ராமசந்திரன் நினைவுநாள், ஆர்.கே நகர் தேர்தல் முடிவு தெரியும் நாள்
எமக்கு நன்றாக நினைவிருக்கின்றது, அன்று கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓலைவெடி வெடித்துகொண்டிருந்தபொழுது பக்கத்து வீட்டு பெரியவர் ஓடிவந்து பிடுங்கினார்
எம்ஜிஆர் செத்துட்டார்ல, உனக்கு வெடி கேக்குதா? என சொல்லிவிட்டு பிடுங்கி சென்றுவிட்டார், தெருவில் பார்த்தால் சிலர் மொட்டைபோட்டு அழுதுகொண்டிருந்தார்கள், அவர்களும் வந்து மீதி இருந்த மத்தாப்புகளை பறித்துகொண்டார்கள்
மிகசிறு வயது என்பதால் ஓஹோ செத்துபோனவர் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம்போல , பாவம் என நினைத்துவிட்டு வெடிபோடாமல் அந்த பண்டிகையினை அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையினை முடித்தாகிவிட்டது
நாளை ராமசந்திரன் நினைவுநாள், அதே நேரம் ஆர்.கே நகர் தேர்தல் முடிவு தெரியும் நாள்
ஒருவேளை ஜெயித்துவிட்டால்…. என்ற எதிர்பார்ப்பில் தினகரன் கோஷ்டியும் பழனிச்சாமி கோஷ்டியும் நிறைய வெடிவாங்கி வைத்திருக்கின்றார்களாம்
ஒருவேளை திமுக வென்றால் கூட இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் கலாய்த்து வெடிபோட்டு மகிழ்வார்கள் போல
ஆக ராமசந்திரன் இறந்தநாளினை நாளை வெடிபொட்டு கொண்டாட போகின்றார்கள் அதிமுகவினர், சாட்சாத் அவர்கள்தான்
அன்று என்னை ராமசந்திரன் செத்துவிட்டார் என்பதற்காக வெடிபோடுவதை தடுத்த அந்த பெரியவர் இருந்தால் தாங்குவாரா? மனிதர் அதனால் முன்கூட்டியே இறந்துவிட்டார்
ஆனால் மொட்டை போட்டவர் அங்குதான் சுற்றிகொண்டிருக்கின்றார், அவரிடம் எப்படியும் நியாயம் கேட்டுவிட வேண்டும்