காமராஜரும், கக்கனும் முதல் வகை

Image may contain: 1 person, indoor

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், காமராஜர் ஆட்சியில் பஞ்சம் இருந்தது அவர் அரிசி கொடுக்கவில்லை, கக்கன் ஒரு கொடுங்கோல் அமைச்சர் என பல கதைகளை கிளப்புகின்றார்கள்

அது சுதந்திரம் பெற்றிருந்த சமீபகாலம், இந்தியாவில் முறையாக எதுவுமில்லை, சுரண்டிவிட்ட பாண்டமாக வெள்ளையன் இந்தியாவினை விட்டுசென்றிருந்தான்

இந்தியா என்றெல்ல, மொத்த உலகமே 2ம் உலகப்போரில் கொடுமையில் பஞ்சத்தில்தான் இருந்தது, எல்லா நாடும் மூச்சுவிட ஆரம்பித்ததே 1970க்கு பின் தான்

அந்த பஞ்சம் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்தது, சீனாவில் இருந்தது, ஜெர்மனியில் இருந்தது, இன்னும் ஏராள நாடுகளில் இருந்தது

சீனாவின் மாவோ அந்த பஞ்சத்தில் தோற்றதும், அதனை மறைக்க இந்தியா மீது படையெடுத்ததும் வரலாற்று பக்கங்கள்

ரஷ்யா உக்ரைனை வைத்து பஞ்சம் தவிர்த்துகொண்டிருந்தது. ஐரோப்பா போரின் இடிபாடுகளிலிருந்து எழும்பமுடியாமல் தவித்தன. போர் தொடாத அமெரிக்கா மட்டுமே தெம்பாக இருந்தது

1945 முதல் 1970 வரையான காலங்கள் உலகின் மிக கொடுமையான காலங்கள்.அதற்கு இந்தியா மட்டும் தப்பிவிடுமா?

அந்நேரம் இந்தியாவினை இயற்கையும் வஞ்சித்தது, நம்மிடம் உணவு உற்பத்தி இல்லை, பெரும் அணைகட்டுகளும் இல்லை

இயற்கை விவசாயம் அன்றிருந்த மக்களுக்கு போதுமான விளைச்சலை கொடுக்கவில்லை, பற்றாகுறை இருந்தது. எப்படி சமாளிப்போம் என்ற அச்சம் இருந்தது.

வெள்ளையன் இருந்தவரை பர்மா முதல் எல்லா நாடுகளிலிருமிந்து அரிசி கொட்டினான், அவன் சென்றபின்பு குறிப்பாகா பாகிஸ்தானும், வங்கமும் பிரிந்தபின்பு இந்தியாவில் அரிசி கோதுமை சிக்கல் வந்தது, இது வரலாறு.

அந்த இக்கட்டான நேரம்தான் காமராஜர் முதல்வராகவும், நேரு பிரதமராகவும் இருந்தார். வெட்கத்தை விட்டு சொல்லலாம், கோதுமைக்கு நேரு பிச்சைதான் எடுத்தார், காமராஜரின் தமிழகமும் வறட்சியில்தான் இருந்தது

அந்த பஞ்சத்தில் அம்மனிதன் என்ன செய்துவிட முடியும்? பங்கீட்டுமுறையில்தான் கொடுக்கமுடியும்.

எல்லா மாநிலத்திலும் இந்த கொடுமை இருந்தது, நாம் மட்டுமல்ல.

அப்பொழுதுதான் அரிசி கட்டுப்பாடு முதலானவை இருந்தன, அதில் அனுபவம் பெற்றபின்புதான் அணைகளும், விவசாய புரட்சியும், பசுமை புரட்சியும் தொடங்கபட்டன‌

அவர்கள் போட்ட அந்த அடித்தளத்தில்தான் இன்று பஞ்சம் நீங்கியிருக்கின்றது,

அந்த உலகளாவிய பெரும் மந்த நிலையினை, மொத்த இந்திய பஞ்சத்தை மறைத்து, காமராஜர் அரிசியினை குறைத்தார் என சொல்பவனை எல்லாம்

