உலக புகழ் இதிகாசம் ராமாயணம்…

 17798941_10208837968161627_1090068221460789949_n.jpg

உலகெல்லாம் பெரும் இடம்பெற்றுவிட்ட இதிகாசம் ராமாயணம், அதன் நாயகன் ராமன், அவரின்றி ராமாயணம் இல்லை

இந்தியா முழுக்க பரவியிருக்கும் ஒரு அடையாளம் அவர், ராமாயண கதைகளின்றி தொன்மையான கலைகள் இல்லை, எல்லா இந்திய கிராம கலைகளின் அடிப்படையே ராமயணமும், மகாபாரதமுமே

சினிமாவிற்கு முந்தைய காலம் வரை அதுதான் நாடக மேடைகளில் ஜொலித்துகொண்டிருந்து

இந்தியா மட்டுமல்ல கிழக்காசிய நாடுகள் முழுக்க அதன் தடம் இருக்கின்றது, அவர்களின் பாரம்பரிய நாட்டிய நடனமே ராமாயண கதைதான். முன்பு மேற்காசியா வரை அதன் வீச்சு இருந்தது இஸ்லாமிய காலங்களுக்கு பின் அது மறைந்தது, ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் அதன் வடிவங்கள் காணபடுகின்றன‌

இப்படியாக உலகெமல்லாம் கொண்டாடபட்டவர், படுபவர் ராமன்.

தந்தையினை மதித்தவர், தாயினை போற்றியவர் , சகோதர பாசம் நீதி தவறா ஆட்சி, நட்பின் இலக்கணம் என பல விஷயங்களில் அவரின் வாழ்வு எடுத்துகாட்டு

தந்தைக்கு 60 ஆயிரம் மனைவிகள் இருந்தும், தான் ஒரு ஏகபத்தினி விரதனாக இருந்ததில் அவர் உயர்ந்து நிற்கின்றார்

தலைமகன் என்றால் அப்படி இருக்கவேண்டும், தம்பிகள் என்றால் அவர்களுக்கு வாய்த்தவர்கள் போல இருக்கவேண்டும்

ராமாயணத்திலும், பாரதத்திலும் புதைந்து கிடக்கும் தத்துவ பொக்கிஷங்கள் ஏராளம்

குலப்பெருமை, சகோதர பாசம், தந்தை பக்தி, தாய் மரியாதை, காதல், வீரம், நேர்மை, விசுவாசம் , நட்பு என எல்லா விஷயங்களும் கலந்த காவியம் அவை

உலகில் அப்படி ஒரு காவியங்கள் எந்த நாட்டிலும் அக்காலத்திலும் இல்லை இக்காலத்திலும் இல்லை, வரப்போவதுமில்லை..

ஒரு குடும்பத்தின் தலைமகன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ராமனும், தருமனுமே பெரும் எடுத்துகாட்டுகள்

குடும்ப சகோதர‌ பாசத்தை வளர்க்க, அதன் அவசியத்தை சொல்ல‌ ராமயணம், மகாபாரதம் தவிர எந்த நூலினை உங்களால் காட்ட முடியும்? வீடுகள் தோறும் அவை சொல்லபட்ட பெரும் காரணம் அதுதான்.

ராமனின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு, குறிப்பாக பெரும் வீரனாயினும் அவர் காட்டிய இரக்கமும் பொறுமையும்

பரதனுக்கு முடிசூட்டியது முதல் கானக வாழ்வு வரை அவரின் அமைதி அப்படி.

முடிந்தவரை ராவணனுடன் போரை தவிர்த்தார், யுத்தத்தில் அவர் செய்ததெல்லாம் தற்காப்பு யுத்தமே, முடிவில் கூட ராவணனுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து , அந்த இறுதி இரவிலாவது அவன் மனம் மாறலாம் எனும் அளவில் அவருக்கு பொறுமை இருந்தது

ராமன் மீது குறித்து வீசபடும் சர்ச்சை ஒன்றே ஒன்றுதான்

சீதையினை தீயில் தள்ளினார் எனும் சர்ச்சை, ஆனால் பின்னாளில் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் எனும் வரிகளின் முன்னோடி சம்பவம் அது

அது சந்தேகம் அல்ல, தீ அவளை தீண்டாது என்பது ராமனுக்கும் தெரியும், ஆனால் ராமனின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என நீருபிக்க வேண்டிய அவசியம் அரசனாய் அவருக்கு இருந்தது, செய்தார்

ராமனின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என நிரூபித்தும் காட்டினார்

அவரது ஆட்சி மிக அழகாக இருந்தது என்கின்றது புராணங்கள்.

ராமன் எல்லோருக்கும் என்னவெல்லாமோ கொடுத்தான், ரிஷிகளுக்கு அசுரர்களை அழித்து அமைதி கொடுத்தான், சுக்ரீவனுக்கு நாட்டை கொடுத்தான், விபீஷனனுக்கு உரிமை கொடுத்தான், தந்தைக்கு கவுரவத்தை கொடுத்தான், தம்பிக்கு அரசு கொடுத்தான் இன்னும் ஏராளம்

தமிழ் அவனால் கம்ப ராமாயணம் எனும் அழியா பெருமை பெற்றது

இந்திய அடையாளங்களில் பெரும் இடம் பிடித்தவர் ராமர், ஆனால் அவர் பெயரான அரசியல் தேவையில்லாதது, அது அந்த சத்யமூர்த்தியான ராமனே விரும்பாதது

ராமயணம் நடந்த கதை வரலாற்றில் உண்டே தவிர வால்மீகி, துளசி தாசர், கம்பன் ராமாயணம் எல்லாம் அவன் அயோத்தியில் அதுவும் அந்த இடத்தில்தான் பிறந்தான் என குறிப்பிட்டு சொல்வதே இல்லை

அரசியல் கலந்துதான் ராமனை நிறுத்தவேண்டும் என்பதில்லை, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் நிலைத்துவிட்ட அவரை இப்படி மசூதியினை பிடித்துத்தான் நிறுத்தும் அவசியம் இல்லை

ராமர் பால சர்ச்சைகளும் தேவையில்லாதவை, அது உண்மையென்றால் மேலே ஒரு பாலம் கட்டி கீழே இருக்கும் பகுதிகளை காப்பாற்றலாம், இல்லை என்றால் கால்வாயினை வெட்டி கப்பலை விடலாம்

சும்மா சொல்லிகொண்டே இருப்பது வெறும் அரசியல்…

அரசியல் அப்படித்தான், அரசியலுக்காக ராமனை கொண்டாடுவதிலும், அதே அரசியலுக்காக அவனை தூக்கி எறிவதிலும் அர்த்தமே இல்லை

அரசியலுக்கு அப்பாற்பட்ட பாரத அடையாளம் ராமர்.

பிராமண பெருமை என அதனை சொல்லிவிடவும் முடியாது, ராமன் அங்கு பிராமணன் அல்ல, சத்திரியன், வில்லனான ராவணனே பிராமண வடிவம் பெறுகின்றான்

அதனால் பிரமாண எதிர்ப்பு எனும் வகையில்தான் ராமயணம் வருகின்றது, பின்னாளில் “கழகங்கள்” சொன்னதெல்லாம் முழுக்க ஏற்றுகொள்ள முடியாதவை..

இன்று ராம நவமி

கடவுள் என அவரை கொண்டாடுபவர்களுக்கு ராம நவமி வாழ்த்துக்கள்

இந்தியாவின் பெரும் அடையாளமும், உயர்ந்த கருத்துக்களின் உறைவிடமுமாக இருக்கும் ராமயணம் இந்துக்களுக்கு மட்டுமல்ல எல்ல இந்தியர்களுக்கும் பொதுவான பெருமை..