ராஜராஜ சோழனின் கல்லறை
ராஜராஜ சோழனின் கல்லறையினை கண்டாயிற்று என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்க, நீதிமன்றமும் அதற்கான ஆய்வு உத்தரவினை கொடுத்துவிட்டது
இதில் சில விஷயம் கவனிக்கதக்கது
தமிழருக்கு உடலை எரிக்கும் வழக்கம் உண்டு, புதைக்கும் வழக்கம் இல்லை என சொன்னால், ஆதிச்சநல்லூரில் தாழி கிடைக்கவில்லையா என்பார்கள்
ஆதிச்சநல்லூர் நாகரீகம் பழமையானது, காலத்தால் முந்தையது. காலம் மாற மாற பல மாற்றங்கள் வந்தன , பல நம்பிக்கைகள் வாழ்க்கை சடங்குகளை மாற்றின
பிற்கால தமிழகம் சோழர்காலத்தில் மாறி இருந்தது, அங்கு உடலை எரிக்கும் பழக்கம் இருந்ததை பட்டினத்தார் தன் பாடலிலே, அதாவது அன்னைக்கு கொள்ளிவைத்த பாடலிலே இப்படி சொல்கின்றார்
”முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”
அர்த்தம் என்னவென்றால் முப்புரம் சிவனால் எரிந்தது, தென்னிலங்கை அனுமனால் எரிந்தது, என் வயிறு அன்னையால் எரிகின்றது, என் அன்னைக்கு நானே தீ மூட்டுகின்றேனே
என்னை காத்து நின்ற அன்னை கை எரிகின்றதே , சாம்பல் ஆகின்றதே என புலம்புகின்றார்
கோவணம் உடுத்தி சாமியாராய் போனாலும் தன் தாய் இறந்த இடத்தில் அப்பாசத்தில் பட்டினத்தார் இப்படித்தான் உருகி நிற்கின்றார், அவரின் தாய்பாசம் அப்படி இருந்திருக்கின்றது
பட்டினத்தார் சோழவம்சம் பெரும் வாழ்வு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது
தமிழர் உடலை எரித்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரம் உண்டு
சிவநடனம் என்பதே மையானத்தில் சாம்பலை பூசி ஆடுவது என்ற அளவில் இருந்தது, சிவன் ஆடினாரா இல்லையா என்பது அல்ல பிரச்சினை, எரித்த சாம்பல் இருந்தது என்பது கவனிக்க வேண்டியது
ஆனால் சித்தர்கள் என சொல்லபட்டவர்களை எரிக்கவில்லை, காரணம் அவர்கள் அஷ்டமா சித்து கற்றவர்கள் எந்நேரமும் உடலில் உயிர் வரலாம் என்பதற்காக அப்படியே புதைத்தார்கள்
வாழும் காலத்தில் சித்தர்கள் காட்டிய விளையாட்டும் அப்படி, கூடுவிட்டு கூடுபாய்தல் எல்லாம் அக்கலை
இதனால் சித்தர்களுக்கு சமாதி உண்டே தவிர, மற்ற யாருக்கும் இல்லை. பட்டினத்தார் பாடல் மட்டுமல்ல ஏராளமான பாடலை சொல்ல முடியும்
கொள்ளி என்றால் கொள்ளுதல் என பொருள், காவேரி வெள்ளத்தை திருப்பிகொள்ளும் இடம் இன்றுவரை கொள்ளிடம் என்றே அழைக்கபடுகின்றது
அப்படியாக சுடுகாட்டு சடலம் தீகொள்ளும் நிகழ்வு கொள்ளி ஆனது, இறுதியில் கொள்ளி என்றால் சடலத்தில் தீவைப்பது என்றே நிலைத்துவிட்டது
இப்படியான வார்த்தைகளும், இன்னும் ஏராளமான ஆதாரங்களும் இலக்கிய பாடல்களும், அக்கால தமிழர் வாழ்வினை சொல்லும் பல ஆவணங்களும் சொல்வது தமிழர் உடல் எரிக்கபட்டது என்பதே
தமிழகம் மட்டுமல்ல, காசி முதல் கன்னியாகுமரி வரை ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்த இத்தேசத்தில் சடலம் எரிக்கவே பட்டது
அதனால் ராஜராஜன் சமாதி, பாண்டியன் சமாதி இன்னபிற மன்னாதி மன்னர்கள் சமாதி , கம்பன் சமாதி , வள்ளுவன் சமாதி எல்லாம் எங்கே?என தேடிகொண்டே இருக்க வேண்டியதுதான்
எமது சந்தேகமெல்லாம், தமிழக முறைப்படி, சைவ சமய முறைப்படி, அந்நாட்களில் உடலை எரித்துவிடுவார்கள். தொன்றுதொட்டு இன்றுவரை வரும் மரபு அது. பின் எப்படி அவரை புதைத்திருக்க முடியும்?? நிச்சயமாக வாய்ப்பு இல்லை.
அப்படி அது அவரின் சமாதி என்றால், மற்ற அரசர்கள் சமாதி எல்லாம் எங்கே??? அன்றைய காலத்து தமிழ் மன்னர்களுக்கு அரண்மனையே கிடையாது. கோயிலில் தங்கி அங்கே வாழ்ந்து முடிந்தவர்கள்.
இன்னொன்று காலத்தால் மறைந்த சோழன் பெயரை, கல்வெட்டுகளை படித்து தமிழருக்கு அவர் பெயரை சொல்லிதந்ததே ஒரு ஜெர்மானியர்தான். அப்படி இருந்ததுதான் தமிழக தஞ்சை நிலை..