படகில் ஏற்றி கச்சதீவினை தாண்டி அனுப்பவேண்டும், படுபாதகம் இது

இன்னொரு கும்பல் கக்கனை குறைசொல்ல கிளம்பிற்று, அவர் அமைச்சராக இருக்கும் பொழுது இந்தி எதிர்ப்புபோரில் சுட சொன்னாராம்

இந்தி எதிர்ப்பினை திமுக பெரும் எடுப்பாக எடுத்தது, அது குமாரசாமி முதல்வராக இருந்தபொழுதே கல்லகுடியில் 3 பேரை சுட்டுத்தான் முடிவுக்கு வந்தது

பின் பக்தவச்சலம் ஆட்சியில் அது பெரிதாக வெடித்தது, கட்டுகடங்காத கலவரம், ரயிலை மறித்தல், தண்டவாளங்களை பிடுங்குதல் என இல்லாத அழிச்சாட்டியம் செய்தால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கை என அரசுகள் களமிறங்கத்தான் செய்யும்

வடக்கே நக்சல்பாரி என்ற கிராமத்தில் நடக்கவில்லையா? குஜராத்தில், மேற்குவங்கத்தி, பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் நடக்கவில்லையா?

அரசு அதன் கடமையினை செய்தது

கக்கன் என்ன அண்ணாமலை பல்கலைகழக மாணவன் தன்னை டாக்டர் என அழைக்கவில்லை என்பதற்காக போலிசை ஏவினாரா?

இல்லை மகனின் ஆதிக்கத்திற்காக கட்சி தொண்டனை வாக்கிங் செல்லும்பொழுது பலிகொடுத்தாரா?

இல்லை என் வாரிசு யார் என சொல்லி களபேரத்தில் 3 பேரை எரித்தாரா?

என்ன செய்தார் கக்கன்??

அந்த கக்கன் எப்படிபட்ட கக்கன்? தான் நோயுற்றபொழுது அரசு மருத்துவமனையில் ஏழைகளோடு ஏழையாக படுத்திருந்த கக்கன், அந்த அளவு அவருக்கு வறுமை இருந்தது,

காமராஜரின் வறுமை சோ ராமசாமியே சொன்னது,டெல்லி விருந்தினர்களை காமராஜர் பணக்காரன் வீட்டுக்கு அனுப்புகின்றார் என்ற குற்றசாட்டு எழுந்த நேரம் அது

“டெல்லில இருந்து யார் வந்தாலும் வேற பணக்காரன் வீட்டுக்கு தங்க அனுப்புறார்னு சொல்றாங்க, என் வீட்ல சாப்பிட என்ன இருக்கு? மாசம் ஒருக்கா 2 முட்டை, அதான் இங்க விருந்த்துண்ணேன்..

ஆட்டுகறி, ஆத்தா காலத்துல அவகுடுத்த உப்புகண்டத்தோட போயிட்டுண்ணேன்….

என்னைக்காவது என் கூட யாராவது இந்த வீட்டுல சாப்புட்டு பாத்திருக்கியா?, யாரையும் சாப்பிட கூட கூப்பிட கூட முடியாம இருக்கேண்ணேன்..

இவ்வளவு நாள் இந்த வீட்டுக்கு நீ வாரல்ல, என்னைக்காவது உன்ன இட்லி சாப்பிட கூப்டிருக்கேனா, காபி கொடுத்திருக்கேனா? சொல்லு.

இங்க வசதி இவ்வளவுதாண்ணேன்..”

கண்ணீர் விட்டார் சோ ராமசாமி, அவர் வாழ்க்கையில் அழுத ஒரே இடம் இதுதான். சோ என்ன, நமக்கே கண்ணீர் வருகின்றது

மக்கள் கொடுத்த சில்லறைகளை கூட சேர்த்து கட்சிக்காக இடம் வாங்கிகொடுத்துவிட்டு செத்தவன் காமராஜர்

ஏழையாக வாழ்ந்து, பரம ஏழையாகவே செத்தார்.

