டி.ராஜேந்தர் எனும் கலைஞன்…
அவருக்கு அவர் மீது அதீத நம்பிக்கை இருக்கலாம், எம்ஜிஆரே நடிகர் என பெயர் பெற்ற சினிமாவில் நான் ஏன் நடிகராக கூடாது எனும் அதிக தன்னம்பிக்கை இருக்கலாம்
வைகோ, சீமான் எல்லாம் பேச்சாளர்கள் என பெயர்பெற்ற மாநிலத்தில் நான் ஏன் பேசகூடாது என்ற இன்னொரு நம்பிக்கையில் பேசலாம்
இன்னும் சில இம்சை இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் இருக்கும் திரையுலகில் நான் ஏன் இசைமைக்க கூடாது என அவர் நினைத்திருக்கலாம், ரஜினிகாந்த் 10 பேரை அடிக்கும் திரையில் நான் ஏன் 10 பேரை அடிக்க முடியாது என அவர் நினைத்திருக்கலாம்
ஆனால் அவர் மிக சிறந்த கவிஞன் , கண்ணதாசனுக்கு பின் அற்புதமான கற்பனைகளுக்கு சொந்தக்காரர் என்பதிலும், தமிழ் அவரிடம் விளையாடும் என்பதிலும் யாருக்கும் சந்தேகமில்லை
சூடமேற்றி சத்தியம் செய்யலாம், கவிஞனாக மட்டும் களத்தில் இருந்திருந்தால் இன்றைய நாளில் அவரே ராஜா, காலம் மட்டும் அவரே சக்கரவர்த்தி
ஆனால் அலெக்ஸாண்டர் நானே தளபதி, நானே சிப்பாய், நானே சமையல்காரன், நானே கூடாரம் கட்டுவேன், நானே குதிரைக்காரன், யானைபாகன் என கிளம்பினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் டி.ராஜேந்தரும் திசைமாறினார்
அவரின் இயல்பு அது, தமிழ் செல்லும் திசையெல்லாம் புயலாக சுழன்றடிக்க நினைத்தார். அது பேச்சில், நடிப்பில், இசையில், வசனத்தில் என எல்லா இடத்திலும் அவரை நுழைத்தது
எந்த துறையில் அவர் பிரகாசித்தார் என்றால், நிச்சயம் பாடல் எழுத்தில், சில இடங்களில் மிக அழகான வசனங்களில்
டி.ராஜேந்தர் எனும் கலைஞனை அவரது அழியா பாடல்களுக்காகவும், ஒரு தலைராகம் போன்ற அற்புதமான படங்களுக்காகவும் கொண்டாடலாம்
கவனித்தால் தமிழ்திரையுலகில் அவருக்கான இடம் நிச்சயம் உண்டு, ஒருதலை ராகம் இன்று பார்த்தாலும் ஆயிரம் முறை தொடர்ந்து பார்க்கலாம்
அதன் காட்சி அமைப்பும், பாடல்களும் , வசனமும் அப்படியானவை, அக்கால கல்லூரிக்கே நம்மை அழைத்து சென்று அழ வைக்கும் படம் அது
கம்பனுக்கு பின் தமிழில் அற்புதமான வர்ணனைகள் அவர் கொடுத்தது, மிகை அல்ல நிச்சயம் உண்மை
அந்த மகத்தான கலைஞனுக்கு இன்று பிறந்த நாள், தமிழை தமிழ்பாடலை நீங்கள் ரசித்தால் அவரையும் ரசிப்பீர்கள்
சிற்சில இடங்களில் அவர் சறுக்கலாம், தன் மீதான அபார நம்பிக்கையில் அவர் அப்படி செய்யலாம். சில இடங்களில் உணர்ச்சிவசத்தில் அவர் கண்ணீர் கூட விடலாம்
அது களங்கமற்ற சுத்தமான உணர்ச்சிபிரவாக கண்ணீராக இருக்குமன்றி வேறல்ல, இன்னொருவன் கண்ணீருக்கு காரணம் ராஜேந்தர் என எங்காவது கேட்டிருக்க முடியுமா? முடியாது.
1980களில் கண்ணதாசனுக்கு பின் வாலியினை போல சம இருக்கையில் இருந்து அழியா தமிழ்பாடல்களை கொடுத்த அந்த கவிராஜேந்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவர் இடத்தில் அவர் அமரவில்லை, அமரவும் மாட்டார் அவர் இயல்பு அது
ஆனால் ஒருமுறை மட்டும் அமர்ந்து, தன்னை இன்னொருமுறை அவர் நிரூபித்த்தால் ஒரு தலை ராகம் போன்ற பெரும் ஹிட் படங்கள் கிடைக்கும், படங்களை விட பாடல்கள் கிடைக்கும்
நிச்சயம் அவரால் முடியும்
அவர் ஆயிரம் பிறைகாண வாழ்த்துக்கள்….