இந்துக்களின் பஞ்சாங்கமும் நாள்காட்டியும் வானிலையினை அடிப்படையாக கொண்டவை, பருவகால நிலைகளை வானியல் அசைவுகளுடன் கோள்களின் சஞ்சாரத்துடனும் சரியாக சொல்பவை

12 ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சரியாக 12 மாதங்களாக பிரித்தார்கள், அந்த பிரிவுகளை மாதங்கள் என்றார்கள், கோள்களின் சஞ்சாரபடி என்னென்ன பலனும் பாதிப்பும் பூமிக்கு வரும் என மானிடருக்கு உரைத்தார்கள்

இன்றும் பரசுராமனின் கேரளத்தின் ஒவ்வொரு மாத பெயரும் 12 மாத பெயர்களே, இந்த ஆடிமாதம் அவர்களுக்கு கற்கடக மாதம்

அதாவது கடகராசி மாதம்

இந்த கடகராசியில் சூரியன் வரும் மாதம் ஆடிமாதம், கடகராசி சில விஷயங்களுக்கு அடையளம் காணபடுவது

முதலாவது அது சந்திரனின் ராசி, இரண்டாவது அது பித்ருக்களின் சம்பந்தமான ராசி, மூன்றாவது அது நீர் ராசி

அப்படிபட்ட ராசி மண்டலத்தின் சந்திரன் சூரியன் வரும் பொழுது தனி சக்தி பெறும், குரு அங்கு உச்சமடையும்

சந்திரன் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாகவும் சூரியன் சிவனின் அம்சனாகவும் அறிபடுவதால் அமமாதத்தில் சந்திரன் பெரும் சக்தி அன்னையின் தனிபெரும் சக்தியாகின்றது

அந்த பாதிப்பு பூமியிலும் உண்டு அது அன்னையின் சக்தி பெருகி நிற்கும் மாதம் என்பதால் ஆடிமாதம் அம்மனுக்கு என வகுத்தது இந்துமதம், கடகராசியின் நீர் ராசியில் குரு அம்சமும் சேர்வதால் அந்த மாதத்தில் மழைபெருகும் அந்த மழையின் நீரில் குருவின் அருளால் சக்தி அதிகமாயிருக்கும்

அந்த நீரை எல்லோரும் பாவிக்கும்படியும் அந்த சக்திமிக்க நீரில் குளித்தும் அதை தொட்டெடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்து சக்திபெறவும் அது பல சம்பிரதாயங்களையும் விழாக்களையும் உருவாக்கிற்று

அன்னை வழிபாடும், ஆடிபெருக்கும் இன்னும் பலவகை கொண்டாட்டமும் இதனாலே

கடகராசி பித்ருக்களுக்குரியது என்பதால் ஆடி அமாவாசையினை அது பித்ருக்களுக்கான பெரும் நாளாக ஆக்கிற்று

அந்த ஆடிமாத நீர்நிலைகள் குரு அருளால் தனித்து நிற்பதால் அந்த நீரை பயிர்களுக்கும் கொடுக்க சொன்னார்கள், “ஆடிபட்டம் தேடி விதை” என இந்துக்கள் சொன்னது அதனாலே

சந்திரனின் ராசிஉச்சத்தில் இருக்கும் நேரம் அதுவும் சூரியனோடு சேர்ந்து நிற்கும் நேரம் அந்த பிரஞ்ச சக்தியின் தனி அருளை பெறுவதற்குத்தான் ஆடிமாத வழிபாடுகளை செய்தார்கள்

இந்த ஆடிமாதமே மகாபாரத யுத்தம் நடந்ததாக ஒரு செய்தி உண்டு, அப்படியே ராமன் போரை தொடங்கியதாகவும் இன்னொரு புராண செய்தி உண்டு

ஆடிமாதம் சூட்சும ரீதியாக சக்திமிக்கது என்பதால் துர்தேவதைகள் அல்லது துர்சக்திகளின் ஆதிக்கமும் கூடும், அதனை அம்மாதத்தில்தான் பரம்பொருள் அடக்கி வைத்ததாக சொல்லி நம்பிக்கை ஊட்டியது இந்துமதம்

அன்று பாரதம் முழுக்க ஆடிமாதம் அம்மனுக்கான மாதம் என பெண்களை பெருமைபடுத்திற்று

ராமகாதையும், பாரத தத்துவமும் நாடெங்கும் சொல்லிகொடுத்தபடியே அம்மனை கொண்டாடினார்கள் அதாவது பெண்களை கொண்டாடினார்கள்

