அறிஞர் அண்ணா நினைவு தினம்

Image may contain: 1 person, smiling, close-up
தோற்றம் :  15 – 09 – 1909  ::  மறைவு : 03 – 02 – 1969

 

பன்னீர் செல்வம் முதல்வராகவும் , சசிகலா பவுடர் பூசிகொண்டு அடுத்த முதல்வராக தயாராகிகொண்டிருப்பதும் அண்ணாவின் சாதனைகளில் ஒன்று என்பதுதான் இன்றைய அவரின் நினைவு நாளில் கண்முன் நிற்கின்றது.

சினிமாவினை அரசியலில் கலக்கவிட்ட அவரின் பெரும் தவறுதான் இன்று தமிழகத்தை சீரழித்து நிற்கின்றது

ஆனாலும் அந்த நாளை நினைத்து பார்க்கும்பொழுது கலைஞர் கண்முன் வருகின்றார்

அப்பொழுது அவருக்கு 45 வயதுதான், கட்சியில் அவருக்கு முன் பெரும் வரிசை இருந்தது, சீனியாரிட்டிபடி முதல்வராவது என்றால் இன்றும் கலைஞர் தலைவராக இருக்கமாட்டார், காரணம் அன்பழகன் இவருக்கு சீனியர்

அண்ணாவிற்கு புற்றுநோய், இனி நீண்டநாளைக்கு தாங்கமாட்டார் என அமெரிக்க டாக்டர் மில்லர் தலையசைத்தபின் கலைஞர் அப்பொழுதே சுதாரித்தார்

அண்ணா உடல்நலம் குன்ற குன்ற தலைவர் பதவி நோக்கி நகர்ந்தார் கலைஞர், இதே பிப்ரவரி 3ம் தேதி அவர் இறந்ததும் எல்லோரும் திகைத்து நிற்க, மிக உருக்கமான கவிதை பாடி தமிழகத்தை தன் பக்கம் திருப்பி நின்றார் கலைஞர்

எப்படி சாத்தியம்?

எதனை பேசுவது? எப்படி பேசுவது? குறிப்புகள் இல்லையே என மற்றவர் எல்லாம் தயங்கி நிற்க கலைஞருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?

அண்ணா மறைவதற்கு முன்பே அக்கவிதையினை மிக உருக்கமாக எழுதியிருந்தால் கலைஞர். அவ்வளவு விழிப்பு, அவ்வளவு முன்னெச்செரிக்கை

எப்படியும் அண்ணா இருக்கபோவதில்லை, ஆனால் இருக்கபோகும் தான் தன் இருப்பினை எப்படி தக்கவைத்துகொள்வது எனும் வேகமான சிந்தனை

இந்த விழிப்பும், துடிப்பும்தான் கலைஞர். அப்படிபட்ட கலைஞர் இன்று இரக்கமற்ற காலத்தின் பிடியில் சிக்கி இருக்கும் பொழுது காண சகிக்காத சோகம் வருகின்றது.

அன்றல்ல, இன்றல்ல என்று கேட்டாலும் மிக உருக்கமாக அமைந்த வரிகள் அவை. அதுவும் “எதையும் தாங்கும் உன் இதயத்தை கொடு அண்ணா, நான் வரும் பொழுது கொண்டு வருகின்றேன்” என முடிக்கும்பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது

(மனிதர் கேட்டது அண்ணாவின் இதயமா அல்லது அண்ணாவின் நாற்காலியா என்பது பெரும் விவாததிற்குரியது, காரணம் அவரின் வரிகள் எப்பொழுதும் பல அர்த்தம் கொண்டவை

உண்மையில் அவர் கேட்டது அண்ணாவின் நாற்காலி என்பதுதான் காலம் காட்டியது)

அதன் பின் கலைஞரின் அசாத்திய சித்துவிளையாட்டில் எல்லா பெரும் தலைகளும் குழம்பி நிற்க, பல ஒதுங்க, சில வீழ மிக அசால்ட்டாக 45 வயதில் முதல்வரானார் கலைஞர்

இதற்கு விதை போட்ட நாள் தான் இந்த பிப்ரவரி 3

அண்ணாவின் நினைவு நாளான இன்று பல விசித்திரம் நடைபெறும்

மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழர் சுயமரியாதை என முழங்கியவர் அண்ணா, ஆனால் இன்று பலருக்கும் போல டெல்லிக்கும் அடிமையான முதல்வர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்துவார்

