1995களில் தமிழகம் அரண்டு போயிருந்தது…
1995களில் தமிழகம் அரண்டு போயிருந்தது, யாராலும் கேள்வி கேட்க முடியா காலங்கள் அவை
வளர்ப்பு மகன் திருமணம், கங்கை அமரன், பாலு ஜூவல்லர்ஸ்க்கு மொட்டை , ஜெயலலிதாவிடம் சசிகலாவினை சேர்த்த சந்திரலேகா மீதே ஆசிட் வீச்சு, தமிழகம் முழுக்க வளைப்பு என அக்கும்பலின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்ட நிலை
இந்த நிலையில்தான் முதல்வரானார் கலைஞர், அவர் நேரடியாக காவல்துறையினை ஏவி ஜெயா கும்பலை பிடிக்கவில்லை. கலைஞர் எப்பொழுதும் எது சாத்தியமோ? எது யதார்த்தமோ? அதனைத்தான் செய்வார்
அப்படித்தான் ஆதாரங்களோடு நீதிமன்ற கதவுகளை தட்டினார், சு.சாமி வழக்கு தொடுத்துவிட்டு பின் வாங்கினாலும் கலைஞர் ஓயவில்லை
ஆட்சி போனாலும் வழக்குகளை திமுக நடத்தியது, எதற்கும் அஞ்சவில்லை
எப்படி எல்லாம் போராட முடிந்ததோ, அப்படி எல்லாம் போராடினார்
ஜெயாவிற்கும் வாய்ப்புகள் இருந்தது, வாஜ்பாய் அரசிற்கு ஆதரவு கொடுத்து வழக்குகளை முடித்திருக்கலாம், ஆனால் கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய் என மிரட்டி, தன் வழக்குகளை இரண்டாம் பட்சமாக்கி தன் தலையிலே மண் அள்ளிபோட்டார்
கண்மூடிதனமான கலைஞர் எதிர்ப்பு, அந்த எதிர்ப்பில்தான் அவரை ஒருமுறை கைதுசெய்தும் மகிழ்ந்தார், ஆனால் காரணமில்லா கைது.
ஒருவகையில் இம்மாதிரி வழக்குகளை நடத்த ஒரு தைரியம் வேண்டும், ஆதாரங்களை திரட்டவேண்டும், பெரும் எதிர்ப்புக்களும் மிரட்டல்களும் பல வகையில் வரும், உயிருக்கே மிரட்டல்கள் வரும்
அதனை எல்லாம் மீறி செய்ய ஒரு தைரியம் வேண்டும், கலைஞருக்கு அது இருந்தது
அது அன்றே முரசொலியில் எழுதாதே என சொல்லி கைகளில் அடித்து தலையினை உடைத்தாலும் மீறி எழுதிய தைரியம்.
முடிந்தால் கொல்வீர்கள் அவ்வளவுதானே, ஆனால் கடைசி சொட்டு ரத்தத்தையும் பேனாவில் ஊற்றி எழுதுவான் இந்த கருணாநிதி என அசால்ட்டாக எதிர்த்த தைரியம்
இதோ இன்றும் ஒரு இடைவெளி தெரிகின்றது, அழகான பேட்ஸ்மேன் என்றால் அடித்து ஆடுவான், ஆனால் ஆளில்லை
எது?
ஜெயா சாவில் இத்தனை மர்மம் என்றபின்னும் பெரும் வழக்கு ஏதும் கண்டீர்களா? நீதிமன்ற கதவுகளிடம் முணுமுணுத்து பின் ஓடுகின்றார்களே அன்றி யாராவது தட்டினார்களா?
இப்படி அன்று கலைஞரும், சு.சாமியும் மகா அமைதியாக இருந்திருந்தால் இன்று சசிகலாவிற்கு சிறை கிடைத்திருக்குமா?
சு.சாமி வேறுமாதிரியானவர் அவர் அடிமனது யாருக்கும் புரியாது, ஆனால் பொதுவாக தமிழகம் அமைதியாக இருப்பது அவருக்கு பிடிக்காது எனும் வகையில் அவரை சொல்லலாம். அதில் சில நன்மையும் இருக்கும் சில கொடுமைகளும் இருக்கும்
ஆனால் கலைஞர் அப்படி அல்ல
இன்று அவர் வலுவாக இருந்தால் எப்பொழுதோ நீதிமன்ற கதவுகளை தட்டி, பெரும் ஓலம் எழுப்பியிருப்பார்.
லண்டன் டாக்டர் பீலேக்கு விசா வழங்கியது யார்? என்ன நோக்கில் வழங்கினார்கள்?
செய்தியாளர் சந்திப்பிற்கு அவரை அழைத்தது யார்?
டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை என்ன? அப்பல்லோவில் ஜெயலலிதாவினை சந்த்தித்தவர் யார்? சசிகலா என்ன செய்தார்?
மோடி ஏன் வரவில்லை? ஆளுநர் ஜெயாவினை சந்தித்தாரா இல்லையா? அவர் ஏன் அதுபற்றி சொல்லவில்லை?
தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஒருவர் கூட ஏன் ஜெயலலிதாவினை சந்திக்கவில்லை, மருத்துவ துறை அமைச்சர் என்ன செய்தார்? ஏன் மவுனம் காத்தார்?
தமிழக முதல்வரையும் டெல்லி ஒதுக்குமா? நாங்கள் இந்தியர் இல்லையா? மற்ற மாநில முதல்வர்கள் என்றால் இப்படித்தான் ஒதுங்குவீர்களா?
தமிழக முதல்வர் மரணத்தில், என்னை விட யார் துடித்து விட முடியும்? தமிழன் என்ற முறையில் நீதிமன்ற கதவுகளை தட்டுகின்றேன்…”
என அவர் தொடுக்கும் கேள்விகளில் இந்தியா அலறும்.
திருச்செந்தூர் முருகனின் வேல் காணாமல் போனதற்கே பெரும் போராட்டம் நிகழ்த்திய அவர், தமிழக முதல்வரின் உயிர் காணாமல் போன நிகழ்வில் சும்மாவா இருந்திருப்பார்
இன்றுள்ள தலைவர்கள் எல்லாம் நமக்கேன் வம்பு என ஒதுங்கத்தான் செய்கின்றார்களே தவிர, அந்த மர்மம் விளக்கும் ஆசை எல்லாம் இல்லை, பயம்
கலைஞர் நலமாக இருந்திருந்தால் இன்னொரு பரபரப்பான வழக்கு தொடுக்கபட்டிருக்கும், அந்த போராட்ட குணத்தில் எத்தனை வருடம் கழித்தேனும் அதன் உண்மை வெளிவந்திருக்கும்..
அந்த தைரியத்தில் இப்பொழுது ஒரு தலைவனும் தமிழகத்தில் இல்லை. அது வரவும் வராது.