பெண்கள் கண்ணீர் எவ்வளவு வலுவானது என்பதையும் பெண்களை கொடுமைபடுத்தினாலோ அழவைத்தாலோ என்னாகும் என்பதை எல்லா கோவில் வாசலிலும் சொல்லி கொடுத்தார்கள், பெண் தெய்வங்களை கொண்டாட சொன்னார்கள்

அன்று ஆடியின் முதல் 18 நாளும் கீதை உபதேசிக்கபட்ட காலம் உண்டு, பாரத போரின் 18 நாட்களில் 18 பெரும் சக்திகள் அழிந்த கதையினை சொன்ன காலமும் உண்டு

ராமாயண பெருமை சொல்லி சீதை கண்ட துயரை சொல்லிகொடுத்த காலம் உண்டு, இன்றும் அந்த மரபு கேரளாவில் உண்டு ஆடி முழுக்க ராமகாதை பாடபடும், அன்றிலிருந்தே கேரளம் அப்படித்தான் இதனாலே கம்பராமாயணம் பாடிய கம்பன் சேரநாட்டில் அடைக்கலமானான்

பின்னாளைய அந்நிய ஆட்சியில் இந்துமதன் தன் ஸ்தானத்தை இழந்து நலிவுற்றபொழுது எல்லாம் மாறிற்று, நிறைய சம்பிரதாயங்கள் இழக்கபட்டன ஆனால் அம்மனுக்கான கொண்டாட்டம் அதில் தனித்து நிற்கின்றது

ஆடியில் திருமணம் செய்யகூடாது என்பதும் ஆடியில் மங்கள காரியங்கள் செய்யகூடாது என்பதும் மூட நம்பிக்கை அல்ல, ஆடியில் வெள்ளம் வந்து ஆவணியில் மணமும் மங்களமும் ஆரம்பிக்கும்

அந்த வாழ்வு எவ்வளவு சிரமமானது என்பதையும், வாழ்வுக்கு புராணமும் தத்துவமும் என்னென்ன போதனைகள சொன்னது என்பதையும் இந்துக்களுக்கு கோவில்களில் சொல்லிகொடுத்தார்கள்

ஆடிமாதம் என்பது வாழ்வின் ஞானம் பெறும் மாதம், வாழ்வினை தொடங்க பெற வேண்டிய ஞானத்தையும் தத்துவங்களையும் பெறும் மாதம், அந்த தியான நிலையில் இருக்கவேண்டும் என்றுதான் மங்கள காரியங்களை தவிர்க்க சொன்னார்கள், கொண்டாங்களை ஒதுக்கிவைக்க சொன்னார்கள்

பாரதமும் ராமாயணமும் அம்மன் அவதார கதைகளும் கோவிலில் திருவிழா என ஏற்பாடுசெய்யபட்டு மக்களுக்கு புகட்டபட்டது

ஞானகாரியங்களை தாண்டி வானியல் அம்சங்களை தாண்டி அம்மாதம் புதுமழை காலம், அம்மாதம் அடுத்து விவசாயம் களைகட்டும்

அந்த புதுவெள்ளமும் காலமாற்றமும் சில நோய்களை ஏற்படுத்தும் இதனாலே கோவில்களிலும் தெருக்களிலும் மஞ்சள் தெளிக்க சொன்னார்கள், வேப்பிலையும் இன்னும் பல பொருட்களும் புழங்குமாறு பார்த்து கொண்டார்கள், அது அம்மனுக்கு பிடிக்கும் என்றார்கள்

கூழ் போன்ற உணவுகளை கோவில்களில் கொட்டி கொடுக்க சொன்னார்கள்

இது சீதோஷ்ன நோய்களை கட்டுபடுத்தும் இன்னொன்று மக்களிடம் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தும் அந்த ஐக்கியம் ஆறு குளம் வயல் என எங்கும் சேர்ந்து உழைக்கும் மனதை கொடுக்கும்

ஒவ்வொரு காரியத்தையும் இந்தமாதம் பார்த்து பார்த்து ஏற்படுத்தினார்கள் இந்துக்கள்

இந்துமதம் மானிட வாழ்வில் அவர்கள் மனம் உணர்ந்து மனநிலை உணர்ந்து அவர்களை வழிநடத்தவும் அந்த வழிநடத்தலில் பிரபஞ்ச சக்தியினை கலந்து கொடுக்கவும் ஏற்பாடுகளை செய்த ஞானமதம்

