குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 41
“கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து
புலனொருங்கப் பொய்கடிந் தாரும் – கொலைஞாட்பின்
மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண்மறலி
தும்பை முடிச்சூ டினும்”
“கலன் இழிந்த கற்புடை பெண்டிர்” என்பது அணிகலன்களை இழந்த கற்புடை பெண்கள் என்றாகின்றது. அணிகலன் என்றால் தாலி முதலான கலன்களை இழந்தவர்கள் என ஒரு பொருளும், பெண்களுக்கே உரித்தான நகை ஆசையினையும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என நான்கையும் கடந்த பெண்களும் என்ற பொருளில் வரும் வரி இது
அதாவது இழப்பதற்கு இனி ஏதுமில்லை எனும் நிலைக்கு வரும் பெண்கள், ஆசையினையும் அச்சத்தினையும் கடந்த நிலையில் இருக்கும் பெண்களும்
“ஐந்து புலன் ஒடுங்க பொய்ங்கடிந்தோரும்” ஐந்து புலன்களையும் அடக்கி பொய்யான உலக வாழ்வை வெறுத்தோரும்
“கொலைநாட்பின் மெய்ம்புடை வீரரும்” அதாவது வாழ்வா சாவா எனும் நிலையில் இருக்கும், போராடாவிட்டால் இனி உயிர்தப்பமுடியாது என்ற நிலையில் இருக்கும் வீரரும்
தும்பை பூ சூடி எமனே வந்தாலும் போரிட தயங்கமாட்டார்கள் எனபது பாடலின் பொருள்
அதாவது எல்லாம் இழந்த நிலையில் இருக்கும் பெண்களும், ஆசைகளை வென்ற ஞானியரும், களத்தில் மனவலிமையுடன் நிற்கும் வீரரும் சாவை கண்டு அஞ்சமாட்டார்கள் என்பது குமரகுருபரர் சொல்லும் போதனை
கண்ணகி கதை, சாவித்திரி கதை, சிவபெருமானிடமே சீறிய நக்கீரர் என பலரின் வாழ்வினை சீர்தூக்கி பார்த்தால் இந்த உண்மை விளங்கும்