என்கின்றன முதல்கட்ட தகவல் அதில் உண்மையும் இருக்கலாம்

இனியாவது இயேசுநாதர் எருசலேம் வியாபாரிகளை விரட்டியது போல விரட்ட வேண்டியது அரசின் பொறுப்பு

அந்த தகவல்களை ஓடி ஓடி தேடியதில் சில சேதங்கள் இருப்பதாக சொன்னார்கள், நல்ல வேளையாக பெரும் புராதன பெருமை மிக்க ஆயிரங்கால் மண்டபம் சேதபடவில்லை

மாலிக்காபூர் காலமுதல் வெள்ளையர் காலம் வரை காக்கபட்ட அந்த ஆலயம் மக்களாட்சியில் எரிந்தது என்பதை கேட்டு தமிழகம் நாணத்தாலும் அவமானத்தாலும் தலைகுனிந்து நிற்கின்றது

நமக்கு நாமே என்பது இனி ஆலயங்களிலும் செயல்படுத்தபட வேண்டும் என்ற எண்ணம் ஓங்குகின்றது

மதுரை ஆலயத்தில் எரிந்தது அதற்கு மட்டுமல்ல, வியாபார தலங்களாகிவிட்ட எல்லா ஆலயங்களுக்குமான அபாய விளக்கு

இனியாவது தமிழககம் விழித்துகொள்ளட்டும்

தமிழக ஆலயங்கள் சாதாரணம் அல்ல, அக்கால மன்னர்கள்
கொடுத்த கொடைகள், இனி அம்மாதிரி ஆலயம் என்ன? அதன் தெப்பகுளத்தின் ஒரு படிகட்டை நாம் உருவாக்க முடியும் என நினைக்கின்றீர்கள்? நிச்சயம் முடியாது

அவைகள் எல்லாம் நம் பெருமைகள், கவுரவங்கள். எம் சமூகம் அன்றே இப்படி பிரமாண்டமாய் ஆலயங்களை படைத்து பரம்பொருளை வணங்கியது என உலகிற்கு சொல்லும் பெருமைமிகு விஷயங்கள்

இனியாவது தமிழகம் விழிக்கட்டும், தீபத்தில் மட்டும் நெருப்பு எரியட்டும்

மறுபடியும் சொல்கின்றோம், மதுரை ஆலயம் சாதாரணம் அல்ல, என்றேல்லாம் ஆட்சியின் அநீதி உச்சம் பெறுமோ அன்றெல்லாம் அது எரிந்து எச்சரிக்கை செய்திருக்கின்றது

இனியாவது ஆட்சியாளர் திருந்தட்டும்

மீனாட்சியம்மனுக்கு அப்படி என்ன கோபம்? செல்லூர் ராஜூ தனக்கு அண்ணா விருது கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்திருப்பாரோ?