இந்த பாகுபலி வந்தாலும் வந்தது …
இந்த பாகுபலி வந்தாலும் வந்தது, அவனவன் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை
அந்த ராஜமவுலி என்ன சாதி, பிரபாஸ் என்ன சாதி என ஒருபக்கம் ஆராய்ச்சி நடக்கின்றது, ராஜூலு நாயுடுகளை கடந்து, இப்பொழுது நாய்டுவுன் உட்பிரிவுக்குள் சென்றிருக்கின்றார்கள், இது ஒரு வகை
இன்னொரு வகை பாகுபலி கதை மகாபாரத திருஷ்டிராசனுக்கும், அர்சுணனுக்குமான பகை, பாஞ்சாலி சபதம் என செல்கின்றது.
இது அபத்தமானது திருஷ்டிராசனுக்கும் பாண்டுவிற்கும் தனிதனி அரசுகள் இருந்தது, துரியோதனின் பேராசையில்தான் எல்லாம் அழிந்தது என்பதுதான் உண்மை, எப்படியோ இந்த கூட்டம் கட்டப்பா கிருஷ்ணபரமாத்மா எனும் அளவில் யோசித்துகொண்டிருக்கின்றது
இன்னொரு கூட்டம் முதிர்ந்த வயது போல, இது சாட்சாத் எங்கள் வாத்தியாரின் “அடிமைபெண்” படத்து ரீமேக் என சாட்சிகளை திரட்டுகின்றது,
திமுக உடன்பிறப்புக்கள் பாகுபலியில் “மனோகரா” சாயல் இருப்பதாகவும், நாசரின் பாத்திரம் வசந்த சேனையினை ஒட்டியிருப்பதாகவும் கிசுகிசுக்கின்றார்கள், கண்ணம்மா பாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் இருக்கின்றாராம்..
நல்லவேளையாக டி.ஆர் இன்னும் “டேய்.. என் ஒரு தாயின் சபதம் படத்தை ஒருவன் திருடி எடுத்த கதையினை பாகுபலின்னு சொன்னா நான் நம்பணுமாடா..தமிழன் கதைடா அது” என கிளம்பவில்லை
இன்னொரு கோஷ்டி பொன்னியின் செல்வனை முழுவதாக படிக்காத கோஷ்டி, அவர்களுக்கு அதனை தவிர வேறு வரலாற்று நாவல் தெரியாது போல, இது அந்த கதையே என கொடிபிடிக்கின்றது
இன்னொரு கூட்டம் எதற்கெடுத்தாலும் தலித் கொடி பிடிக்கும் கூட்டம், அது கட்டப்பா தலித், அவனை மன்னராக்குவதுதான் முறை, இரு பாகங்களிலும் தலித் அடிமையாகவே வருவதா? இது சாதிவெறி என பொங்கிகொண்டிருக்கின்றது, இதெல்லாம் மிக ஓவரான அல்ட்ராசிட்டிகள்
அனுஷ்கா, தமண்ணா ரசிகர்கள் வேறு ஒரு பக்கம் மல்யுத்தம் நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.
இடையில் நாசர் பிஞ்சு குழந்தையினை கொல்ல தேடியது போலத்தான் பாலசந்திரனை சிங்களம் கொன்றது, பாகுபலி பிரபாகரன் கதை, பாலசந்திரன் வளர்ந்திருந்தால் பாகுபலி வரலாறு ஈழத்தில் நடந்திருக்கும் என அந்த கும்பல் கண்ணீர் வடிக்கின்றது
இன்னொருபக்கம் நரேந்திரமோடிக்கு படத்தில் நன்றி சொல்லியிருக்கின்றார் இயக்குநர், சிவலிங்கம் வருகின்றது, விபூதி வருகின்றது, இது மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என சில முணகல் வேறு
ஒரு படம் வந்தால் எப்படிபட்ட கோணத்தில் எல்லாம் தமிழன் பார்க்கின்றான் பார்த்தீர்களா? ரசிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் எப்படி விபரீத மூளையில் விமர்சிக்கின்றார்கள் பார்த்தீர்களா?
இப்படிபட்ட தமிழ் சமூகத்தில் எங்கிருந்து பாகுபலி போல நல்ல படம் வரும்? குப்பை படங்கள்தான் வரும், அவைதான் வந்துகொண்டும் இருக்கின்றன
போகட்டும், நாமும் நமது விமர்சனத்தை சொல்லலாம்,
எனக்கென்னமோ ரம்யாகிருஷ்ணன் பாத்திரத்தில் ஜெயலலிதா தான் தெரிந்தார், தெரிகின்றார், ஆனால் தத்தெடுத்த குழந்தைதான் சரியில்லை, (ஜெயா வளர்த்தது பெங்களூர் சிறையில் கிடக்கின்றது)
நல்ல குழந்தையினை ஜெயா காப்பற்றி மர்மமாக வளர்த்திருந்தால் பாகுபலி தமிழகத்திலும் நடந்திருக்கும்
எமக்கு தெரிந்து குஷ்பூ இல்லாததை தவிர படத்தில் ஒரு குறையும் இல்லை, அந்த குந்தால தேசத்து “ராஜமாதா”வாக குஷ்பூவினை அமர்த்தியிருந்தால் படம் 100% முழுமை அடைந்திருக்கும்