ரமண மகரிஷி

இந்துஸ்தானம் எக்காலமும் மன்னர்களாலோ, வியாபாரிகளாலோ, கல்விமான்களலோ,மக்களாலோ இயக்கபட்ட நாடு அல்ல, அப்படி வெளிபார்வைக்கு தோன்றினாலும் உண்மை வேறானது

இந்துஸ்தானம் எனும் இந்த புண்ணிய பூமி மகான்களாலும் ரிஷிகளாலும் ஞானியராலும் நடத்தபடும் பூமி, இங்கு அவதாரங்களே வந்தாலும் ஞானியர் முன் தோன்றி அவர்களை வழிநடத்துவார்கள்

ராமனுக்கே வசிஷ்டர் விஸ்மாத்திரர் என ஞானியர் வந்தார்கள், கண்ணனுக்கும் வந்தார்கள் இன்னும் பலருக்கு ஞானியர் வந்துகொண்டே இருந்தார்கள்

இங்கு அக்கிரமம் தலைதூக்கி இந்து தர்மமும் தாத்பரியமும் சவாலில் சிக்கும் பொழுது, பெரும் அதர்மம் தலைவிரித்தாடும் பொழுதெல்லாம் முதலில் ஞானியர்களே தோன்றுவார்கள்

அவர்கள் ஆயுதம் ஏந்தமாட்டார்கள், புரட்சி செய்யமாட்டார்கள், வாள் ஏந்தமாட்டார்கள், கத்தி பேசகூட மாட்டார்கள், அவ்வளவு ஏன் நடக்கும் காட்சிக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒதுங்கி இருப்பார்கள்

ஆனால் கடுமையான தவத்திலும் இறைசிந்தனையிலும் மனம் வைத்து யாரும் அறியாமல் இங்கு இந்துதர்மம் துலங்கவும் , துலங்கிய தர்மம் நிலைக்கவும் இறங்கியிருப்பார்கள்

பார்ப்பதற்கு பைத்தியகார கோலத்தில் அவர்கள் இருந்தாலும் பெரும் இந்து புரட்சிக்கு மவுனமாக தயார் செய்வார்கள், அவர்கள் வாழும் பொழுதும் போதிக்கும் பொழுதும் அவ்வளவுக்கு தன்னை வெளிகாட்டாதவர்கள் பின்னாளில் அரூபியாய் விஸ்வரூபமெடுப்பார்கள்

அவர்கள் பூமிக்கு வந்ததும் ஆண்டியாய் தவமிருந்ததும் ஏன் எனும் காரணம் பின்னாளில் விளங்கும், அன்று இங்கு இந்துதர்மமும் தேசமும் துலங்கியிருக்கும், பெரும் ஒளி ஏற்றபட்டிருக்கும்

ஆனால் அவர்கள் இருக்கமாட்டார்கள் அவர்கள் நினைவும் போதனையும் மட்டுமே எஞ்சியிருக்கும்

இதற்கு ராமன் கண்ணன் காலத்தில் இருந்து ஏகபட்ட உதாரணம் சொன்னாலும் சிவாஜியின் குருவாக வந்த ராமதாசர் 16ம் ஆண்டுகால உதாரணம்

ராமதாசர், பக்த துக்காராம் போன்றோரெல்லாம் அக்கால சாட்சிகள், சிவாஜி உருவாகி நிலைக்க அவர்கள் முக்கிய காரணம்

19ம் நூற்றாண்டில் பிரிட்டிசார் கால குழப்பங்களில் வந்து எழுந்து ஒளிவீசியவர் சுவாமி விவேகானந்தர், அவரின் காலங்களில் தமிழகத்தில் எழுந்த ஞான சுடர்கள் ஏராளம் என்றாலும் இருவர் முக்கியமானவர்கள்

ஒருவர் காஞ்சி மகாபெரியவர் இன்னொருவர் ரமணமகரிஷி

நாத்திகம் தலையெடுக்க தொடங்கிய காலத்தில் சரியாக எழும்பி தமிழக மக்களுக்கும் இதர இந்திய மக்களுக்கும் மட்ட்மல்ல ஐரோப்பியருக்கே இந்துதர்மத்தை போதித்த மகான் அந்த ரமணர்

