வி வி மினரல்ஸ் அண்ணாச்சி….
நெல்லை, குமரி ஆட்சியர்களுக்கு கடந்த 30 வருடமாக பெரும் சிக்கலாக இருப்பது அந்த கனிம மணல் விவகாரம்
30 வருடமாக அண்ணாச்சி அங்கு மாபெரும் சக்தி. சாதி பலம், பண பலம், தேரிக்காட்டு பலம் என எல்லாவற்றிலும் வளைய வருபவர் அவர்.
இன்றைய தேதியில் அவர்தான் தென்னகத்து ராஜா, அவரின்றி அணுவும் அசைவதில்லை. அவர் கட்டுபாட்டினை மீறி அப்பகுதியில் வருபவை சூரியனும், காற்றும்
மற்றபடி எல்லாம் அவரே, சகலமும் அவரே.
அங்கு எல்லா தொழிலிலும் அவரே அதிபர்,அதிபர் என்று கூட சொல்லமுடியாது, கிட்டதட்ட அரசர்.
காய்கறி கடை, சலூன் கடை மட்டும் இல்லாதது போல் தெரிகின்றது.
உறுதியாக சொல்லலாம் அவர் இவ்வளவு வளர பெரும் காரணம் அதிமுகவும், மறைமுக திமுகவும்
முன்பு ஜோதி நிர்மலா எனும் கலெக்டர் மட்டுமே துணிந்து நடவடிக்கை எடுத்தார், அவருக்கு கிடைக்கவேண்டிய டிரான்ஸ்பர் உடனே கிடைத்தது, அன்னார் சென்றுவிட்டார்
அவ்வப்பொழுது விவகாரம் கிளம்பும், பின் அடங்கும். எந்த எதிர்ப்பும் அன்னாரை ஒன்றும் செய்யமுடியவில்லை, செய்யவும் செய்யாது, அவரின் ஆற்றல் அப்படி
டாடாவிற்கே டாட்டா காட்டியவர் அல்லவா?
மைக்கேல் ராயப்பன் அதிமுகவிற்கு தாவிய கோபத்தில் அண்ணாச்சியினை சீண்டிய ஒரே அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே
இன்றுவரை அவரை சீண்டிய ஒரே தலைவர் அவர்தான்,
விஜயகாந்த் அவரை சீண்டியபின்னர் சீமானின் வந்தேறி கோஷம் வலுபெற்றது, இப்பொழுது விஜயகாந்த தோற்றதினால் வாபஸ் ஆகிவிட்டது. சீமான் அப்படித்தான்
ஊரெல்லாம் இயற்கை வளம் போகிறது என ஒப்பாரி வைப்பவர், திசையன்விளை பக்கம் சென்றால் மட்டும் அப்படியே பம்மிவிடுவார்
ஆக அண்ணாச்சியினை சீண்டி, சீமானுக்கு தமிழின உணர்வினை விஜயகாந்த் ஊட்டியிருக்கின்றார்
இப்படி எந்த சக்தியாலும் அசைக்கமுடியாத அண்ணாச்சிக்கு இப்பொழுது சிக்கல், நெல்லை கலெக்டர் வடிவில் வந்திருக்கின்றது
தாதுமணல் விவகாரம் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், பல குவாரிகள் மூடபட்ட நிலையில் அண்ணாச்சியின் அலுவலகம் அத்துமீறி கட்டபட்டிருக்கின்றது, அதனை 15 நாட்களுக்குள் இடிக்காவிட்டால் அரசே இடிக்கும் என சீறுகின்றார் கலெக்டர்
அது அரசுக்கு மிகுந்த வருமானம் இழப்பாம்
எது? ஓணான் கூட முட்டையிட தயங்கும் அந்த பொட்டை காட்டில் அண்ணாச்சி கட்டியிருக்கும் கட்டடம் அரசுக்கு வருமான இழப்பாம், 2 வாரத்தில் இடிக்கவேண்டுமாம்
ஆனால் ஜக்கி சாமியாரும், காருண்யா கோஷ்டியும் எப்படி அரசு நிலங்களை பட்டா நிலங்களாக்கினர் என்பதை பற்றியெல்லாம் கேட்க கூடாது
அண்ணாச்சி மணல் வியாபாரத்தில் செய்ததெல்லாம் அரசுக்கு இழப்பு அல்ல, மாறாக பொட்டை காட்டில் கட்டிய கட்டடம்தான் வருமான இழப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டவேண்டுமென்றால் நெல்லையில் எத்தனையோ கால்களை, குளங்களை, சாலைகளையே காணவில்லை, அதனை எல்லாம் மீட்கவேண்டும், ஆனால் கலெக்டர் செய்யவில்லை, மாறாக நடு காட்டில் ஆக்கிரமிப்புகளை மீட்கின்றார்
கலெக்டரின் நடவடிக்கை சரியாக இருக்கலாம், ஆனால் அவர் சொல்லும் காரணம் சிரிப்புதான் வருகின்றது.
எங்கோ ஏதோ முடிவெடுத்து, எதற்கோ காய்கள் நகர்த்தபடுகின்றன.
முன்பெல்லாம் சீறிகொண்டிருந்த சசிகலா புஷ்பா, இப்பொழுது பன்னீரும், தீபாவும் போட்டு தாக்கும்பொழுது அமைதியாக இருப்பதும் மகா ஆச்சரியத்தில் ஒன்று.
ஏதோ அரசுக்கும் அவருக்கும் புகைச்சல் என்பது மட்டும் புரிகின்றது, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை
மற்றபடி 16 வருடம் ஆளும் அதிமுக அரசிற்கு, நேற்றுதான் ஆக்கிரமிப்பு பற்றிய அக்கறை வந்தது என்பதெல்லாம் குழந்தை கூட நம்பவா செய்யும்?
என்ன நடக்கும் என்பது தெரியாது, கலெக்டர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கின்றார், அதற்குள் நீதிமன்றத்தில் நியாயம் கேட்டுவிடுவார் அண்ணாச்சி
இடிப்பதெல்லாம் சாத்தியமில்லை, ஆனால் அவரை முறைக்க தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் புரிகின்றது
முறைக்கின்றார்களே தவிர, முடக்க நினைக்கவில்லை. காரணம் முன்பு ஆய்வு செய்த ககன் தீப் சிங் பேடியின் அறிக்கை என்ன சொன்னது, அது எங்கு இருக்கின்றது என யாருக்காவது தெரியுமா?
தெரியாது, ஆனால் நிச்சயம் பத்திரமாக இருக்கும். அதனை வெளியிடுவார்களா என்றால் மாட்டார்கள். அது அப்படித்தான்
சும்மா கட்டத்தை இடிப்போம் என அளந்துவிடுவார்கள், அப்படியும் அண்ணாச்சிக்கு தமிழகமெங்கும் ஏராளமான சொத்துக்கள் உண்டு, அவற்றில் எல்லாம் இல்லாத சிக்கல் அந்த பொட்டகாட்டில் மட்டும் வந்துவிட்டது என சொல்வதுதான் காமெடி
இது காமெடியான அரசுதான், ஆனால் இந்த அளவு காமெடிகள் யாரும் எதிர்ப்பார்க்காதது.
பொதுவாக அண்ணாச்சியினை இழுத்தாலே 40 ஆயிரம் தொழிலாளர் கொந்தளிப்பர், அவர் சம்பந்தபட்ட சங்கங்கள் கொந்தளிக்கும்.
இப்பொழுது எல்லாம் மகா அமைதி ஏன்?
சங்கமே சங்கமே ஏன் அண்ணாச்சியினை கைவிட்டாய்?