ஆடி கொண்ட்டாட்டமும் வழிபாடும் இதர சம்பிரதாயங்களும் அதைத்தான் சொல்கின்றன‌

ஒவ்வொரு நாளும் ஆடியில் முக்கியமானது, அந்நாளில் அம்மனை தவறாது வணங்குங்கள் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஒரு அம்மனுக்கு செய்யுங்கள், பலன் உண்டு

முடிந்தால் ஒரு நேரமாவது சீதை கதையும் , பாரத பாஞ்சாலி கண்ட துயரங்களையும் மனதால் நிறுத்தி ஒரு ஆணும் பெண்ணும் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யகூடாது என சிந்தியுங்கள்

திருமணவாழ்வை தொடங்க இருப்பவர்களுக்கும் ., வாழ்வில் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு அது பெரும் நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்கும்

கைகேயி, கூனி கதைகளை தாண்டி பொன்மானை கேட்டாள் சீதை என்பதையும் அவள் கேட்டதும் பொன்மான் உண்டா என யோசிக்காமல் ஓடிய ராமனின் நிலையும் நினைத்தாலே ஆயிரம் சிந்தனை பெருகும்

ஆம் தவறு இரு பக்கமும் உண்டு, அந்த தவறுக்கான விலை என்னவென்று உணரமுடியும் பெரும் பாடம் படிக்கமுடியும்

மனைவியின் விருப்பமின்றி சூதாடிய தர்மனின் நிலையினை படித்தாலே ஆண்களுக்கு ஞானம் வரும், பாஞ்சாலி கதையினை படித்தால் கண்ணனை பற்றினால் எப்பெண்ணும் வாழ்வாள் எனும் நம்பிக்கை வரும்

அம்மன் ஆலயங்கள் பெண்களுக்கு தனி சக்தி கொடுப்பவை எனும் வகையில் பெண்களே இச்சமூகத்தின் இயக்கும் சக்திகள் எனும் வகையில் அம்மனுக்கு வழிபாடும் பெரும் யாகபூஜைகளும் செய்யபட்டால் நல்லது

ஒவ்வொரு நாளும் முக்கியம் எனினும் ஆடிமாத வெள்ளியெல்லாம் தனி சிறப்பு வாய்ந்தது

நீர்நிலைகளுக்கான மாதம் இதுவே ஆடிபெருக்கு அதை சொல்லும், பித்ருக்களுக்கான மாதமும் இதுவே

தமிழகத்தில் இது கிராம கொடைவிழாக்கள் நடக்கும் காலம், இந்து தெய்வங்களில் ஒரு காலமும் பெரும் தெய்வம் சிறுதெய்வம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை, அதெல்லாம் மிஷனரிகள் தூண்டிவிட்ட வார்த்தைகள்

மதுரை போன்ற பெரும் ஆலயங்களில் வீரபத்திரர் இருப்பார், அவர் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் இருப்பார்

அதாவது சிவனின் அம்சங்கள், பார்வதியின் அம்சங்களே, விஷ்ணுவின் அம்சங்களே கிராம தெய்வங்களாயின‌

சிவனின் அம்சம் சுடலை மாடன் என உக்கிர தெய்வங்களானது, அன்னையின் அம்சம் இயக்க்கி எனும் சக்தியாகி பின் இசக்கி என மருவிற்று

இயக்கும் சக்தி கொண்டவள் அன்னை என்பதே இசக்கி என்றாயிற்று

கருப்பன் போன்ற காவல் தெய்வங்கள் விஷ்ணுவின் அம்சமாயிற்று

ஒவ்வொர் மானிடருக்கும் அவரவர் தொழில் வாழ்க்கைமுறைக்கு ஏற்றபடி தெய்வ அம்சங்களை சொன்ன இந்துமதம் கிராம மக்களுக்கும் அவர்கள் வாழ்வுக்கும் காவலுக்கும் மூல பரம்பொருளின் அம்சத்தை சொன்னது

அவர்களுக்கு இந்த ஆடிமாதம் பெரும் திருவிழா நடக்கும்

இன்றும் மேளம், வில்லுபாட்டு, கொடை, சமையல், அலங்காரம் என பண்டை இந்துக்களின் பாரம்பரியத்தை கொடைகள்தான் காட்டிகொண்டிருக்கின்றன‌

ஊர் கூடி மகிழும் ஏற்பாடு அது, கவனியுங்கள் அந்த கோவில்களும் சாமிகளும் இல்லையென்றால் ஏன் ஊர் ஒன்றாக கூடபோகின்றது, ஒன்றுபட இருந்து உணவருந்த போகின்றது?