ஆம், பரிபூரண ஞானம் என்றால் என்பதை அழுத்தமாக சொன்ன மதம் இந்துமதம், ஞானத்தின் விளைநிலமாகவும் உறைவிடமாகவும் இந்த பூமிதான் இருந்தது, அந்த சனாதான தர்மம் உண்மையான ஞானி எப்படி இருப்ப்பான் என்பதை காட்ட அவ்வப்போது ஒருவரை உருவாக்கி கொண்டே இருக்கும்

ஆழமான கடல் அமைதியாக இருப்பது போல் அவர்கள் இருப்பார்கள், தென்றல் போல் சில மொழிகளை பேசுவார்கள், சூரிய ஒளிபோல் எல்லா திசையிலும் அவர்கள் ஞானஒளி வீசும்

அந்த ஞானியர் பொன் பொருளுக்கு அலையமாட்டார்கள், மாலை மரியாதை தேடி ஓடமாட்டார்கள், தனக்கொரு கூட்டம் கும்மாளம் என மானிட சுபாவத்தில் சிக்கமாட்டார்கள்

முழு பற்றறுத்த நிலையில் எல்லா உயிர்களிலும் அசைவதிலும் அசையாததிலும் இறைவனை காண்பவர்கள் அவர்கள் தனித்திருந்து தன்னை ஒறுத்து வருத்தி ஞான விளக்காக ஜொலிப்பவர்கள்

கடுமையான தவத்தாலும் விரதத்தாலும் அதை அவர்கள் அடைவார்கள், விதிக்கபட்ட கர்மாவினை உலக மாயையினை மீறி பெற்று ஜொலிப்பார்கள்
தவமும் விரதமும் யோகமும் சனாதான தர்மத்தின் அடித்தளமான அடையாளங்கள்.

மாபெரும் தியானத்தால் ஒருவன் தெய்வநிலை அடையமுடியும் என்பது இங்கு எக்காலமும் போதிக்கபட்ட தத்துவம்
இதனால்தான் ஒவ்வொரு தெய்வத்தின் அமைப்பும் ஒரு தியான நிலையினை போதித்து கொண்டே இருக்கின்றது, ஆயிரம் தத்துவங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.

மிக சரியான அவதாரங்களும் ஞானிகளும் அதை பின்பற்றும் பொழுது அது தங்களின் தெய்வ சக்தியினை உணர்த்தி நிற்கின்றன‌

பஞ்சு எரியும் இயல்பு கொண்டது ஆனால் நீரில் எரியாது, நெருப்பு உரசினால்தான் எரியும் என்பது போல சில தெய்வாம்சமான இயல்பினை கொண்ட மகான்கள் அந்த பயிற்சியால் ஞானத்தில் எரிந்து ஜோதியாய் மின்னுவார்கள்.

இந்த திருநாடு ரிஷிகளின் பூமி, யோகிகள், பரமஹம்சர்கள், மகரிஷிகளின் தாய். இங்கு உருவான ரிஷிகள் ஏராளம்

நாம் காணாத ரிஷிகள் பல யுகங்களுக்கு முன்னால் வாழ்ந்து அடையாளமிட்டு அரூபிகளானார்கள் எனினும் நம் கண்முன் கண்ட மகா மக ரிஷி ரமணர்
வியாசர், வசிஷ்டர் வரிசையில் வந்த மாபெரும் முனி அவர்.

கடந்த நூற்றாண்டில் இந்நாட்டின் ஆன்மீக சூரியனாக ஒளிர்ந்தவர் அவர். ஞானி என்பதற்கும் இறைவனில் கலந்தவர் என்பதற்கும் அவர்தான் எடுத்துகாட்டு.
அந்த மகா முனியின் தவமும் அருளும் அதனால் இந்நாடும் நாட்டுமக்களும் பெற்ற ஞான ஒளி கொஞ்சமல்ல‌

அவர் மதுரை பக்கம் திருச்சுழி எனும் கிராமத்து பிறப்பு, மிக சிறுவயதிலே மரணத்தின் அனுபவத்தை பெற்று அந்த ஞானத்தில் திருவண்ணாமலை நோக்கி ஓடிவந்து அந்த ஞானபூமியிலே தன் ஞானவாழ்வினை தொடங்கியவர்

ஆம், 12 வயதிலே ஞானத்தை தேடியவர் அவர்.