அப்படிபட்ட தியாகிகள் வாழ்ந்த நாடு இது

எழுதுவதாக இருந்தால், இரண்டாம் உலகபோரினை தொடர்ந்து எழுந்த உலகளாவிய கொடும்பஞ்சமும், இந்தியா போன்ற நாடுகளை அவன் பிரித்து போட்டு செய்த வஞ்சகம் பற்றியும் எழுதுங்கள்

நேரு கோதுமைக்கு பிச்சை எடுத்த கதையும், பர்மா அரிசிக்கு தமிழக காமராஜர் பிச்சை எடுத்த கதையும் எழுதுங்கள்,

வட்ட செயலாளரே கோபுரம் கட்டும் நாட்டில் , அமைச்சன் கக்கன் மருத்துவமனை பாயில் படுத்திருந்ததை எழுதுங்கள்

திமுகவின் அரசியல் வேறு, அதன் அடிப்படை வேறு

அதனை சொல்ல வந்து, காமராஜரின் மீதும், கக்கனின் மீதும் பழிபோடாதீர்கள்

அவர்கள் வறுமைபட்டு நமக்கு சோற்றுக்கு வழிகாட்டினார்கள், படிக்காத அவர்கள் நம்மை எல்லாம் படிக்க வைத்தார்கள். தொழில் இல்லா அவர்கள் நமக்கெல்லாம் தொழிற்சாலை கொடுத்தார்கள்

அவர்கள் கைகாட்டினார்கள் நாம் நடந்தோம், அவர்கள் படிக்கல் ஆனார்கள் நாம் ஏறினோம், அவர்கள் எரிந்தார்கள் நாம் வெளிச்சம் பெற்றோம்.

அந்த தியாக தீபங்களை கொச்சைபடுத்தாதீர்கள்.

கடும் வறுமையில் குடும்பத்தை நடத்துபவன் தான் நல்ல தியாக‌ தலைவன், வருமானம் கொட்டும் நேரத்தில் நடத்துபவன் தியாகி அல்ல‌

காமராஜரும், கக்கனும் முதல் வகை

திமுகவின் சாதனைகள் வேறு, திமுகவின் கொள்கைகள் வேறு

அதற்காக இந்த உத்தமர்களை பழிக்காதீர்கள் , அப்படி செய்தால் அந்த பழி ஒருகாலமும் நம்மை மட்டுமல்ல, நம் தலைமுறையினையும் விட்டு நீங்காது

அவர்களை நினைக்க கூட வேண்டாம், தயவு செய்து பழிக்காதீர்கள்

அப்படி மீறி பழிக்கவேண்டுமென்றால், திமுகவிலோ அதிமுகவிலோ அப்படி ஒருவன் பதவியில் இருந்த போதும், பதவி சென்ற பின்னும் வறுமையில் நாட்டுக்காக வாழ்ந்து, வறுமையில் செத்தான் என நிரூபித்துவிட்டு வாருங்கள்

அப்படி ஒருவனை உங்களால் காட்டமுடியுமா?

ஏழையாக அரசியலுக்கு வந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே செத்த ஒரே ஒரு திராவிட கட்சிக்காரனை காட்டிவிட்டு பேசுங்கள்

சரித்திரத்தை , அக்காலநிலையினை படித்துவிட்டு பேசுங்கள், சும்மா சீமான் போல அள்ளிவிடாதீர்கள்

திமுகவிலும் சீமான்கள் இருப்பதுதான் கொடுமை

ஒன்றே ஒன்றிற்கு பதில் சொல்லமுடியுமா?, அப்படி எல்லாம் காமராஜரும், கக்கனும் சுய்நல வாழ்க்கை வாழ்ந்திருந்தால் காமராஜர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் சொன்னது என்ன? என்பதை நினையுங்கள்

“காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்காக பெரிதும் மனம் வருந்துகின்றேன்..” என பகிரங்கமாக தன் மனதினை திறந்து சொன்னார் கலைஞர்.

ஏன் வருந்தினார்? காமராஜன் என்ற மனிதன் ஆட்சியில் சந்தித்த சிக்கல் அவருக்கு முதல்வர் ஆனபின் புரிந்திருக்கின்றது. அவர் அருமை அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்திருக்கின்றது.

அதனை மனதில் வைத்துவிட்டு எழுதுங்கள்