வந்தே மாதரம் வந்தே மாதரம்

“ஜயஜய மாதா, ஜெய ஜெய பாரதம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்இந் நினைவகற் றாதீர்”

“எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு — நாம்
எல்லோரும் சமமென்ப துஉறுதியாச்சு
சங்குகொண் டேவெற்றி ஊதுவோமே — இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே”

தேசகவி பாரதியின் வரிகளோடு இந்த மாபெரும் தேசம் இந்த 75 ஆண்டுகளில் கடந்த நெருப்பற்றினையும், அது கடந்து வந்த பெரும் சவால்களையும், அது எதிர்கொண்ட மலைகளையும் சூறாவளிகளையும் அதையெல்லாம் தாண்டி இன்று உலகின் முன்னணி நாடாக நிலைத்து நிற்கும் அற்புதத்தையும் கொஞ்சம் காணலாம்

இந்நாளில் அது ஒவ்வொரு இந்தியனின் கடமையுமாகின்றது, வந்தபாதை அறியாதவனுக்கு செல்ல வேண்டிய பாதை தெரியாது, ஒவ்வொரு இந்தியனும் தன் தேசத்தினையும் அதன் வரலாற்றையும் அறிதல் அவசியம்

இந்தியா என்பது வெறும் நிலமல்ல, வெறும் பெயர் அல்ல, வெறும் மண்ணும் மலையும் நீரும் கடலும் சேர்ந்த இடம் அல்ல, அது ஞானத்தின் குவியல், ஆச்சரியங்களின் கோபுரம், அதிசயங்களின் சிகரம்

இத்தேசம் உலகுக்கு எப்பொழுதும் நல்லது ஒன்றையே கொடுக்கும், தன்னை காக்க வாளேந்துமே தவிர எக்காலமும் ஆக்கிரமிப்போ பலாத்காரமோ அதிகார வெறியோ அதனிடம் இல்லை

அது கொண்டிருந்த ஞானமரபில் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் சுருக்கியதுமில்லை அதன் ஞானமான இந்துமதமும், அது கொடுத்த நூல்களும் திருக்குறளும் “உலகம், உலகு” என்றேதான் பரந்த மனப்பான்மை கொண்டிருந்ததே தவிர எக்காலமும் குறுகிய மனம் அதற்கு இல்லை

அமெரிக்கா எனும் தேசம் அறியபடும் வரை உலகில் எல்லா மக்களும் விருப்பத்துடன் குடியேறும் தேசமாக இந்த இந்துஸ்தானமேதான் இருந்தது

ரோமரிடம் அடிபட்ட யூதர் முதல் எவ்வளவோ இனங்கள் இங்கு அடைக்கலமாக வந்தது, அராபியர் ஆப்கானியர், வெள்ளையர் என யார் யாரோ வந்தார்கள், வந்தவர் ஆளவும் செய்தார்கள் தேசம் அவர்களையும் புன்முறுவலோடு ஏற்றது

வளமாக வாழ்ந்த காலத்தில் அவர்களை ஏற்ற தேசம் தான் வறுமையில் இருந்தபொழுதும் திபெத்தியர், இலங்கையர், பர்மியர் என எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்கத்தான் செய்தது

உலகில் எக்காலமும் அகதிகளாக (அதாவது வேலைக்காக அன்றி) இங்கு வாழவே முடியாது எனும் நிலையிலோ, இந்தியா பாதுகாப்பில்லை என்ற நிலையிலோ, பசியிலோ , பட்டினியிலோ, உயிர் பயத்திலோ யாரும் வெளியேறியதில்லை

அது போர்காலம் சுதந்திர போராட்ட காலம் என எக்காலத்திலுமில்லை, இந்திய அகதிகள் என ஒருவார்த்தை எக்காலமுமில்லை, அது எல்லோருக்கும் அடைக்கலம் கொடுத்த தேசமே தவிர யாரையும் வெறுத்த அல்லது வெளியேற்றிய தேசம் அல்ல,அதன் இந்து ஞானமரபு அந்த பெருந்தன்மையினை வழங்கிற்று

இந்தியாவின் சிறப்பு அது, அதன் தர்மம் அப்படி அதை காக்கின்றது ஆயிரம் சிக்கல் அங்கு இருந்தாலும் அங்கிருக்கும் ஒவ்வொரு உயிரையும் காத்து கொண்டிருக்கும் பூமி அது

