27 ஆண்டுகள் தமிழனை ஆண்டவர்கள்
எங்கோ கேள்விபட்ட விஷயம்தான், உங்கள் மீது எம்ஜிஆர் அதீத அக்கறை எடுத்தாரா என்பதற்கு ஜெயாவே ஆம் என ஒப்புகொண்ட விஷயம்தான்
நண்பர் ராஜ்நாயகம் சுவாரஸ்யமாக எழுதுவார், முன்பு எப்பொழுதோ அவர் பக்கத்தில் படித்த செய்தி அது, நினைவுக்கு வந்தது
ஒருவேளை இன்று நடிக்க வந்திருந்தால் நிச்சயம் பவர்ஸ்டார் நிலைதான். ஆனால் அன்று எம்ஜிஆர் திரையுலக சக்கரவர்த்தி, பேரரசன், கடவுள் என சகலமும்.
பெரும் தயாரிப்பாளரே அவர் முன் அமர மாட்டார்கள், பத்திரிகையாளர்கள் அமர்ந்ததே அவர் அரசியலுக்கு வந்த பின்புதான்
எம்ஜிஆர் சின்னவர் என அழைக்கபட்டவர், சின்னவர் என்றால் பெரியவர் என்றும் ஒருவர் இருக்கவேண்டும் அல்லவா? அவர் எம்ஜி சக்கரபாணி
அப்படிபட்ட எம்ஜிஆர் சூட்டிங் என்றால் மிகுந்த அமைதியும் பயமும் நிலவுமாம், சூட்டிங்கினை கூட ராஜாங்கம் போல அவர் நடத்திய காலம்,
(எம்ஜிஆரின் அஷ்ட கோண நடிப்பினை எப்படி சிரிக்காமல் பார்த்தார்களோ தெரியாது, நிச்சயம் அவர்கள் பெரும் காந்தியவாதிகள்)
அப்படிபட்ட சூழலில் ஜெயலலிதா நடிக்கும் காட்சி படமானது, ஒப்பனை, நெற்றி சுருள்முடி, பென்சில் மீசை, சிகப்பு சட்டை என எம்ஜிஆர் கரகாட்ட காரன் ராமராஜன் போல ரெடியாக அமர்ந்திருக்கின்றார், ஜெயலலிதாவினை காணோம், டைரக்டருக்கு தவிப்பு, எம்ஜிஆருக்கு புன் சிரிப்பு
வேகமாக வந்த ஜெயலலிதா கைபையினை தூக்கி சோபாவில் எறிந்துவிட்டு மேக் அப் ரூம் நோக்கி நடக்கின்றார்
எம்ஜிஆர் கன்னத்தில் கைவைத்தபடி சிரித்துகொண்டு சொன்னாராம் “அம்மு கோவத்துல இருக்கு”
கொஞ்ச நேரம் கழித்து டைரக்டர் சீன் சொல்கிறார், “மேடம் முதலில் சின்னவர் வருகின்றார், அதன் பின் வேலைக்காரன் வருவான், அடுத்து நீங்கள் வரவேண்டும்”
ஜெயா கத்தி சொல்கின்றார்
“முதலில் நான் வருகிறேன் அதன் பின் உங்கள் சின்னவர் வரட்டும்”
எம்ஜிஆர் சிரித்துகொண்டே இரு கைகைகளையும் கன்னத்தில் வைத்து சொல்கின்றாராம்
” அம்மு கோபம் இன்னும் போகலை”
இவர்கள் இருவரும்தான் 27 ஆண்டுகள் தமிழனை ஆண்டவர்கள்
ஆக தமிழனின் தலைவிதி அந்த சினிமா செட்டில் இப்படி எல்லாம் செதுக்கபட்டிருக்கின்றது.