தமிழகத்தில் பெண் சுதந்திரமும் சர்வதேச மகளிர் தினமும்..

Image may contain: 2 people, people standing

பெண்களிடம் மிக பெரிய பொறுப்பினையும் கொடுத்து, அவர்கள் ஊழல் செய்யவும் அனுமத்தித்தோடு மட்டுமல்லாமல்..

இன்னும் அவர்களை அம்மா, சின்னம்மா, இளவரசியம்மா என வணங்கும் தமிழகத்தை விடவா பெண்களுக்கு உலகில் இன்னொரு இனம் மரியாதை கொடுத்துவிட்டது?

நாட்டின் உச்சநீதிமன்றமே ஜெயா, சசிகலா, இளவரசி, கனிமொழி என தமிழக பெண்களை விசாரித்திருக்கின்றது

பெரும் பொறுப்பு கொடுக்காமலா அவர்கள் மீது குற்றம் சாட்ட முடியும்?

இதனை விடவா பெண்களை உலகம் பெருமைபடுத்திவிட்டது?

அமெரிக்காவில், ரஷ்யாவில், ஜப்பானில், தென்கொரியாவில், அரேபியாவில் எங்காவது இப்படி ஒரு காட்சி உண்டா?

பதவிக்கு வருமுன்னே ஹிலாரி ஊழல்வாதி என விரட்டியவர்கள் ஆணாதிக்க அமெரிக்கர்கள், நாமோ ஊழல் முத்திரை குத்தபட்டபின்னும் 3 முறை முதல்வராக்கியிருக்கின்றோம்

ஆக பெண்ணுரிமையினை மதித்தது அமெரிக்காவா? தமிழகமா?

ஆங்சான் சூகி எனும் பெண்ணை பெண் என்றும் பாராமல் வீட்டு சிறையில் வைத்தது பர்மா அரசு, மனிதர்களா அவர்கள்?

இங்கு 122 எம் எல் ஏக்களை ஒரு பெண்மணியால் கூவத்தூரில் 10 நாட்கள் அடைத்து வைக்கும் அளவிற்கு பெண் சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கின்றது

ஒரு பெண் அதிபரும் அவர் தோழியும் ஊழல் செய்தார்கள் என பெரும் கிளர்ச்சி வெடித்தது தென்கொரியாவில்

இங்கோ அப்படி நிரூபிக்கபட்டும் அரசு விழாக்களில் அவர்கள் படம் இடம்பெறுகின்றது, இந்த பெண் சுதந்திரம் எந்த நாட்டில் உண்டு?

ஒரு பெண் சமாதிக்குள் இருந்து வோட்டு வாங்குகின்றார், ஒரு பெண் சிறையிலிருந்தே ஆட்சி நடத்துகின்றார்

குற்றவாளி என ஆண் ஆதிக்க கோர்ட் சொன்னாலும், கொஞ்சமும் வருத்தமின்றி அவர்கள் பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்கள்தான் எங்கள் வழிகாட்டிகள், தலைவர்கள் என கொண்டாடும் சமூகம் எங்காவது உண்டா?

சேலைகளும் நகைகளும் சொத்தும் எப்படி வந்தது இது தவறு என நீதிபதி சொன்னால், இரு பெண்கள் 10,500 சேலை வைக்காமல் வேட்டி சட்டையா வைப்பார்கள் என பதில் சொல்கின்றது தமிழகம்

ஆண்டாண்டு காலம் அடிமைபட்ட பெண் இனம் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் பங்களா கட்டி ஆண்டால் என்ன தவறு என புது புரட்சி கேள்வி கேட்டது தமிழகம்

பெண்கள் பாரில் அட்டெண்டராக இருந்த காலத்தை, பெண்கள் சாராய ஆலை நடத்தலாம் எனும் அளவிற்கு மாற்றி புரட்சி செய்திருப்பது தமிழகம்.

இவ்வளவு நிலபுலன்கள் எப்படி வந்தது என்றால், ஏன் நிலகிழார்கள் இருக்கும் மாநிலத்தில் நிலக்கிழவிகள் இருக்க கூடாதா? இது பெண்விடுதலை என சொல்கிறது தமிழகம்

இத்தனை தொழில்கள் எப்படி என கேட்டால், அம்பானி எனும் ஆண் சொத்துகுவிக்கும்பொழுது சசிகலா எனும் பெண் குவிக்க கூடாதா? இது புரட்சி என சொன்னது தமிழகம்.

இதுவல்லவா பெண் உரிமை மலர செய்த புரட்சி பூமி, இது அல்லவா பாரதி சொன்ன பெண் விடுதலை பூமி

உலகிற்கே அந்த பெருமையுடன் மகளிர் தின வாழ்த்தினை சொல்ல தயாராகின்றது தமிழகம்

சிறைபட்ட சிங்கமும், மறைந்துவிட்ட தங்கத்தின் முகங்களோடு உலகெல்லாம் மிக பெருமையாக தமிழகம் சொல்கின்றது

இந்த அளவு அதி உச்ச விடுதலையினை பெண்களுக்கு கொடுத்த சமூகம் எங்காவது இருக்கின்றதா?

இல்லை, இல்லவே இல்லை

அதனால் இத்தமிழகமே மகளிர்தின வாழ்த்தினை உலகிற்கு முதலில் சொல்ல உரிமை பெற்றிருக்கின்றது.

இன்றைய தேதியில் உலகில் எந்த இனத்திற்கும் மகளிர் வாழ்த்து சொல்ல உரிமையே இல்லை, நமக்கு மட்டுமே இருக்கின்றது

பெண்களை ஒரு இனம் வாழவைத்தால் இப்படி தமிழகத்தை போல வாழவைக்க வேண்டும்

ஹேப்பி விமன்ஸ் டே…