கோவணம் கட்டிய கவுதாம்பீனி கோலத்தில் அவர் தவவாழ்க்கை தொடங்கியபொழுது வயது 14க்குள்தான் இருந்தது, கடவுளை அப்பொழுதே தவகோலத்தில் தேட தொடங்கி கடும் தவத்தில் இறங்கியிருக்கின்றார், தவமென்றால் சாதாரண தியானம் அல்ல. தன்னை சுற்றி புற்று வளர்வதை கட அறியா அளவு கடும் தவம்
திருவண்ணாமலை வாசிகளே அவரை மீட்டெடுத்து வந்தனர், ஆதியில் அவர் பட்ட கல்லெறியும் பைத்தியம் என விரட்டபட்ட காட்சிகளும் கொஞ்சமல்ல‌

அவதாரத்தை அவதாரமே அறிந்துகொள்ளும் எனும் வகையில் இன்னொரு மகரிஷியினால் காக்கபட்டவர் அவர்

பட்டை தீட்டபட்டபின் ஒளிரும் வைரம் போல, பாய்ந்த நீர் அணையில் அடங்கி அமைதியாவதை போல கடும் தவத்துக்கு பின் ஒளிர ஆரம்பித்தார் ரமணர்
அவரின் வாழ்வினை போதனையினை விளக்க ஆரம்பித்தால் எழுதி முடியாது, அவ்வளவு பெரும் வரலாறு அது

மிக சுருக்கமாக சொல்வதாக இருந்தால் எந்த ஞானிக்கும் சற்றும் குறையாத தவ யோக வாழ்வு ரமணருடையது

ஆன்மீகத்தின் எல்லா கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது, எதுவுமே அவருக்கு சிக்கலாக இல்லை. அந்த மனம் ஞானகடலாய் ஆன்மீக மழை பொழிந்தது, அந்த ஞானசூரியன் எல்லா இருட்டுக்கும் ஒளிகொடுத்தது
பெரும் மக்கள்திரள் அவரை நோக்கி வந்தார்கள், அவர்களுக்கு மிக சுருக்கமான மொழியில் சட்டென ஞானத்தை உணரவைத்தார். அவரின் மகிமையினை மெல்ல உணர்ந்த மக்கள் அவருக்கு ஆசிரமம் அமைத்து கொடுத்தனர்

அவர் எல்லா உயிரையும் நேசித்தார் , அங்கு வளர்ப்பு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தார், அந்த இடமே ரமணாசிரமம்.

திருவண்ணாமலை எவ்வளவு பெரும் ஞானபூமி என்பது அவராலே விளங்கிற்று, இந்தியாமுழுக்க அவருக்கு பக்தர்களும் பின்பற்றுவோரும் உருவாயினர். ஏன் அயல்நாட்டில் இருந்தே ஆயிரகணக்கானோர் வந்தனர்
ரமணரின் அவதார நோக்கமே வேறு என்பதால் அவர் அமைதியாக புரட்சி செய்தார், பேசாமலே ஏன் திருவண்ணாமலை தாண்டி ஒரு அடி எடுத்து வைக்காலமே மாபெரும் புரட்சியினை அவரால் அமைதியாக செய்யமுடிந்தது

அவர் வாழ்வில் அவர் செய்த அற்புதங்களும் இன்னும் மாபெரும் அதிசயங்களும் எந்த மகானுக்கும் குறைந்தவை அல்ல, மிக பெரிய அற்புதங்கள் அவை.
ரமணரால் தீர்ந்த நோய்களும், வாழ்வு பெற்றோரும் ஏராளம் ஏராளம் , சாட்சிகள் தாராளம்.

