ஹீலர் பாஸ்கரை உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்
இந்த ஹீலர் பாஸ்கர் என்பவரை பிடித்து உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்
முன்பெல்லாம் இந்தியாவில் சின்னம்மை, பெரியம்மை, காலரா, மலேரியா, பிளேக் என ஏகபட்ட ஆட்கொல்லி நோய்கள் இருந்தன
அன்றும் தமிழ் மருத்துவம், இயற்கை வைத்தியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது ஆனால் என்ன நடந்தது?
கொத்து கொத்தாக அந்நோய்கள் உயிர்களை அள்ளி சென்றன, ஊரை காலி செய்தால் தவிர தீர்வில்லை எனும் அளவு கொடூர நிலை இருந்தது, நோய் கண்டவரை கதற கதற தனியே விட்டு சாகடிக்கும் நிலையும் தொழுநோய் போன்றவற்றில் இருந்தது
இதற்கெல்லாம் தீர்வு இயற்கை மருத்துவர்களா கொடுத்தார்கள்?
ஐரோப்பிய மருத்துவமுறை அவற்றை விரட்டியது, ஆண்டாண்டு காலம் இங்கு ஆட்டம்போட்ட அக்கொடிய நோய்கள் அந்த தடுப்பூசியாலே ஒழிந்தன
போலியோ எனும் கொடும் நோயின் தாக்கம் இன்று குறைந்து ஒழிந்துபோய் கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? இங்கிருக்கும் வைத்தியங்களா ஒழித்தன?
தமிழ் மருத்துவம் சிறந்தது மறுப்பதற்கில்லை ஆனால் முறையான பயிற்சியும் நிரூபிக்கபட்ட ஆதாரங்களும் வேண்டும்
அந்த ஆராய்ச்சிகளை தொடரலாம், அது ஆபத்தில்லாதது என நிரூபிக்கபட்டபின் மக்கள் பக்கம் வரலாம்
மாறாக திருப்பூரில் நடந்தது போல கர்ப்பிணி பெண் மேல் பரிசோதித்து பார்ப்போம் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்
இயற்கை உணவிற்கு திரும்பலாம், இயற்கை வாழ்விற்கு திரும்பலாம்
ஆனால் இயற்கை மருத்துவம் என சொல்லி திடீரென திரும்பினால் பெரும் இழப்புகள் ஏற்படும், திருப்பூரில் அதுதான் நடந்தது
அக்காலத்து உணவு முறையும், கடும் உழைப்பும், வீட்டில் மாவு ஆட்டுதல், அம்மி அரைத்தல், பெருக்குதல் , மாடுகளை பராமரித்தல், காடு கரைக்கு நடத்தல் , விறகு சேமித்தல் என பெண்களுக்கு இருந்த வேலை எனும் உடற்பயிற்சி பெண்களின் சுகபிரசவத்திற்கு உதவியது
அதிலும் இறந்த பெண்கள் உண்டு, கொடி சுற்றிவிட்டால் குழந்தை இறப்பு உறுதி எனும் நிலை, அக்காலத்திலும் பிரசவத்தில் இறந்த பெண்கள் ஏராளம்
அக்காலத்தில் மருத்துவ வாய்ப்பில்லை சாக கொடுத்தோம், இப்பொழுது எல்லா வாய்ப்பும் இருக்கும் காலத்தில் சாககொடுப்போம் என்பது மடத்தனம்
மேல் நாடுகளில் சுகபிரசவத்திற்காக பயிற்சிகள் உண்டு, அங்கு நிறைய சுகபிரசவமே நடக்கின்றன
காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறையினை உணர்ந்துவிட்ட அவர்கள், சுகபிரசவத்திற்கான பயிற்சிகளை அளிக்கின்றார்கள், அதில் அரசின் முழு கவனமான அங்கீகாரமும் உண்டு
