ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம்

Image may contain: 2 people, people smiling

ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம்

முன்பெல்லாம் கட்சிக்கு ஆள் இருக்கின்றதோ இல்லையோ கொள்கை மகா அவசியம்

காங்கிரஸின் கொள்கை தேசிய விடுதலை என்றும் அதன் பின் தேசவளர்ச்சி என்றும் இருந்தது, கம்யூனிஸ்டுகளின் கொள்கை பொதுவுடமை என அக்காலத்தில் இருந்தது

ஜனதா கட்சி இந்திராவின் சர்வாதிகாரத்தை பொறுக்கமுடியாமல் எழுந்த உணர்ச்சி கட்சி, காங்கிரசுக்கு எதிர்ப்பு கொடுக்க மாநில கட்சி கூட்டணியால் முடியும் என பரீசிலீத்து காட்டிய கட்சி அது

பாரதீய ஜனதாவின் கொள்கை இந்துத்வா எனினும் அதனை ஒருமாதிரி மறைத்து ஆனால் தேவைபடும் இடங்களில் மட்டும் காட்டி செல்லும் வித்தியாச கொள்கை அவர்களிடம் உண்டு

திமுகவின் கொள்கைகள் நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம் என பலவேர்களை கொண்டது.இந்தியா எனும் நாடு இருக்குமளவும் தேவைபடும் பலவிதமான விஷயங்களை தன் அடிநாதமாக வைத்திருக்கும் கட்சி அது

தமிழகத்தில் கொள்கையே இல்லா கட்சி என முதலில் வந்தது அதிமுக, இன்றுவரை அதிமுகவின் கொள்கை என்றால் என்ன என்பது சாட்சாத் சசிகலாவிற்கும் தெரியாது, பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் தெரியாது

ஆனால் அறிவிக்கபட்டாத கொள்கை கலைஞர் எதிர்ப்பு, அந்த ஒற்றை கொள்கையிலே உயிர்வாழ்ந்த கட்சி அது. ராமசந்திரன் ,ஜெயலலிதா என இருவருமே அக்கொள்கைக்காகவே உழைத்தார்கள், கலைஞரை தொலைப்போம் என்று சொல்லியே அரசியல் செய்தார்கள்

அவர்கள் தொலைந்தார்களே தவிர கலைஞர் அப்படியேத்தான் இருந்தார்

விஜயகாந்த் கட்சி தொடங்கிய பொழுது ஊழலை ஒழிப்பேன் அதுவே கொள்கை என்றார், முதலில் வரவேற்பும் பெற்றார்

பின் ஊழல்வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்து அவர் ஊழல் ஒழிக்க கிளம்பிய பொழுதே தமிழகம் முகம் சுளித்தது, அதன் பின் விஜயகாந்த் சரிய தொடங்கினார்

ஜெயலலிதாவுடன் இனி சேர்ந்து ஊழல் ஒழிக்கமாட்டேன், கலைஞருடன் சேர்ந்து ஊழலை ஒழிக்க எனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என அவர் முரண்டு பிடிக்க, நீ வைகோவோடு சேர்ந்து ஊழலை ஒழி, நாங்கள் தனியாக ஒழிக்கின்றோம் என சீறியது திமுக‌

அதன் பின் விஜயகாந்த் எப்படி ஊழலை ஒழிக்க பாடுபட்டார் என்பதெல்லாம் ரகசியமல்ல‌

இப்பொழுது ரஜினியும் கமலும் வருகின்றார்களாம், ஏன் என்றால் சிஸ்டம் கெட்டுவிட்டதாம் , லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதாம், சீர்படுத்துவார்களாம்

சரி அது அரசின் கடமை, உங்கள் பொதுவான கொள்கை என்ன? தேசிய அரசியலா? மாநில சுயாட்சியா? இட ஒதுக்கீடு அபிமானியா? கம்யூனிசமா? விகிதாச்சாரமா? சுவிஸ் முறையா? என்றெல்லாம் கேட்டால் ஒன்றும் சொல்லவில்லை

மாறாக ஆன்மீக அரசியல் என ரஜினியிடம் இருந்து ஒரே ஒரு பதில் வந்தது. எது? கண்ணை மூடிகொண்டு தியானத்தில் இருப்பதா? அப்படி இருந்தால் சுற்றி இருப்போர் சுருட்டமாட்டார்களா என கேட்டால் ரஜினிக்கு தலையே சுற்றுகின்றது

