எம் ஜி ஆர் அண்ணன் மகன் ….

“அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சந்திரன் தொடங்கினார்.
மனம் கனத்த நேரங்களில், மனம் விட்டு சிரிக்க எப்பொழுதாவது ராமசந்திரன் படம் பார்ப்பதுண்டு, அந்த பத்மினியுடனான போட்டி நடனம், நீரும் நெருப்பும் டபுள் ஆக்ட், என பல காமெடி காட்சிகளில் ராமசந்திரன் கலக்குவார்
அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் போன்றவை உச்சகட்ட காமெடி ரகம், குறிப்பாக அவரின் முகபாவம் நம்மை எந்த சோகத்திலும் சிரிக்க வைக்கும்..
அப்படிபட்ட காமெடியான நடிகன் இனி தமிழகத்திற்கு கிடைக்கமாட்டான், இதுவரை தமிழகம் கண்ட காமெடியன்களில் உச்ச காமெடியன் அவரே
அதுவும் அன்பே வா படத்தில் அவர் கல்லூரி மாணவர்களோடு ஆடும் நடனத்தை மியூட் செய்துவிட்டு பார்த்தால் டிரம்ப் கூட சிரித்துவிடுவார்..
டிர்ம்ப் என்ன? , அதனை கண்டால் ஐ.எஸ் தீவிரவாதி கூட துப்பாக்கியினை தூர எறிந்துவிட்டு சந்தோஷமாக சிரிப்பான்
இப்படி அவர்படங்களை பார்த்து சிரித்துகொண்டே இருக்கலாம்.
அவர் படங்களில் மிக சரியாக 5 நிமிடத்திற்கொரு முறை, “அம்மா..” என கண்களை கசக்குவார், 3 நிமிடத்திற்கொருமுறை “அண்ணா..” என அலறுவார்
எந்த நேரத்தில் அலற ஆரம்பித்தாரோ, பின்னாளில் அவர் கட்சி “அண்ணா கட்சி”, “அம்மா கட்சி” ஆகி தொலைத்தது, அம்மா அம்மா என அவர் சினிமாவில் ஓடியதன் விளைவு அவர் கட்சி அம்மா கட்சியாகவே ஆகிதொலைந்தது
இந்த சந்திரன் சித்தப்பா படங்களை பார்ப்பார் போலிருக்கின்றது, அப்படியே “அம்மா அண்ணா” என சொல்லி நடுவில் ராமசந்திரனை மட்டும் சேர்த்துவிட்டார்
அப்படி அது “அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக” ஆகிவிட்டது, தீபா கட்சி கூட “எம்ஜிஆர் அம்மா தீபா” என்றுதான் தொடங்கபட்டிருக்கின்றது
அந்த தொப்பி தலையர் சினிமாவில் “அம்மா.. , அண்ணா..” என அழுது அழுது அவர் கட்சியும் “அம்மா.., அண்ணா..” என அலறிகொண்டே இருகின்றது..
ஆனாலும் சீடகோடிகள் கிடைத்தால் அந்த ராமசந்திரனுக்கு கிடைத்தது போல கிடைக்கவேண்டும் , அவர் அழுதது போலவே “அம்மா, அண்ணா..” என அழுகின்றார்கள் பார்த்தீர்களா?
நல்லவேளையாக நடிகர் நம்பியாரின் குடும்பத்தார் கட்சி தொடங்கவில்லை, தொடங்கினால் அவரின் பிரத்யோக வசனமான “ஏய் கபாலி, ஏய் பீட்டர் இவன புடிச்சி உள்ளே போடு” என்ற அடைமொழியுடன் திராவிட முன்னேற்ற கட்சிகள் உருவாகும்…
“கபாலி, பீட்டர் , மாயாண்டி திராவிட முன்னேற்ற சங்கம்” என ஒன்று தொடங்கபட்டால் தமிழ் நாடு என்னாகும்..
அந்த ஆபத்திலிருந்து தமிழகம் தப்பித்தது