வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது

Image may contain: 1 person

வைரமுத்துவிற்கு எதிராக திரள்பவர்கள் கூட்டம் அதிகரிப்பதாலும், அந்த சர்ச்சையினை ஓயவிடாமல் சிலர் எரிய வைப்பதாலும் இனி விடுவதில்லை என சங்கம் முடிவு செய்தாயிற்று

வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது

என்ன சொன்னார் வைரமுத்து, ஆண்டாளை தேவதாசி என சொல்லிவிட்டார் என பொங்குகின்றார்கள்

தாசி என்றால் என்ன? வடமொழியில் அடிமை என பொருள், தேவன் என்றால் கடவுள். கடவுளுக்கு அடிமை ஆண்டாள் எனும் பொருளில்தான் அவர் சொன்னார்

சிலர் உடனே “ஏய் கன்னிமரியாளை சொன்னால் பொறுப்பாயா..” என குதிப்பர்

கபிரியேல் தூதர் மரியாளுக்கு செய்தி சொன்னதும் அவள் என்ன சொன்னாள்

இதோ “ஆண்டவரின் அடிமை”, இதனை வடமொழியில் மாற்றிபோடுங்கள் அந்த வார்த்தைதான் வரும்.

ஆத்திரபட ஒன்றுமில்லை வடமொழியில் தேவனுக்கு தாசி என்றுதான் வரும், அது மொழியே அன்றி பழி அல்ல.

கடவுளின் ஆலயத்தில் ஒப்புகொடுக்கபட்ட பெண்கள் பணி செய்வது காலகாலமாக நடந்த விஷயம், இன்றைய சிஸ்டர் கான்வென்டுகளின் முன்னோடி அது

மரியாள் அந்த பணியினைத்தான் செய்தாள், அதனால்தான் தூதன் சொன்னவுடன் நான் ஆண்டவரின் அடிமை என அவளால் சொல்ல முடிந்தது

அப்படி யூத மரபு போல, ஆண்டாள் காலத்திலும் அவள் கடவுளுக்கு பூகட்டுதல், இதர பணிகளை செய்தல் என ஆலயத்திலே இருந்திருக்கின்றாள்

அடிமை முறை உச்சத்தில் இருந்த காலத்தில், அதாவது மனிதன் சக மனிதனை அடிமையாக வைத்த காலத்தில், இப்பெண்கள் தேவனின் அடிமைகள், தேவனுக்கு மட்டும் தாசிகள் உன்னத நிலையில் இருந்திருக்கின்றார்கள்

எல்லா அடிமைகளும் எஜமான் தாசன்/ தாசிகள் என உரிமையற்று அடிமையாக இருந்தபொழுது, தேவ தாசன்களுக்கும் தேவதாசிகளுக்கும் சகல உரிமையும், மரியாதையும் இருந்திருக்கின்றது

நாங்கள் கடவுளுக்கு மட்டும் அடிமைகள் என கம்பீரமாய் அவர்கள் வலம் வந்திருக்கின்றார்கள்

கணிகையர் வேறு, பரத்தையர் வேறு, தேவனுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் வேறு

முன்னிரண்டும் சாக்கடை என்றால் மூன்றாம் ரகம் சந்தணம்

பின்னாளில் எல்லாம் மாறி மூன்றும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள்

அதிலிருந்துதான் வந்த குழப்பம் இது

வைரமுத்து சொன்ன விவகாரத்தில் ஆண்டாள் வாழ்ந்த காலத்தைத்தான் பார்க்க வேண்டும், அது தேவனின் ஆலய பெண்கள் வணங்கபட்ட காலம் அதனில் நின்றுதான் நோக்க வேண்டும்

வைரமுத்து ஆண்டாளை வேறு பெயர் சொல்லவில்லை, கடவுளின் அடிமைபெண் என்பதை வடமொழி வார்த்தையில் சொல்லிவிட்டார் அவ்வளவுதான்

ஒரு காலத்தில் கூவம் மிக சுத்தமான நதி, எத்தனையோ பேர் நீராடிய இடம், ஆலயத்திற்கு அங்கு இருந்து புனிதநீர் வரும், எத்தனையோ தெப்பகுளங்களுக்கு அந்நீர் வரும்

இன்று ஒருவன் கூவத்து நீரில் சென்னை தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது என சொன்னால், “டேய் எங்கள் தெய்வத்தை சாக்கடையில் குளிப்பாட்டுவார்கள் என சொன்னாயா?” என பொங்கினால் எப்படி இருக்கும்?