இங்கோ அப்படிபட்ட நிலை இல்லை
வாழ்க்கைமுறை மாறிவிட்டதை கவனியாமல் சுகபிரசவ பயிற்சிகள் என்பது பெரும் விபரீதத்திலே முடியும்
பல விஷயங்களை கவனித்தால் ஒன்று புரியும்
இன்று இயற்கை விவசாயம் வேண்டும் என குதிக்கின்றோம், ஆனால் 1950களில் அந்த குறைந்த மக்கள் தொகைக்கே இயற்கை விவசாயத்தால் உணவளிக்க முடியவில்லை
விஞ்ஞான விவசாயம் வந்தபின்பே தன்னிறைவு கண்டோம், அது இல்லாவிட்டால் இன்று பெரும் உணவுபஞ்சம் வந்திருக்கும்
இன்று உடனே அதை கைவிட்டால் மறுபடி அதே நிலைக்கு தள்ளபடுவோம் என்பதால் சாதக பாதகங்களை ஆராய்ந்தே செய்ய முடியும்
இதில் வியாபார தந்திரமும் உண்டு
விகடன் பசுமை விகடன் என்றொரு பத்திரிகை நடத்துகின்றது, நல்லது
ஆனால் ஓலை சுவடியிலா நடத்துகின்றார்கள்? இல்லை மாறாக காடுகளை அழித்து கிடைக்கும் காகிதம், ரசாயாண மை என என்னவெல்லாமோ செயற்கையாக செய்துதான் பத்திரிகை வருகின்றது
இணையம் என்பது என்ன? பல இயற்கை பொருட்களை , ரசாயண வித்தைகளில் வந்துநிற்பதுதான் இணையம்
இந்த விகடன் பசுமை விகடன் இதழை ஓலைசுவடியில் அல்லவா நடத்த வேண்டும்? செய்வார்களா? இல்லை. ஆனால் சம்பாதிக்கின்றார்கள்
இப்படி வியாபார தந்திரங்கள் ஏராளம்
முன்னோர் ஓலை வீட்டிலும் குடிசையிலும் வாழ்ந்தார்கள், நாம் வாழ்கின்றோமா?
முன்னோர்கள் நடந்தும், மாட்டு வண்டியிலும் பயணித்தார்கள் நாம் செய்கின்றோமா?
முன்னோர்கள் செய்த வேலையினை செய்கின்றோமா, அவர்கள் உண்ட உணவினை உண்டோமா? இல்லை அவர்கள் போல பாடு பட்டோமா? ஆடு மாட்டோடு வாழ்கின்றோமா?
இல்லை, அதிலிருந்து வெகுதூரம் வந்தாயிற்று
இப்படி அதை எல்லாம் விட்டுவிட்டு, மகா வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு திடீரென முன்னோர் வழியில் பிரசவம் பார்க்கின்றேன் என கிளம்பினால் என்னாகும்??
திருப்பூரில் ஆனது போல்தான் ஆகும்.
ஊரோடு ஒத்துவாழ் என்பதும், புதியன புகுதல் தவறில்லை என்பதும் தமிழர் சொன்னதே.
மானிட வரலாற்றில் ஏராளமான உயிர்களை கொடுத்தே நோய் முதல் பல விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என மானிட குலம் போராடி பல வெற்றிகளை பெற்றிருக்கின்றது
அவற்றை எல்லாம் மீறி மறுபடியும் ஆதிவாசி போல பலிகொடுப்பேன் என கிளம்புவது மடத்தனம்.
இந்த ஹீலர் பாஸ்கர் என்பவர் பெரும் சித்தரோ இல்லை வித்தகரோ அல்ல, பசுமை விகடன் எனும் மோசடிக்கும் இவருக்கும் வித்தியாசமில்லை
இவரது ஆராய்ச்சியோ இல்லை சிகிச்சையோ முறையான அங்கீகாரமோ இல்லை நிபுணர்களால் ஆதரவோ பெற்றது அல்ல
ஒருவகையான குழப்பவாதி இவர், மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை ரகம்
மக்களின் உயிரோடு விளையாடும் இவரை போன்றவர்களை தட்டி வைப்பது நல்லது