ஞானம் என்றால் என்ன? கடவுளை அடைதல் என்றால் என்ன கேள்விக்கு, உன்னில் இருக்கும் “நான்” எனும் அகந்தையினை கொன்றுவிடு, நான் என்பதையே கொன்று பிரபஞ்சத்தில் கரைந்துவிடு அதன் பின் நீயும் பிரபஞ்சமும் வேறல்ல என அவர் விளக்கியதெல்லாம் உலகின் ஒப்பற்ற ஞானம்.

ரமணரின் வாழ்வின் மகா மகா உச்சம் பால் பிராண்டன். அந்த ஒற்றை மனிதனின் தேடலை கொண்டே ரமணரின் அருமையினை விளக்கிவிடலாம்

மந்திரங்களும் மாய ஆவிவிளையாட்டும் ஞானம் அல்ல, அவை உலகில் ஒன்றையும் சாதிக்காது என்பதும், அவையெல்லாம் பெரும் சக்திக்கு கட்டுபட்டது என்பதும் அவருக்கு விளங்கிற்று.

அதன்பின் புத்தகுருக்களிடம் தஞ்சமடைந்தான், அவர்களும் அன்பே கடவுள் என சொல்லி அனுப்பி வைத்தனர்

இமயமலையெங்கும் சுற்றினான், கங்கை கரையில் நீந்தினான் அவனின் தேடலுக்கான விடை இல்லை, இரை தேடும் கழுகு போல பறந்துகொண்டே இருந்தான்.

காஞ்சி பெரியவரிடம் ஞானம் தேடி கடவுளை தேடி அவன் சரணடைந்தபொழுது அவர் அவனை ரமணரிடம் அனுப்பி வைத்தார்.

கடைசியாக திருவண்ணாமலைக்கு வந்தான், ரமணரை சந்தித்தான்

ரமணர் அவன் தேடலை நொடியில் தீர்த்துவைத்தார், கடவுள் கண்ணுக்கும் உடலுக்கும் தெரிய கூடியவரல்ல, அடைய கூடியவரும் அல்ல, மனதால் உணரவேண்டிய
வர் எனும் ஞானம் அவனுக்கு அங்கே உதித்தது

அவர் அர்ஜூனன் வில்போல் கேள்விகளை தொடுத்தான், கங்கை நதிபோல் பிரவாகமாய் பொங்கினான், ரமணர் அவனுக்கு தெளிவான விளக்கத்தை களங்கமில்லா சூரியனாய் கொடுத்துகொண்டே இருந்தார்

அவரிடம் தான் ஞானம் பெற்றுவிட்டதாக சொல்லி மகிழ்ந்து இந்தியாவில் சித்தியடைந்து மகிழ்ச்சியுடன் ஐரோப்பா திரும்பி தன் அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டான்

அதிலிருந்து திருவண்ணாமலைக்கு ஐரோப்பாவில் கடும் மரியாதை தோன்றியது, காசி போல புண்ணிய ஷேத்திரமாக அம்மக்கள் அதை குறித்து கொண்டு ஓடிவந்தனர், இன்றளவும் அது தொடர்கின்றது

திருவண்ணாமலை வருவோர் முதலில் தேடும் இடம் ரமணாஷிரமே. அந்த அளவு அந்த ஞானகடலாய் அது திகழ்கின்றது.

ஐரோப்பியருக்கே சனாதான தர்ம பெருமைகளை சொல்லி கொடுத்து அங்கு பரப்ப வழிசெய்த யோகி ரமணர்.

ரமண மகரிஷிக்கு முதலில் புற்றுநோய் வந்தது, 10 ஆண்டுகள் அவர் அதனால் பாதிக்கபட்டும் அவருக்கான காலம் இருந்தது, பின்பு அவதார நோக்கம் நிறைவேறிற்று

புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சையில் மயக்க மருந்து இன்றி அவரின் கட்டி அறுவைசிகிச்சை செய்யபட்டது

மகா அசாத்தியமான விஷயம், ரமணரால் எப்படி சாத்தியாயிற்று என்றால் அவரின் கடும் தவமும் உடலையும் ஆன்மாவினையும் பிரித்து பார்த்த அந்த ஞான யோககர்மா எனும் சித்தியுமாகும்

அவரின் வாழ்வில் இதெல்லாம் யானை புல்கட்டு தூக்கியது போல மிக சாதாரணம்

ரமணர் அதிகம் பேசியவரும் அல்ல, ரமணர் ஊர் ஊராய் சுற்றியவருமல்ல. ஆனால் ஏன் உருவானார்?
ஞானிகளும் யோகிகளும் உரிய காலத்தில் உரிய காரணங்களுக்காக அவதரிப்பர்.

