குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 13

“கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்”

இவ்வரி “கற்றோருக்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணி கலம் வேண்டாவாம் முற்ற முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே அழகுக்கு அழகு செய்வார்” என பிரிந்து பொருள் தரும்

கற்றோருக்கு கல்வியே அழகு சேர்க்கும் அணிகலன் அது அன்றி இதர அணிகலன்கள் தேவையில்லை, முழுவதும் அழகு பூண்ட மணிமாலைக்கு இன்னொரு மணிமாலை அவசியமில்லை, அழகான ஒன்றுக்கு அழகு யார் அழகு சேர்க்க முடியும்? என்பது பொருள்

இப்பாடலில் குமரகுருபரர் மிக அழகான சூழலை சொல்கின்றார், வசதிபடைத்தோர் பெரும் மாணிக்க மாலையும் நவமணிகள் அமைந்த அணிகலன்களும் சூடி பவனி வருவர், அவர்களிடம் இருக்கும் செல்வத்தின் அடையாளத்தை அப்படித்தான் காட்டமுடியும்

கற்றவர்கள் அறிவாளிகள் , நூல் பல கற்று பெரும் ஞான சூரியன்களாய் வலம் வருபவர்கள், அவர்கள் அழகு அவர்களின் அறிவுதானே தவிர அலங்கார மாலைகளிலே பொன் நகைகளிலோ அல்ல‌

சூரியனுக்கு யாராவது கூடுதல் வெப்பம் கொடுக்க முடியுமா? கடலுக்கு நீர் ஊற்றி கூடுதல் பெரிதாக்க முடியுமா? நறுமணமிக்க மலருக்கு யார் மணம் சேர்ப்பார்கள்?

அவை எல்லாம் அவசியமில்லை

சூரியனுக்கு வெம்மை போல, கடலுக்கு அலை போல கற்றவர்களுக்கு அவர்கள் கல்வியே அழகு அதை தவிர வேறு அடையாளம் அவர்களுக்கு அவசியமில்லை என்பது பாடலின் பொருள்