விஜயின் முழுபெயர் ஜோசப் விஜய் என கண்டுபிடித்தது பாஜக

Image may contain: 1 person, close-up

கட்சியினை வளர்க்க உருப்படியாக ஏதாவது இந்த தமிழக பாஜக செய்யும் என பார்த்தால், அது படம் பார்க்கின்றது அது போக அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றது

அது செய்த ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? விஜயின் முழுபெயர் ஜோசப் விஜய் என கண்டுபிடித்தது.

இப்பொழுது விஜய் ஏன் தன் பெயரை முழுபெயரை சொல்லவில்லை என குதியோ குதி என குதிக்கின்றார்கள்.

விஜய் கிறிஸ்தவராம், அதனால் அவர் சரியில்லையாம் , இப்படியெல்லாம் ஒரே அழிச்சாட்டியம்

விஜய் ஒரு நல்ல நடிகன் என சொன்னால் அதனை அவரே ஏற்றுகொள்ள மாட்டார், நமக்கு அவர் மீது கொஞ்சமும் அபிமானம் எல்லாம் இல்லை, அவர் நடித்த கண்ணுக்குள் நிலவு படத்தின் கிளைமேக்ஸில் சத்தம் போட்டு சிரித்தது இன்னும் நினைவிருக்கின்றது

அப்படிபட்ட நடிகர்தான் விஜய் ,அவரின் சில நடிப்புகளிலும் அவரின் தளபதி பட்டங்களிலும் மகா எரிச்சல் உண்டு.

ஆனால் இன்று அவருக்கு சினிமாவில் ஒரு இடம் இருக்கின்றது, மினிமம் கியாரண்டி நடிகர் என சொல்லபடுகின்றார், சரி இதெல்லாம் எதுவோ முடிவு செய்யும் விஷயம்.

விஷயம் அதுவல்ல, ஜோசப் விஜய் என இவர்கள் குதிப்பது தான் விஷயம்

விஜய் கிறிஸ்தவராக இருக்கலாம், ஆனால் எங்காவது அவர் கிறிஸ்தவம் பேசியோ, பிற மதங்களை புண்படுத்தியோ பார்த்ததுண்டா?

சினிமாவில் கூட அவர் மத துவேஷ கருத்து ஏதும் சொல்லி கேள்விபட்டதுண்டா. நிச்சயமாக இல்லை

அந்த விஷயத்தில் அவரை பாராட்டலாம், அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஒரு நடிகன் கிறிஸ்தவனாக இருக்க கூடாதா?

இந்நாட்டில் ஒரு கிறிஸ்தவன் நடிக்க கூடாதா? அரசியல் பேச கூடாதா

சினிமாவும் அரசியலும் இந்துக்களுக்கு மட்டும் பாத்தியபட்டது, இந்துக்கள் மட்டும்தான் பேசவேண்டும் என எவன் சொன்னான்?

தமிழகத்தில் முதலில் படமெடுத்த எல்லிஸ் ஆர்.டங்கனும் முதல் திரையரங்கு கட்டிய வின்சென்ட் சாமிகண்ணுவும் கிறிஸ்தவர்களே

சந்திரபாபு முதல் ஏராளமான அடையாளங்களை காட்ட முடியும். கிறிஸ்தவர்களும் சினிமா உலகிற்கு பல காரியங்களை அன்றிலிருந்தே செய்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் மீது குற்றம் இருந்தால் கண்டிக்கட்டும், அவர் சொன்னது, செய்தது தவறேன்றால் தவறு என சொல்லட்டும்

ஆனால் அவர் கிறிஸ்தவர் என குதிப்பது ஏற்றுகொள்ள முடியாதது

இப்படியெல்லாம் இந்த பாஜக கும்பல் குதிப்பது இந்நாட்டின் ஒற்றுமைக்கும், சமூக அமைதிக்கும் பெரும் சவால் விடுகின்றது

ஒரு இந்திய குடிமகனை கிறிஸ்தவன் என்றும், இஸ்லாமியன் என்றும் வசைபாடுவது ஒருகாலும் சரியாகாது

உங்களுக்கு என்ன பிரச்சினை?

இந்தியாவில் இந்துக்கள் அதிகம், தமிழகத்திலும் அதிகம் ஆனாலும் உங்களுக்கு அரசியலில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பதுதானே பிரச்சினை?