கோவில்களே இந்துக்கள் ஒன்றுபட்ட இடம், நல்லது கெட்டது பேசி முடிவெடுத்த இடம், அம்மன் கோவிலோ சுடலை கோவிலோ ஊரின் உச்சநீதிமன்றமாய் இருந்த காலங்கள் அவை

தெய்வத்தின் பெயரால் மனசாட்சியோடு வாழ்ந்தார்கள் அன்றைய இந்துக்கள் அதனால் நீதிமன்றமும் இல்லை காவல் நிலையமில்லை இன்னும் பல இல்லை, காவல் தெய்வங்கள் அந்த அற்புதத்தை செய்தன‌

அம்மன் முன் சொல்லபடும் சத்தியம் எல்லா சட்டத்தையும் விட உயர்வாய் அன்றைய இந்துக்களுக்கு இருந்தது

அப்படிபட்ட வாழ்வியல் முறைகளை வகுத்து மக்களை மக்களாக அமைதியாக நல்வழியில் வாழ சொன்னவை கிராம தெய்வங்கள், அவைகளின் அசைவில்தான் கிராமங்கள் ஜொலித்தன கிராமங்களின் செழிப்பில்தான் பாரதமே செல்வமாய் மின்னிற்று

அந்த கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதமே பிரதானம்

(பின்னாளைய மிஷனரிகள் தந்திரமாக கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் ஆடியில் திருவிழா என மாற்றினார்கள் , இந்துக்களின் சம்பிரதாயத்துக்கு ஏற்றபடி மாற்றினார்கள்

இன்றும் தென்னக பிரதான கத்தோலிக்க ஆலயங்கள் ஆடிமாதமே கொண்டாடபடும், கொடியேற்றம் கடாவெட்டு, தேர் என எல்லா இந்து சம்பிரதாயத்தையும் அப்படியே பின்பற்றுவார்கள்

ஆனால் தெய்வம் மட்டும் வேறு)

ஆனி, ஆடி தென்னக மக்களின் வாழ்வில் பொருளாதார வளத்தை காட்டிய மாதங்கள்

ஆனி ஆடி சாரலுக்கு நல்லமிளகு விளையும் அது மேற்கே, அதே ஆனி ஆடி மாதத்தில்தான் பனைபொருட்களின் விற்பனையும் உச்சத்தில் இருக்கும் கருப்புகட்டி போன்றவை அப்படியானவை இன்னும் புஞ்சை விளைச்சலும் கைகொடுக்கும்

அம்மன் ஆலயமும், சுடலைமாடன் ஆலயமும் நிரம்பிய தென் மாவட்டத்தில் பனைபொருட்கள் அதிகம், அதனால் அந்நேரம் வருமானமும் அதிகம்

வியாபாரத்துக்கு பெயர் பெற்ற நெல்லை வியாபாரிகள், அந்நேரம் மக்களிடம் பணம் விளையாடுவதை கண்டும் இன்னொரு பக்கம் கோவில் விழாக்கள் நடைபெறுவதை கண்டும் ஆடிமாதம் தள்ளுபடி அறிவித்தார்கள்

அது ஆடி தள்ளுபடி என மெல்ல மெல்ல வளர்ந்தது, பின் நெல்லையர்கள் பல இடங்களுக்கு பரவி வியாபாரத்தில் ஜொலிக்க இன்று உலகெல்லாம் ஆடி தள்ளுபடி உண்டு

ஆம் அன்று தென்னக மக்கள் பணம் வந்தவுடன் தெய்வத்தினை தேடி சென்று நன்றி தெரிவித்தார்கள், மனம் உவந்து அளித்த கொடைகள் பின்னாளில் அதே மாதங்களில் நிலைபெற்றது, தொடர்கிறது

தென்னகத்தில் பல தெய்வங்களை வணங்கி வந்தாலும், இரு தெய்வங்களுக்கு அப்பகுதியில் சிறப்புகள் அதிகம்.

ஒருவர் சிலப்பதிகார காலத்திலே சேரநாட்டின் (கேரளம்) எல்லைக்கு காவல் தெய்வம் என அழைக்கபட்ட இசக்கி அம்மன், கேரளாவில் இன்றும் அம்மனே பிராதான காவல் தெய்வம்.

முற்காலத்திலே அப்பகுதியின் கேரள எல்லையான முப்பந்தல் இன்றும் என்றும் இசக்கியம்மனின் பிரதான கோயில்.

இன்னொருவர் சுடலைமாடன்.

இசக்கியம்மனாவது கேரளம் மற்றும் தென் தமிழக தெய்வம், ஆனால் நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளின் பிராதன காவல் அரசர் நிச்சயமாக சுடலைமாடன் சாமியே.

