இது என்ன கொரியாவா? தமிழகம்தானே…

தமிழக தொலைகாட்சிகளுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது, எந்த புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் வடகொரியா நிலவரத்திற்கு சென்றுவிட்டன‌

சன்டிவி மர்ம தேசம் எனவும், புதிய தலைமுறை டிவி கிம் தேசம் எனவும் போட்டு தாக்கிகொண்டிருக்கின்றன‌

உண்மை நிலவரத்தினை இருநாடுகளுமே சொல்லவில்லை, இன்றைய வடகொரியா கொஞ்சம் சிக்கலான நாடுதான், கெடுபிடி அரசுதான், ஆனால் அதன் மக்களை பெரும் மடையர்களாக போட்டு தாக்குகின்றன‌

Image may contain: 1 person, text

அதாவது அம்மக்கள் அதிபரை கடவுளாக வணங்குகின்றார்களாம், அரசுக்கு ஒன்று என்றால் உயிர்துறப்பார்களாம், இன்னும் ஏராள கதைகளை அள்ளிவிடுகின்றன‌

உண்மையில் நடப்பது என்ன?

கொரியபோருக்கு பின்னரான சிக்கல் இன்னும் தீரவில்லை, 50 ஆண்டுகளாக வடகொரியா அமெரிக்காவுடன் இன்னும் யுத்தம் நடத்தியே வருகின்றது. மூன்றாம் அணுகுண்டை உங்கள் நாட்டில் வீசுவோம் என அமெரிக்கா ஒரு காலத்தில் விரட்டியதை அம்மக்கள் மறக்கவில்லை

அமெரிக்கா ஒன்றும் யோக்கிய சிகாமணி நாடல்ல, ஒருவனை குறிவைத்துவிட்டால் எப்படி எல்லாம் அவன் பிம்பத்தை சிதறடிப்பார்கள், முடிந்தால் அவனையே சிதறடிப்பார்கள் என்பது உலகறிந்தது

சதாமும், கடாபியும் அப்படித்தான் ஒழிக்கபட்டனர், இதோ அவர்கள் நாடு சீரழிந்து கிடக்கின்றது

காஸ்ட்ரோ, கோமேனி போன்ற வெகுசிலரே அமரிக்காவினை உள்விடாமல் தங்கள் நாட்டை காத்துகொண்டனர், இதில் வடகொரியாவும் அடக்கம்

அமெரிக்காவுடனான யுத்தம் தீரா நிலையில்தான் அது அணுகுண்டு, ரக்கெட் என ஏதோ செய்து தங்களை பாதுகாக்க நினைக்கின்றது

வடகொரியா பக்கம் நியாயம் இல்லை என சொல்லவே முடியாது, அதுவும் முடியவே முடியாது

சரி வடகொரிய அதிபர் அம்மக்களை அடிமைகளாய் வைத்திருக்கின்றார் என சொல்லும் தமிழக டிவிக்கள், என்றாவது இங்கு நடந்த, நடக்கும் விஷயங்களை சொன்னதா?

ஜெயா சிறை சென்றபொழுது தமிழகம் கலவரத்தில் மிதந்ததே, அந்த காமெடி பற்றி ஏதும் சொன்னார்களா?

இன்றும் ஜெயா குற்றவாளி என சொன்னபின்பும் அவர் கல்லறையில் மாலை மரியாதை என்ன? அவர்படத்தை தூக்கிபிடிக்கும் கொண்டாட்டம் என்ன? இதனை பற்றி சொன்னார்களா?

கூவத்தூரில் 125 எம் எல் ஏக்களை அடிமைகளாக வைத்தது பற்றி சொன்னார்களா?

மக்கள் செத்துகொண்டிருக்கும் பொழுதும் இங்கு விவசாயிகள் நலம என சொன்ன அமைச்சர்களையும், பன்றிகாய்ச்சல் இல்லவே இல்லை என சொன்ன அமைச்சர்களையும் என்ன சொன்னார்கள்?

கல்வி கொள்ளையாகிவிட்டது, மருத்துவம் முதல்வருக்கே கிட்டவில்லை

இன்னமும் அரசு மதுகடைகள் நடத்ததான் செய்வோம் என இறுமாப்பில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது

ஆக அடிமைத்தனம் என்பது எல்லா விதத்திலும் அப்பட்டமாக தெரியும் மாநிலம் இது, குற்றவாளி என தெரிந்தபின்னும் கொண்டாடும் மாநிலம் இது, பெரும் அடிமை கூட்டத்தை கொண்டிருக்கும் இயக்கம் ஆளும் மாநிலம் இது

இதனை பற்றி வாய்திறக்காத டிவிதான் கொரியாவினை பற்றி கிண்டல் செய்கின்றதாம்

வடகொரியாவில் இன்றளவும் அமெரிக்க நிறுவணம் கிடையாது, பெப்சி, கோக் இல்லை. நம்மை போல தாமிரபரணியினை பெப்சிக்கு கொடுக்கும் அநியாயம் இல்லை

காட்டுமிராண்டி தேசம் என சொன்னாலும் வடகொரியா அந்த தில்லில் இருக்கின்றது, ஏன் தமிழக அரசால் முடிகின்றதா?