ரமணரின் பிறப்பு சாதாரண காலம் அல்ல, உலகபோர்கள் தொடங்கி நவீன அழிவு காலத்தில் உலகம் அடியெடுத்து வைத்த காலம்

இந்தியா சுதந்திர போராட்டம் மதகலவரம் பிரிவினைவாதம் மதமாற்றம் என குழப்பத்தின் உச்சத்தில் இருந்த காலம்

கூடவே நாத்திகவாதம் தலையெடுத்த காலம், அது உலகை அச்சுறுத்த தொடங்கிய காலம், விஞ்ஞானமும் நாத்திகவாதத்துக்கு உரம்பொட்டு வளர்த்த கொடும்காலம்

அந்த காலத்தில்தான் அந்த அவதாரம் இங்கு வந்தது, அது பல காரணங்களுக்காக தவமிருந்தது

ரமணரால் இங்கு இந்துமதம் ஒரு அடையாளம் கண்டது, அந்த தத்தளித்த கப்பல் ஒரு நங்கூரமாய் அவரில் நம்பிக்கை கொண்டது

நாத்திகமும், ட்டகாசமும் இன்னும் பலவும் தமிழகத்தை சுழன்றடிக்க தொடங்கிய காலத்தில் மிக சரியான எதிர்சவாலாய் திருவண்ணாமலை அந்த ஞானமகனை பெற்றெடுத்து வளர்க்க தொடங்கியது

ரமணர் மிகபெரும் மகானும் தீர்க்கதரிசியுமாய் இருந்தார், ஒரு காலத்தில் தென்னாடு வந்து ஞான மார்க்கத்தை சமபடுத்திய அகத்தியரின் தொடர்ச்சி அவர்

ஞானியரின் வாழ்வு அவர்கள் வாழும் காலத்தில் அல்ல, அவர்கள் காலத்துக்கு பின்பே காரணம் உணரபடும்
ரமணர் இங்கு நாத்திக காலத்தில் அமைதியாய் ஞானஜோதியினை ஏற்றிவைத்த மகான், இந்தியா அடிமைபட்டு கிடந்த காலத்தில் ஞானமார்க்க தத்துவத்தை மிக சரியான காலத்தில் சொல்ல வந்த மகான்

மிக சரியான விஷயங்களை உரிய காலத்தில் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்

ஆம், இந்நாடு சுதந்திரம் பெற்றபின்புதான் அவரின் ஆன்மா பிரிந்தது. இனி இந்து தர்மம் வாழும் என்ற நிம்மதியுடனேதான் அவர் சமாதிநிலை அடைந்தார்

அவரின் போதனையே ஐரோப்பாவில் ஒளிர்ந்து ஏராளமான ஐரோப்பியரை திருவண்ணாமலைபால் இழுத்து வந்தது

அவரை தொடர்ந்தே ஏகபட்ட ஞானிகளும் மகான்களும் திருவண்ணாமலையினை தேடிவந்து உருவானார்கள்
விசிறிசாமியார் எனும் யோகிராம் சுரத்குமார் என்பவரும் அந்த தொடர்ச்சியே

அந்த விசிறி சாமியே பாலகுமாரன் போன்றோர் அற்புத ஆன்மீக படைப்புகளை படைக்க காரணம், அண்ணாமலையார் கோவில் போல பாலகுமாரனின் ஆன்மீக படைப்புகள் எல்லா காலத்திலும் நிற்கும்
இன்னும் ஏராளமான மவுன ரிஷிகள் சித்தர்கள் அவர் வழியில் உண்டு, இன்னமும் வருவார்கள்

ரமணரால் இங்கு இந்துமதம் தளைத்தது, ஆதி சங்கரருக்கு பின் இங்கு தோன்றிய பெரும் மகான் ரமணர்