அவரின் பிரதானம் எனவென்றால் மகா உக்கிரமான சிவ அம்சமான அவர் இந்த பகுதிகளை மிகவும் நேசிப்பவர், மண்ணை பிரிய மனமில்லாதவர், வேறு எங்கும் செல்ல மாட்டார், அவ்வளவு பிரியம் அவருக்கு அந்த மண்ணின் மீது.

உலகில் வேறு எங்கும் அவரை காணமுடியாது, உலகினை விடுங்கள் தாமிரபரணிக்கு வடக்கே கூட கிடையாது.

நெல்லை,தூத்துகுடி,கன்னியாகுமரி பகுதிகளை தவிர எங்கும் செல்லமாட்டார். மிக மிக பிராதான் கோயில்கள் அவருக்கு இங்கு மட்டுமே உண்டு.

அங்கு எல்லா ஊர்களிலும் இருவருக்கும் அல்லது ஒருவருக்காவது கோயில்கள் உண்டு, ஊரின் மின்கம்பிகளை விட இவர்களின் ஆலயங்கள் அதிகமான ஊர்களும் உண்டு, எங்கும் வியாபித்திருப்பவர்கள், மக்களுக்கும் இவர்களின் மீது அவ்வளவு பக்தி, மரியாதை.

ஒரு விஷயத்தினை இங்கு கவனிக்க வேண்டும்

தமிழக மக்கள் ம‌க்கள் சாதாரமானவர்கள் அல்ல, 50பைசா மளிகையை கடைக்காரர் ஏமாற்றினால் கடையை மாற்றுவார்கள். அரசு சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றுவார்கள்

தொன்றுதொட்டு இன்றுவரை இந்த தெய்வங்களை கொண்டாடுகின்றார்கள் என்றால், நிச்சயமாக அந்த தெய்வங்களின் சக்தி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, வாழ வைக்கும் நம்பிக்கை.

அந்த தெய்வம் அவர்களை வாழவைத்துகொண்டிருக்கும் நம்பிக்கை

ஆம் ஆடிமாதம் அற்புதமானது, அம்மன் வழிபாட்டில் மனம் லயித்து ஏகபட்ட ஞானங்களை பெற வேண்டிய மாதம்

சந்திரனும் சூரியனும் இல்லாவிட்டால் உலகில் மழை இல்லை, மழை இல்லாவிட்டால் உயிர்களில்லை. நிலம் நீர் பட்டவுடன் துளிப்பது போல அதாவது உயிர் சக்தி என்பது மழையும் மண்ணும் கலந்தவுடன் வெளிபட்டு எல்லா உயிருக்கும் ஆதாரமான உணவினை உயிர்சக்தியாய் கொடுப்பது போல பெண்ணும் பெரும் சக்தி என்பதை சிந்துக்கும் மாதம் இது

ஆம் இயக்கும் பெரும் சக்தியே மழையாய் பொழிகின்றது அந்த மழை ஆறாய் ஓடிவந்து உலகுக்கு உணவூட்டுகின்றது, புல்முதல் மானிடர் வரை எல்லாருக்கும் உயிர்சக்தியாய் அது மாறிகொண்டே இருக்கின்றது, கடைசியில் எல்லா உயிர்சக்தியும் இறையிடம் தஞ்சமடைகின்றன‌

மழைபோல் நிலம் போல் ஆறுபோல் பெண்ணும் பெரும் சக்தி என பெண்களை போற்ற சொன்ன மதம் இந்துமதம், அந்த பெரும் உயிர்சக்திக்கு பெண் தெய்வ வழிபாட்டை கொடுத்து மானிட ஞானம் முதல் பிரபஞ்ச சக்திவரை பெற்று, மானிடம் தானும்வாழ்ந்து பித்ருக்கள் கடமையினை செய்து இன்னும் பல வகையில் மேன்மை அடைய இம்மாதத்தில் பெரும் ஏற்பாடுகளை செய்த மதம் இந்துமதம்

ஆடியில் செய்யவேண்டிய வழிபாடும் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களும் நிரம்ப உண்டு, நல்ல இந்துக்கள் அதை செய்யட்டும், இவ்வொரு இந்துவும் தான் யார் என்றும், தன் பாரம்பரியம் எது என்றும் உணரும் பட்சத்தில் தேசம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்

ஒவ்வொரு இந்துவும் ஆடிமாதத்தில் தங்கள் கடமையினை செய்யட்டும், பிரபஞ்சம் அருள் புரியட்டும், பாரதம் உய்யட்டும்