யார் அடிமை தேசம்?

தென்கொரியாவில் பெண் அதிபர், தன் தோழியுடன் சேர்ந்து (அப்படியே தமிழக நிலைதான்) ஊழலில் ஈடுபட்டார் என்பதற்காக , தேசமே திரண்டு தோழியினை விரட்டி, அதிபரை பதவியிறக்கி கதறவைத்துகொண்டிருக்கின்றது

தமிழகமோ தியாக திருவுருவம் என ஊழல்வாதிகளை கொண்டாடுகின்றது

வடகொரியர்கள் உலகம் அறியாதவர்களாம், அரசுக்காக சாவு என்றால் சாவார்களாம்

50 வருடமாக நடக்கும் யுத்தத்தில் தாய்நாட்டிற்காக சாக வடகொரியன் தயார், அவன் நாட்டுபற்று அப்படி

இங்கு எம்ஜிஆருக்கு செத்தவனும், ஜெயா ஜெயிலுக்கு போனதற்கு செத்தவனும், நாக்கு மூக்கு அறுத்தவனும் என்ன வகை?

ஆக தமிழக ஊடகங்கள் கிழிப்பதாக இருந்தால் இந்த தமிழக சீரழிவினை கிழிக்கட்டும்

எம் எல் ஏக்களை அடிமையாக வைத்திருக்கும் அதிமுகவினை கிழிக்கட்டும், கட்சியில் திடீரென அதிகாரம் பெற்ற தினகரனை கிழிக்கட்டும்

நம்மை விட வடகொரியர்கள் ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை, நாளையே அமெரிக்காவுடன் உடன்பாடு என்றாலோ, ஆட்சி மாற்றம் என்றாலோ அவர்கள் தங்களுக்கான அரசினை தேர்ந்தெடுப்பார்கள்

இப்படியா எத்தனை வாய்ப்புகிடைத்தும் காசுக்கு தன்னை விற்றுவிட்டு அடிமை ஆவார்கள்?

தமிழர்களை விட கொரியர்கள் பெஸ்ட்தான், தமிழக அரசியலை விட கொரிய அரசியல் நன்றாகத்தான் நடக்கின்றது,

ஒரு கொரியா அமெரிக்காவினை தில்லாக 50 வருடமாக எதிர்க்கின்றது, ஒரு கொரியா ஊழலற்ற நாடு எப்படி இருக்கவேண்டும் என பாடம் சொல்கின்றது

சொந்த நதியினை அமெரிக்காவிடம் விற்றுவிட்ட நாமும், ஊழல்வாதிகளை தியாக உருவம் என கொண்டாடும் நாம் அந்த கொரியர்களை பார்த்து சிரிக்க என்ன இருக்கின்றது

வெட்கமாக இல்லை….

கொஞ்சமேனும் உலக அறிவும், இப்படி நிகழ்ச்சி நடத்தினால் உலகம் காரிதுப்புமே என்ற அறிவும் கொஞ்சம் இருந்திருந்தால் இப்படிபட்ட தமிழக அவமான நிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள்

ஒருவேளை இப்படி சிந்தித்திருப்பார்களோ?

இது என்ன கொரியாவா? தமிழகம்தானே, என்ன சொன்னாலும் நம்பத்தான் போகின்றார்கள். தன் நிலையினை உலகோடு ஒப்பிட்டு பார்த்து யோசிக்கும் இனமா இது, அதனால் இஷ்டத்திற்கு வடகொரியர்களை கிண்டல்செய்வோம் என கிளம்பியிருக்கலாம்

அடுத்தவன் வேட்டி அழுக்கு என சொல்லுமுன், தனக்கு கோவணமே இல்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்

இந்த தமிழக டிவிக்கள் வடகொரியாவினை விமர்சிக்கின்றோம் எனும் பெயரில் தமிழகத்தில் கோவணம் இல்லை என்பதை மறந்தே விட்டார்கள்…

இனியாவது தமிழக மானம் காற்றில் பறக்கவேண்டாம் என்றால் இப்படியான நிகழ்ச்சிகளை படைப்பதை அவை நிறுத்திகொள்ளவேண்டும்

அடிமை முறை, அபத்தமுறை, அறிவில்லா மக்கள் என உலகில் மற்ற இனத்தை சொல்ல தமிழக‌ தமிழனுக்கு என்ன உரிமை இருக்கின்றது??

இவற்றிற்கெல்லாம் இந்த ஜனநாயக உலகில் மொத்த உருவமாக வாழ்ந்து வருவது அவன் மட்டும்தானே, அவன் எப்படி அடுத்தவனை கலாய்க்கமுடியும்?