ரகுவரன்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர்

முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம்

அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் ரகுவரன்

எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர்

குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் நின்றார்

ஆர்ப்பாட்டமில்லா ஆனால் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தினார், மிக மிக வித்தியாசமான ஸ்டைலும் வில்லதனமும் அவரிடம் இருந்தது.

எல்லா தரப்பு மக்களும் அவரை கொண்டாடினர்

300 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் போதை பழக்கம் அவர் உயிரை பறித்தது என்கின்றார்கள்

1980க்கு பின் முத்திரை பதித்த நடிகர்கள் குறைவு. கமலஹாசன் என்ற ஒற்றை நடிகரே ஸ்டார் வரிசையில் நடிகன் எனும் வகையறாவிற்குள் வருவார், ரஜினி எல்லாம் அவ்வகை அல்ல‌

நாசர், பிரகாஷ்ராஜ் , ஜனகராஜ், சத்யராஜ், ரகுவரன் போன்ற மிக சில நடிகர்களே நடிப்பு எனும் வகையில் வருவார்கள்

ரகுவரன் அதில் பின்னி எடுத்தார், பூவிழி வாசலிலே குழந்தையினை கொல்லதேடும் வில்லனாக வந்த அவரே அஞ்சலியில் மகளை காக்க போராடும் தந்தையாக பின்னி எடுத்தார்

ஒரு நடிகனின் வெற்றி அவன் நடித்த படத்தை இன்னொருவன் நடிக்க முடியாது என்பதில் இருக்கின்றது

ஆம் ரகுவரனின் படங்களை ரீமேக் செய்வதாக வைத்தாலும் அவரின் இடத்தை இன்னொரு நடிகன் நிரப்ப முடியுமா?

பாஷா படத்தை ரீமேக் செய்தால் ரஜினியின் இடத்தை பாபி சிம்ஹா கூட நிரப்பலாம்,

ஆனால் ரகுவரன் இடத்தை யார் நிரப்புவார்?

கலைஞனாய் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ் சினிமா அபிமானிகளிடம் அவரைபற்றி கேட்டால் நிச்சயம் ஒரு புன்னகையும் அவர் மிக விரைவில் இறந்துவிட்ட அந்த பரிதாபமும் தோன்றும்

இதனை விட ஒரு கலைஞனுக்கு என்ன வேண்டும்?

அவர் இசைபிரியராகவும் இருந்திருக்கின்றார் , சமீபத்தில் அவர் மனைவி ரோகினியும் ரகுவரன் மகனும் அவர் இசை அமைத்த பாடல்களை ஆல்பமாக வெளியிட்டனர்

அவரின் இன்னொரு முகம் அப்பொழுதுதான் தெரிந்தது, அவரின் மகனையும் அப்பொழுதுதான் பார்க்க முடிந்தது

பாஷா போன்ற வில்லன் ரோல்களை விடுங்கள், ரகுவரனின் நடிப்பு அவர் தந்தை வேடத்தில் நடித்தபொழுது ஜொலித்தது

அது அஞ்சலியாக இருக்கட்டும்,லவ் டுடேவாக இருக்கட்டும், யாரடி நீ மோகினியில் வந்த அந்த தந்தை வேடமாக இருக்கட்டும்

மனிதர் அப்படியே தந்தை பாசத்தை கண்முன் நிறுத்தினார்.

அவரின் கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் மகன் உழைப்பில் வாழ விரும்பா தந்தையாக அவர் சீறிய நடிப்பு ஒருகாலமும் அகலாது

“உன் சம்பாத்தியத்தில சாப்புட்ற காலம் வருதுண்ணு வச்சிக்கோயேன், செத்திருவேன்..” என அவர் சொன்ன அந்த காட்சி தேவர் மகனில் சிவாஜி கமல் சட்டையினை இழுக்கும் காட்சிக்கு சற்றும் குறைந்ததல்ல‌

ஆனால் கமலும் சிவாஜியும் ஸ்டார் நடிகர்கள், ரகுவரன் அப்படி அல்ல என்பதால் பெரும் அபிமானம் பெறவில்லை , பெரும் விருதுகளும் பெறவில்லை

திரை அந்தஸ்து யாருக்கு வேண்டும்? விருதுகளில் என்ன உண்டு?

இன்றும் மக்களின் மனதில் ரகுவரன் நிலைத்து நிற்கின்றார், அதுதான் வெற்றி

ரகுவரன் மகனை பார்த்தபொழுது அந்த பாசமிகு தந்தை காட்சி மனதில் வந்து போனது

நடிப்பிலே தந்தை வேடத்தில் பின்னி எடுத்த ரகுவரன் மகன் மீது எப்படி எல்லாம் பாசத்தை பொழிந்திருப்பார்? அதை நினைக்கையிலே மனம் வெம்பத்தான் செய்தது

இன்று அந்த மாபெரும் நடிகனுக்கு நினைவுநாள்

பிறப்பால் அவர் மலையாளி ஆனால் வளர்ந்தது தமிழகம் எனினும் மம்முட்டிக்கு சமமான‌ யதார்த்த நடிகர்.

எம்.ஆர் ராதா, பாலையா வரிசையில் மிக சிறந்த நடிகனாக அமர்ந்திருக்கும் அந்த ரகுவரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

(அப்துல் கலாம் கதையினை சினிமாக எடுத்திருந்தால் நிச்சயம் ரகுவரன் அட்டகாசமாக பொருந்தியிருப்பார்

பொருத்தி பாருங்கள், மிக சிறந்த தேர்வாக இருந்திருக்கும்

இப்படி ஏராளமான கனமான பாத்திரங்கள் அவருக்கு மட்டுமே சாத்தியம்..)