இன்று ஏப்ரல் 1 .. முதன் முதலாக சட்டமன்றம் சென்றார் கலைஞர்…
இதே போன்று ஒரு ஏப்ரல் 1 தேதி முதன் முதலாக சட்டமன்றம் சென்றார் கலைஞர் என ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
கலைஞரே இதுபற்றி அதிகம் சொன்னதில்லை, 1957 என்பதோடு நிறுத்திகொள்வார்
தேதியினை சொன்னால் எப்படி எல்லாம் கலாய்ப்பார்கள் என அவருக்கு தெரிந்திருக்கின்றது..
மனிதர் எதனை மவுனிக்கவேண்டுமோ அதில் கவனமாகத்தான் இருந்திருக்கின்றார்
கலைஞர் சட்டமன்றத்தில் பணியாற்ற தொடங்கி 60 வருடம் ஆகின்றது, நிச்சயம் பெரும் சாதனை, இன்னொருவர் இனி அதனை முறியடிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை
அதிமுக என்றொரு கோடாரி காம்பு கிளம்பியிருக்காவிட்டால் ஜோதிபாசுவின் நீண்டநாள் முதல்வர் எனும் சாதனையினை என்றோ முறியடித்திருப்பார்.
அரசியலில் 60 ஆண்டு என்பதல்ல, பத்திரிகை, சினிமா, இலக்கியம், இன்னும் எத்தனையோ துறைகளில் அவர் 70 வருடங்களாக உழைக்கின்றார்.
இது இனி யாருக்கு சாத்தியம்? ஒருவனுக்குமில்லை
அவர் காலத்தில் அவர் பார்க்காத கூட்டமில்லை, அவருக்கு கிடைக்காத வாழ்த்தில்லை, பகைவர்களும் கூட அவரை வியந்து பாராட்டத்தான் செய்தனர்
25ம் ஆண்டு, 50ம் ஆண்டு என பல வாழ்த்து கூட்டங்கள் நடந்தன, அவற்றில் எல்லாம் என்ன பேசினாரோ, அப்படித்தான் இன்று நலமாக இருந்தாலும் இப்படி பேசுவார்
” எத்தனையோ பேர் வாழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள், வாழ்த்தியவர்களுக்க் எந்நாளும் நன்றி சொல்கிறேன்
இந்நிலையில் உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிகொள்கின்றேன், 1957ல் நான் சட்டமன்றத்திற்கு வந்து 69 ஆண்டுகள் ஆகின்றன என்பதை நீங்களே சொல்கின்றீர்கள்
ஆனால் அதற்காக நான் 1957ல்தான் மக்களுக்கு உழைக்க வந்தவன் அல்ல, 60 ஆண்டுகளாக மட்டும் உழைத்தவன் அல்ல
இதோ தீடீர் என சிங்கப்பூரில் இருந்து வந்து மக்கள் பணியாற்ற குதித்தவர்களை போலவோ, இது என் அத்தை கட்சி, பாட்சி கட்சி என வந்து ஒரே நாளில் மக்கள் முன் வந்து நிற்கின்றார்களே அப்படி வந்தவன் அல்ல இந்த கருணாநிதி
நான் 10 வயதிலே பெரியாரை ஏற்றவன், 12 வயதிலே கையெழுத்து பத்திரிகை நடத்தும்பொழுதே பொதுபணிக்கு வந்தவன்
17 வயதில் அண்ணாவின் பின்னால் நடக்க தொடங்கியவன்,
அதன் பின் அண்ணாவுடன் நடக்க தொடங்கி இந்த தமிழகத்திற்கு உழைக்க வந்துவிட்டேன்,
அப்படி வந்தவனுக்கு குளித்தலை மக்கள் அங்கீகாரம் கொடுத்த வருடம்தான் 1957 தவிர, நான் உழைக்க தொடங்கிய வருடம் அது அல்ல
உள்ளபடி சொல்லவேண்டுமானால் நான் என்னை தமிழகத்திற்காக அர்பணித்து இன்றோடு கிட்டதட்ட 80 ஆண்டுகள் ஆகின்றது, ஆம் நான் எழுததொடங்கி , சமுதாயத்திற்கு பெரியார் வழியில் திராவிட வழிகாட்ட தொடங்கி 80 ஆண்டுகள் ஆகின்றன.