அப்படிபட்ட பூமி அதன் வளத்தாலும் அதன் இயல்பான மானிட நேயத்தாலும் 1100ம் ஆண்டுகளிலே அடிமையாக ஆரம்பித்தது

நாயக்க அரசு, வீரசிவாஜி என யார் யாரோ அவ்வப்போது வந்து சவால்விட்டு தொடர்ந்த விடுதலைபோர் 17ம் நூற்றாண்டில் வெள்ளையனிடம் இந்தியா சிக்க திசைமாறிற்று

இந்த உலகுக்கு ஏற்ப தன்னை உருமாற்றி போராடும் இந்துஸ்தானம், ஆயுதம் தாண்டிய கல்வி யுகத்தில் மக்களாட்சி யுகத்தில் வெறும் 90 ஆண்டில் தன்னை உருமாற்றி மேம்பட்டு தன்னை நிறுத்தி சுதந்திரம் பெற்றது

எங்களிடம் கல்வியாளர்கள் உண்டு, ராணுவ வித்தகர்கள் உண்டு எங்களை நாங்கள் ஆள்வோம் என சொல்லி வெள்ளையனை விரட்டி சுதந்திரமும் பெற்றது

800 ஆண்டுகாலம் ஆப்கானியரோடு தீராத‌ யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது கொடுக்கபட்டது இந்த இந்தியா

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஒரே வகை அநீதி இழைக்கபட்டது, ஒருபகக்மும் எதிரிகளை வைத்து நடுவில் இந்தியாவினை வைத்து எக்காலமும் இங்கு தீராகுழப்பம் வரும்படி நயவஞ்சகமாக விட்டு சென்றான் வெள்ளையன்

மிக கடுமையாக இத்தேசத்தை அவன் சுரண்டியதில் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, இந்நாட்டின் வளத்தை தேடி வந்த பிரிட்டிஷ்காரன் ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான்.

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற பிரிவினையின் உச்சம் என ரத்த்தில் பிரிந்தது தேசம்.

75 வருடமாக எதையெலாம் கடந்து வந்தோம்? எந்த நெருப்பினை கடந்த வடுக்களெல்லாம் நம் பாதத்தில் இருக்கின்றன? எவ்வளவு காயங்கள் இந்த தேசத்தின் கால்களில் இருக்கின்றன?

ஒன்றா இரண்டா?

பெரும் கலவரத்தில் கோடான கோடி இந்துக்களின் மரணத்தில் தேசம் பிரிந்து அது காந்தி என்ற ஒருவரின் மரணத்தோடு முடிவு பெற்ற அதிர்ச்சியில் தேசம் ஸ்தம்பித்துத்தான் மீண்டது

அந்த எதிரி பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.
இன்னொரு பக்கம் உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.

இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம், நிலைத்தோம்.

தேசம் நிலைத்தது, பட்டேல் அந்த அதிசயத்தை செய்தார், இங்கு எல்லா சமஸ்தானங்களும் இந்தியா எனும் திருநாட்டின் அங்கமே என சொல்லி மிக திறமையாக இந்தியாவினை பலமாக்கினார்

இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம், இத்தேசம் கம்யூனிச தேசமாகும் என கனவு கண்ட சிகப்பு வல்லரசுகளின் கனவை தகர்த்தோம்

நிச்சயம் நம் காலடிக்கு ஓடிவருவார்கள் என பிரிட்டிஷார் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினோம், நம்மை நாமே நிமிர்த்திகொண்டோம்

சில நாட்களிலே காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், சுதந்திரம் பெற்ற காலத்திலே போர் என்பது பல நாடுகளுக்கு சாத்தியமில்லை, இந்தியா அதை செய்தது

1950களில் உலகமே பஞ்சத்தில் வறுமையில் சிக்கிய நிலையிலும் இந்தியா மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்தது

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்

அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் ஆடை என மெல்ல மெல்ல ஒவ்வொரு இந்தியனுக்கும் அடிப்படை தேவைகளை உறுதி செய்தோம்

தேசம் மெல்ல உயர்ந்தது, ஆனால் நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என நம் முதுகில் குத்திற்று.

அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

நேரு மறைந்தாலும் சாஸ்திரி வந்து தேசத்தை அனாசயமாக தாங்கினார்.

