வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது

Image may contain: 1 person, smiling

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை

கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது

உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார்

அந்த விஜயகாந்த் சினிமாவிற்கு வந்து 40 வருடம் ஆகிவிட்டதாம்

பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் ஒருவர்.

கலைஞர் தலமையில் திருமணம் செய்யும் அளவிற்கு அவருக்கு தமிழக சூழலும் தெரிந்திருந்தது.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிக வேகமாக வளர்ந்தார், உணர்ச்சி மிக்க நடிப்பால் புரட்சி கலைஞர் எனவும் அழைக்கபட்டார்

அவர் “புரட்சி கலைஞர்” என அழைக்கபட்டதில் கலைஞருக்கு துளியும் வருத்தமில்லை, அதுதான் கலைஞர்

ஒரு விஷயம் நிச்சயமாக சொல்லமுடியும். நிச்சயம் விஜயகாந்த் நல்ல நிர்வாகி

ராமசந்திரனும் , சிவாஜியும் இது நடக்காது என தூர எறிந்த நடிகர் சங்கத்தை, ரஜினியும் கமலும் ஏற்க தயங்கிய பொறுப்புகளை அவர் ஏற்று நடத்தி சங்கத்தை கடனில் இருந்து மீட்டார்

நடிகர் சங்கம் வித்தியாசனாமது. ராமசந்திரன் வள்ளல் என்பார்கள், பிரபாகரனுக்க்கே 100 கோடி கொடுத்த கொடையாளன் என்பார்கள் ஆனால் நடிகர் சங்கத்து சில லட்ச கடனை அவர் கட்டவில்லை

சிவாஜி, ஜெமினி என சொத்துக்களை குவித்த நடிகர்களும், ஏன் கன்னடத்தில் சொத்துக்களை குவித்த ரஜினியும், 6 வயதிலே சம்பாதிக்க தொடங்கிய கமலும் முன்வரவில்லை

ஆனால் நடிகர் சங்க பொது நலனுக்க்காக வந்து அதை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்

இப்படிபட்ட ஆர்வம்தான் அவரை அரசியலுக்கும் இழுத்தது. ஆனானபட்ட மூப்பனாரே அய்யோ என அலறி தன் கட்சியினை காங்கிரசோடு இணைக்கும் அளவிற்கு அவருக்கு மர்ம அடி முதுகில் விழுந்தது

இன்னொரு பக்கம் ஜெயா இரும்பு பெண்மணி

இவர்களை எதிர்த்து தைரியமாக கட்சி கண்டது விஜயகாந்த் ஒருவர்தான். அன்று சிஸ்டம் மகா அமைதி தியானம், மய்யம் அடக்கமாகி இருந்தது

அன்றும் திரைதுறையில் இருந்து ஒரு ஆதரவுமில்லை

Image may contain: 1 person, smiling, close-upஉண்மையில் விஜயகாந்த் யாரையும் மிரட்ட கட்சி தொடங்கவில்லை, மக்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார்.

மனதில் பட்டதை பேசியதில் தமிழக அரசியல்வாதிகளில் காமராஜருக்கு அடுத்த ஒருவர் விஜயகாந்த் மட்டும்தான்.

அவரின் மண்டபம் எல்லாம் இடிக்கபட்டிருக்க வேண்டியதே இல்லை, இன்று அதன் அருகே நின்று பார்த்தாலும் குழந்தையே சொல்லும், இந்த சாலை ஏன் இங்கு வளைகின்றது?

நிச்சயம் அந்த தவறை கலைஞர் செய்திருக்கமாட்டார் என்றுதான் கலைஞரை அறிந்தவர்கள் சொல்கின்றார்கள், முதிய வயதில் யாரோ தவறான வழிகாட்ட நடந்த தவறு அது

ஆனால் அந்த தவறுக்கேற்ற தண்டனையும் கிடைத்தது

இப்படி அவருக்கு அடிகொடுத்து பார்த்தார்கள், அந்த அடிதான் பின்னாளில் திமுகவிற்கு சாவு மணி ஆனது, கலைஞர் மறுபடி அரியணை ஏற முடியவில்லை.