மதுகடைகளை திறந்தால் ரூபாய்க்கு 3 படி அரிசி வழங்கலாம், ஆனால் ஒரு குடும்பம் உண்ண பல குடும்பத்தை அழிக்கும் அந்த பாவசெயலை செய்யமாட்டேன் என கண்ணீர்விட்ட அண்ணாவிற்கு மிடாஸ் சாராய ஆலை அதிபர் சசிகலா அஞ்சலி செலுத்துவார்

பெரியார் வாரிசு தேடுகின்றார், நம் இயக்கத்தில் வாரிசு முறை இல்லை இது ஜனநாயக கட்சி என அவர் தொடங்கிய கட்சியில் வாரிசு எனும் ஒற்றை தகுதியில் கட்சியினை கைபற்றிய மு.க ஸ்டாலினும் அஞ்சலி செலுத்துவார்.

கட்சியிலும் ஆட்சியிலும் குடும்பத்தாருக்கு இடமில்லை என்றவர் அண்ணா, இன்று பாருங்கள் மன்னார்குடியே மொத்தமாக அண்ணா சதுக்கம் வந்தாலும் வரும்.

இதனை எல்லாம் மேலே இருந்து பார்த்து தலையில் அடித்துகொண்டிருப்பார் அண்ணா

அண்ணாவிடம் ஒரு சுபாவம் இருந்திருக்கின்றது, அது எல்லோரையும் அணைத்து செல்லும் அமைதியான சுபாவம். ஆனால் தன் கண்ணீரையும் மீறி வெளியே சென்றவர்களை அவரால் தடுக்க முடியவில்லை மற்றபடி அவர் ஒரு சகல ஜீவன்களையும் அனுசரித்த ஒரு ஆத்மா

ராமசந்திரன் இன்னபிற பிம்பங்களை அவர் அப்படித்தான் விளைவுகளை கணிக்காமல் வளர்த்திருக்கின்றார். எப்படியோ திராவிட தீயினை எரிய வைத்திருக்கின்றார்.

உண்மையில் தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பதை அவரே நம்பவில்லை, காமராஜரை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை

ஆனால் காமராஜர் தோற்றதுமே அண்ணாவிற்கு கவலை உண்டாயிற்று, காமராஜரை விட சிறந்த ஆட்சியினை மக்கள் தங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் என்ற கவலையும் உண்டாயிற்று

திராவிட கட்சிகளில் அப்படி கவலைபட்ட ஒரே தலைவர் இன்றுவரை அண்ணா மட்டுமே, அதன்பின் யாருக்கும் அந்த கவலை இல்லை.

அவரின் தம்பிகள், தம்பிகளின் தங்கங்கள், தங்கைகள், தங்கைகளின் தங்கைகளின் ஆட்சி எப்படி இருந்தது என்பது நம் கண் முன்னே தெரிகின்றது

ஒருவர் மவுண்ரோடு முதல் மண்கட்டை சுவர் வரை அண்ணா நாமம் சூட்டினார், ஆனால் அண்ணா கொள்கைகளை மறந்தார்

இன்னொருவர் அண்ணாயிசம் எனும் கொள்கை வைத்திருந்தார், அது என்ன என்பது கடைசி வரை அவருக்கே புரியவில்லை, பின் எப்படி நமக்கு புரியும்

அண்ணாவின் தங்கைகள் , தங்கையின் அடிமைகள் ஆளும் ஆட்சி இன்றைய காலம், என்ன ஆள்கின்றார்கள் என்பதை கண்டெய்னர்களில் கண்டாலே போதும்.