காலம் வழிவிட்டால் 80ஐ 100 ஆக்கவும் நான் தயார், ஆனால் 100 வரை ஆட இது கிரிக்கெட் அல்ல, இயற்கை என்னை எப்பொழுது அழைக்கின்றதோ அதுவரை நான் உழைத்துகொண்டே இருப்பேன்
1957ல் எனக்கு குளித்தலை அங்கீகாரம் கொடுத்தது, அதன் பின் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி எனும் நிலையில் தமிழக மக்கள் என்னை தேர்ந்தெடுத்து 13 முறை சட்டமன்றம் அனுப்பியிருக்கின்றார்கள், அவ்வளவு என்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்
நானும் முடிந்த அளவு அந்த நம்பிக்கையினை காப்பாற்றியே வந்திருக்கின்றேன்
இப்பொழுது இந்த கருணாநிதி 60 வருடமாக என்ன செய்தான் என்பது பிரச்சினை அல்ல, மாறாக 60 ஆண்டுகளாக நான் எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கின்றேன்
ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா , இந்திரா, ராஜிவ், வாஜ்பாய், மோடி என சுதந்திர இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளுடன் சரிக்கு சமமாக தேர்தலை சந்தித்தவன் நான்
ஆனால் நான் கண்ட தேர்தலிலே மிக கொடுமையான, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே முகம் சுழிக்கும் ஒரு தேர்தலாக ஆர்.கே நகர் தேர்தல் களம் உள்ளது என்பதை காணும்பொழுது மனம் கனக்கின்றது
இந்த தேர்தல் வசந்தசேனை ஓய்ந்தாலும் வசந்தன் ஓயவில்லை என வந்து நிற்கும் மோசடிக்காரர்கள் ஒருபுறம், உண்மையினை வெளியிடுவேன் என இன்றுவரை அல்ல,என்றுமே சொல்லாமலே செல்லும் எத்தர்கள் ஒருபுறம்
பெரியாரும் , அண்ணாவும் விரட்டிவிட்ட அந்த பார்பணிய நாகம் படமெடுத்து நிற்கும் மற்றொரு புறம்
இந்த சூழலில்தான் இந்த மூன்றையும் எதிர்த்துதான் நம் கழகம் தேர்தல் களத்திலே நிற்கின்றது
நீங்கள் என்னை எந்த காரணத்திற்காக வாழ்த்தினீர்களோ, அந்த 60 ஆண்டு அனுபவத்தில் சொல்கின்றேன், இந்த தேர்தலில் அந்த கயவர்கள் கை ஓங்குமாயின், அது தமிழகத்தில் பெரும் சீரழிவினை கொண்டுவரும், மீளா துயரில் தமிழகத்தை அது தள்ளிவிடும்.
அவர்கள் பல ஆண்டுகாலம் ஆண்டு என்ன சாதித்தார்கள் என்றால், அவர்கள் ஊழல் வழக்கில் கட்டவேண்டிய அபராதமே 100 கோடியாம்
எவ்வளவு துல்லியமாக குற்றம் நிரூபிக்கபட்டிருந்தால் இப்படி தீர்ப்பு வரும், உலகில் இப்படியான தீர்ப்புகள் என்றாவது உண்டா?
தமிழகத்தை அன்றும் இன்றும் என்றும் காத்து கொண்டிருக்கும் இயக்கம் நம்முடைய இயக்கம், இன்று வந்திருக்கும் பெரும் ஆபத்தை தடுக்கத்தான் அது போராடிகொண்டிருக்கின்றது
அத்தை கட்சி என்றோ, சிறையில் பூத்த மலரின் தூரத்து உறவு என்றோ உங்களிடம் நான் வந்தவன் அல்ல, 12 வயதிலிருந்தே உங்கள் எல்லோர் தெருக்களிலும் வலம் வந்தவன், தமிழ்நாட்டின் நாடிதுடிபினை அறிந்தவன், தமிழக நலன் எது என மிக சரியாக புரிந்தவன்
புரிந்தவன் மட்டுமல்ல அதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தியவன்
அப்படி இந்த 92ம் வயதிலும் உங்களை அழைக்கின்றேன், இந்த இடைத்தேர்தலில் தமிழகம் காக்க திரள்வீர், எமக்கு வாக்களிப்பீர், தமிழகத்தை காப்பீர்
இயற்கை எல்லோருக்கும் ஒரு எல்லை வகுத்திருக்கும், நானும் அந்த எல்லையினை நெருங்கும் வயதிற்கு வந்துவிட்டேன்
எப்பொழுதும் இதுதான் என் கடைசி தேர்தல் என சொல்வதுண்டு, சொல்லியபடி ஏன் சாகவில்லை என எதிர்கட்சிகள் கேட்பதும் உண்டு
நான் செய்யவேண்டிய கடமைகள் இன்னும் இருப்பதால் இயற்கை என்னை விட்டுகொண்டிருக்கின்றது என்பது என் கருத்து, அப்படித்தான் பல காரியங்களை தமிழகத்திற்கு செய்துவிட்டேன்
இன்னும் இந்த இடைதேர்தலில் அந்த குள்ளநரி கூட்டத்தை, ஓநாய்கள் திட்டத்தை முறியடித்து தமிழகத்தை மறுபடியும் காத்து, மிக பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கிவிட்டு பெரியார், அண்ணாவுடன் கலந்துவிடுவதுதான் எனக்குள்ள கடமை என்றால், அதனை நான் செய்தே தீரவேண்டும்
அதற்கு நீங்கள் எல்லாம் கடந்த 80 ஆண்டுகளாக கொடுத்துவரும் ஆதரவினை தந்தே தீரவேண்டும்
பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் கோட்பாடுகளை கொண்டு 60 ஆண்டுகள் கடக்கும் என் அரசியல் வாழ்வில், எத்தனையோ பெரும் திருப்பங்களை கொடுத்த நீங்கள்,
இந்த ஆர்,கே நகர் தேர்தலிலும் ஆதரவினை கொடுங்கள், இது எனக்காக அல்ல, ஆர்.கே நகருக்காக அல்ல மாறாக மொத்த தமிழகத்திற்காக
நடக்கட்டும் தேர்தல், உங்கள் வாக்குகளை குத்தீட்டியாக பாய்ச்சுங்கள், ஓநாய்கள் ஓடட்டும், கழுகளின் சிறகுகள் சரியட்டும், தமிழகம் வாழட்டும்
60 ஆண்டுகள் அல்ல, 80 ஆண்டுகள் அல்ல, என் இறுதி மூச்சு உள்ளவரைக்கும், உங்களில் ஒருவனாக உங்களுக்காக இந்நாள் வரைக்கும் எப்படி உழைத்தேனோ, அப்படி இன்னும் உழைத்துகொண்டே இருப்பேன்..”