ரஜினியாவது கொள்கை பற்றி கேட்டால் தலை சுற்றும் என்பார், கமல் தன் கொள்கையினை விளக்குவதை கேட்டால் கேட்போருக்கே தலை சுற்றும், கடைசி வரை புரியாது, ஆனால் அவர் தமிழில்தான் பேசுவார்

ரஜினிக்கும் கமலுக்கும் ஊழலை ஒழிக்க, கருப்பு பணத்தை ஒழிக்க ஆசை என்றால் முதலில் சினிமாவில் ஒழிக்கட்டும்

தங்கள் படத்தின் வருமானம் என்ன? சம்பளம் என்ன? கட்டும் வரி என்ன என முதலில் நிரூபித்துவிட்டு வரட்டும்

அங்கேயே ஒரு இருட்டு கணக்கினை வைத்துகொண்டு அரசியலை சுத்தபடுத்தபோகின்றோம் என்றால் நகைப்பு வராதா?

இவர்கள் ஏன் இப்படி குதித்தோடி வருகின்றார்கள்? அதுவும் ஒருசேர‌

திராவிட இயக்க அரசியலை சரிக்க வேண்டும் என்பது ராஜாஜி காலத்தில் இருந்தே டெல்லியில் தயாரான திட்டம், ராமசந்திரனை உருட்டி மிரட்டி திமுகவினை பலவீனபடுத்தி காங்கிரசை வளர்க்கும் திட்டம் டெல்லியில் இருந்தது

ஆனால் ராமசந்திரனுக்கு கலைஞர் அட்டகாசமாக சரிக்கு சரி நிற்க காங்கிரஸ் காணாமலே போனது, டெல்லி சற்றும் எதிர்பாரா கணக்கு இது

இப்பொழுது பாஜக முறை அல்லவா? அதே கணக்குகள் ஓடுகின்றன‌

ஜெயா இல்லா நிலையில், அந்த் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமெடியின் உச்சகட்ட ஆட்சி நடக்கும்பொழுதே தெரிகின்றது, இனி வோட்டு நிச்சயம் திமுகவிற்கு செல்லும்

வழக்கமான கலைஞர் எதிர்ப்பும் இனி வேலைக்கு ஆகாது, என்ன செய்யலாம் 1972ல் ராமசந்திரனுக்கு செய்யபட்ட அதே டெல்லி சூனியங்கள் இவர்களுக்கும் வைக்கபடுகின்றன, தானே கிளம்புகின்றார்கள்.

பல வழக்கிலும் சில வருமானவரி சர்ச்சையிலும் இருந்து தப்பிக்க அன்று ராமசந்திரன் தமிழகத்தை பலிகொடுக்க துணிந்தது போல் இவர்களும் துணிந்துவிட்டார்கள்

வருகின்றார்களே தவிர, தங்கள் கொள்கை என்ன? நீண்ட போராட்டத்திற்கு பின் தமிழகம் பெற்ற உரிமைகளை அடகு வைப்பதா? இல்லை தேசிய நீரோட்டமா? உபி ஸ்டைலா? கேரள ஸ்டைலா? என ஒன்றும் சொல்லாமல், சும்மா அரசியலுக்கு வருகின்றோம் என்பதெல்லாம் சரி அல்ல‌

சுதந்திரத்திற்கு பின்னரான அரசியல் என்பது யாரையாவது எதிர்த்தே செய்யபடும் அரசியல், இக்கொள்கையினை நாங்கள் எதிர்க்கின்றோம் என தொடங்கபட்ட கட்சிகளைத்தான் இந்தியாவும் தமிழகமும் கண்டன‌

தேசிய அளவில் இந்திராவினை எதிர்த்தும், தமிழக அளவில் காமராஜர், கலைஞரை எதிர்த்துமே கட்சிகள் உதயமாயின‌

இந்த இருவரும் யாரை எதிர்க்கின்றார்கள்? எந்த கொள்கை பிடிக்காமல் புது கொள்கையுடன் கட்சி தொடங்குகின்றார்கள் என தெரியவே இல்லை

எதை மாற்ற போகின்றார்கள்? யாரை எதிர்க்க போகின்றார்கள் என்றால் அதனையும் சொல்லமாட்டோம் என்கின்றார்கள், இவர்கள் தொடக்கமே மகா குழப்பம் + எரிச்சல்.