மீண்டும் போர், அதையும் தாண்டி அந்நிய சக்திகளின் கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

சாஸ்திரியின் மரணம் தேசத்தை நட்டாற்றில் விட்டது போல் தோன்றினாலும் இந்திரா வந்து தாங்கினார், அக்காலகட்டத்தில் அவரின் ஆட்சி தேசத்தை நிறுத்தியது

இருபக்கம் இருந்த எதிரிகளின் நாட்டை துண்டித்து ஒரே எதிரி மேற்குபக்கம் என முடக்கி, சிக்கிம் போன்ற பகுதிகளை நம்மோடு சேர்த்து நாட்டை பலமாக்கினார்

அவர் எக்கட்சியாக இருக்கட்டும், யாருடைய மகளாகவும் தாயாகவும் பாட்டியாகவும் இருக்கட்டும், அவள் நாத்திகவாதியாக இருக்கட்டும், ஆனால் அவர் செய்த காரியங்களை மறுக்கமுடியாது

ஆனால் தீவிரவாதம் பெருகிய உலகில் அவரும் பலியானார், அவருக்கு பின் தேசம் தத்தளித்தபொழுது இனி நிலையான ஆட்சியும் கட்சியும் இல்லை என சுமார் 20 ஆண்டுகள் குழப்பம் நிலவிய பொழுது பாஜக எழுந்தது

இப்பொழுது மோடி இரும்பு மனிதராக தேசத்தை ஆள்கின்றார்

ஆம்,இந்தியா என்பது பெரிய நாடு அங்கு மக்கள்தொகையும் மொழிகளும் மட்டுமல்ல குழப்பமும் சிக்கலும் அதிகம், அதன் அதீத கருத்துரிமையும் சுதந்திரமும் அந்த குழப்பத்துக்கு வழி செய்கின்றது

தனிமனித சுதந்திரம் என தேசம் கொடுத்திருக்கும் வாய்ப்பை அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக பயன்படுத்திபார்க்கும் கூட்டம் அங்கு அதிகம்

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம்,

ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை
அதை இப்பொழுது இன்னும் கூர்மையாக்கி இருகின்றோம்

ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்

சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்,

செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது. செயற்கை கோள் என வானுக்கு தாவ முடிகின்றது, ஆழகடல் வரை இந்திய நீர்மூழ்கிகள் தொட முடிகின்றது.

சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்
இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அதுவும் ஜனநாயக நாட்டுக்கு சாத்தியமே இலை அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?

இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.

எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.

ஆனானபட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்க தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியன்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்

இந்த மண்ணின் தர்மம் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன, எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைபட வேண்டும்

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள்

ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு யாரையும் கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது

இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.

இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.

நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??

இந்தியா கடந்த 73 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

1962ல் எந்த சீனாவிடம் பணிந்தோமோ அதே சீனாவினை இப்பொழுது ஓடவிட்டு அடிக்கின்றோம் அல்லவா அது வெற்றி

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல்,இன்னும் பல உலகளாவிய மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை.

உக்ரைன் யுத்தமோ கிழக்காசிய பதற்றமோ எதுவுமே இந்தியாவினை பாதிக்கா அளவு நிலைத்திருக்கின்றோம் அல்லவா? இது வெற்றி

இனி இந்தியா பங்களிக்காத உலகம் சாத்தியமில்லை என எல்லா வகையிலும் இந்தியாவினை உலகநாடுகள் தேடிவருகின்றது அல்லவா? அதுதான் வெற்றி

காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.

வானுக்கு செயற்கை கோள் ஏவுவதில் இருந்து இன்று ஆயுத ஏற்றுமதி வரை காலடி எடுத்து வைத்திருக்கின்றோம் அல்லவா? அது வெற்றி

இந்தியாவின் ஐடி தொழில் முதல் ராக்கெட் தொழில் வரை எல்லாமே சாத்தியம் என சொல்லியிருப்பது பெரும் வெற்றி

130 கோடி மக்களுக்கும் உணவு, குடிநீர், வீடு, கல்வி,மருத்துவம் என எவ்வளவு பெரும் சாதனைகளை தொட்டு நிற்கின்றோம் அது வெற்றி

கொடும் கொரோனா காலத்தில் நம் மக்களுக்கும் மருந்தளித்து உலகுக்கே மருந்து கொடுத்து தனித்து நின்றோமே அது மாபெரும் வெற்றி

அந்த முடக்க காலத்திலும் நிலைத்து நிற்கும் இந்திய பொருளாதாரம் பெரும் வெற்றி

சிலர் அரசாங்கத்தை எதிர்ப்போம் என்ற பெயரில் நாட்டினை எதிர்ப்பது கண்டிக்கபட வேண்டிய விஷயம்
நாடு வேறு, அரசாங்கம் வேறு.

