ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ….

Image may contain: 1 person, text and outdoor

அவள் பள்ளி மாணவி, அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்தே தெரிந்ததெல்லாம் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பு

அந்த பாதிப்பினை கண்ணால் கண்டே வளந்த பெண் அவள், 11 வருடமாக அதன் பாதிப்பை அணு அணுவாய் உணர்ந்தவள்

அதனால்தான் எல்லா மக்களையும் போல தன் தாயோடு போராட வந்தாள். தமிழ்சமூகம் எப்படிபட்டது? 10 வயது கடந்தாலே பெண்ணை பொது இடங்களுக்கு அனுப்புமா?

ஆனால் அப்பெண் வந்திருக்கின்றாள், வாழ்வா சாவா? என அச்சமூகம் கதறி நின்றபொழுது அவளுக்கும் வேறு தெரிவு இருக்கவில்லை

அப்படி வந்தபெண்தான் தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாள்

தூத்துகுடி போராட்டத்தில் வன்முறையாளர் புகுந்திருக்கலாம், அவர்கள் கலவரத்தை அரங்கேற்றி இருக்கலாம்

அந்த கொடூரர்களை சுட்டு கொல்லலாம், ஏன் பிடித்து ஸ்டெர்லைட்டின் அமில குளத்திலும் வீசலாம்

ஆனால் அந்த அயோக்கியர்களை தப்பவிட்டு இப்பெண்ணை சுட்டது எவ்வகை நியாயம்?

காவலர் தாக்கபட்டார்கள், வாகனம் எரிக்கபட்டது என்பதெல்லாம் பெண்களா செய்தார்கள்? இவர்கள் பக்கம் துப்பாக்க்கி திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

உளவுதுறை தோல்வி, காவல்துறையின் அலட்சியம், திடீரென புகுந்த கொடூர ரவுடிகள் என எல்லோரும் கரங்களும் இந்த மாணவியின் மரணத்தில் இருக்கின்றது

பெற்ற மகளை தன் அருகே சுட்டு வீழ்த்தியபொழுது அந்த பெண்ணின் அன்னை எப்படி எல்லாம் கலங்கியிருப்பாள்?

தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமா? , அந்த அன்னைக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்

நீண்ட அலைகழிப்பிற்கு பின் அவள் உடல் இன்றுதான் புதைக்கபடுகின்றது

அந்த ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

யார் யாரோ செய்த தவறுகளினால் வாழ வேண்டிய பெண் ஒருத்தி கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள், அந்த மலரை மொட்டிலே கருக்கி விட்டார்கள்

தூத்துகுடியில் பிறந்ததை தவிர என்ன தவறு அவள் செய்தாள், அதுதான் அவள் செய்த தவறு

அக்காலத்தில் ஆடிமாத காற்று தேரிகாட்டு மணலை அள்ளி தூத்துகுடி கடல் பக்கம் கொட்டுமாம், நல்ல மழைதுளிக்காக வாய் பிளந்திருக்கும் சிப்பிகள் மீது அந்த மண் விழுமாம்

உப்பு கடலில் நல்ல மழை துளிக்காக ஏங்கும் சிப்பிகள் வாயில் அக்கொடுங்காற்று மணலை தூவிவிட்டு செல்லுமாம்

அந்த மண்துகளை சுற்றி உறுத்தல் ஏற்படாமல் இருக்க சிப்பி கட்டும் ஒரு திரவமே இறுகி முத்தாகுமாம்

தூத்துகுடி முத்து இப்படித்தான் புகழ்பெற்றது

அப்படி நல்ல நீரினை குடிக்க மாட்டோமா? நல்ல காற்றை சுவாசிக்க மாட்டோமா என போராட‌ வந்த இந்த இளம்பெண் மீது மண்போட்டு மூடியிருக்கின்றார்கள் பொறுப்பில்லா கொடியவர்கள்

இந்த இளம்பெண்ணின் தியாகமும் தூத்துகுடி வரலாற்றில் முத்தாய் ஜொலிக்கட்டும், இவளை மூடித்தான் ஸ்டெர்லைட்டின் கல்லறை கட்டபட்டது என வரலாறு சொல்லட்டும்

மூடப்பட்டு மண்ணோடு மண்ணாகும் ஸ்டெர்லைட்டே அவளின் சமாதி, ஆம் அதனை மறுபடி திறந்தால் ஆயிரம் ஸ்லோனின்கள் உருவாகிகொண்டே இருப்பார்கள்

அந்த சமாதி அப்படியே இருக்கட்டும்

பொறுப்பில்லா அரசுகளும், விளைவுகளை திட்டமிட்டே கணித்து கொடும் கலவரம் ஏற்படுத்துவோரும் எவ்வளவு அபாயகரமானவர்கள் என சொல்லிவிட்டு சரிந்திருக்கின்றது அந்த தளிர்

ஸ்னொலின் என்றால் பனிமயதாயின் இன்னொரு பெயர்

அப்பெண்ணின் இறுதிசடங்கினை பார்க்கும்பொழுது தேவமாதா செத்துகிடந்தது போன்றே மனம் கனக்கின்றது

தூத்துகுடியின் தெய்வங்கள் எல்லாம் கலங்கி அழும் நேரமிது

இப்பாதகம் நடக்க காரணமான எல்லோருக்கும் நரகத்தில் கூட இடமில்லை, அவர்களை சாத்தான் கூட அருகே சேர்க்கமாட்டான்

மண் காக்க உயிர்விட்ட கட்டபொம்மனை போலவே வரலாற்றில் நிலைத்துவிட்ட, தில்லையாடி வள்ளியம்மை வரிசையில் இடம்பெற்றுவிட்ட அந்த தியாக மலரை தீரா கண்ணீருடன் தூத்துகுடி வழி அனுப்பி வைக்கின்றது