தமிழகத்தில் பாமாகவிற்கு என்ன கொள்கை என்பது ராமதாஸ் அருகிலிருக்கும் காடுவெட்டி குருவினை கண்டாலே தெரிந்துவிடும்

திருமா, கிருஷ்ணசாமி அரசியல் கொள்கை எல்லாம் எல்லோருக்கும் புரிய கூடியது

அட சைமனே கொள்கை என சிலவற்றை சொல்வது போல இவர்களும் சொன்னால்தான் என்ன? சொல்லிவிட்டு வரலாம்

ஆனால் அரசியல் என்பது வேறு, ரசிகர்களை நம்பி இவர்களின் பல படங்களே படுத்த நிலையில் அவர்களை நம்பி இவர்கள் அரசியலுக்கு வருவதே பெரும் பரிதாபம்.

உண்மையில் கமலும், ரஜினியும் செய்வது மிகபெரும் தமிழக துரோகம். அவர்கள் ஏதும் செய்வதாக இருந்தால் நல்லகண்ணு போன்றோரை ஆதரிக்கலாம், நல்ல சிந்தனைவாதிகளை ஊக்குவிக்கலாம்

அரசியலுக்கு வராமலே நல்லவர்கள் கையில் ஒப்படைக்கலாம்

ஆனால் நாங்கள் வருவோம், வேரே இல்லாத மரமாக நிற்க ஆசைபடுவோம் என்பதெல்லாம் இவர்கள் தமிழக மக்களை குழப்பி, அவர்கள் சிந்தனையினை திருப்பி மகா மோசமான குழப்பத்திற்கு வழிகோலுகின்றார்கள்.

இவர்கள் இப்படி ஊர்வலம் போக அதை கண்டு மிக சந்தோஷபடும் நபர் யாரென்றால் சாட்சாத் பழனிச்சாமிதான்

ஆம் மக்கள் கவனமெல்லாம் இந்த கமல், ரஜினி ஊர்வலத்தில் திரும்பி இருக்க அவரையும் அவர் ஆட்சியினையும் யார் கண்டுகொள்ள போகின்றார்கள்?

கமல் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து ஊர்வலம் வருவாராம், அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து வர அவரின் கொள்கைகளில் ஒன்றையாவது கமல் பின்பற்றினாரா?

கலாம் என்ன அரசியல்வாதியா?

அவரை போல் பரிசுத்தமான தேசாபிமானியாக கமல் எங்காவது நின்றாரா? இல்லை

கமலும் ரஜினியும் செய்வது அயோக்கியதனங்கள், இந்த அயோக்கிய தனங்களுக்கு அப்துல்கலாம் போன்ற மாமேதைகளின் பெயர்களை இழுப்பதை அனுமதிக்க முடியாது.

ஏதோ ராக்கெட் தொடர்பான பல்கலைகழகம் தொடங்க போவது போல கமலஹாசன் அவர் வீட்டுக்கு செல்கின்றாராம்

ஏன் காமராஜர் நினைவிடம், அண்ணா நினைவிடம் என சென்றால் என்ன? சென்றால் முதுகில் எங்கிருந்து அடிவிழும் என்பது அவருக்கு தெரியும் என்பதால் அதனை எல்லாம் தவிர்க்கின்றார்

இருவரும் முதலில் தங்கள் கொள்கைகளை விளக்கட்டும், அல்லது கொள்கையே இல்லாத அதிமுகவிற்கு நாங்கள் மாற்று என சொல்லட்டும்

இரண்டில் ஒன்றை செய்யாமல் அவர்கள் கட்சி தொடங்குவது, காகித படகில் கடலை கடக்க முயற்சிப்பதற்கு சமம்

எப்படியோ 21ம் தேதி கமல் என்பவர் கட்சி தொடங்குகின்றாராம்

அன்று ஒரு அற்புதமான “கலைஞானி” சாகபோகின்றான், ஒரு அயோக்கிய அரசியல்வாதி உருவாக போகின்றான்