அரசியல் என்பது மர்ம சதுரங்கம், அதில் விஜயகாந்த் தடுமாறினார். நடிகராக ஜொலித்த அவர் பின்னாளில் அரசியலில் கலக்கினார், எதிர்கட்சி தலைவராக கூட இருந்தார்

அன்று ஜெயலலிதா முன்னால் தம் கட்டி நின்ற விஜயகாந்தினை மறக்க முடியாது, இன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் ஓடிவந்து நடுரோட்டில் அமரும் பொழுது, அன்று தில்லாக நாக்கை கடித்து நின்ற விஜயகாந்த் நினைவுக்கு வந்துதான் போவார்

அரசியலின் மர்ம நகர்வில் விஜயகாந்த் சிக்கினார், ஒருவித அதீத நம்பிக்கையும் அவருக்கு வந்தது

விளைவு படுதோல்வி அடைந்தார், மீண்டு வந்துவிடலாம் ஆனால் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை

நோயின் தாக்கத்தை அவர் குடிகாரர் என்றார்கள், ஏன் ரஜினிக்கு இருந்த குடிபழக்கம் ஊர் அறிந்தது, சிங்கப்பூர் சிகிச்சைக்கு அதுதான் காரணம்

ஆனால் யாராவது அவரை சொல்வார்களா? இல்லை

விஜயகாந்த் குடிகாரர் என்பது ஊதிபெருக்கபட்ட பிம்பம், நோயின் தாக்கமே அவரை வீழ்த்தியது

இப்பொழுதும் விஜயகாந்திற்கு வாய்ப்பு இருக்கின்றது, காங்கிரசிலோ அல்லது பிஜேபியிலோ அவர் அடைக்கலம் ஆகலாம், தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்

காலம் இருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் , தமிழகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்த நபர் அவர். அரசியலுக்கு வந்து அவர் இழந்துதான் மிக அதிகம்

அதில் சொத்துக்கள், நண்பர்கள், உடல்நலம் என ஏகபட்ட இழப்புகள் உண்டு,

வடிவேல் கூட அவருக்கு எதிரியானார்

அந்த விஜயகாந்த் 40ம் ஆண்டு சினிமா விழாவினை அவரின் ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றார்கள்

அவர் எந்த நடிகர் சங்கத்திற்கு உழைத்தாரோ அது கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

அரசியலை விடுத்து முன்னொரு காலத்தில் சங்கத்தினை மீட்டவர் என்ற வகையிலாவது அவரை கொண்டாடியிருக்க வேண்டும்

இந்த பூவுலகில் நன்றி ஒரு மில்லி கிராம், அல்லது அரை மிமீட்டர் கூட இல்லாத ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம்

அதற்காக உழைத்த மனிதனை இப்படி மறக்க கூடாது, நிச்சயம் அந்த நன்றி மறந்த சங்கம் உருப்படாது.

அட அவர்களுக்குத்தான் நன்றி இல்லை , இவரால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது அதனால்தான் நாம் அமைச்சராக முதலமைச்சராக இருக்கின்றோம் என்ற நன்றி பழனிச்சாமி கோஷ்டிக்குமா இல்லை?

நன்றி மிக்கவர்கள் என்றால் பழனிச்சாமி அரசு விஜயகாந்தினை இந்த விழாவில் பாராட்டி இருக்க வேண்டும்

விஜயகாந்திற்கும் காமராஜருக்கும் கிட்டதட்ட ஒரே ராசி

அவர்கள் யாருக்கெல்லாம் உழைத்தார்களோ அவர்களே நன்றிமறந்து ஓட அடிப்பார்கள்

சினிமா உலகமும் நன்றி மறந்தது, தமிழகமும் விஜயகாந்தினை புரிந்துகொள்ள தடுமாறியது

இன்று அவரைபோல் எதிர்கட்சி தலைவர் வேண்டும் என தேடுகின்றது. நிச்சயம் சட்டசபையில் அப்படி ஒரு மனிதன் தைரியமாக‌ இனி சீறபோவதில்லை

சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பேரை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்

ஆனால் இன்று அரசியலில் இல்லா, அடையாளமே இல்லா அவரின் ரசிகர்கள்தான் அவருக்கு விழா எடுக்கின்றார்கள்

ஆக போலிகளுக்காக உழைத்தாலும் தன்னை அறியாமல் நன்றிகுரிய சிலரை சம்பாதித்திருக்கின்றார்

விஜயகாந்த் சம்பாதித்ததிலே மிக உயர்ந்தது இம்மாதிரி ரசிகர்கள்தான் , அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

அப்படியே சினிமாவில் 40 வருடம் கடந்து நிற்கும் விஜயகாந்திற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

“நீங்க திரும்பி வரணும், மறுபடியும் வரணும் பழைய விஜயகாந்தாய் வரணும்” என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துவோம்

40 ஆண்டு சினிமா விழா என்பதால் குஷ்பு ரசிகர் சங்கமும் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது.