சிங்கபூர் வாசிகளின் முணுமுணுப்பு….

கொஞ்ச காலமாகவே கேட்டுகொண்டிருந்த குரல்தான், சிங்கப்பூர் வாசிகள் லீ குவான் யூ காலத்திலே முணுமுணுக்க தொடங்கியிருந்தனர்

இந்த குட்டிநாட்டில் அந்நியர்கள் வந்து எல்லா வேலைவாய்ப்புக்களையும் பறிக்கின்றனர் எனும் ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருந்தது

லீ குவான் யூ வேறுமாதிரியானவர், எல்லா விஷயங்களையும் காதுகொடுத்து கேட்பவர் அல்ல, நாட்டிற்கு எது தேவையோ அதில் மட்டும் வாய்திறப்பார்

இப்பொழுது அவரும் இல்லை

மக்களின் முணுமுணுப்பு கோபமாக மாறும் முன்னே சிங்கப்பூர் அரசு முந்திகொள்கின்றது தெரிகின்றது

இந்திய ஐடி கம்பெனிகளுக்கு விசா மறுப்பு என அது சில அதிரடிகளை காட்ட தொடங்கிவிட்டது, இது சில காட்சிகளின் ஆரம்பம் என்கின்றார்கள்

ஐடி தொழிலில் சீனாவும், பிலிப்பைன்ஸும் சல்லி விலைக்கு பணியாளர்களை கொடுக்க தொடங்கிவிட்ட இன்னொரு கோணமும் உண்டு என்றாலும் சிங்கப்பூர் அரசு அந்நிய பணியாளர்களை நெருக்க தொடங்கியாயிற்று

எல்லா நாடுகளிலும் உள்ள சிக்கல் இது, ஏன் என்றால் அப்படித்தான்

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நமது தமிழகத்தில், நாம் சிரமத்தில் இருக்கும்பொழுது ஆப்கானியரோ, ஆப்ரிக்கனோ வந்து சம்பாதித்து பென்ஸ்காரில் நம் வீட்டை சுற்றி சுற்றி வந்தால் விடுவோமா?

விடவே மாட்டோம் அல்லவா? நமது வேலையினை இன்னொரு நாட்டுக்காரன் பறித்துவிட்டான் என சொல்லமாட்டோமா?,

நாமென்று அல்ல, எல்லா மக்களின் மனநிலை அது.

நமது நாட்டில் நாம் சிரமத்தில் இருக்கும்பொழுது இன்னொரு நாட்டுக்காரன் வந்து சம்பாதிப்பதை எப்படி பொறுக்கமுடியும்?

வருபவன் சென்னையில் ரோட்டோரம் வாழும் பீகார் வாசிகள் போல, நேபாளிகள் போல இருக்கும் வரை சிக்கல் இல்லை, கொஞ்சம் வளர்ந்துவிட்டால் விடுவார்களா?

இப்படியே விட்டால் வருவார்கள், நம் வேலை போகும் கொஞ்ச நாளில் பெரும்பான்மை ஆவார்கள், ஆட்சி போகும், தேசம் போகும்

அவர்கள் ஆள்வார்கள், நாம் கப்பலேறே வேண்டும், விடலாமா? விடவே கூடாது

பல்நாட்டு சிந்தனைகள் இப்படித்தான் செல்கின்றது, இன்றல்ல ஆதிகாலத்திலிருந்தே அப்படித்தான் நிலமை இருந்திருக்கின்றது, குறிப்பாக எகிப்தியர்கள் அங்கு குடியேற வந்த யூதர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பு வரலாற்றில் காணகிடக்கின்றது

இயேசு பிறக்கும்பொழுது மக்கள் தொகை கணக்கிட சொன்ன சீசரின் கட்டளையில், ரோமில் வசிக்கும் அந்நிய மக்கள் எவ்வளவு எனும் மறைபொருளும் உண்டு என்பார்கள்.

ஹிட்லர் காலம் பற்றி சொல்ல தேவையில்லை, இன்னும் நிறைய உண்டு

சுதந்தரம் அடைந்ததும் இலங்கை அரசு 5 லட்சம் தமிழர்களை திருப்பி அனுப்பியது இப்படித்தான், சிங்களனும், யாழ்பாண தமிழனும் தமிழக தமிழனை திருப்பி அனுப்பியது இந்த கோணத்தில்தான்

எனக்கு போக மீதி என்றால் தருவேன், எனக்குள்ளதை எல்லாம் நீ எடுக்க விடவே மாட்டேன், கிளம்பு எனும் குரல் உலகெல்லாம் அன்றிலிருந்தே கேட்டுகொண்டிருப்பதுதான்

கொஞ்சகாலம் அடங்கி இருந்தது, இப்பொழுது தொடங்கிவிட்டது, குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக தொடங்கியிருக்கின்றது.

அது அமெரிக்காவில் கேட்டது, ஆஸ்திரேலியாவில் கேட்டது இன்னும் பல நாடுகளில் கேட்டது, இப்பொழுது சிங்கப்பூரிலும் ஒலிக்க தொடங்கியே விட்டது