இப்படி மத துவேஷத்தை வளர்த்தால் எப்படி கிடைக்கும்? ஒரு காலமும் கிடைக்காது

தமிழக மக்கள் அமைதியும், மத ஒற்றுமையினையும் மனதார நேசிப்பவர்கள். அதனால்தான் நாங்கள் மதத்தில் உயர்ந்தவர்கள் என சிலர் சொன்ன கொள்கையினை உடைத்து பெரியார் கிளம்பும்பொழுது தமிழகம் அவர் பின்னால் திரண்டது

அண்ணாவும், கலைஞரும், ராமசந்திரனும் மதம் பேசாமல், ஜாதி பேசாமல் முதல்வரானது இப்படித்தான்

அதிலும் பெருவாரியான இந்துக்கள் உள்ள மாநிலம் எனினும் அவர்களின் பெருந்தன்மையும் உன்னத குணமும் யாவரும் ஒருகுலம் என்ன்னும் சகோதரத்துவமும் பாராட்டுகுரியது

அதில்தான் குட்டையினை குழப்ப பார்க்கின்றது தமிழக பிஜேபி

இது கண்டிக்கதக்கது, மிகுந்த எச்சரிக்கை விடதக்க விஷயம்

அவர் ஜோசப் விஜயோ இல்லை யூசுப் விஜயோ அது அல்ல சிக்கல், அவர் ஏதும் சட்டவிரோதமாக சொல்லியிருந்தால் அவர் வார்த்தையினை கவனிக்கவேண்டுமே தவிர அவரின் மதம், இனம், மொழி எல்லாம் அல்ல‌

ரஜினியின் இயற்பெயரும் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்கின்றார்கள், என்றாவது தமிழகம் அப்படி சொல்லியிருக்கின்றதா?

ஏன் எம்.ஜி,ஆர் என்றுதானே இன்றும் சொல்கின்றீர்கள் யாராவது ராமசந்திரன் என சொல்கின்றீர்களா?

கோமளவல்லி என யாராவது ஜெயாவினை சொன்னீர்களா?

அதனையெல்லாம் விட்டுவிட்டு விஜயினை மட்டும் மதத்தின் பெயரால் சீண்டுவது ஏன்?

இம்மாநிலத்தின் யதார்த்தம் உணர்ந்து பாஜக வாயினை அடக்குவது நல்லது, இல்லையேல் சீமான் கட்சிக்கும் கீழே ஒரு கட்சி உண்டு எனும் நிலைக்கு அது நிச்சயம் செல்லும்

பெரியாரிடம் அம்பேத்கர் புத்தமதம் மாறுங்கள் என் கேட்டபொழுது சொன்னார்

“இந்த பயலுகள பத்தி உங்களுக்கு தெரியாதுங்க, நான் ராம்சாமியாக இந்த மதத்துக்குள்ள இருந்து பேசுறவரைக்கும் தாங்க சும்மா இருப்பானுக‌

நான் மதம் மாறி இப்படி பேசினா, அடுத்த மதத்துக்காரனு சொல்லி பெரிய கலவரத்த உண்டாக்கிருவானுங்கங்க, படுபாவி பயலுக. “

பெரியார் சொன்னது மகா உண்மை

மதத்தின் பெயரால் கலவரம் உண்டாக்குவதில்தான் இவர்கள் அதி தீவிரமாக இருக்கின்றார்கள்.

அப்படி நாட்டுபற்று இருக்கின்றதென்றால் சைமனை சீமான் என சொல்லிகொண்டு ஒருவன் அந்நிய நாட்டு தீவிரவாதி கொடிபிடித்து அலைகின்றாரே, அவரை ஏதாவது சொல்லுங்கள் பார்க்கலாம்

சொல்லமாட்டீர்கள், காரணம் முப்பாட்டன் முருகன் என சொல்லி சூரசம்ஹாரகத்தை , முப்பாட்டன் சூரபத்மன் என சொல்ல வாய்ப்பில்லாதவாறு செய்துவிட்ட உங்கள் ஸ்லீப்பர் செல் அல்லவா அவர்?

அதனால் அந்த கள்ள கிறிஸ்தவனை ஒன்றுமே சொல்ல மாட்டீர்கள்.


Image may contain: one or more people and close-up

ஒரு மொக்கை படத்தினை , சல்லிகாசு செலவழிக்காமல் உலகெல்லாம் விளம்பரபடுத்துவது எப்படி என சொல்லி கொடுத்துவிட்டார்கள் தமிழிசை & கோ

இது யார் மண்டையில் பல்பு எரியவிட்டிருக்குமோ இல்லையோ, நிச்சயம் சிம்பு மண்டையில் ஆயிரம் வாட்ஸ் பல்பினை எரியவிட்டிருக்கும்

விரைவில் மனிதர் எப்படி அதிரடி படம் வெளியிடுவார் என நினைத்தாலே பகீர் என்கிறது.