பன்னெடுங்காலத்துக்கு தேவையான காரியத்தை , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான ஞானத்தை இங்கே விட்டுசென்ற மகான் அவர்

பெரும் ஞான சர்க்கரை மலையினை அவர் ஏற்படுத்தினார், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த மானிட எறும்புகளுக்கு அது போதும்

அணுசக்தியில் இயங்கும் விண்வெளி வாகனம் தொடர்ந்து பல வருடம் பிரபஞ்சத்தில் பறக்க சக்தி இருப்பது போல, ரமணர் கொடுத்த சக்தி சில யுகங்களுக்கு தாங்கும்

காலத்தால் வந்த ஞானமகன் அவர்

கோவணம் கட்டி அந்த பழுத்த ஆன்மீக ஜோதி நிற்கும் அந்த திருகோலம், பட்டினத்தார் கௌதாம்பீனியக நின்ற கோலத்தின் தொடர்ச்சியாகும்

நாம் கண்முன் கண்ட பெரும் அவதாரம் ரமணர். விட்டுபோன இந்து ராஜரிஷிகளின் தொடர்ச்சியாக வந்து இங்கு பார்வையிட்டு சென்றவர்

அந்த ஆசிரமத்தில் அவர் சமாதியினை பல்லாயிரம் பேர் அனுதினமும் வணங்குகின்றார்கள்,
ஆனால் உலகம் ரமணரின் சமாதியினையே தேடி வந்து வணங்குகின்றது, ஆன்மீக ஞானியின் மகா அடையாளம் இதுதான்

ரமணர் இறந்த அன்று, அவர் உயிர் பிரிந்தநொடியில் அவர் உடலில் இருந்து பெரும் ஒளி ஒன்று பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்தை அடைந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் ஏராளம்

ஆம் அண்ணாமலையாரே அந்த ஆத்மாவினை இங்கு அனுப்பினார், உரிய காலம் முடிந்ததும் அந்த ஆத்மா வந்த இடத்துக்கே எல்லோர் கண்ணும் காணும்படி சென்றது

கண்ணன் உயர்த்திய கோவர்த்தன மலைக்கும், அனுமன் சுமந்த சஞ்சீவி மலைக்கும், ரமணர் அடையாளமான திருவண்ணாமலைக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

ரமண உபதேசம் நம்மை மலைபோல் காக்கும், நோய்க்கு மருந்தாகும், வாழ்வுக்கு வழியாகும், நள்ளிரவில் விளக்காகும்

ரமணர் அதிகம் பேசவில்லை, ஆனால் பேசவைத்திருகின்றார். அவர் பெரும் அதிசயம் எதையும் கட்டளையிடவில்லை ஆனால் அவரை அண்டியோருக்கு அதிசயங்கள் தானாக நடந்திருக்கின்றன‌

இந்தியாவின் மிகபெரும் அவதாரம் ரமணர் என்பதில் சந்தேகமில்லை, அவதாரங்கள் மிகபெரும் நோக்கத்துக்காக பிறப்பவை, யாரும் செய்யமுடியா விஷயங்களை செய்பவவை, உலகத்தின் மொத்த சுமையினையும் சுமப்பவை

பல்லாயிரம் வருடத்துக்கு ஒரு முறை வரும் அவை ஏகபட்ட வருடங்களுக்கான தத்துவங்களை செயல்களை செய்துமுடித்துவிட்டு கிளம்பிவிடும்

அந்த மாபெரும் தானிய குவியலை தின்று முடிக்க மானிட குருவிகளுக்கு பல்லாயிரம் வருடம் வேண்டும்
ரமணரின் வாழ்வும் அதை சொல்கின்றது

ரமணரின் அருகாமையில் எல்லோருக்கும் அமைதி கிடைத்தது. வாழ்வின் எல்லா பாதிப்புக்கும் இழப்புக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளானோர் கூட அவர் அருகாமையில் அவர் சந்நிதியில் அமைதி பெற்றனர்

ஆம் அமைதி, முழு மன அமைதி, நிரந்தரமான நிர்மூலமான மன அமைதி தேடித்தான் ஓடுகின்றது மானிட இனம்

