வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்”

ஒரு வழியாக வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்” எனும் புத்தகம் வாசித்தாகிவிட்டது

புத்தகம் சொல்வது இதுதான், தான் எதிர்பார்த்த எதுவுமே கிடைக்காத வெறுப்பில் இருந்தவருக்கு ராமசந்திரன் நானே சகலமும் என பொறுப்பெடுத்து கொள்கின்றார், ராமசந்திரனின் இரும்பு பிடியில் இருந்து அவர் முதல்வராகும் காலத்தில் தப்பி ஓட நினைக்கும் ஜெயலலிதாவினை அதன் பின்னும் ராமசந்திரன் விடவில்லை

வேறுவழியே இன்றி அவரை திருமணம் செய்து அங்கீகாரத்தோடு வாழத்தான் நினைத்திருக்கின்றார் ஜெயா, ஆனால் ராமசந்திரன் பெப்பே காட்ட, இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் அவரின் போராட்டம் தொடங்கியிருக்கின்றது

“நீ யார் என்னை அங்கீகரிக்க மறுக்க, நானே உனக்கு எல்லாவிதத்திலும் வாரிசு என நிரூபிக்கின்றேன்” என ராமசந்திரனின் நாற்காலியினை கைபற்றிய ஜெயா, அப்படியே அவர் கல்லறையிலும் பங்கெடுத்தாயிற்று,

இனி ராமசநதிரன் சிலை இருக்குமிடமெல்லாம் அவருக்கும் சிலைகள் வரும், நிச்சயம் சவாலில் ஜெயித்திருகின்றார் ஜெயா

அதற்கு கலைஞர் எனும் மகா அசாத்திய மனிதனுக்கு சவால் கொடுத்தாக வேண்டும் என்ற சக்திகளும் துணை சென்று ஜெயாவினை நிறுத்தியிருக்கின்றன‌

கலைஞரும் படு சாமார்த்தியமாக அவரை எதிர்கொண்டிருக்கின்றார், நிச்சயம் ஜெயா இடத்தில் ஒரு ஆண்மகன் இருந்திருந்தால் கலைஞரின் ஆட்டத்தில் அன்றே அதிமுக முடிந்திருக்கும்

ஆனால் தன்மீது ஒரு பழியும் வந்துவிட கூடாது என ஜெயாவினை எதிர்கொண்ட கலைஞர் இறுதியில் ஜெயாவினை குற்றவாளி என தீர்ப்புக்கு ஆளாக்கிவிட்டுத்தான் ஓய்ந்தார், இப்பொழுது ஜெயா இருந்தாலும் நிச்சயம் சிறைதான், அதனாலோ என்னமோ மரணத்தை தழுவிகொண்டார்

ஜெயா நிச்சயம் புத்திசாலி, தன் பலம் மற்றும் பலவீனத்தை எல்லாம் ஆயுதமாக பயன்படுத்தி ஜெயித்தவர்

ரோமின் கிழட்டு சிங்கம் சீசரை மயக்கி பெரும் மகாராணி ஆன கிளியோபாட்ரா எனும் அழகியின் சாமார்த்தியம் ஜெயலலிதாவிற்கும் பொருந்துகின்றது

ரஸ்புடின் எனும் மந்திரவாதியிடம் சிக்கிய ஜார் குடும்ப அரசிபோல் மன்னார்குடியிடமும் சிக்கிய சோகமும் இருக்கின்றது

ஜொன் ஆப் ஆர்க்கினை நம்பிய பிரான்ஸ் மக்கள் போல அவரை தமிழர்கள் நம்பி இருக்கின்றார்கள். மங்கம்மா போல‌ சில பெண் அரசிகள் செய்தது போல அதிரடி திட்டங்களையும் செய்திருக்கின்றார் மறுக்க முடியாது

மார்கரெட் தாட்சர் போல எல்லோரையும் மிரட்டி வைத்து விலகி நிற்கும் குணமும் ஜெயாவிற்கு இருந்திருக்கின்றது

ஆடம்பரத்தில் இமல்டா மார்கோஸின் சாயலும் தெரிகின்றது

மொத்தத்தில் உலக வரலாற்றில் பெரும் அடையாளமிட்ட எல்லா அதிகாரமிக்க பெண்களின் சாயலும் அவர் வாழ்வில் வந்துவிட்டு போகின்றது

சச்சு போல , சரோஜாதேவி போல இன்று பழம்பெரும் நடிகையாக செத்திருக்க வேண்டிய அவரின் விதி எங்கெல்லாமோ சுற்றி, அவரை எப்படி எல்லாமோ வாழ வைத்து இறுதியில் அகங்காரர்களுக்கே உரித்தான, ஹிட்லர், பிரபாகரன் போன்ற சர்வாதிகளுக்கே உரித்தான மர்ம மரணமாகவே முடிந்தும் விட்டது

எப்படியோ கலைஞர் எனும் அசாத்திய அரசியல்வாதியினை எதிர்கொள்ள உருவாக்கபட்டிருக்கின்றார் ஜெயா, இறுதிவரை கலைஞர் எதிர்ப்பு என்பதிலே அரசியலும் செய்தார்

இடம்பார்த்து அவரை வீழ்த்த கலைஞர் தன் முதுமை வரை காத்திருந்தார்,

அதே நேரம் இனி கலைஞர் ஓய்ந்துவிட்டார் தமிழகத்தில் இனி நம்மை எதிர்க்க ஆளில்லை என்ற நிலையில் ஜெயா இருந்தபொழுதுதான் என்றோ கலைஞர் வீசிய பூமராங் ஜெயாவிற்கு கண்டமாய் வந்தது

யாருக்கு வெற்றி என சொல்வதற்குள் இருவருமே ஒரே நேரத்தில் களத்திலிருந்து சென்றாயிற்று

வலுவான தலைவனை எதிர்த்துத்தன் இன்னொரு வலுவான தலைவன் உருவாகுவான் எனும் தத்துவத்திற்கேற்ப கலைஞர் ஓய்ந்தபின் அவருக்கு எதிரான வலுவான தலமையினை உருவாக்கும் அவசியம் யாருக்கும் இல்லாமலே போயிற்று

இப்பொழுது ஆளாளுக்கு தமிழக அரசியல் திண்ணையில் மல்லாக்க படுத்து பல்குத்திகொண்டிருக்கின்றார்கள்.

ராமசந்திரன், ஜெயா என நாம் உருவாக்கியவர்கள் எல்லாம் நமக்கு அடங்காமலே போனார்கள், இன்னொருவரை அப்படி உருவாகிவிட விட கூடாது , சனியன்களை காலடியிலே வைத்து கொல்ல வேண்டும் என மிக கவனமாக காய்நகர்த்துகின்றது டெல்லி .

கலைஞரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு இன்றி ஒரு அரசியல்வாதி வலுவான அரசியல்வாதி தமிழகத்தில் உருவாக முடியாது என சொல்லியிருக்கும் காலம் எல்லாவற்றையும் அமைதியாய் பார்த்துகொண்டிருகின்றது