நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான்

என்னமோ எழுத போக, நீ திமுக எதிரி, ஆர்.எஸ்.எஸ் உளவாளி, மோடியின் கை கூலி, தமிழிசையின் தம்பி ( இனியும் உயிரோடு இருக்கவேண்டுமா?) என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான்

அதாவது திமுக என்பது யானை, இப்பொழுது அது பதவி எனும் சங்கிலியிலும் இல்லை, சுதந்திரமாக கையில் கிடைத்ததை அடித்து சென்றுகொண்டே இருக்கலாம்

ஆனால் பாஜக எனும் கட்சிக்கு ஏன் அஞ்சவேண்டும்? அவர்கள் அப்படி என்ன செய்துவிடுவார்கள்? டெல்லியில் ஆளும் கட்சிதான் ஆனால் தமிழக அரசியலில் என்ன செய்துவிடமுடியும்?

அதிமுகவினை அவர்கள் உடைக்கட்டும், விழுங்கட்டும் இல்லை பொம்மையாக ஆக்கி வைக்கட்டும், அது அவர்கள் பாடு. அதனால் திமுகவிற்கு என்ன?

திமுகவினை அழிப்பேன் என இந்திரா, குமாரமங்கலம் முதல் ஜெயா, சீமான் வரை போடாத சத்தமா? ராமதாஸ் கூட அடிக்கடி சொல்லியிருப்பார்

அதற்காக அவர்கள் எல்லாம் திமுகவினை அழித்துவிட்டார்களா?

அரசியலில் ஒரு தந்திரம் உண்டு, அதாவது ஒன்றுமே இல்லாமல் இருப்பவன் யார் பெரும் கட்சியோ , அதிகார கட்சியோ அவர்களை சாடுவான், சீண்டுவான், கோபபடுத்துவான், அப்பெரும் கட்சி பதில் சொல்ல சொல்ல இவன் வளருவான்

இந்த தந்திரத்தில் காமராஜரை சீண்டியே வளர்ந்து நின்றவர் கலைஞர், அப்படித்தான் வளர்ந்தார்

இந்த வியூகத்தின் அடிப்படையில்தான், தனக்கு சமமானவர்களுக்கு பதிலோ, வாதமோ செய்வாரே அன்றி சில்லரை கட்சி தலைவர்களுக்கு அவர் பதிலளித்ததே இல்லை, அப்படி செய்தால் அவர்களை வளர்த்தது போலாகிவிடும்

சீமானும், வைகோவும் கேட்காத கேள்விகளா? எதற்காவது அவர் பதில் சொன்னாரா? வைகோ இன்றுவரை திமுக மீது வெறிகொண்டு அலைவதற்கு கலைஞரின் அந்த மவுனமே காரணம், வைகோவிற்கு அது பெரும் அவமானம்

வீணாக தனக்கு நிகராக ஒருவனை பெரியபிம்பமாக மாற்ற கலைஞர் விரும்பமாட்டார்

கலைஞர் செய்யாத அந்த தவறினை ஸ்டாலின் செய்கின்றார், பாஜகவின் சீண்டலை கண்டுகொள்ளாமல் விட்டாலே அடங்கிவிடும், இப்போதைக்கு அது தமிழகத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது, பத்தோடு பதினொன்றாக அதனையும் வரிசையில் வைத்துவிட்டு சென்றுவிடலாம்

எப்படியும் போகட்டும், நாம் திமுக எல்லாம் அல்ல, கலைஞரின் ரசிகன், அவரின் தந்திர விளையாட்டுக்களை ரசித்தவன்

இப்பொழுது கலைஞர் தீவிர அரசியலில் இருந்தால் என்ன செய்வார்? என்பது கணிக்க கூடியது

எப்படியாவது பாஜகவினை வழிக்குகொண்டுவந்து தேர்தலை சந்தித்திருப்பார், கொஞ்ச நாளில் முதல்வராகவும் ஆகியிருப்பார்,

மக்கள் நாடி பிடித்துபார்ப்பார், அகில இந்திய அளவில் பாஜகவிற்கு ஏறுமுகம் என்றால் காந்தியினை மோடி வடிவில் பார்க்கின்றேன் என சொல்லிவிடுவார் அல்லது ஏதும் சிக்கல் என்றல் என்ன செய்வார்?

“ஏய் ஆரிய கூட்டமே, திராவிடத்தினை தீண்ட வந்த தீரா விடமே, எடுத்தேன் கொடுவாளை, வீசினேன் உன் நஞ்சுதலையில்….” என முழங்க ஆரம்பித்துவிடுவார்

இன்று மோடி என்றால் அன்று இந்திரா, மோடியினை விட 10 மடங்கு உறுதியான இந்திரா

அவரிடமே மோதி திமுகவினை காத்தவர் கலைஞர், அப்படிபட்ட திமுக இந்த பாஜகவினை, அதுவும் தமிழக பாஜகவினை கண்டேல்லாம் அஞ்ச வேண்டுமா?

ஜெயலலிதா தான் ஒரு அரசியல்வாதியாக வருவோம் என நினைத்ததில்லை, எம்ஜிஆர் மறைந்தவுடன் நடராஜன் அவரை இயக்கினார், ஆரம்பத்தில் ஜெயலலிதா தனக்கு அரசியலில் இடம் கிடைக்கும் என நம்பவில்லை

அரசியலில் இருந்து விலகுகின்றேன் என ஜெயலலிதா எழுதிய கடிதத்தை நடராஜன் மறைக்க விஷயம் கசிந்தது, கலைஞர் அதனை அரசியலாக்கினார்

ஜெயாவிடம் இப்படித்தான் கொளுத்தி போட்டார்கள், “பார்த்தீர்களா கலைஞர் உங்களுக்கு அஞ்சுகின்றார், நீங்கள் அரசியலை விட்டு போவதில் அவருக்குத்தான் ஆர்வம் அதிகம்..”

இந்த இடத்தில்தான் நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜே, “கலைஞர் என்னை கண்டு அஞ்சுகின்றாரா ?” எனும் வார்த்தையினை 5 முறை ஆச்சரியமாக சொல்லிகொண்டே இருந்தவர் அதன் பின் எடுத்ததுதான் விஸ்வரூபம்

அப்படி இனி இன்னொருவருக்கு வாய்ப்பில்லை எனினும், ஸ்டாலின் எங்களுக்கு அஞ்சுகின்றாரா? அப்படியானால் நாம் உண்மையிலே பெரிய கட்சியா என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிட்டால் என்னாகும்?

கொஞ்சமேனும் சுதாரித்துவிட மாட்டார்களா?