முகநூலுக்கு அவ்வளவு சக்தியா?

https://youtu.be/wdJWGj8wD_g

 

வயதான சுயநலவாதிகள் எல்லாம் கட்சிதலமைகள் காலில் விழுந்து கிடக்க, இளம்தலைமுறை யாரும் அழைக்காமலே மெரீனாவில் திரண்டிருக்கின்றது

கட்சி இல்லை, தலைவர் அறிக்கை இல்லை,பேனர் இல்லை, கொடி இல்லை, ஒரு இம்சையும் இல்லை

பிரியாணி இல்லை, குவார்ட்டர் இல்லை, கொண்டுவர லாரி இல்லை, தலைக்கு 500 ரூபாய் எனும் பேரமில்லை. ஆளுக்கு 100 ரூபாய் எனும் கமிஷனில்லை

தமிழகத்தின் உரிமையினை மீட்டெடுக்க, ஜல்லிகட்டை நடத்த விட போராட குவிந்திருக்கின்றனர், மிக பெரும் கூட்டம் திரண்டிருக்கின்றது

உண்மையில் இது மாற்றத்தின் அறிகுறி

கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் அடிக்கும் அபாய மணி

யாருமே கட்டளையிடாமல் தானாய் தன் உரிமை காக்க தமிழினம் கிளம்பும் அதற்கு எந்த அரசியல் கட்சியும் அழைக்கவேண்டிய அவசியமில்லை என செவிட்டில் அடித்தார்போல் சொல்கின்றது இளம் தலைமுறை

அதுவும் தமிழன் உடையில் அவர்கள் கலந்துகொண்டதுதான் கை தட்ட வைக்கின்றது.

இளம்தலைமுறை எந்த அளவு வெறுப்படைந்துள்ளது என்பதற்கு இதுவே உதாரணம், யாரையும் நம்ப அவர்கள் தயாராக இல்லை

அரசியல்வாதிகளின் எல்லா அராஜகங்களையும் மனதிற்குள் உள்வாங்கி வளர்ந்துநிற்கும் தலைமுறை தனக்கான பாதையினை தேடுகின்றது

நதி தன் பாதையினை தானே வகுத்துகொள்வது போல, அது தனக்கான பாதையினை தேடி வந்திருக்கின்றது.

இன்று ஜல்லிகட்டுக்காக திரளும் கூட்டம் , நாளை எந்த பிரச்சினைக்கும் திரளலாம்

மத்திய உள்துறை கூர்ந்து கவனிக்கின்றது, தமிழக கட்சிகள் கொஞ்சம் மிரட்சியோடு பார்க்கின்றன, எந்த கட்சியும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியா சோகம் அவர்களுக்கு

ஒரு அசம்பாவிதம் இல்லை, ஒரு சர்ச்சை இல்லை. மிக நேர்த்தியாக போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள்

இளம் தலைமுறை தமிழக மாய கட்சிகள் வலையில் சிக்காமல், சாதியில் சிக்காமல், இன வெறியில் சிக்காமல் தன் நிலை உணர்ந்து, ஏமாற்று அரசியல்வாதிகளை உணர்த்து புதுவழியில் போராட கிளம்பியிருப்பது பெரும் மகிழ்ச்சி

இந்த உத்வேகம் இன்னும் வரும், இளம் தலைமுறை இன்னும் வீறுகொண்டு எழும், அன்று இந்த மாய சினிமா நடிப்பு அரசியல் தூக்கி எறியபடும் தமிழகம் சிறக்கும்

இந்த போராட்டம் முகநூல் வழியே ஒருங்கிணைக்கபட்டது என்கின்றார்கள்

முகநூலுக்கு அவ்வளவு சக்தியா?

துனிசியா, எகிப்து எல்லாம் இப்படித்தான் ஆட்சிகளை மாற்றின என்றார்கள், அதன் வீரியம் இப்பொழுது அல்லவா புரிகின்றது?

தமிழகமும் அப்படி முகநூல் மூலம் பயன்பெற்றால் நன்றாகத்தான் இருக்கும், சிறு வெளிச்சம் தெரிகின்றது

அந்த ஜல்லிகட்டு போராட்டத்தை மீட்க போராட கிளம்பிய ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்

நாம் என்றும் இந்தியர்களே, இந்தியாவே நம் தாய்நாடு. இம்மாநிலத்தில் பாதுகாப்பு முதல் எல்லா விஷயங்களுக்கும் டெல்லியே பொறுப்பு

அப்படிபட்ட டெல்லி நமது மாநிலத்தை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் காக்க முன்வர வேண்டும் அல்லவா?

அதனை கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

எல்லா வகையிலும் கேட்போம் போராடுவோம், ஜல்லிகட்டை மீட்போம்

ஜல்லிகட்டு மட்டுமல்ல, இழந்த ஒவ்வொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மீட்போம்

இந்த பாழாய் போன அரசியல் கலக்காத போராட்டம் எதுவும் தோற்றுபோகாது, அப்படி ஜல்லிகட்டும் மீண்டும் நடக்கும்

தமிழகத்தின் பல இடங்களில் இப்படி மக்கள் கூடட்டும் , அமைதியான முறையில் நம் உரிமைகளை கேட்கட்டும்

அதற்கு முகநூலும் உதவி என்றால், அதனை செய்ய எல்லோரும் தயாராகவே இருக்கின்றோம்.

சிறு வெளிச்சம் தெரிகின்றது, ஒரு விடிவெள்ளி உதிக்கின்றது

தடை நீங்கட்டும், தை பிறக்கட்டும்,

வாடிவாசலும் திறக்கட்டும்.

 

Image may contain: one or more people, people standing, crowd and outdoor