ஆர்.கே நகரில் பண மழை பொழிகின்றதாம்…
ஆர்.கே நகரில் பண மழை பொழிகின்றதாம், அம்மழையில் இந்த பங்குனி வெயில் கூட பனியாய் மக்களுக்கு மாறுகின்றதாம்
வரலாற்றில் இல்லாத பணமழை என்கின்றார்கள், ஜெயா கூட இப்படி கொடுத்ததில்லையே என்ற அங்கலாய்ப்பு இருந்தாலும், அவர் ஒருமுறை மட்டும் இறந்ததில் அம்மக்களுக்கு மகா சோகம்,
அவர் இறந்ததால்தானே இந்த இடைதேர்தல் சாத்தியம், அடிக்கடி இறந்தால் எத்தனை இடைத்தேர்தல் சாத்தியம்…
அமெரிக்காவில் குடியேற நடக்கும் போட்டி போல ஆர்கே நகரில் குடியேறவும் கடும் போட்டியாம், மொத்த மக்கள் தொகை திடீரென எகிறிவிட்டதாம்
எல்லா வீடுகளும் ஒலிம்பிக் நடக்கும் நகரங்கள் போல நிரம்பி வழிகின்றதாம், யாரை கேட்டாலும் நான் ஆர்கே நகர் வாசி என சொல்லிவிட்டு எதிரிலிருப்பவர் கையினை பார்க்கின்றார்களாம், தலையில் தொப்பியினை தூக்கி ஏதும் சிகப்பு கலர் நோட்டு இருக்கின்றதா என தேடுகின்றார்களாம்
வாழ்ந்தால் ஆர்.கே நகரில் வாழவேண்டும் என்ற நிலைக்கு அந்த தொகுதி சென்றுகொண்டிருக்கின்றதாம், எப்படி ஒரு திடீர் முன்னேற்றம் பார்த்தீர்களா?
இன்னும் பங்குசந்தை மட்டும்தான் அமையவில்லை, அவ்வளவு பணம் புரள்கின்றதாம்..
விஷயத்தை கேள்விபட்டு மற்ற தொகுதி மக்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றார்களாம். “ம்ம்ம் ஆர்கே நகர் மக்கள் கொடுத்துவைத்தவர்கள் ஒரே தேர்தலாக நடக்கின்றது, மக்கள் வேலைக்கே செல்லும் அவசியம் இல்லை..” என்ற ரீதியில் யோசிக்கின்றார்களாம்
நமக்கும் ஒரு தொகுதி இருக்கின்றதே என்ன புண்ணியம்?, அனால் நமக்கும் ஒரு எம் எல் ஏ இருக்கின்றாரே அவர்தான் தடங்கல், அவர் இல்லாவிட்டால் நமக்கும் இடைதேர்தல், நமக்கும் பணமழை என சிந்தித்தால் என்ன ஆகும்?
எதற்கும் அதிமுக எம் எல் ஏக்கள் தொகுதிபக்கம் செல்லாமல் இருப்பது நல்லது,
இல்லாவிட்டாலும் போகவா போகின்றார்கள்? எல்லோரும் தொப்பி சகிதம் சென்னையில்தான் சுற்றி கொண்டிருக்கின்றார்கள்..
பன்னீர் செல்வம் ஜிகே வாசனை சந்தித்தார் : செய்தி
ஏதோ ஆசியாவின் இரு வல்லரசுகள் சந்தித்தது போல பில்டப் செய்தி இது,
ஜிகே வாசனின் வோட்டு வங்கி உலக பிரசித்த்தம், பன்னீருக்கு வோட்டு வங்கி பூஜ்ஜியமா இல்லை அதற்கும் கீழேயா என்பதே தெரியாது
இதில் இவர்கள் இருவரும் சந்தித்து என்ன ஆலோசனை நடத்துவார்கள்?
“ஏம்பா அமாவாசை டெப்பாசிட் வாங்குவோமா?…..”
ஸ்டாலினுக்கு பாமக அழைப்பு: வழக்கறிஞர் பாலு நேரில் சந்திப்பு
இது மதுகொடுமைக்கு எதிரான அழைப்பாம், தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையாம்
அதாவது வானமும் சூரியனும் உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என சொல்லியிருப்பவர் மருத்துவர், அதனால் இது கொள்கை கூட்டணி, தேர்தல் கூட்டணி அல்ல
எப்பொழுதுமே ஜெயிக்கும் அணியிடம் சென்று ஒட்டிகொண்டு வெற்றி வெற்றி என கத்துவதில் மருத்துவர் கைதேர்ந்தவர், இப்பொழுது ஸ்டாலின் அணிக்கு குறி வைக்கின்றார்
நாளையே இது தேர்தல் கூட்டணி ஆயிற்றேன்றால்…
வானமும் மண்ணும் ஒழிந்துபோயிற்று என டாக்டர் சொல்வார், நாமெல்லாம் நம்பிகொள்ளவேண்டும்…
கமல்ஹாசனிடம் நான் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பேன்: ரஜினிகாந்த் பேச்சு
அதென்ன கமலஹாசனிடம் மட்டும்?,
இவர் கங்கை அமரன் முதல் கலைஞர் வரை எல்லோரிடமும் மகா ஜாக்கிரதையாகத்தானே இருக்கின்றார், யாரிடம் சிக்கி இருக்கின்றார்?
நான் கண் அசைத்தால் 1000 இளைஞர்கள் பின்னால் வருவார்கள் :- ஹெச்.ராஜா
மனதில் என்னமோ பிரியங்கா சோப்ரா என நினைப்பு போல…