திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் ….

திமுகவிற்கு ஸ்டாலினை விட துரைமுருகன் பொருத்தமான தலைவர் என சொல்லிவிடும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது

கலைஞரின் போராட்ட குணத்தில்தான் திமுக இதுகாறும் தாக்குபிடித்து நிற்கின்றது, அடித்து சத்தியம் செய்து சொல்லலாம் போராட்டம் இல்லாமல் திமுக இல்லை

அக்காலங்களில் காமரஜருக்கு எதிராக கலைஞர் கால்படாத மண் தமிழகத்தில் இல்லை, மக்களிடம் நெருங்கி சென்றார், திரட்டினார், ஆட்சியினை மாற்றினார்,

இந்திராவிற்கு எதிராக மொத்த இந்தியாவும் அஞ்சி நிற்க, நெஞ்சை நிமிர்த்தி மல்லுக்கு நின்ற கலைஞர் அன்று உலகிற்கே ஆச்சரியமாக தெரிந்தார், சில உலகநாடுகள் கூட அவரை பிரமிப்பாய் பார்த்தன‌

அவ்வளவு ஏன்? , பத்திரிகை தணிக்கை இருந்த காலத்தில் அண்ணா சமாதியில் முரசொலி செய்திகளை அஞ்சலியாய் வாசித்து, எந்த திமுக உறுப்பினரெல்லாம் சிறையில் இருக்கின்றார் என அவர் தந்திரமாய் காட்டியபொழுது இந்திராவே புன்னகைத்தார்

பாகிஸ்தானையும், இலங்கையினையும், அமெரிக்காவினையும், சீனாவினையும் அலறவிட்ட இந்திரா கலைஞரின் தைரியத்தையும், மதிநுட்பத்தையும் கண்டு புன்னகைத்தார், ஒரு மாதிரியான வியப்பு புன்னகை அது

அப்படி இந்தியாவிற்கே வழிகாட்டினார் கலைஞர்

எம்ஜிஆர் ஆட்சியிலும் கலைஞர் சோர்ந்துவிடவில்லை, வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் எம்ஜிஆரை அலறவிட்டார், கூட கொஞ்சகாலம் ராமசந்திரன் ஆட்சியில் இருந்ந்திருந்தால் நிச்சயம் கலைஞரிடம் அவர் தோற்றிருப்பார்

பாஜகவிற்கு முந்தைய டெல்லி ஜெயாவிற்கு ஆதரவாய் இருந்தது, பின்னும் மோடி ஜெயாவின் நட்பு உலகறிந்தது, ஜெயா இருக்கும் வரை டெல்லியில் தீர்ப்பு வரவில்லை என்பதும் கவனிக்கதக்கது

அந்த பலமிக்க ஜெயலலிதாவினை எதிர்த்தும் கலைஞர் போராடிகொண்டுதான் இருந்தார், அதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்

இன்று போராட எத்தனையோ களங்கள் திமுகவிற்கு இருக்கின்றன, ஆட்சி முதல் கொடநாடு கொலை வரை களம் எத்தனையோ வாய்ப்பு கொடுத்திருக்க்கின்றது, ஆனால் அவர் செய்வதென்ன?

அந்த எம்ஜிஆர் காலங்களை நினைத்துபார்க்கின்றேன்

திருச்செந்தூர் கோவில் வைரவேல் காணாமல் போகின்றது, கோவில் மேலாளர் மர்மமாக சாகின்றார், ஒரு பிரச்சினை வெடிக்கின்றது, எம்ஜிஆர் ஆட்சியில் வெடிக்கின்றது

அறிக்கை விட்டு அமைதியாகவில்லை கலைஞர், கிளம்பினார்

நீண்ட நெடிய பயணம், தமிழக தெருக்கள் வழியே நீதிகேட்டு சென்றார், கால்களில் ரத்தம் வழிய வழிய நடந்தார், கலைஞரின் கால்களை கண்டு மக்கள் அழுதபொழுது, “இதனை விட பெரும் காயம் நெஞ்சில் இருகின்றது, அதற்கு மருந்திட என் பின் வாருங்கள்” என அழைக்க்கவும் அவர் மறக்கவில்லை

திருசெந்தூர் வரை நடந்து வந்து, போராடி பெரும் போராட்டம் நடத்தினார் கலைஞர், சட்டசபையில் அவர் அப்பிரச்சினையினை எழுப்ப “இவர் திருச்செந்தூருக்கு சென்றால் முருகன் வெளியே போயிருப்பானே” என்று கலாய்த்தார் ராமசந்திரன்

“என்னது? வேலை திருடியது போல முருகன் சிலையினையும் திருடிவிட்டீர்களா” என கலைஞர் பதிலுக்கு கேட்டபொழுது எம்ஜிஆர் முகம் சோபன்பாபுவினை கண்டது போல இருண்டுவிட்டது

நிச்சயம் வைரவேல் விவகாரம் ஆட்சி கலைப்பு அளவிற்கு செல்லாது, ஆனாலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பினையும் அப்படி பயன்படுத்தினார் கலைஞர்

ஆனால் இன்றைய திமுக தலமை என்ன செய்கின்றது?

எல்லா பிரச்சினைக்கும் அறிக்கைவிட்டுவிட்டு அமைதியாகின்றது, காந்திக்கும் முந்தைய போராட்டத்தில் ஒன்றை நடத்திவிட்டு அமைதியாகின்றது

கலைஞரின் ஸ்பெஷாலிட்டி அறிக்கையில் மட்டும் அல்ல, போராட்டத்தின் வடிவத்திலும் துடிப்பிலும் இருந்தது. அதனை செய்யாமல் அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருந்தால் விரைவில் குமரி அனந்தன் நிலைதான்வரும்

இன்று கலைஞர் நலமோடு இருந்தால் கொடநாட்டுக்கே நடந்திருப்பார், பன்னீரையும், எடப்பாடியினையும் ஓட அடித்திருப்ப்பார்

தலைவன் இருந்தபொழுதே மந்தைகளை கதறவைத்த சிங்கத்திற்கு, இன்று மேய்பன் இல்லா ஆடுகளை அலறவைக்க நொடி ஆயிருக்காது

பாஜக அதிமுகவினை விழுங்க நினைத்தால், அஞ்சாதீர்கள் எங்களோடு வாருங்கள் இணைந்து எதிர்ப்போம் என துணிந்திருப்பார், இணைந்து என்பதில் எல்லாமே அடங்கியிருக்கின்றது

அந்த போராட்டமும், துணிவும், நுட்பமும் இல்லாமல் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை, வெறும் அறிக்கைகள் கட்சியினை காப்பாற்றாது..

ஸ்டாலின் அதனை உணர்வது நல்லது, இல்லையாகில் துரைமுருகன் கூட பராயில்லை என வரலாறு சொல்லும்

திமுக என்பது தமிழரின் உணர்ச்சியின் அடையாளம், அதனை காக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு, அவர் அதனை நினைவில் வைத்துகொள்வது கட்சிக்கு நல்லது

தமிழகத்திற்கு இன்னும் நல்லது


கொசுறு

நீதிபதிகளுக்குள் யார் பைத்தியம் என சண்டையா? அல்லது பைத்தியங்களுக்குள் யார் நீதிபதி என சண்டையா?

ஒரு மண்ணும் புரியவில்லை..

விரைவில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் எல்லாம் ஜட்ஜ் மனநிலை சரியில்லாமல் எனக்கு தீர்ப்பளித்தார் என நியாயம் கோரும் நிலை விரைவில் வரலாம்..