மீன்களை போலவே மீணவரின் அழுகையும்
கன்னியாகுமரிக்கும் எங்கள் ஊருக்கும் வெறும் 30 கிமீட்டர்தான் தூரம், ஆனால் இன்னும் பல குளங்கள் அப்பகுதியில் நிரம்பவில்லை என்றால் அப்பகுதி எப்படி என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்
அப்படியும் சில பகுதிகள் இருக்கின்றன, இயற்கை சதி, பராமரிப்பு இல்லா கால்வாய்கள், அணை கட்டுகின்றேன் என கிளம்பிய அரசுகள் என இதற்கு பல காரணங்கள்
குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு எத்தனை பேர் தயார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம், தெரிந்தே தற்கொலை செய்ய பலர் தயாராக இல்லை என்பதால் பல ஊர்களில் குளத்திற்கு நீர் கொண்டுவர யாரும் தயாராக இல்லை
காசுகொடுத்தால் குடிநீர் கிடைக்கின்றது போதாதா எனும் நிலைக்கு வந்தாயிற்று, ஊர் குளம்பெருகினால் நிலத்தடி நீராவது பெருகும் என்ற சிந்தனை எல்லாம் இருப்பதாக தெரியவில்லை
அப்பகுதியில் முன்பு ஆடுமாடு தொழில், பனை தொழில் என ஏகபட்ட தொழில்கள் இருந்தன , எல்லாம் அழிந்தாயிற்று
விவசாயமும் அந்த பட்டியலில் வந்துவிட்டது தெரிகின்றது.
ஆயினும் எமது ஊர் குளத்திற்கு இன்னொரு புயல் வந்தால்தான் வழிபிறக்கும் போல என சொன்னால் கன்னியாகுமரிக்காரர்கள் அடித்தே கொன்றுவிடுவார்கள்
உண்மையில் கன்னியாகுமரியில் நடந்திருப்பது பெரும் அழிவுதான், மீணவர்கள் எனும் ஒரு புள்ளியிலே விவகாரம் பார்க்கபடுகின்றது
கடல் தொழில் என்பது மீணவர் கடலுக்கு சென்று மீன்பிடித்துவருவது மட்டும் அல்ல, அதனை சார்ந்த ஏராள தொழில் உண்டு
ஐஸ் கட்டி தயாரிப்பு முதல் மீணவர்களின் மீன்களை வாங்கி விற்கும் வியாபாரிகள், போக்குவரத்து நிறுவணம், சிறுவியாபாரிகள் என ஏராளமானோர் இணைந்திருக்கும் சங்கிலி இது
ஒரு மீணவ குடும்பம் அழும்பொழுது ஓராயிரம் குடும்பம் கண்ணுக்கு தெரியாமல் அழும், அழுகின்றது ஆனால் மீணவர்களையே கண்டுகொள்ளா அரசு அவர்களை கண்டுகொள்ளுமா?
மீணவர் சிக்கலை தாண்டி கன்னியாகுமரியின் பெரும் விளைச்சலான வாழை, ரப்பர் மரங்கள் அழிந்து கிடக்கின்றன
மீணவ சங்கிலி போலவே வாழையினை நம்பும் குடும்பங்கள் பாதிக்ககட்டிருக்கின்றன, ஒரு வருட உழைப்பு நாசமாயிற்று
தென்னையும், ரப்பரும் அழிந்ததில் பலவருட உழைப்பு போயிற்று இனி மறுபடி பல வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்
இதனை எல்லாம் விட கொடுமை மிளகு போன்ற கொடிகள் எல்லாம் அழிந்துகிடக்கின்றன, நிச்சயம் இவை கொஞ்சநாளில் பெரும் தட்டுபாட்டினை கொண்டுவரலாம், மிளகு விலைகள் எகிறலாம்
ஆக வெறும் மீணவன் என்பதை தாண்டி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் கதறிகொண்டிருகின்றன, விவசாயி என்பதையும் தாண்டி எத்தனையோ குடும்பங்கள் எதிர்காலம் தெரியாமல் தடுமாறுகின்றன
இதனை பற்றி எல்லாம் அரசுக்கு கொஞ்சமும் கவலை இல்லை, அரசு என்ன? யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் ஆகிவிட்டது நிலை.
தண்ணீரில் மீன் அழுதால் யாருக்கு தெரியும் என்பார்கள், மீன்களை போலவே மீணவரின் அழுகையும் அந்த தொழிலினை நம்பி இருக்கும் மற்ற தொழிலாளிகளின் அழுகையும் யாருக்கும் தெரிவதில்லை