வைரமுத்துவினை அப்படித்தான் அடிக்கின்றார்கள்

அவர் அக்கால மொழியில் புனிதமான வார்த்தையான தேவதாசி, தேவனுக்கு மட்டும் அடிமையான பெண் என வணங்கதக்க வார்தையில்தான் ஆண்டாளை சொன்னார்

இவர்களோ இன்று கூவமாகிவிட்ட அந்த வார்த்தையின் பொருள்பட திட்டினாய் என வந்து நிற்கின்றார்கள்

இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

தமிழில் கலந்துவிட்ட வடமொழி குழப்பம், அதுதான் காரணம்

இறைவனின் அடிமை என தமிழில் வந்திருக்க வேண்டிய வார்த்தை தேவதாசி என வடமொழியிலே வந்துவிட்டது இதுதான் குழப்பம்

வைரமுத்துவினை எந்த கோர்ட்டிலும் நிறுத்துங்கள், சட்டத்தின் முன் இந்த மொழி கலப்பு பிழையினை, அதன் ஒரிஜினல் மொழியில் நோக்கினால் ஆண்டாளை வைரமுத்து கடவுளின் அடிமை என்று சொன்னதாகத்தான் பொருள்படும்.

தமிழில் வடமொழி கலந்து பேசிவிட்டு அதனையே தமிழ் என சொல்லிவிட்டு, அதற்கு விபச்சாரி என இவர்களே பொருளும் கொண்டுவிட்டு ஒரு தமிழ்கவிஞனை விரட்டுவது நியாயம் ஆகாது

தேவதாசிகள் எனும் உயர்வான புனிதமான பெயரை விபச்சாரிகள் என ஒப்புகொள்வது என்பது போல இருக்கின்றது வைரமுத்துவிற்கு எதிராக கூடும் கும்பல் செய்யும் செயல்

தேவதாசி என்றால் விபச்சாரி என இவர்களே ஒப்புகொண்டு அந்த அக்கால புண்ணிவதிகளை கேவலபடுத்த தொடங்கிவிட்டார்கள், அதனைத்தான் செய்கின்றார்கள், அறியாமையில் வரும் பெரும் அவமானம் இது

வைரமுத்து மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம், மாறாக என் கட்டுரையில் தேவதாசி எனும் வடமொழி வார்த்தையினை சேர்த்துவிட்டேன், அதனை “ஆண்டவனின் அடிமை” எனும் தமிழ்பதத்திற்கு மாற்றுகின்றேன் என்றால் தீர்ந்தது விஷயம்

எவன் மறுக்க முடியும்?

தமிழ்கவி இந்த வாதத்தில் ஜெயிக்கலாம், ஒரு பயலும் கேள்வி கேட்க முடியாது

தங்க தலைவி குஷ்புவிற்கு சில பாடல்களை கொடுத்தவர் என்ற முறையில் சங்கம் தன்னால் ஆன உதவியினை வைரமுத்துவிற்கு செய்துவிட்டது

இனி அவர் விருப்பம்.


வைரமுத்து கோவிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏதோ ஒரு ஜீயர் உண்ணாவிரதம் இருக்கின்றாராம்

காந்தி போன்றவர்கள் இத்தேசத்து மக்களுக்காக இருந்தார்கள், இவரோ இத்தேசம் அமைதியாக இருந்துவிட கூடாது என நோன்பிருக்கின்றாராம்

நீதிகட்சி காலம் முதல் கலைஞர் காலம் வரை சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கும் தமிழகம் இது, அவர்கள் அப்படித்தான் என இப்பக்கமும், இவர்கள் இப்படித்தான் என அப்பக்கமும் இந்நாள்வரை கடந்து சென்றார்கள்

கலைஞர் நாக்கை வெட்டுவேன், தலைவியினை சீவுவேன் என ஒரு சாமி சவால்விட்டபொழுது கலைஞர் என்ன அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருந்தாரா?

வைரமுத்து மன்னிப்பு கேட்டாயிற்று, அவரை கடந்து செல்வதுதான் நல்லது

அதைவிட்டு அவர் வந்து உருள வேண்டும், அலகு குத்த வேண்டும், ஆண்டாள் தேரை இழுக்க வேண்டும் என்றெல்லாம் உண்ணாவிரதம் இருந்தால் அவர் ஜீயர் அல்ல‌

மாறாய ச்ச்சீ.. யர்