மானிடனின் குறைந்த பட்ச தேவை அதுவே. அந்த குறைந்த பட்ச நிம்மதிக்குத்தான் மாயையில் சிக்கி உலகை சுற்றிவந்து எங்கும் கிடைக்காமல் தவித்து நிற்கின்றது மானுடம்

நிம்மதி என்பது பொருளில் அல்ல, மாயையில் அல்ல அவனவன் மனதிலே இருக்கின்றது என சனாதன தர்மம் சொன்னதை வாழ்ந்து காட்டி நிரூபித்து ஜோதியாய் ஜொலிக்கின்றார் ரமணர்

அன்பு, அது ஒன்றுதான் அனைத்துக்கான ஆதாரம். அன்பில் அமைதிவரும், அமைதியில் ஞானம் வரும், ஞானத்தின் உச்சியில் நான் எனும் அகங்காரத்தை வென்றவனே ஞானி

எல்லோரும் வாழ்ந்து,முடித்து,களைத்து ஒதுங்கும் அந்த நிழலுக்கு இளம் வயதிலே சென்று அமர்ந்திருகின்றார் ரமணர், தன்னை தேடிவருவோர்க்கெல்லாம் அள்ளி அள்ளி அதை கொடுத்திருக்கின்றார்

திருவண்ணாமலை என்பது கங்கை கரைக்கும் , இமயமலைக்கும் குறையாத ஞான பூமி எனும் அசைக்க முடியாத உண்மையினை நிரூபித்தவர் ரமணர்

ரமணர் அதிகம் பேசவில்லை, ஆனால் அவரை பற்றி பேசாமல் ஆன்மீகம் என்பதே இல்லை.

அந்த ஒரு அணையா தீபம் இனி காலந்தோறும் ஆயிரம் விளக்குகளை ஏற்றிகொண்டே இருக்கும்
மார்கழி மாதம் புணர்பூச நட்சத்திரத்தில் ரமணர் அவதரித்தாலும் டிசம்பர் 30 அவரின் பிறந்த நாளாகும்
வியாசர் வசிஷ்டர் உட்பட்ட சப்தரிஷிகளின் தொடர்ச்சியாக நம் கண்முன் வாழ்ந்து இந்து தர்மத்தை காலத்தால் தாங்கி இன்றும் அரூபியினாய் பெரும் வழிகாட்டியாய் நல்வழிகாட்டும் அந்த ஆன்மீக ஜோதிக்கு, அண்ணாமலையாரின் தீபத்துக்கு இன்று பிறந்த நாள்

இந்துமத பெருமையினை ஆலய மணியாக, அலை கடலாக, மலை உச்சி இரவு தீபமாக, வானில் சுடராக‌ என்றும் அறிவித்து கொண்டிருக்கும் அந்த ஞானமகனின் அவதார நாள்

வியாசர், சங்கரர் போல காலத்தால் வந்து எக்காலமும் நிலைத்துவிட்டவர் ரமணர், அவருக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள்

இந்த ஞானபெருமகனும் 60 ஆண்டுகாலம் அமைதியாய் ஆசிரமம் நடத்தினார், அவருக்கு பின்னரான 70 காலமாக அது செயல்படுகின்றது

ஒரு சர்சை? ஒரு குற்றசாட்டு, ஒரு முணுமுணுப்பு உண்டா?

ஒருகாலமும் வராது, பரம்பொருள் அதை நடத்தி வந்தான், இன்னும் நடத்தி வருவான்.

காரணம் அது ஆடம்பரம் மேலோ, பகட்டின் மேலோ கட்டபடவில்லை மகா தூய்மையான‌ துறவின் மேல் கட்டபட்டிருக்கின்றது.

ரமணர் எனும் ஞானமுனி ஒரு பெரும் விளக்கு, திருவண்ணாமலையில் எரியும் மிகபெரிய ஞான விளக்கு, அந்த விளக்கின் ஜோதியில் எக்காலமும் சனாதானதர்மத்தின் ஞானவழியும், பரிசுத்தமான ஒளியும் உலகுக்கு தெரிந்து கொண்டே இருக்கும்