ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர்
ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர்
திமுக என்பது அடிக்கடி பல்டி எல்லாம் அடிக்கும் கட்சி, “ஏய் குலுகபட்டரே..” என ராஜாஜியினை எதிர்ப்பார்கள் பின் அவரோடு கூட்டணி என்பார்கள்
இந்திராவினை எதிர்ப்பார்கள், கடுமையான வசவுகளை வீசுவார்கள், “விதவை பென்சன் வேண்டுமா?” என்பார்கள் பின் அவரோடு கூட்டணி வைப்பார்கள்
இது திமுக நிலைப்பாடு என்றல்ல அரசியல் அப்படித்தான்
எம்ஜிஆருக்கு பின் தமிழக வோட்டு நமக்கு என்ற திமுகவின் 1987 கணக்கு பொய்த்தது, அது 2017லும் நடந்திருக்கின்றது. ஆம் இப்பொழுதும் சசிகலா அணி பன்னீர் அணி என்றுதான் செல்கின்றதே தவிர அந்த வாக்கு திமுகவிற்கு இல்லை
ஒருவகையில் வரலாறு திமுகவிற்கே பாதகமாக திரும்புகின்றது
அதாவது திமுக உடைந்து ராமசந்திரன் கட்சி கண்டபொழுது இனி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்தார்கள், அதுவும் திண்டுக்கல் இடைதேர்தலில் இரண்டாம் இடம் பெற்றது, பின் மிசா அது இது என காங்கிரஸ் எழும்பாமலே போனது காமராஜரும் சென்றுவிட்டார்
அப்படி காங்கிரஸ் ஏமாந்த அதிர்ச்சியில் இன்று திமுக நிற்கின்றது. காலம் எல்லாவற்றிற்கும் கணக்கு வைத்திருக்கின்றது
ஒரு விஷயம் உண்மை அதிமுகவின் வாக்குவங்கி முன் திமுக குறைவான வங்கியே கொண்டிருக்கின்றது,இதனால் தகுந்த கூட்டணி இன்றி அது களமிறங்கியதில்லை
விஜயகாந்த் என்பவர் யார் வோட்டை பிரிப்பார் என தெரியாத நிலையில் ஆரம்பத்தில் சில உரசல்களை திமுக கொடுத்தது, ஆனால் அவர் அதிமுக வோட்டைத்தான் பிரித்தார், வைகோவின் வோட்டைத்தான் அமுக்கினார் என தெரிந்த திமுக ஆறுதல் அடைந்து அவரை தேடியது
இன்று ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் உணரவேண்டியது இந்த இடத்தில்தான்
வடிவேலுவினை விஜயகாந்திற்கு எதிராக எப்படி எல்லாம் திமுக 2011 தேர்தலில் பேசவிட்டது என்பது ரகசியமல்ல, மிக மட்டமாக எல்லாம் விமர்சிக்கபட்டார் விஜயகாந்த், பூரண திருப்தியோடு இருந்தது திமுக மேலிடம்
ஆனால் 2016ல் அதே விஜயகாந்த் பின்னால் “ஏ பழமே இப்பால் கலயத்தில் விழு, ஏ கனியே இந்த அமுத பானையில் விழு..” என திமுகவினர் அலைந்த பொழுது வடிவேலு முகம் எப்படி இருண்டது என்பதும், அவர் எப்படி எல்லாம் நொந்திருப்ப்பார் என்பதும் உணர கூடியது
அரசியல் என்பது இதுதான் , ரஜினி சொல்வது போல 234 தொகுதியில் தனித்து போட்டி என்பதெல்லாம் பேச்சுக்கு சரி, அரசியலுக்கு வராது. ராமசந்திரனே கூட்டணியோடுதான் களம் கண்டார்
“தெய்வத்தோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி” என முழங்கிய விஜயகாந்த் பின் ஜெயலலிதா பக்கம், வைகோ பக்கம் சென்றது இப்படித்தான்
ரஜினிக்கும் நிச்சயம் கூட்டணி சேரும் காலம் வரும்
இல்லாவிட்டால் வைகோ சீமான் போன்று சர்கஸ் அரசியல் நடத்தலாமே தவிர வேறு வழி அல்ல
அதனால் வருங்காலத்தில் ரஜினி திமுக கூட்டணிக்கு கூட வரலாம் , அவர் கலைஞரை சந்தித்ததிலும் ஸ்டாலின் வரவேற்றதிலும் அரசியல் இல்லாமல் இல்லை
அதனால் ” ஏ ரஜினியே, ஆரிய பார்ப்பானின் பினாமியே..” என்றெல்லாம் முழங்கும் திமுகவினர் கொஞ்சம் வடிவேலுவினை நினைத்து அமைதி காப்பது நல்லது
இல்லையேல் என்றேனும் ஒருநாள் வடிவேலு பட்ட மன உளைச்சலை நீங்களும் பட்டே தீருவீர்கள்