ரஜினிக்கு எல்லாம் தலைகீழ் அல்லது தலை சுற்றல்

Image may contain: one or more people, beard, glasses and close-up

தமிழகத்தில் மத்திய அரசின் பெயர் மோசமாகி கொண்டிருக்கும் நேரமிது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பாஜக‌ துரோகம் செய்வது , அனுமதி பெறாத மீத்தேன் கம்பெனிகள் இயங்குவதாக வரும் செய்தி , நாடாளுமன்ற கூட்ட தொடரில் பஞ்சாப் வங்கி பிரச்சினையில் கொந்தளிப்பு என பாஜகவின் நிலை இக்கட்டானது

இதில் தமிழகத்தில் அந்த பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்யலாம், காவேரி மேலாண்மை குழு பற்றிய பேச்சு வராமல் இருக்க யாரை வைத்து சலசலப்பினை ஏற்படுத்தலாம் என திட்டமிட்டவர்களுக்கு ரஜினி கிடைத்துவிட்டார்.

இரு பட டீசர் வந்த நிலையில், தன் கனவுபடமான அரசியல் கட்சி படத்திற்கும் டீசர் வெளியிட்டாக வேண்டிய நிலையில் ரஜினியும் இருந்தார். கமலஹாசனுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் இருந்தது

இப்படி இருவரின் தேவையும் இணைந்து வந்ததுதான் ரஜினியின் நேற்றைய பேட்டி, அவரின் பேச்சு முழுவதுமே பிதற்றல், அபத்தம், குழப்பம்

பெண் பார்த்தால்தான் திருமண அழைப்பிதழ் அடிக்க வேண்டுமாம், அப்படி ஆட்சிக்கு வந்தால்தான் கொள்கை அறிவிப்பாராம், எப்படி இருக்கின்றது?

கொள்கை எனும் பெண்ணை கைபற்ற அரசியல் எனும் ஆயுதம் ஏந்துவோம் என்பது அக்காலத்தில் ஒரு பேச்சு. ராஜாஜியுடன் கூட்டணி வைத்த அண்ணா கூட அது தேனிலவு என்றார்.

பின் ஆட்சிக்கு வந்து கூட்டணி முறிந்தபொழுது ராஜாஜி தேனிலவு முடிந்தது என்றபொழுது ஆம் இனி திருமண வாழ்வு, பொறுப்பான வாழ்வு தொடக்கம் என்றார் அண்ணா

இந்த ரஜினிக்கு எல்லாம் தலைகீழ் அல்லது தலை சுற்றல்

மனசாட்சியினை கழற்றி வைத்துவிட்டு , தமிழக மக்களை எல்லாம் அவரின் ரசிகர் போலவே கேணையர்களாக நினைவித்துகொண்டு அவர் நேற்று சொன்னதை எந்த தமிழனும் மறக்கமாட்டான்

ஆம் எம்ஜிஆரால் அவர் வாழ்ந்தாராம், மனசாட்சி உள்ளவன் இப்படி பேசுவானா?

ரஜினி தனக்கு பின்னால் வரும் ஆபத்து என உணர்ந்தவர் ராமசந்திரன். ரஜினிக்கு அவர் கொடுத்த தொந்தரவும், அவரின் அடிப்பொடிகள் சூட்டி மகிழ்ந்த “மெண்டல்” எனும் பட்டமும் வரலாற்றின் பக்கங்களில் கிடக்கின்றது.

ஒருமுறை கூட ரஜினி ராமசந்திரனை புகழ்ந்து 1980களில் பேசியதுமில்லை, இருவரும் சந்தித்ததுமில்லை. ஒரு விருது வழங்கும் விழாவில் ராமசந்திரன் விருது வழங்க ரஜினி பெற்றார்.

இருவரும் சந்தித்த ஒரே நிகழ்வு அது அப்பொழுது இருவர் முகத்திலும் புன்னகை இல்லை

ராமசந்திரனின் படமான “அவசர போலிஸ்” தொங்கலில் நிற்க, அதனை ரஜினியினை கொண்டு தொடர முடிவு செய்த தயாரிப்பாளரை மிரட்டி விரட்டி அடித்தவர் ராமசந்திரன்

ரஜினிக்கு ராமசந்திரன் கொடுத்த வாழ்வு இதுதான் ,ரஜினிக்கு “மெண்டல்” பட்டம் அவரால்தான் கொடுக்கபட்டது.

ஆனால் அப்பொழுதே ரஜினி “சூப்பர் ஸ்டார்” என்றவர் கலைஞர்

இதனை கூட விட்டுவிடலாம் ஆனால் அடுத்து ரஜினி சொன்னதுதான் மகா ஆபத்து

ஓமந்தூரார், ராஜாஜி, காமராஜர் அண்ணா, கலைஞர் என பெரும் நல்லாட்சி கொடுத்தவர்கள் இருந்த தமிழகத்தில் இவர் ராமசந்திரன் ஆட்சியினை கொடுப்பாராம்

எது? கலைஞர் மூடிய மதுகடைகளை திறந்தது, மிசா கொடுமையினை வரவேற்றது. கச்சதீவு விவகாரத்தில் தீர்மானத்தை புறக்கணித்து இந்திராவினை வரவேற்றது, கடைசி வரை தமிழகத்தின் உரிமைகளை காக்க மறந்து அடிமையானது

அமைதிபடை புலிகளுடன் மோதியபொழுது ராஜிவுடன் கை கோர்த்து நின்றது

மிசா கால முடிவில் தேசம் குழம்பி தவிக்க, “உன்னை விட மாட்டேன்” எனும் படதயாரிப்பின் டிஸ்கஷனில் இருந்தவர் ராமசந்திரன்