ஆனால் தன்னால் முடிந்தமட்டும் நல்லாட்சியினை கொடுத்த அண்ணாவிற்கு ஆயுள் குறைவு, தமிழக தலைவிதி அப்படி

இந்த நூற்றாண்டின் பெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன், அவன் எதனையோ ஆராய்ச்சி செய்ய போய் அணுகுண்டு தத்துவத்தை உலகிற்கு சொன்னான். அது ஹிரோஷிமாவில் வெடித்தது

எவ்வளவு பெரும் தவறை செய்துவிட்டோம் என வருந்தியே மீதி வாழ்நாளில் அழுது செத்தான் ஐன்ஸ்டீன்

ஏதோ திராவிடம், அது இது என சொல்லிகொண்டிருந்த அண்ணா கூட்டத்திடம் ஆட்சி கிடைத்து, அந்த 1.5 வருடத்தில் தன் கட்சிக்காரர்களும், அவர்களின் அட்டகாசமும் , ஊழலும் அவருக்கு அச்சத்தை கொடுத்தன‌

ஆட்சியின் சிரமம் என்ன? தமிழக எதிர்காலம் என்ன? என அவர் சிந்தித்தபொழுதுதான் எவ்வளவு பெரும் தவறினை செய்துவிட்டோம், பெரும் சிக்கலுக்கு வழிகோலிவிட்டோம் என்பது அவருக்கு புரிந்தது

பெரியார் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதும் புரிந்தது, காமராஜர் போன்றோரின் நிலையும் புரிந்தது

கடைசி காலங்களில் இவற்றை எல்லாம் எண்ணி மனம் வருந்தித்தான் இருந்தார் அண்ணா

அணுகுண்டினை கொடுத்துவிட்டு அழுத ஐன்ஸ்டீனும், திராவிட தீயினை எரிய செய்து பின் அழுத அண்ணவிற்கும் வித்தியாசமில்லை

அணுகுண்டினால் பாதிக்கபட்டவர்கள் 10 லட்சம் ஜப்பானியர் என்றால், இந்த திராவிட தீயால் நாசமாய் போனது 6 கோடி தமிழர்கள், இன்னும் பாதிப்பு தீரவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

உண்மையில் அண்ணா செய்தது ஒரு புரட்சி, இந்தியாவின் முதன் முதலாக ஒரு மாநில கட்சி மாநில ஆட்சியினை பிடித்த அதிசயத்தை அவர் நிகழ்த்தினார். அதுவும் காங்கிரசை வீழ்த்தியது பெரும் விஷயம்

அவரின் எழுத்தும் பேச்சும் பண்பான அணுகுமுறையும் அவருக்கு அறிஞர் என்ற பட்டத்தை அளித்ததில் ஆச்சரியமில்லை.

ஆட்சியிலும் கட்சியிலும் தன் குடும்பத்தாரை விலக்கி வைத்தது, ஒரு பைசா ஊழல் என குற்றசாட்டு வராதது, ஆடம்பரமில்லா எளிமை என அவருக்கு பெரும் அடையாளம் உண்டு

ஆனால் 1.5 வருடம் ஆண்ட அண்ணா ஒன்றே ஒன்றை செய்திருக்கலாம்.

” எனக்கு பின்னால் என் கட்சி இந்த தமிழகத்தை கெடுத்துவிடும் என்பதை அனுபவ பூர்வமாக கண்டுவிட்டேன், அதனால் நான் இறந்த பின் என் கட்சியினை கலைத்துவிடுங்கள், என் பெயர் தாங்கி வரும் எவனுக்கும் வாக்களிக்க வேண்டாம்

அனைத்து வகையான சுயநலவாதிகளும், வஞ்சகர்களும் என்பின்னால்தான் இருக்கின்றார்கள். அதனால்தான் சொல்கிறேன் எனக்கு பின்னால் கட்சி கலைக்கபடும், என் தம்பிகள் நல்லவர்கள் அல்லவே அல்ல, அவர்களை புறக்கணியுங்கள்”

இப்படி ஒரு அறிவிப்பினை மட்டும் அறிவித்துவிட்டு இறந்திருப்பாரானால் இன்று தமிழகம் எங்கோ சென்றிருக்கும்

இப்பொழுது இருக்கும் பவுடர் மாமி, அடிமை சாமி போன்ற இம்சைகள் எல்லாம் வந்திருக்காது.

தமிழகத்தில் யாரெல்லாம் அரசியல் பக்கமே வந்திருக்க கூடாதோ, யாரெல்லாம் தமிழகத்தை விட்டே விரட்டபட்டிருக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் ஆள வழிசெய்த அதாவது தன்னை அறியாமல் பெரும் பாவத்தை செய்தவர் அண்ணா

அந்த வருத்ததுடன் அண்ணாவின் நினைவு நாளை கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.