இந்தியா அமைதியான நாடு, அருமையான நாடு அந்த அருமையை உண‌ரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 130 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்

அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு

பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா, சிரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.

எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள், அட்டகாசங்கள்.

அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.

அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

அந்த அற்புதமான‌ நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றோம்

இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ‌ போட்டியான காலத்தில் இந்திரா,சோவியத் வீழ்ந்த‌ பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.

மோடி என்பவர் தேசத்துக்கு காலம் கொடுத்த வரம் , காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.

சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட ப்ருதிவி ராஜன், வீரசிவாஜி போன்ற மன்னர்களையும், வெள்ளையனுக்கு எதிராக அறப்போரை தொடுத்த தாதாபாய் நவ்ரோஜி முதல் எல்லா தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற பட்டேல் போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்

யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மானெக்சா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.

வந்தே மாதரம், வாழ்க பாரதம்.

உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 75ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்.

இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.

இருவருடமாக தேசம் பல விஷயங்களை அசத்துகின்றது, பாகிஸ்தானை ஓடுக்கி வைத்திருப்பது, காஷ்மீரை இந்தியாவோடு இணைத்து நீண்டகால சிக்கலை முடித்திருப்பதெல்லாம் மிக மிக முக்கியமான திருப்பங்கள்..
அதைவிட முக்கியம் காஷ்மீரில் நிலவும் அமைதி

கடந்த 75 வருடத்தில் இந்திய தேசியகொடி காஷ்மீரில் கம்பீரமாக பறப்பதும், அந்த மாகாண கொடி சுவடின்றி காணாமல் போயிருப்பதும் பெரும் அதிசயம்

“மன்னும் இமயமலை எங்கள் மலையே..” என பாரதியின் வார்த்தைகள் பலித்திருக்கும் நேரமிது

சீனாவினை விரட்டி அடித்து இன்று லடாக்கில் உலகமே அதிரும் வண்ணம் வந்தே மாதரம் என முழங்கி கொண்டிருக்கின்றது இந்தியா, உலகம் இந்தியாவின் தர்மத்தை புரிந்து கொண்டது.

உலகின் பலம் வாய்ந்த நாடாக இன்று இந்தியா மாறி நிற்பது மாபெரும் ஆச்சரியம், எல்லா நாடுகளும் இந்திய உறவினை தேடி நிற்பதே அதற்கு சான்று.

50 ஆண்டுகால சிக்கல் தீரும்பொழுது, 70 ஆண்டுகால சிக்கல் தீரும்பொழுது, 500 ஆண்டுகால சிக்கலான ராமர்கோவிலும் தீர்ந்து ராமபிரானுக்கு ஆலயம் எழும்பிற்று என்பது மகா முக்கியமான காலகட்டம், இந்திய மண் சிலிர்த்து தன் அடையாளத்தை மீட்ட காலகட்டம்

ஆம், ராமர்கோவில் மீட்பு என்பதுதான் ஆப்கானியருக்கு எதிராக இத்தேசம் பெற்ற பெரும் வெற்றியின் அடையாளம், முதல் சுதந்திரபோர் அப்படித்தான் தொடங்கிற்று

இந்துக்களின் தலைநகரமும் பொதுநகருமான காசி தன் அடையாளத்தைமீட்டு ஜொலிப்பது தேசத்தின் உண்மையான சுதந்திரத்தை பறைசாற்றுகின்றது

அந்த அற்புதமான காலகட்டத்தில் நின்றுகொண்டு, இந்த அருமையான நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் கம்பீரமான‌ சுதந்திர தின வாழ்த்துக்ளை தெரிவிப்போம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மேற்கே ராஜஸ்தானத்தில் இருந்து வங்கம் வரை எங்கு திரும்பினும் தேசகொடி கம்பீரமாக பறக்கின்றது

ஒவ்வொருவர் மனமும் தேசபற்றாலும் தேசத்தின் பெருமையாலும் நிறைந்திருக்கின்றது, இது எங்கள் பூமி எங்கள் நாடு எனும் கம்பீரம் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருக்கின்றது

இனம், மொழி, மதம் கடந்து “நான் இந்தியன்” என ஒவ்வொருவரும் கம்பீரமாக தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் நேரமிது

உலகெங்கும் இருந்து தேசத்துக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன, எல்லா நாட்டிலும் இந்திய கொடி ஓரு இடத்திலாவது பறந்து கொண்டிருக்கின்றது

அந்த கொடி கம்பத்தின் கீழ் நின்று ஒவ்வொருவரும் ஆனந்தமாக பாடிகொண்டிருக்கின்றனர்

“தாயின் மணிக்கொடி பாரீர் அதை
தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்..” எனும் வரி கம்பீரமாக ஒலிக்கின்றது

“கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்” எனும் பெரும் நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் பிறக்கின்றது

100ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் உலகில் நம்பர் 1 நாடாக இந்தியா விளங்கும் என்பதற்கான நம்பிக்கையுடன் அதை நனவாக்க போகும் அடுத்த தலைமுறையினை நோக்கி மோடி எனும் பெருமகனும் அவரோடு உழைப்பவர்களும் கைபிடித்து முத்தமிட்டு சொல்கின்றார்கள்

“வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.”

ஆம், அடுத்த தலைமுறை 100ம் ஆண்டு சுதந்திரநாளில் இத்தேசத்தை உலகின் முதல் திருநாடாக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களை நோக்கி பெரும் பொறுப்பினை ஒப்படைக்கின்றது இத்தேசம்

கல்வியாலும் தொழிலாலும் இந்த 75 ஆண்டுகளில் சாதித்திருக்கும் தேசம் இன்னும் அந்த கல்வியிலும் தொழிலும் வளர்ந்து தேசத்தை நிறுத்த அவர்களால்தான் முடியும்

அவர்கள் அதை செய்வார்கள், காரணம் அந்த ரத்தத்தில் இருப்பது ஆயிரம் ஆண்டு அடிமைதனத்தை தூக்கி எறிந்து தேசத்தினை வளர்த்து கொண்டிருக்கும் பெரும் கணல், அந்த கணல் அந்த அற்புதத்தை செய்யும்

அவர்களை நோக்கி மோடி அழைகின்றார், தேசம் அழைக்கின்றது, தேசாபிமானிகள் எல்லோரும் அழைக்கின்றார்கள்

“ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய்வாவாவா
களிபடைத்த மொழியினாய்வாவாவா
கடுமைகொண்ட தோளினாய்வாவாவா
தெளிவுபெற்ற மதியினாய் வாவாவா
சிறுமைகண்டு பொங்குவாய் வாவாவா
எளிமைகண்டு இரங்குவாய் வாவாவா
ஏறுபோல் நடையினாய் வாவாவா

மெய்மை கொண்ட நூலையே — அன்போடு
வேதமென்று போற்றுவாய் வாவாவா
பொய்ம்மைகூற லஞ்சுவாய்வாவாவா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா
நொய்ம்மையற்ற சிந்தையாய்வாவாவா
நோய்களற்ற உடலினாய் வாவாவா
தெய்வசாபம் நீங்கவே — நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வாவாவ

இளைய பார தத்தினாய் வாவாவா
எதிரிலா வலத்தினாய் வாவாவா
ஒளியிழந்த நாட்டிலே — நின்றேறும்
உதயஞாயி றொப்பவே வாவாவா
களையிழந்த நாட்டிலே — முன்போலே
கலைசிறக்க வந்தனை வாவாவா
விளையு மாண்பு யாவையும் — பார்த்தன்போல்
விழியினால் விளக்குவாய் வாவாவா

வெற்றிகொண்ட கையினாய் வாவாவா
விநயம் நின்ற நாவினாய்வாவாவா
முற்றி நின்ற வடிவினாய் வாவாவா
முழுமைசேர் முகத்தினாய்வாவாவா
கற்ற லொன்று பொய்க்கிலாய்வாவாவா
கருதிய தியற்றுவாய் வாவாவா
ஒற்றுமைக்கு ளுய்யவே — நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல்செய்வாய் வாவாவா”

அந்த இளைய தலைமுறையினை நோக்கி வணங்கியபடி தன் 75ம் சுதந்திர பெருவிழாவினை, தேசிய நாளை சிறப்பித்து கொண்டிருக்கின்றது பாரினில் சிறந்த இந்திய திருநாடு