இன்று தமிழகம் காணும் எல்லா சீரழிவுக்கும் ராமசந்திரனே காரணம் , சசிகலா போன்றோர் , பன்னீர் பழனிச்சாமி என பலர்வந்து அரசியலை சீரழிக்க காரணமே அவர்தான்,

அவரின் ஆட்சியினை இவர் கொடுப்பாராம், இப்படி சொல்ல ஒன்று குருட்டு தைரியம் அல்லது பைத்தியம் இருக்க வேண்டும். ரஜினிக்கு தைரியம் இருந்ததாக வரலாறு சொன்னதே இல்லை

ரஜினியின் பேச்சு சொல்லவருவது இதுதான்

திமுகவின் வோட்டை பிரிக்க முடியாது, ராமசந்திரனால் ஜெயலலிதாவாலே அழிக்க முடியாத திமுகவினை தான் அசைக்க முடியாது

அதனால் அதிமுக எனும் ஆட்டுமந்தையினை கைபற்றுவது எளிது, திமுக எதிர் அரசியலை ராமசந்திரன் பெயரால் செய்யலாம்

சசிகலா கும்பல் உருவானது போல, லதா ரஜினிகாந்த் கும்பலும் உருவாகும் அதன் பின் எவன் வாடகை கேட்பான் எவன் கொடுத்த கடனை கேட்பான் என பார்த்துவிடலாம்

ராமசந்திரன் வழியில் தான் செல்லும்பொழுது அன்று பட்ட அடிகளை மறக்காமல் பின்னால் வரதுடிக்கும் விஜய் போன்றவர்களுக்கு பின்னால் கொடுக்க வேண்டும்

ஒரு காலத்தில் எந்த லதாவிற்காக தான் ஓட அடிக்கபட்டோமோ அந்த நடிகை லதாவிற்கு ராமசந்திரன் கொடுக்காத பதவிகளை எல்லாம் கொடுத்து ராமசந்திரன் கல்லறையில் அவரை வைத்து அஞ்சலி செலுத்தி “ஹவ் இஸ் இட்” என கேட்டு பழிவாங்க வேண்டும், இதற்கு ராமசந்திரன் வழியே தன் வழி என கிளம்ப வேண்டும்

இப்படி பல விஷயங்களை அவர் பேச்சு உள்ளடக்கினாலும் அவரின் தீர்க்கமான முடிவு திமுக எதிர்ப்பு அரசியல்

அப்படி என்றால் என்ன?

மாநில சுயாட்சியினை தூக்கி எறிந்துவிட்டு , இந்தி வரவேற்பு, மிசா வரவேற்பு, சமூக நீதியினை கடலில் வீசிவிட்டு வர்னாசிரம கொள்கைக்கு சாமரம் வீசும் அரசியல்

இதனைத்தான் நான் செய்யபோகின்றேன் என கிளம்புகின்றார், கிளம்பட்டும்

ராமசந்திரன் மறந்து கெடுக்காமல் விட்டுசென்றதை எல்லாம் இவர் கெடுக்கட்டும்

நாம் இப்பொழுது இந்த தமிழருவி மணியன் என்பவரை தேடி கொண்டிருக்கின்றோம்

காந்தி இயக்கம், காமராஜர் வழக்கம், கலாம் முழக்கம் எல்லாம் கலந்தவர் ரஜினி என சொல்லிகொண்டிருந்தவர் அவர்

இப்பொழுது ரஜினி நான் எம்.ஜி. ராமசந்திரன் வழி என பகிரங்கமாக சொன்னபொழுது மணியனை காணவில்லை

ஏதோ கோவையில் மேமாதம் நடக்க இருக்கும் ரஜினி மாநாட்டில் அவர் பிசியாக இருந்ததாக செய்தி, இனி எதற்கு அதெல்லாம்?

இனி எங்காவது தமிழருவி மணியன் சிக்கினால் அவருக்கு என்ன நடக்கும் என சொல்ல உத்திரவாதமில்லா சூழலை ரஜினி ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்

ஆம், தன்னை நம்பியவர்களை எப்படி திடீரென படகில் இருந்து தள்ளிவிடுவாரென்பது மூன்று முடிச்சு படத்தில் கதை ஆனாலும் வாழ்வில் தமிழருவி மணியனை பார்க்கும்பொழுது புரிகின்றது

மணியனை பார்த்தாவது ரஜினி ரசிகர்கள் திருந்தட்டும், இல்லை நாசமாய் போகட்டும்

தமிழருவி மணியன் கோவையில் இருந்து அப்படியே கேரளாவிற்கு ஓடுவது நல்லது,

எம்.ஜி.ஆர் ஆட்சியினை கொடுப்பேன் என பேசி மகா மட்டமாய் தன் தகுதியினை பெயரை கெடுத்துகொண்டார் ரஜினி

இவ்வளவு பேசிய ரஜினி காவேரி மேலாண்மை வாரியம், மீத்தேன் , +2 மாணவர்களுக்கான மருத்துவ எதிர்காலம் பற்றி ஏதும் பேசினாரா?

இல்லவே இல்லை, ஏன்? இவற்றை மறக்கடிக்கதானே அவர் பேசவே வந்தார். இதுவும் புரியாதவன் அவருக்கு விசிலடித்து எக்கேடும் கெட்டு போகட்டும்.

ஆனால் தமிழகம் கெட அனுமதியோம்